26

26

கிழக்கில் பயிர்ச் செய்கையில் ஈடுபட பாதுகாப்பு தரப்பினர் அனுமதி!

sampoor_map.jpgதிரு கோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு பிரதேசம் தவிர்ந்த ஏனைய இடங்களில் விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபட பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்குமாகாண முதலமைச்சரின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் திருமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக்கலந்துரையாடலில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திரியாய் பகுதியிலுள்ள நீலப்பனிக்கன் குளத்தை புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களை விவசாயச் செய்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் திரியாய் பகுதியில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மத்தியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்பு மிகவும் தேவையாக உள்ளதாக அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நேற்று  கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது. 

சீரற்ற காலநிலையினால் மீண்டும் டெங்கு அபாயம்

0000rain.jpgஇலங் கையில் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வந்த டெங்கு நோயின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ள போதும் தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் தலைதூக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மழை பெய்யும் காலங்களில் தமது வீட்டையும் சுற்றுச் சூழலையும் சுத்தமாகப் பேணுவதில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்

அபாயமான மயக்க மருந்தே ஜாக்ஸனின் மரணத்துக்குக் காரணம் : மருத்துவ தடயவியல் நிபுணர்

lakshmanan.jpgபொப் இசை மேதை மைக்கல் ஜாக்ஸன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜாக்ஸன் மரணம் ஒரு கொலை வழக்காக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் மாற்றவுள்ளனர்.

ஜாக்ஸன் உடலில் நடத்தப்பட்ட மருத்துவ தடயவியல் சோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் ஜாக்ஸன் மரணத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரே கடைசியாகக் கொடுத்த அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால்தான் அவரது உயிரைக் குடித்ததாகச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து முர்ரே வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முர்ரேவுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முர்ரே எந்த நேரத்திலும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்படக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெளியிடப்படாமல் இருந்து வந்த மருத்துவ தடயவியல் அறிக்கையை லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்ரவன், ஹூஸ்டன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இதையடுத்து ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றம் தேடுதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கல் ஜாக்ஸனின் மரணத்திற்கு அதிகளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஜாக்ஸனின் மரணம் கொலை எனப் பதிவாகி வழக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.டாக்டர் கான்ராட் முர்ரேயும் கைது செய்யப்படவுள்ளார்.

ஜாக்ஸன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழராவார். கடந்த 1992ஆம் ஆண்டு அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணை மருத்துவ தடயவியல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

புகழ் பெற்ற ஓ.ஜே. சிம்ப்சன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இவர்தான் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 26ஆம் திகதி மைக்கல் ஜாக்ஸன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தார் டாக்டர் சத்யவாகீஸ்வரன். 

இரு சிறுமிகள் மரணம் தொடர்பாக அதிகார சபையின் விசாரணை ஆரம்பம்

girl2222.gifகொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் இரு சிறுமிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வயது குறைந்த சிறுவர், சிறுமியர் வேலைக்கு அமர்த்தப்படுவது சட்டவிரோதமான செயல் என்றும் அதனைமீறி இச்சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சிறுமிகளை வேலைக்காக சேர்த்த தரகர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மலையகத்தைச் சேர்ந்த பல சிறுமிகள் குடும்பக்கஷ்டம் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தரகர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவற்றைத் தடுப்பதற்கு அதிகார சபை உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். சிறுவர், சிறுமிகள் வேலை செய்வது தொடர்பாக அதிகாரசபைக்கு புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் மீள்குடியேறுவோருக்கு கூரைத்தகடுகள், 25,000 ரூபா பணம்

ga-vavuniya-222.jpgவவுனியா வடக்கில் மீளக்குடிய மரும் மக்கள் தமது வீடுகளைப் புனரமைத்துக் கொள்வதற்காக 12 கூரைத் தகடுகளும் 25 ஆயிரம் ரூபா நிதியும் மற்றும் ஏனைய உதவிகளும் வழங்கப்படவுள்ளன. மீள்குடியேற்றம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியும் கலந்து கொண்டார். குறித்த 35 கிராமங்களில் புனரமைப்புப் பணி கள் 40% பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய கூட்ட த்தில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் வவுனியா வடக்குப் பகுதியில் அடுத்த வாரம் புனரமைப் புப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.

நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வவுனியா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேவேளை, மீள்குடியமரும் மக்களின் நெற்காணி களை துப்புரவு செய்து கொடுக்க இராணுவத்தினர் உதவி வழங்குவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வீடுகளைத் தாமாகவே புனரமைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, கூரைத் தகடுகளும், பணமும் வழங்கப்படுகின்றன. அதேநேரம் ஏனைய உதவிகளையும் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர் வேலை நிறுத்தம்

electricity.jpgசம்பள அதிகரிப்பு உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதுமுள்ள மின்சார சபை ஊழியர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திலீடுபட விருக்கின்றனர். அரச்சாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைவதற்கு 10 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உடன்பாடுகண்டுள்ளன.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் சம்பள அதிகரிப்பைச் செய்யத் தவறியமை, மின்சார சபையை அழிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்ட மூலத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் மின்சார சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாபநிதியின் மூலம் கிடைக்கும் அனுகூலங்களை நீக்கும் முயற்சிகளை உடன்கைவிடுமாறும் மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளில் கைவைக்க வேண்டாம் என்று அரசை வலியுறுத்தும் நான்கு கோரிக்கைகளை இத்தொழிற் சங்கங்கள் முன்வைத்துள்ளன.

நாடு முழுவதும் குடி நீர் வசதி; 2010ல் ரூ.36,000 மில்.ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் மக்களுக்கு குடிநீர் வசதி அளிப்பதற்காக 2010 ஆம் ஆண்டில் 36 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; இந்த வருடத்தில் குடிநீர் விநியோகத்துக்கென 29 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டையில் உள்ள 22 வீதமான மக்களுக்கே குடிநீர் வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 75 வீதமான மக்களுக்கு குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் கூடுதலான நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஹம்பாந்தோட்டை இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். விரைவில் ஹம்பாந்தோட்டை முதலாவது இடத்தை பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் தடையின்றி குடிநீர் வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட முடிவுக்குள் மேலும் பலருக்கு குடிநீர் வசதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த வருடம் கூடுதலான மக்களுக்கு குடிநீர் வசதி அளிப்பதற்காக இந்த வருடத்தை விட கூடுதல் தொகை நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடமேல் மாகாணத்தில் 10 பாதைகளில் புதிய அட்டவணைப்படி பஸ் சேவை

bus.jpgவடமேல் மாகாணத்தில் 10 பாதைகளுக்கான இணைந்த நேர அட்டவணைக்கான பயணிகள் போக்குவரத்து பஸ் சேவையினை அக்டோபர் மாதம் ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக வடமேல் மாகாண பயணிகள் போக்குவரத்து சபையின் தலைவர் சரத்குமார ரணதுங்க தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சரத் குமாரரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

புத்தளம் கல்பிட்டி பாதையில் சேவையில் ஈடுபடும் பயணிகள் பஸ்கள் பல தரிப்பிடங்களில் நீண்ட நேரம் தரித்து நிற்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து மாகாண சபை உறுப்பினர் தாஹிர் விபரித்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றும் போது தலைவர் சரத் குமார ரணதுங்க கூறுகையில், இலங்கை போக்குவரத்து சபையுடன் தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. இம்மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் இது குறித்த பேச்சுகள் இடம்பெறவுள்ளன.அதனையடுத்து இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் இணைந்த நேர அட்டவணைக்குள் தமது பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் அதி நவீன பீரங்கி

இந்திய ராணுவத்திற்காக, புதிதாக தயாரிக்கப்படட பீஷ்மா எனப்பெயர் கொண்ட  “டி-90′ அதி நவீன பீரங்கிகள்,  நேற்று உத்தியோகபூர்வமாக  பாதுகாப்பு பணிக்காக ஒப்படைக்கப்பட்டன. இதனை உற்பத்திசெய்த சென்னை,ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் அதற்கான விழா நடந்தது.  இத்திட்டத்துக்கு ரஷ்யா தொழில்நுட்ப ஒத்துழைபபை வழங்கியுள்ளது.

இதில்,  உள்நாட்டு தொழில் நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப் படுவதால், வெளிநாடுகளில் இருந்து தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படுவது,  5 சதவீதம் குறைந்துள்ளது.  இந்த பீஷ்மா டி-90 பீரங்கி,  21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற அதி நவீன போர் கவச வாகனமாக திகழும் என இந்தியா தெரிவித்துள்ளது

ரொஜர் பெடரர் மூன்றாம் முறையாக சின்சினாட்டி சாம்பியன்

tenis_champ.jpgசின் சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் உலகின் “நம்பர்-1′ வீரரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதிப்போட்டியில்  சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,  செர்பியாவின் நொவாக் ஜோகோவிச்சை சந்தித்தார்.

விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் செட்டை பெடரர் 6-1 என கைப்பற்றினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-5 என சற்று போராடி தன்வசப்படுத்தினார். இறுதியில் பெடரர் 6-1,  7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று,  சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் மூன்றாவது முறையாக (2005, 2007, 2009) சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர்.