2022

2022

ஊடகவியலாளர் சிவராம்: செல்வன் – அகிலன் இரட்டைப் படுகொலை – சிவராமின் (தராக்கி) இரத்தக் கறை!!! : பாகம் 24

(சிவராமின் இரத்தக்கறைக்குரிய படுகொலை செய்யப்பட்ட செல்வன் – அகிலன்)

இவ் உரையாடல் 40 பாகங்களை உள்ளடக்கியது. இதன் 24 வது பாகம் இதுவாகும். இவ் உரையாடலின் முக்கிய நோக்கம், சம்பவங்களை கதைப்பதல்ல. அதற்கப்பால், அதன் உள்ளார்ந்த அரசியல், அதன் மீதான அரசியல் விமர்சனப்பார்வை, மற்றும் அமைப்பு வடிவங்கள் பற்றிய பிரச்சனைகள் என அமையும். அத்தோடு தீப்பொறி குழுவினர் மீது தள மத்திய குழுவினர் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்காமை, மத்தியகுழுவில் தளமத்திய குழு உறுப்பினர்கள் மீது முகுந்தன் சுமத்திய குற்றச்சாட்டுக்கள், பின் தள மாநாடு, இயக்கத்தில் உளவுத்துறைகளின் குறிப்பாக ரோவின் தாக்கம் என உரையாடல் தொடர்கின்றது. இவ் உரையாடல்கள் ரோ முகவர்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களுக்காக பணமுதலைகள் விசிறும் பணத்துக்காக – அவர்களுக்கு வேண்டாதவர்களை தூற்றுவதற்கு எழுதப்படும் ‘அம்புலிமாமா’ கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 24 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 24

தேசம்: தள மாநாட்டுக்கு முன்பாக செல்வன், அகிலன் படுகொலை இடம்பெற்றது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த செல்வன், அகிலன் படுகொலையில் ஏதோ ஒரு வகையில் நீங்களும் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அது நான் நினைக்கிறேன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மையில் என்ன நடந்தது ? செல்வன், அகிலன் படுகொலை செய்யப்பட காரணம் என்ன? உங்களோடு முதல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட பிறகு அவர் எடுபடவில்லை. அப்படி என்றால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அப்பவே தொடங்கிவிட்டது…

அசோக்: அது உண்மையிலேயே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது. மத்திய குழுவைச் சேர்ந்த இப்ப உயிரோட இருக்கிற ஆட்கள் தான் அதை சொல்ல வேண்டும். தோழர் ரகுமான் ஜான், சரோஜினிதேவி, சலீம்… செல்வன் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம் சொல்லப்பட்ட மத்திய குழு கூட்டத்தில் நான் இல்லை. அதற்குப் பிறகுதான் நான் கலந்து கொண்டேன். தோழர் செல்வன் பல்மருத்துவ பீட மாணவர். மிகத் திறமையான தோழர். திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர்.

தேசம்: இதுல முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்துக்கு அல்லது பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மிகத் திறமையான மாணவர்கள் தங்களுடைய படிப்பை குழப்பிக்கொண்டு வந்தவர்கள். தோழர் ரகுமான் ஜானும்…

அசோக்: ஓம் . தோழர் ரகுமான் ஜான் மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர். அதை நிராகரித்துவிட்டு தொடர்ந்து புளொட்டில் வேலை செய்தவர். அவர் மீது எங்களுக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால் இன்றும் போராட்ட உணர்வுகளுடன் இயங்கும் ஒருவர் அவர். அடுத்தது அர்ஜுனா என்று சொல்லி ஜெகநாதன். அவர் மன்னார் பகுதியிலிருந்து வந்த மிகத் திறமையான மருத்துவபீட மாணவர். இப்படி படிப்புக்களை விட்டு நிறைய தோழர்கள் வந்திருக்கின்றார்கள். தோழர்கள் படிப்பை கைவிடாமல் தொடர வேண்டும் என்பதில் தோழர் குமரனும், நானும் மிக வும் கவனமாக இருந்தோம். இது பற்றி முன்னர கதைத்திருக்கிறம்.

செல்வன் அகிலன் பிரச்சனை என்னவென்று கேட்டால் சிவராம் இந்தியாவுக்குப் போய் வரும்போது வெங்கட் என்பவரையும் தளத்திற்கு அழைத்து வருகின்றார். முகுந்தனின் உத்தரவின் அடிப்படையிலேயே வெங்கட் வருகின்றார். நான் நினைக்கிறேன் பின்தளத்தின் முடிவோடுதான் செல்வன், அகிலன் படுகொலைகள் நடந்தது என்று. அவர்களின் நோக்கம் செல்வன் தான். செல்வனோடு அகிலனும் இருந்தபடியால் அவரையும் இவர்கள் படுகொலை செய்தார்கள்.

தேசம்: வெங்கட் என்றது…

அசோக்: வெங்கட் என்றது முகுந்தனுடைய உளவுத்துறை யை சேர்ந்தவர்.

தேசம்: பண்டத்தரிப்பா?

