2025

2025

ஜி.எஸ்.பி. பிளஸ் பச்சைக் கொடி காட்டிய ஐரோப்பிய ஒன்றியக் குழு !

ஜி.எஸ்.பி. பிளஸ் பச்சைக் கொடி காட்டிய ஐரோப்பிய ஒன்றியக் குழு !

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் ஆராய இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவுக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்காவுக்கும் இடையில் நேற்றைய தினம் ஏப்பிரல் 30 ஆம் திகதி சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய பிரிவுக்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என நம்பிக்கையாக தெரிவித்தார். மேலும் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான நீண்டகால நட்புற வர்த்தக ரீதியான பல வெற்றிகளை அடைய உதவியுள்ளது. இவ்வர்த்தக வெற்றிகளை இலங்கை பெற தாம் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை தரப்படுத்தப்பட்ட மற்றும் தரமான பொருட்களை விநியோகிக்க இலங்கைக்கு மேலும் ஊக்கம் கிடைக்கும் என்றும் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார். அதேநேரம் அஜனாதிபதியும் இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு கடந்தகால ஆட்சியாளர்களின் அரசியல் முறையும், வீண் விரயமும், மோசடியுமே காரணமாக அமைந்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இப்போது நாடு சரியான நிர்வாகத்தின் கீழ் மாறி வருவதாகவும் நிலமைகள் முழுமையாக சரியாக சிறிது காலவகாசம் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முக்கியமாக நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் என அனைத்து பிரதேச மக்களும் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஜனாதிபதி விரைவில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதியளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒதுக்கி தள்ளுங்கள் விண்ணன் கோரிக்கை !

அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒதுக்கி தள்ளுங்கள் விண்ணன் கோரிக்கை !

உள்ளூராட்சித் தேர்தலில் எந்த தமிழ்க் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம். தமிழ்க் கட்சிகளை முழுமையாக புறக்கணியுங்கள். ஏற்கனவே 50 வீதம் கழுவித் தள்ளி விட்டீர்கள். மிகுதி 50 வீதத்தையும் கழுவித் துடையுங்கள் என யாழ் ஊடக மையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தொழிலதிபர் விண்ணன் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் சமயத்திலும் விண்ணன் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி என்பிபி கட்சிக்கு வாக்களிக்கும்படி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நேற்றைய தினமான ஏப்பிரல் 30 இல் ஊடகவியலாளர்களை சந்தித்த விண்ணன் என்பிபி கட்சிக்காக வெளிப்படையாக வாக்குச் சேகரித்தார். ஊடகவியலாளர்கள் தையிட்டு விகாரை, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களில் கேட்ட கேள்விகளுக்கும் அசராது பதிலளித்தார்.

தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஈழத்தமிழ் நடிகர் ஜெய் ஆகாஷின் படப்பிடிப்பு ! ஊழையிடும் தமிழ் தலிபான்கள் !

தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஈழத்தமிழ் நடிகர் ஜெய் ஆகாஷின் படப்பிடிப்பு ! ஊழையிடும் தமிழ் தலிபான்கள் !

தாவடியை பூர்வீகமாக கொண்ட தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ்ஷின் திரைப்பட படப்பிடிப்பு தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளது. நடிகர் ஜெய் ஆகாஷ்ஷின் பெற்றோர் இங்கிலாந்து புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். ஜெய் ஆகாஷ் லண்டனிலேயே கல்வி கற்றவர். திரைப்படம் மீதான ஈர்ப்பினால் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ரோஜாவனம் படத்தில் அறிமுகமான ஜெய் ஆகாஷ் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழும் ஜெய் ஆகாஷ் தன்னுடைய பிறந்த ஊரை மறக்காது முன்னரும் பலதடவை தாவடிக்கு வந்து ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் திருவிழாக்களில் கலந்து சிறப்பித்துள்ளார். குறிப்பாக பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் சப்பரத்திருவிழா ஜெய் ஆகாஷ் குடும்பத்தினரின் உபயத்தினால் நடத்தப்பட்டு வருகின்றது. ஜெய் ஆகாஷ் தான் நடிக்கும் என்னுயிர் படத்தின் பாடல் காட்சியை தான் பிறந்த மண்ணில் தன்னுடைய குல தெய்வம் கோயிலில் படம் படிக்க விரும்பி, கோடியேற்ற தினத்தில் அதனை நிகழ்த்துவதாகவும் ஏ வன் ட்றவலிங் (A one Traveling) என்ற யுரீயூப் சனலுக்கு கோயில் முன்றலில் வைத்து விளக்கமளித்துள்ளார்.

அதேநேரம் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஜெய் ஆகாஷின் திரைப்பட பாடல்க்காட்சி படப்பிடிப்பை தனது போலி முகநூலில் பகிர்ந்து, அப்பாடல் காட்சியில் தோன்றும் பெண் நடனக் கலைஞர்களை அவதூறாக சித்தரித்து எழுதியுள்ளது. ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் பதிவிற்கு பல அறிவிலிகள் தம்முடைய பங்கிற்கும் மோசமான கருத்துக்களை பின்னூட்டலாக இட்டுள்ளார்கள். பெண்களுக்கு எதிரான இணைய வன்முறையை தேசம் நெற் தொடர்ந்து வெளிப்படுத்தியும் கண்டித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இரண்டு பேருந்துகள் ஒன்றை ஒன்று மோதியதில் 30 பேர் காயம் !

இரண்டு பேருந்துகள் ஒன்றை ஒன்று மோதியதில் 30 பேர் காயம் !

பெலியத்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையிலும், பெலியத்தவில் உள்ள வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு !

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு !

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது !

தெற்காசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது !

காஷ்மீரின் இரண்டு பகுதிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையேயும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் பஹல்காம் தாக்குதல் தொடர்பில் இந்தியா சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வருகின்றது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சம்பந்தம் இல்லை என்று முற்றாக மறுக்கிறது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் அமைதிக்கான கோரிக்கையை இந்தியா பலகீனமாக கருதக் கூடாது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் கோரும் சுதந்திர விசாரணையில் சீனா மற்றும் ரஸ்யா நடுநிலமை வகிக்கலாம் என கருத்துப்பட தெரிவித்துள்ளார்.

முன்னராகவே பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலின் பின்னர் காஷ்மீரில் வாழும் மக்கள் இந்திய பாதுகாப்பு படைகளால் “கூட்டுத்தண்டணைக்கு“ ( collective punishment) உள்ளாகி வருவதாக எம்பி ரூஹீல்லா மெஹ்தி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 7 ஹமாஸ் இஸ்ரேலின் இசை நிகழ்ச்சியில் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் இராணுவத்தின் கூட்டுத்தண்டணைக்கு ஹாசா மக்கள் பலியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இதுவரை 9 வீடுகளை காஷ்மீரில் இந்திய ராணுவம் குண்டு வைத்து தகர்த்துள்ளது. வீடுகள் போராளிகளுக்கு சொந்தமானவை அல்ல. அந்த வீடுகளில் ஒருகாலத்தில் லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்கள் தங்கியிருந்துள்ளனர். அல்லது அங்கே அவர்கள் பிறந்து வளர்ந்துள்ளனர். அதற்காக உள்ளூர் மக்களின் வாழ்விடங்களை அழித்து அப்பாவி மக்களை இஸ்ரேல் போன்று தண்டிப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மின்சார வெட்டு !

ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மின்சார வெட்டு !

திங்கள் கிழமை மதியம் ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் பிரான்ஸின் சில பகுதிகளில் திடிரேன எதிர்பாராத மின்சார வெட்டு எட்டு மணிநேரம் நிகழ்ந்தது. இதனால் பல மில்லியன் பவுண்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்ரநெட், தொலைத் தொடர்பு, போக்குவரத்து, நிதிப்பரிமாற்றம், மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் எனப் பல்வேறு பாதிப்புகளையும் இது ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே ஸ்பெயின் தான் அதிகமாக மீள்பயன்பாடுள்ள வளங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது. 43 சதவீதமான சக்தி இவ்வாறே உற்பத்தி செய்யப்படுகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் போர்த்துக்கல்லுக்கும் பிரான்ஸ்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அதனாலேயே ஸ்பெயினில் உருவான பிரச்சினை போர்த்துக்கல்லுக்கும் பிரான்ஸ்க்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுவரை ஏன் இந்த மின்சார வெட்டு வழமையான சாதாரணமான ஒரு நாளில் ஏற்பட்டது என்ற குழப்பத்தில் ரெட் எலக்ரிக்கா என்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஸ்பெயின் நிறுவனம் மண்டையைப் போட்டு உடைக்கின்றது. இதற்கிடையே இவ்வாறான ஒரு சம்பவம் ஜேர்மனியில் நிகழ்தாலும் என்பதைக் கவனத்தில் கொண்டு மூன்றுநாட்களுக்குத் தேவையான தண்ணீர், மெழுகுதிரி போன்றவற்றை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு ஜேர்மனியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் இந்த மின்சார வெட்டுக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படாததால் அது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் தொடர்கின்றது. இவ்வாறான சைபர் தாக்குதல்கள் அமெரிக்காவில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. அதனால் இது தொடர்பில் மேற்குலகம் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுகின்றது.

ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரியை விடுவிக்க எம்பி சிறிதரன் கோரிக்கை !

ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரியை விடுவிக்க எம்பி சிறிதரன் கோரிக்கை !

விடுதலைப்புலிகள் காலத்தில் சிறப்பாக இயங்கிய ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை இராணுவம் விடுவிக்குமா? வன்னேரிக்குளம் மற்றும் ஆனையிறவு பகுதிகளில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்ப் பரப்புரையின் போது சிவஞானம் சிறிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரி மீண்டும் இயங்கினால் அப்பகுதி மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.

அரச நிதியை எடுப்பதைக் காட்டிலும் வைப்பு செய்யும் போது தான் தவறு நடந்துள்ளது ! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

அரச நிதியை எடுப்பதைக் காட்டிலும் வைப்பு செய்யும் போது தான் தவறு நடந்துள்ளது ! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

ஏப்பிரல் 28 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. நிரந்தர வைப்பிலிருந்த அரச நிதியை கணக்கிலிருந்து எடுத்து அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வழக்கிலேயே ரணில் சாட்சியமளித்தார்.

அதன்பின்னர் தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். தன்னைப் பொறுத்தவரை நிதியை எடுத்ததில் தவறில்லை. அரச செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை வங்கிகளில் வைப்பிலிட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் இடம் இல்லை. எனவே வைப்பிலிட்டதே தவறு என இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் வாதிட்டதாகவுதம் கூறினார். அத்துடன் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வழங்கும் கடிதங்களை பிறருக்கு தெரியப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க மட்டக்களப்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வழங்கிய கடிதம் குறித்து கருத்துக்கள் தெரிவித்த குரல் பதிவையையும் ஊடகவியலாளர்களுக்கு போட்டுக் காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற காலவகாசம் கோரும் இலங்கை !

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற காலவகாசம் கோரும் இலங்கை !

சர்வதேச நாணயத்தின் கடன் வசதியினை நீடிப்பதற்கான நான்காவது மதிப்பாய்வு நடந்து வருகின்றது. இதில் கலந்து கொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு ஐஎம்எப் விதித்திருக்கின்ற நிபந்தனைகளை நிறைவேற்ற கூடிய கால அவகாசத்தை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் இப்பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழு டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கு விதித்துள்ள வரிச்சலுகைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு பேச்சுவார்த்தைகள் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.