அறுகம்பே தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் முன்னாள் புலிகள் : சிஐடி புனைகிறதா? புலனாய்வு செய்கிறதா?

அறுகம்பே தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் முன்னாள் புலிகள் : சிஐடி புனைகிறதா? புலனாய்வு செய்கிறதா?

அறுகம்பே தாக்குதலில் சிறை வைக்கப்பட்ட புலிகளை முடிந்து விட முயற்சிப்பது புனைவே அல்லாமல் புலனாய்வு அல்ல என்றும் இது தமிழ் மக்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் உள்ள உறவை முறிப்பதற்கான திட்டமிட்ட செயல் எனவும் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிடம் இருந்து வரும் கட்டளைகளுக்கே கட்டுப்பட்டுச் செயற்படுபவர்கள். அதனால் தான் தலைமைகள் அழிக்கப்பட்ட பின் மே 18க்குப் பின் ஒரு வெடிச்சத்தம் கூட அவர்கள் பக்கத்தில் இருந்து எழுப்பப்படவில்லை. இப்பொழுது அறுகம்பே தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் விடுதலைப் புலிக் கைதிகள் இருந்த சிறையில் இருந்தார் என்ற ஒரே காரணத்தை வைத்துக்குகொண்டு புனைவது புலனாய்வு அல்ல. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் இவ்வாறான செய்திகளை வெளியிடுவது சிங்கள மக்களைத் தூண்டிவிடவும் நாட்டின் சமாதானத்தை கேள்விக்கு உட்படுத்தவுமே.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அறுகம்பே பகுதியில் வந்திருந்த இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை குறி வைத்திருந்த தாக்குதல் திட்டச் சதியொன்று அம்பலமாகியிருந்தது. இதன் பின்னணியில் அமெரிக்க தூதரகம் பயண எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்த தாக்குதல் சதித்திட்டம் தொடர்பில் முற் கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததால், இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் கைதோடு இத்திட்டம் முறியடிக்கப்பட்டது.

அறுகம்பே தாக்குதல் திட்டத்தின் திருப்பு முனையாக முன்னாள் புலிகளை இவ்விடயத்தில் சிஐடியினர் இழுத்து விட்டுள்ளனர். அதன்படி பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை பயன்படுத்தியே அறுகம்பே தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக சிஐடியினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதற்காக அறுகம்பே பகுதியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆட்களை நியமித்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான பல வழக்குகளில் ஆஜரான பெயர் குறிப்பிட விரும்பாத வழக்கறிஞர் கூறும் போது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வழமையானவை என்கிறார். இந்த விடயத்தில் உண்மையான தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் பாதுகாக்கப்படுகிறார்களோ எனவும் சந்தேகம் தெரிவித்தார்.

அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் இது வரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன மற்றும் டபிள்யூ ஏ. தொன் அமரசிறி ஆகியோர் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜிந்த கந்தேகெதர சிஐடியினர் முதலாவது சந்தேகநபரிடமிருந்து பல ஆவணங்களில் கையொப்பம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து கடும்சித்திரவதை மூலம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்ட பலர் நீதிமன்றங்கள் மூலம் இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இத்தாக்குதல் திட்டத்தின் முதல் சந்தேக நபரான பிலால் அகமது 2008 ஆம் ஆண்டு கெஸ்பேவ பேருந்து குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள ஆனந்தன் சுகதரனுடன் சிறையில் இருந்ததாகவும் கூறும் சிஐடியினர், ஏனவே சிறையிலிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளை இத்திட்டத்திற்கு பயன்படுத்த உத்தேசித்திருந்தாக கூறுகின்றனர்.

2009 விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின் ஆங்காங்கே முன்னாள் புலி உறுப்பினர்களை அல்லது புலிகளுக்கு வேலை செய்தவர்களை இந்திய, இலங்கை மற்றும் பன்னாட்டு உளவு அமைப்புகள் தத்தம் நலன்களுக்கு பயன்படுத்தி வருகின்றமையும் மறுப்பதற்கில்லை. முன்னாள் புலி பல குழுக்களாக புலத்திலும் நாட்டிலும் பிரிந்து நின்று செயற்படுகிறார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார், துவாரகா வந்து விட்டா, தலைவர் இல்லை, தலைவரைப் பார்த்தேன் என பல குழப்பங்களும் கேலிக்கூத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *