வடமேல் மாகாணத்தில் 10 பாதைகளுக்கான இணைந்த நேர அட்டவணைக்கான பயணிகள் போக்குவரத்து பஸ் சேவையினை அக்டோபர் மாதம் ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக வடமேல் மாகாண பயணிகள் போக்குவரத்து சபையின் தலைவர் சரத்குமார ரணதுங்க தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சரத் குமாரரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
புத்தளம் கல்பிட்டி பாதையில் சேவையில் ஈடுபடும் பயணிகள் பஸ்கள் பல தரிப்பிடங்களில் நீண்ட நேரம் தரித்து நிற்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து மாகாண சபை உறுப்பினர் தாஹிர் விபரித்தார்.
இதற்கு பதிலளித்து உரையாற்றும் போது தலைவர் சரத் குமார ரணதுங்க கூறுகையில், இலங்கை போக்குவரத்து சபையுடன் தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. இம்மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் இது குறித்த பேச்சுகள் இடம்பெறவுள்ளன.அதனையடுத்து இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் இணைந்த நேர அட்டவணைக்குள் தமது பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.