அசோக்: இல்லை சுழிபுரம். அவர் சங்கிலி கந்தசாமியோடு உளவுத்துறையில் வேலை செய்தவர். பின் தளத்தில் பல்வேறு படுகொலையுடன் தொடர்புபட்ட ஒராள். அவரும் இன்னொருவரும் அவருடைய பெயர் எனக்கு தெரியாது. ரெண்டு பேரும் சிவராமோடு வாரார்கள். அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஈஸ்வரன் நிற்கிறார். அவர்தான் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாளர். இவங்கள் கிழக்கு மாகாணத்தில் ராணுவ தாக்குதலை செய்ய வேண்டும் அதற்கு சில இடங்களை பார்வையிடுவதற்கு அங்க போக வேண்டும் என்று சொல்லி ஈஸ்வரனிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் கிழக்கு மாகாண பொறுப்பாளரின் கடிதம் இல்லாமல் இவர்கள் அங்க போக இயலாது. வழிகாட்டிகளோ, தங்குமிடங்களோ, சாப்பாடுகளோ பொறுப்பாளர்களின் அனுமதியோடு தான் செய்ய வேண்டும். தன்னிச்சையாக ஒராள் போக இயலாது. அந்தந்த பொறுப்பாளர்களின் அனுமதியோடு தான் நீங்கள் போக வேண்டும். அடுத்தது வழிகாட்ட வேண்டும்… வழிகாட்டிகள் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்யமுடியாது.

தேசம்: பொதுப் போக்குவரத்தில் போக இயலாது தானே…

அசோக்: அப்போ ஈஸ்வரன் கடிதமொன்று கொடுத்திருக்கிறார், இந்தக் கடிதம் கொண்டு வருபவருக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவும் படி.

தேசம்: அடுத்தது அகிலன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

அசோக்: அகிலன் மூதூரைச் சேர்ந்த தோழர். அங்க மூதூர் பிரதேசத்திற்கு பொறுப்பாளராக வேலை செய்த தோழர். அவரும் திறமையான தோழர். காந்தியத்துக்கூடாக செல்வனை போல வந்தவர் என்று நினைக்கிறேன். மிகத் திறமையான தோழர்கள். அப்போ அந்த நேரத்தில் அவர்கள் மூதூர் பகுதியில் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படுகொலைகள் மூதூருக்கு பக்கத்தில் தான் நடந்திருக்கு.

தேசம்: இந்த இரண்டு கொலைகளுக்கும் முதல் பின் தளத்தில் சில கொலைகள் இடம்பெற்றதாக…

அசோக்: நிறைய கொலைகள் நடந்து இருக்குதானே.

தேசம்: தளத்தில் அதாவது புளொட்டினுடைய தலைமை புளொட்டினுடைய உளவுத்துறை தளத்தில் இவ்வாறான கொலைகளில் ஈடுபட்டிருந்ததா?

அசோக்: தளத்தில் நடந்த கொலைகள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். அந்த கொலைகளுக்கும் பின் தள உளவுத்துறைக்கும் தொடர்பில்லை. அவைகள் கண்ணாடிச் சந்திரன், நேசன் ஆட்களினால் செய்யப்பட்டவை.

தேசம்: இதுதான் முதல் படுகொலை என்று நினைக்கிறேன்.

அசோக்: சுழிபுரம் படுகொலை நடந்ததுதானே. ஆனா திட்டமிட்டு, அதாவது தலைமையால் உளவுத்துறையால் தளத்தில் நிகழ்த்தப்படுகின்ற முதலாவது படுகொலை, இரட்டைப் படுகொலை இதுதான்.

தேசம்: அதற்கான ஏதாவது சமிஞ்சை இருந்ததா? ஏனென்றால் முரண்பட்டு வந்தது நீங்கள்…

அசோக்: என்ன சந்தேகம் இருந்தது என்று கேட்டால் தளத்தில் தளத்தில் நேசன் ஆட்கள் வெளியேறிவிட்டார்கள் தானே. பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி விட்டார்கள். செல்வன் ரகுமான் ஜானின் நெருங்கிய தோழர். திருகோணமலை தானே, ஒரே இடம். தோழர் ரகுமான் ஜான் வெளியேறின உடன் அவங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துட்டுது இவரும் ரகுமான் ஜானின் ஆளாக இருப்பார் என்று. யாழ்ப்பாணத்தில் நேசன் ஆட்கள் வெளியேறியதைப் போன்று திருகோணமலையிலும் குழப்பங்கள் ஏதும் வரலாம் என்று நினைத்திருக்கலாம்.

நிறைய விடயங்களை மறந்திட்டன். இப்பதான் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. தள மாநாட்டிக்கு பிறகு பின்தளத்தில் ஒரு மத்திய குழு கூட்டம் நடந்தது. அதில்தான் நீண்ட காலத்திற்கு பிறகு ராஜன் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் முகுந்தன் தொடர்பாக கடும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் ராஜனால் வைக்கப்பட்டு, இடையில் குழப்பத்தில் முடிந்த கூட்டம் அது. சந்ததியார் கொலை, செல்வன், அகிலன் கொலை பற்றியெல்லாம் கதைக்கப்பட்டது. முகுந்தனிடம் இருந்து ஓழுங்கான எந்த பதிலும் வரல்ல.

இதைப்பற்றி பிறகு கதைக்கிறன். இதில செல்வன் அகிலன் கொலை பற்றி நான் கேள்வி எழுப்பிய போது முகுந்தன் சொன்னது ஞாபகம் வருகிது. அவர்கள், சந்ததியார், ரகுமான் ஜான் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைக்க முயன்றதாகவும், விசாரிக்க சென்ற போது செல்வனிடம் இருந்து இவங்க எழுதிய கடிதங்கள் பிடிபட்டதாகவும் கூறி குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டே இருந்தார். ஒழுங்கான எந்த பதிலும் முகுந்தனிடம் இருந்து கிடைக்கல்ல. பிறகு தளத்தில் இருந்த எங்கள் மீது சில குற்றச்சாட்டுக்களை சுமத்த தொடங்கினார். அதற்கிடையில் ராஜனுக்கும், முகுந்தனுக்கும் வாக்குவாதம் அதிகமாகி பெரிய குழப்பமாகி கூட்டம் இடையில் குழம்பிவிட்டது. இதுதான் நாங்கள் கலந்து கொண்ட கடைசி மத்தியகுழு கூட்டம். இதைப் பற்றி பிறகு கதைப்பம்.

உண்மையில பார்த்தீங்க என்றால் இயக்கங்களின் ஆரம்ப வரலாறே பிரச்சனைகளுக்கு முரண்பாடுகளுக்கு ஒரே தீர்வு கொலைதான் என்றுதான் செயற்பட்டு இருக்காங்க. உரையாடல் என்பதே அங்கு இருக்கல்ல. ஆயுத போராட்டம் என்றால் அது வன்முறை ஒன்றுதான் என்ற பார்வைதான் எங்களிட்ட இருந்திருக்கு.

தேசம்: அகிலன்

அசோக்: அகிலன் மூதூர். ரகுமான் ஜானை தெரிந்திருக்குமே ஒழிய பெரிய நெருக்கம் இருக்காது. சிவராம், வெங்கட் ஆட்கள் செல்வனை முதூரில் வைத்து அவரை அரெஸ்ட் பண்ணும் போது கூடவே அகிலனும் இருந்திருக்கின்றார். எங்களுக்கு நடந்ததற்கு பிறகுதான் தெரிய வருது.

தேசம்: இவர்கள் கொல்லப்பட போகிறார்கள் என்பது சிவராமுக்கு தெரியும்.

அசோக்: தான் வழிகாட்ட தான் போனவர், தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர் சாதித்துக் கொண்டிருந்தார். அடுத்தது ஈஸ்வரன் கொடுத்த கடிதம் தன்னிடம் இருக்கு என்று சொல்லி நிறைய பெயரிட்ட சொல்லிக் கொண்டிருந்தவர். கடைசியா பார்த்தா கடிதத்தில் ஒன்றும் இல்லை.

தேசம்: அதுக்குள்ள என்ன இருந்தது…

அசோக்: இந்த கடிதத்தை கொண்டு வருபவருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவும் என்று சொல்லி ஈஸ்வரன் எழுதி கொடுத்திருந்தார்.

தேசம்: அப்போ ஈஸ்வரனுக்கும் தெரியாது என்ன நடக்க போகுது என்று சொல்லி…

அசோக்: இல்லை. ஆனால் ஈஸ்வரனுக்கும் தொடர்பு என்று சொல்லி வெளியில கதையை பரப்பினார்கள். என்னைப் பொறுத்தவரை நிச்சயம் தெரிந்திருக்காது என்றே நம்புகிறேன்.

தேசம்: அப்போ வெங்கட்டும் சிவராமும் தான் இந்த கடிதத்தை கொண்டு போயினம்.

அசோக்: இன்னும் ஒருத்தரும் இவர்களோடு வந்தவர். பெயர் ஞாபகம் இல்லை.

தேசம்: இவைக்கு தான் என்ன நடக்கப் போகுது என்று தெரியும்…

அசோக்: மூன்று பேரும் அந்த நோக்கத்தோடு தானே வந்திருக்கிறார்கள்.

தேசம்: மூன்றாவது ஆளைப் பற்றி உங்களுக்கு தெரியாது?

அசோக்: தெரியாது, மூன்று பேரும் அந்த நோக்கத்துடன்தான் வந்திருக்கிறார்கள். இதில இந்த கடிதம் கொண்டு போனால் மட்டும்தான் அங்கு போக முடியும் என்பதற்காக, திருகோணமலை மாவட்டங்களில் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு இடங்கள் பார்க்க வாரோம் என்று சொல்லித்தான், ஈஸ்வரனிடம் கடிதம் கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் பின் தளத்தின் அனுமதியோடுதானே வருகிறார்கள். அப்போ ஈஸ்வரனும் நம்பிட்டு இவங்கள் ஏதோ தாக்குதல் செய்வதற்கு ஆய்வு செய்ய வாறாங்கள் இடங்கள் பார்க்கத்தான் வாறாங்கள் என்று அந்த கடிதத்தை கொடுத் திருக்கிறார்.

தேசம்: அந்தக் கடிதத்தில் செல்வன் அகிலன் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

அசோக்: ஒன்றுமே இல்லை. அப்படி நடந்திருந்தா தள மாநாட்டில் ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டு வந்திருக்கும். இன்னும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். அந்த மாநாட்டில் வாக்கெடுப்பு நடந்தது. பின்தள மாநாட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சாதாரணமாக தெரிவு செய்யப்படவில்லை. வாக்கெடுப்பின் அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட்டார்கள். பின்தள மாநாட்டிக்கு செல்வதற்கு தேர்தல் அடிப்படையில் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டது பற்றி முன்னர் கதைத்திருகிறன். அந்த தேர்தலில் மத்தியகுழு உறுப்பினர்கள் நாங்க நான்கு பேர்களும் கலந்து கொண்டோம். அதில் கூடிய வாக்கு ஈஸ்வரனுக்கும் அடுத்தது எனக்கும் தோழர் கௌரிகாந்தனுக்கும்தான் கிடைத்தது. எங்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் எனக்கும் ஈஸ்வரனுக்கும் ஏன் தோழர்கள் வாக்கு கூட போடுகிறார்கள்?

தேசம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் உங்களுடைய பெயர் வரக் காரணம் என்ன? பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் ஆரம்ப காலங்களில் மிக நெருக்கமாக வேலையும் செய்திருக்கிறீர்கள். அவர்கள் எல்லோருக்கும் உங்களைத் தெரியும். தனிப்பட்ட முறையிலும் தெரியும்.

அசோக்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாளனாக ஆரம்ப காலகட்டங்களில் நான் இருந்திருக்கிறன். UTHRரோடு பெரிதாக எனக்கு தொடர்பு இருக்கவில்லை.

ஆனால் அதில் எனக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள். UTHRரோடு பெருசாக உடன்பாடு இருக்கவில்லை. அதுல உள்ள சில நபர்கள் தொடர்பாக சிக்கல்கள் இருந்தது. பிறகு நீங்கள் தான் ஒருநாள் அனுப்பி இருந்தீர்கள். உங்களுக்கு யாரோ ஒரு ஆள் என்னைப் பற்றிய இந்த குற்றச்சாட்டை அனுப்பியதாக.

தேசம்: நட்சத்திரன் செவ்விந்தியன்.

அசோக்: அப்போதான் எனக்கு தெரியும். அதுவரைக்கும் UTHR ரிப்போர்ட்டில் என்னைப் பற்றி இப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது. பிறகு விசாரிச்சா என் மீது முரண்பாடு இருக்கிற தோழர் ஒருவர் என் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் என்பதற்காக அந்த ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார். UTHR ஆட்களும் எந்த விசாரணையும் இல்லாமல், சிவராமுக்கு நான்தான் கடிதம் கொடுத்தேன் என்ற தோழரின் புனைவை தங்களின்ற ரிப்போர்ட்டில் பதிவு செய்திருந்தாங்க. எனக்கே இந்நிலை என்றால் அவர்களின் தகவல்களில் எப்படி உண்மைகள் இருக்கமுடியும்?

தேசம்: உங்களுக்கு முரண்பாடான தோழர் என்றால் இயக்கத்தில் இருந்த தோழரா? அல்லது

அசோக்: புளொட் இயக்கத் தோழர்தான். அப்போ பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் UTHRரோடு சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்தேன். அப்போ விளக்கம் ஒன்று எழுதித்தர சொன்னார்கள் என்ன நடந்தது என்று சொல்லி. நான் பெரிய அக்கறை எடுக்கவில்லை. எழுதிக் கொடுக்கவில்லை. இப்ப எனக்கு எதிரிகளாக இருக்கிறவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். அது பிரச்சினை இல்லை. தளத்தில் நடந்த மாநாட்டிக்கு வந்த தோழர்களுக்கு தெரியும்தானே. தளத்தில் எத்தனை தோழர்கள் என்னோடு வேலை செய்திருப்பார்கள். அவர்களுக்கு தெரியும் என்னைப்பற்றி.

தள மாநாட்டில் செல்வன், அகிலன் பிரச்சனை முன்வைத்தவர்கள் நாங்கள்தான். சிவராமுக்கும் எனக்கும் அதன் பின் பெரிய முரண்பாடு. தனக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்றும் அது பின் தள முடிவு என்றும் சொன்னார். நான் நினைக்கிறேன் அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பிற்காலங்களில் சிவராமை நான் இங்க பரிசில் சந்தித்த போது கூட இதைத்தான் சொன்னார்.

தேசம்: மற்றது அகிலன், செல்வின் படுகொலையில் நான் நினைக்கிறேன் ஜென்னி தோழரும் திருகோணமலையைச் சேர்ந்தவர் என. அந்த பாதிக்கப்பட்ட குடும்பம் அவரிட்டையும் போய்க் கேட்டிருக்க வேண்டும்.

அசோக்: எல்லோரும் திருகோணமலையில் மிக நெருக்கமான தோழர்கள்தான். ஜென்னி, ஜான் மாஸ்டர் எல்லார்கிட்டயும் கேட்டிருப்பார்கள். தோழமைக்கு அங்காள குடும்ப நட்பாக அவங்க எல்லோரும் இருந்தவங்க. செல்வன், அகிலன் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தளத்தில் சேர்ந்து வேலை செய்த அருமையான தோழர்கள். நான் நினைக்கிறேன். செல்வனுக்கும் சிவராமுக்கும் முன்னரே முரண்பாடு இருந்திருக்கும் என்று. ஏன் என்றால் அவர் நினைத்திருந்தால் நிச்சயம் இக் கொலைகளை தடுத்திருக்க முடியும். பின் தள உத்தரவு என்றால் அங்கேயே இந்த உத்தரவை தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் செய்யல்ல. இங்க பரிசில் சந்தித்த போது கடுமையாக அவரைப் பேசினேன். பின்தளம்தான் காரணம் என்று தன்னை நியாப்படுத்திக் கொண்டே இருந்தார்.

தேசம்: அதுல நான் நினைக்கிறேன் ஜென்னியும் கடுமையாக எதிர்த்து இருந்தவர் என்று. படுகொலைகளை கண்டித்து இருந்தவர். ஆனால் அவர் மீதும்…

அசோக்: ஜென்னி மீதும் குற்றச்சாட்டு சொல்லப் பட்டது. ஜென்னி இயக்கத்தோடு விசுவாசமாக வேலை செய்வது அவரது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால் அவருக்கு ஒரு தீர்மானம் இருக்கும் முகுந்தன் சரியாக நடக்கிறார் என்று. அதனால அவ சப்போர்ட் பண்ணுவா. இந்த நிலைப்பாடு, அவரின் அரசியல், முகுந்தன் விசுவாசம் இவை எல்லாம் விமர்சனத்திறகுரியதுதான். அவர் முகுந்தன் சப்போர்ட் என்பதற்காக படுகொலைக்கு எல்லாம் அவரை சம்பந்தப்படுத்த இயலாது.

தீப்பொறியினருக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. எங்களைப் பற்றியும் இருந்தன . தங்களோடு நாங்க வெளியேறவில்லை என்ற கோபம் இருக்குதானே. தங்களை நியாயப்படுத்த பல கதைகளைச் சொன்னாங்க. உண்மையிலேயே அவர்கள் தளமாநாட்டில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவங்க வைக்கிற குற்றச்சாட்டை தானே நாங்களும் வைக்கிறோம். நீங்கள் ஒரு 4, 5 பேர் ஒளிந்துகொண்டு என்னத்தை சாதித்தனீங்க? எங்களோடு தோழர் ரகுமான் ஜான், கேசவன் இருந்திருந்தால் பலமான சக்தியாக நாங்கள் இருந்திருக்கலாம். அந்த அடிப்படையில் அவங்களுக்கும் எங்களுக்கும் முரண்பாடு இருந்தது.

தேசம்: இந்த மாநாடு முடிந்த பிறகு நான் நினைக்கிறேன் விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவு டெலோ புலிகளால் அழிக்கப்படுவது.

அசோக்: உண்மைதான். பெரிய அழிவு அது. அதுல ஒன்று குறிப்பிட வேண்டும் ரெலோ தோழர்கள் நிறைய பேர் இந்த புலிகளின் கொலை வெறி தாக்குதலில் பாதிக்கப்பட்டு எங்களிட்ட வந்து தஞ்சம் கேட்டு பாதுகாப்பு கொடுத்தோம். முக்கியமாக பொபி மற்றது சந்திரன் என்று சொல்லி அவரும் எங்கட குரூப்போட கூட்டிக்கொண்டு தான் நாங்கள் பின்தள மாநாட்டுக்கு சென்றது. யாழ்ப்பாணத்திலிருந்து மிகப் பாதுகாப்பாகத் தான் நாங்கள் போனது. காட்டுப்பாதையால் அவங்களை அழைத்துக் கொண்டு மன்னார் சென்று அங்கிருந்து நாங்கள் பின் தளத்தில் அவர்களை கொண்டு விட்டோம்.

தேசம்: அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு என்னவென்றால் ரெலோ அழிப்பிலும் கூட கூடுதலாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதைகள் எல்லாம் வடிவாக தெரியும். தப்பிப்பதற்கான வழிகளும் தெரியும். அதேநேரம் பிடிபட்டவர்களை அவர்களுடைய பெற்றோரோ உறவினர்களோ போய் சண்டை பிடித்து கூட்டி வந்து இருப்பார்கள். கிழக்கு மாகாண தோழர்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைமையில் தான்.

அசோக்: உண்மைதான். சம்பவம் நடந்த உடனே மட்டக்களப்பு தோழர்கள் சிலர் எனக்கு தகவல் அனுப்பினாங்க இப்படி பிரச்சனை என்று. எனக்கும் மட்டக்களப்பு டெலோ தோழர்களுக்கும் உறவு இருந்தது. ரெலோ பிரச்சினை வந்தவுடன் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. அப்போ கோப்பாய்க்கு பக்கத்தில் ஒரு கேம்ப் இருந்தது என்று நினைக்கிறேன். அது புலிகளால் வளைக்கப்பட்டு அவர்கள் 4 பேரும் தப்பிட்டாங்க. தப்பி என்னட்ட வந்துட்டாங்க. அவங்களோட நிறைய தோழர்கள் வந்தவங்க. பிறகு மென்டிஸ் தான் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. இந்த தோழர்களையும் காப்பாற்றி அனுப்பி போட்டுத்தான் நாங்க பின் தள மாநாட்டிக்கு போனது.

தேசம்: எத்தனை தோழர்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்…

அசோக்: கிழக்கு மாகாணத்துக்கு நான் நினைக்கிறேன் பத்து பதினைந்து தோழர்களை அனுப்பி இருப்போம். நான் பொறுப்பெடுத்து அனுப்பினேன். மெண்டிஸ் நிறைய செய்தது. எல்லா தோழர்களுக்கும் மெண்டிஸ் ஆட்கள்தான் பாதுகாப்பு கொடுத்தது.

தேசம்: எப்ப நீங்கள் பின் தளத்துக்கு போகிறீர்கள். ஏப்ரல் மே வரைக்கும் இது நடக்குது என்று நினைக்கிறேன்.

அசோக்: அதுக்குப் பிறகுதான் நாங்கள் போறோம் ஏனென்றால் பின்தள மாநாடு எண்பத்தி ஆறு கடைசியில் தான் நடக்குது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா – பொருளாதார தடை விதித்த அமெரிக்கா !

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் இராணுவத்திறனை வலுப்படுத்துவதில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணையை வட கொரியா சோதித்தது.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.
இதன் காரணமாக  அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அவர்கள் ஆற்றிய பங்குக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  மேலும், ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும்  விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்க எச்சரிக்கையை  கிம் ஜாங் உன் அரசு விடுத்துள்ளது. வடகொரியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பெயரில் இந்த எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

‘கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம்” – அமெரிக்காவை எச்சரிக்கிறது ரஷ்யா !

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்தால் கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில்,

‘உக்ரைனையோ சோவியத் ஒன்றியத்தில் அங்கம் வகித்த மற்ற நாடுகளையோ நேட்டோ அமைப்பு தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. அத்தகைய கூட்டுறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை ரஷ்யா எதிர்பார்க்கிறது.

ஆனால், அவ்வாறு உத்தரவாதம் அளிக்க நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் பிடிவாதமாக மறுத்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான அணுகுமுறை எதிரும் புதிருமாக உள்ளது. எனவே, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், அதனை எதிரகொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொள்ளும்.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, அமெரிக்காவுக்கு அருகே அமைந்துள்ள கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் ரஷ்யப் படைகளைக் குவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது’ என கூறினார்.

“பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற முன்வாருங்கள்.” – சர்வதேசத்துக்கு ஐ.நா அழைப்பு !

தலிபான்கள் ஆட்சிச் செய்து வரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் அவர்,
20 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியது. பொருளாதார ஆதரவை நிறுத்தியது, தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை.
பொருளாதாரத்தை காப்பாற்ற பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் இந்த அவசர சூழ்நிலையில் நிறுத்தப்பட வேண்டும். உலகின் பெரும்பாலான நிதி அமைப்பு டொலரில் செயல்படுவதால் அமெரிக்காவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய வெளிநாட்டு இருப்புகளில் 7 பில்லியன் டொலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. ஆப்கானிய பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை விரைவாக மீட்பது மிகவும் முக்கியமானது.
பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற  ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அந்த நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஆப்கானியர்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர்.  8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டினியினால் வாடி வருகின்றனர். மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மின் பொறியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க சர்வதேச நிதி அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதேவேளையில், அடிப்படை மனித உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்கவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தலிபான் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோளை விடுக்கிறேன். இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் இணைய வாசகர்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள் !

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் வளமும் – நலமும் பெற்றிட தேசத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பை்பொங்கல் வாழ்த்துக்கள்.
தைப்பொங்கல் கட்டுரை#thaippongkal - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்

முன்னாள் போராளியும் பத்திரிகை ஆசிரியருமான தோழர் அமீனுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்!!!

