வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் மக்களுக்கு குடிநீர் வசதி அளிப்பதற்காக 2010 ஆம் ஆண்டில் 36 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; இந்த வருடத்தில் குடிநீர் விநியோகத்துக்கென 29 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டையில் உள்ள 22 வீதமான மக்களுக்கே குடிநீர் வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 75 வீதமான மக்களுக்கு குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் கூடுதலான நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஹம்பாந்தோட்டை இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். விரைவில் ஹம்பாந்தோட்டை முதலாவது இடத்தை பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் தடையின்றி குடிநீர் வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட முடிவுக்குள் மேலும் பலருக்கு குடிநீர் வசதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த வருடம் கூடுதலான மக்களுக்கு குடிநீர் வசதி அளிப்பதற்காக இந்த வருடத்தை விட கூடுதல் தொகை நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.