வாசிப்பை நேசிக்காத ஒரு சமூகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய பத்திரிகைகளே வெளிவந்தவன. அவை கூட சில ஆயிரங்களுக்கு மேல் விற்பனையாகவில்லை. ஆனால் இந்தச் சூழலை உடைத்து லட்சம் பிரதிகள் விற்பனையை எட்டியது தினமுரசு பத்திரிகை. அதன் ஆசிரியர்கள் பணியாளர்கள் கொலைப்பட்டியலில் இருந்த போதும் பத்திரிகையின் விற்பனையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பத்திரிகையும் அற்புதனின் மறைவைத் தொடர்ந்து வீழ்ச்சி கண்ட போது அதனைத் தாங்கி நிறுத்தியவர் தோழர் அமீன். அப்பத்திரிகையின் ஆசிரியராக வருவதற்கு முன்னரே ஏரிக்கரைப் பத்திரிகையான தினகரனில் அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் காரணங்களினால் அவர் பதவியிறக்கப்பட்டு சாதாரண உத்தியோகத்தர் ஆக்கப்பட்டார்.
தனது அறுபதாவது வயதைக் கடந்த தோழர் அமீன் கடந்த ஒரு மாதகாலமாக ஆசிறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். அதற்கான செலுவுகளை அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்த செலுத்தியதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக தனியார் மருத்துவ மனைகள் கட்டணம் செலுத்தாமல் உடலை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள்.
தோழர் அமீன் பல்லாயிரம் இளைஞர்களைப் போல் தாயக விடுதலைக்காப் போராட இடதுசாரி அமைப்பான ஈபிஆர்எல்எப் இல் இணைந்து பின்நாட்களில் தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்பில் இணைந்துகொண்டவர். வடமராட்சி பருத்தித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சிதம்பரப்பிள்ளை சிவக்குமார். இவர் பின்னாட்களில் பெரும்பாலும் தென்மாராட்சி சாவகச்சேரி பகுதியிலேயே தனது இளம்பிராயத்தைக் கழித்தார். அதன் பின் விடுதலைப் போராட்டம் அதன்பின் தொழில் என்று அவர் தலைநகர் கொழும்பிலேயே வாழ்ந்தார்.
2018இல் எனது தாயாரும் ஆசிறி மருத்துவமனையில் பிரைன் அனுறிசம் என்ன மூளை நரம்பு வெடிப்பு சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இரு வாரத்திற்கு 35 லட்சம் ரூபா செலுத்தி உயிரோடு மீண்டார். அதன் பின் ஒரு நாள் நானும் எழுத்தாளர் கருணாகரனும் தேசம் சஞ்சிகையை மீளப் பதிப்பிப்பது தொடர்பாக பேசுவதற்கு தோழர் அமீனை ஓரிரவு சந்தித்தோம். பல மணிநேரம் நீண்ட அந்த உரையாடல் விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதைகள் அப்போதைய அரசியல் எனப் பலதையும் தொட்டு வந்தது.
திறமையும் ஆளுமையும் மிக்க தோழர் அமீன் போன்றவர்கள் இச்சமூகத்துக்கு மிகவும் அவசியமானவர்கள். அவருடன் உரையாடிய சில மணி நேரப் பதிவுகளே ஒரு வரலாற்றின் முக்கிய காலகட்டத்தின் சாட்சியமாக அமைந்தது, அவர்களது தலைமுறையின் மறைவு இலங்கைத் தமிழர்களின் வரலாற்றின் முக்கிய காலகட்டத்தின் சாட்சியங்களின் மறைவும் கூட.
இச்செய்தி பதிவேறுகின்ற போது அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நிறைவேறியிருக்கும் அவரது பிரிவுத் துயரால் வாடும் அனவரது துயரோடும் எனது துயரைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

யாழில் தொடரும் கூட்டுப் பாலியல் வல்லுறவுகள்: ரீட்டா, வித்தியா… யாழ் பல்கலைக்கழகம் எங்கே போகின்றது? தமிழ் சமூகம் எங்கே போகின்றது?

செவ்வாய்கிழமை ஜனவரி 11ம் திகதி நெல்லியடியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் நான்கு கயவர்களினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அவரிடம் இருந்த பணம் நகைகள் என்பனவும் சூறையாடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தவறுதலான தொலைபேசி அழைப்பில் வந்த உறவு மிகக்கொடூரமான நிலைக்கு அப்பெண்ணைத் தள்ளியுள்ளது. துணிகரமான அப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பொலிஸில் முறைப்பாடு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்.

தொலைபேசி அழைப்பில் வந்தவருடன் பேசியது காதலாக, தொலைபேசி அழைப்பில் வந்தவன் அப்பெண்ணுக்கு ஆசை வாரத்தைகளைக் காட்டி அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி சம்பவ தினம் செவ்வாய்க் கிழமை காலை வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் கொண்டுவரச் சொல்லி கேட்டுள்ளான். அந்த இளம் பெண்ணும் தன்னுடைய காதலனை யோக்கியன் என நினைத்து அவன் சொன்னவாறே செய்துள்ளார்.

அவ்விளம்பெண் தன்னுடைய காதலுக்காக தன் பெற்றோரைவிட்டு புதுவாழ்வைத் தேடிச் செல்ல அவனோ அவ்அபலைப் பெண்ணை தனதும் தன்னுடைய நண்பர்களதும் காமமப்பசிக்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் அவளின் ஊரடியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளான்.

அவ்விளம் அபலைப் பெண் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை யாரிடமும் சொல்லமாட்டாள் அதனால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்ற துணிச்சலிலேயே இந்த அக்கிரமத்தை இக்கயவர்கள் செய்துள்ளனர். பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு அவர்களே காரணம் என்று காரணம் கற்பிக்கின்ற போக்கை தமிழ் சமூகம் இன்னமும் வைத்துக்கொண்டுள்ளதால் இந்தக் கயவர்களும் அதனை வைத்து தாங்கள் தப்பிக்கலாம் என்று நம்பியுள்ளனர்.

ஆனால் அத்துணிகரமான பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸாரிடம் முறையிட்டு இவ்வாறான கயவர்களுக்கு பாடம் கற்பிக்க முயன்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸில் முறையிட்ட போதும் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு கையளிக்கப்பட்டது. விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் துன்னாலை பகுதியைச் சேர்ந்த நால்வரில் சந்தேகம் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளனர்.

பெண்களைப் பாலியல் பிண்டங்களாக மட்டும் பார்க்கின்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. யாழில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவுச் சம்பவம் நடைபெறுவது இது முதற் தடவையல்ல. எண்பதுக்களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ரீட்டா என்ற பெண்ணை அவ்வமைப்பில் இருந்து தீப்பொறி என்ற பெயரில் வெளியேறிய சிலர் தங்களை வேவு பார்த்ததற்காக கூட்டுப் பாலியல் வல்லுறவை மேற்கொண்டுவிட்டு அப்பெண்ணை புளொட் முகாம் அருகிலேயே வீசியெறிந்துவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது. பிற்காலத்தில் சம்பந்தப்பட்ட பிரான்ஸ் வந்து வாழ்ந்த போதும் மனநிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது கனடாவில் வாழ்க்கின்றனர்.

மற்றைய சம்பவம் தங்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களைப் பழிவாங்க அவர்களுடைய பள்ளி செல்லும் மகளை மிகக் கொடூரமாக கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவ்விளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் புங்குடு தீவில் இடம்பெற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற இரு பெண் பிள்ளைகளின் தாயான விஜயகலா மகேஸ்வரன் முயற்சித்து இருந்தது தெரிந்ததே.

மேற்குறிப்பிட்ட இரு கூட்டுப் பாலியல் வல்லுறவுகளுமே பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நெல்லியடியில் இடம்பெற்ற சம்பவம் ஒரு இளம்பெண்ணை நம்ப வைத்து மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கைத் தூரோகச் செயல்.

தமிழ் சமூகம் இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளையும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கையில் யாழ் பல்கலைக்கழகச் சமூகம், எவ்வித சமூக அக்கறையுமற்ற இதையெல்லாம் மீறிய ரவுடிக் கும்பலாக செயற்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமூகத்தின் எந்த விடயம் பற்றியும் உருப்படியான ஆய்வுகள் எதையும் இதுவரை செய்து வெளியிடவில்லை. குறைந்தபட்சம் ஏன் தங்கள் மாணவர்கள் காட்டு மிராண்டிகளாக செயற்படுகின்றனர் என்பதை அறிந்து அதனை மாற்றினாலே சமூகத்திற்கு மிகப்பெரும் உதவியாக அமையும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் மேற்குள்ளும் காட்டுமிராண்டித் தனங்கள் பெண்கள் மீது மேற்கொள்ளும் பாலியல் துஸ்பிரயோகங்கள் நாகரீக சமூகம் அருவருக்கத்தக்க நிலைக்கு சென்றுள்ளது. இதையெல்லாம் இவர்கள் தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டே செய்கின்றனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆசிரியர்கள் முதற்கொண்டு பரவலான பொதுத்துறைகளில் பணியாற்றுபவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களே. பல்கலைக்கழகம் பொறுப்பற்ற காட்டுமிராண்டிகளை பட்டதாரி ஆக்கியதன் விளைவுகளில் ஒன்று தான் தமிழ் சமூகம் தொடர்ந்தும் கீழ் நிலைக்குச் செல்வதன் அடிப்படைக் காரணம்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா இந்நிலைமை தொடராமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார் என்ற போதும் அவருடைய நடவடிக்கைகளில் மிகுந்த போதாமை காணப்படுகின்றது. முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை காலத்தில் ஆரம்பித்த வீழ்ச்சி இன்னும் தொடர்ந்துகொண்டேயுள்ளது.

யாழ் பல்கலைக்கழகம் எங்கு போகின்றதோ அதனை நோக்கியே தமிழ் சமூகமும் செல்லும். காட்ட வேண்டிய பல்கலைக்கழகமே ரவுடிக்கும்பலாக இருந்தால் ரவுடி வாள் வெட்டுக்குழுவாகவும் கூட்டுப்பாலியல் வன்புனர்ச்சியாளர்களாகவும் தான் ஆவார்கள். யாழ் பல்கலைக்கழகம் எப்போது திருந்தும்? யாழில் சமூக மாற்றம் எப்போது வரும்? யாழ் பல்கலைக்கழகத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு துணைவேந்தர் சற்குணராஜாவே வந்துவிட்டாரோ?

அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் – யார் அந்தப் பெண் ..?

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தை சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர். இவர் கடந்த 1969-ம் ஆண்டு “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்குத் தெரியும்” என்கிற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் சிறுவயதில் இருந்து தன்மீது காட்டப்பட்ட இனவெறி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்தும் அவற்றில் இருந்து மீண்டு வந்து எழுத்துலகில் சாதனை பெண்ணாக உருவெடுத்தது குறித்தும் விரிவாக எழுதியிருந்தார்.

நாணயத்தில் அச்சிடப்பட்ட மாயா ஏஞ்சலோவின் உருவம்இந்த புத்தகத்தின் மூலம் மாயா ஏஞ்சலோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நபராக மாறினார். இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது 86 வயதில் காலமானார். இந்த நிலையில் மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் முதல் பெண் நிதித்துறை செயலாளரான ஜெனட் லெயனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண் எழுத்து: வலியை வென்ற வலிமை காளிங்கராயன் உலகப் | வேலாயுதம் ஆவுடையப்பன்  எண்ணம்

 

இதுகுறித்து அவர் கூறுகையில் “ஒவ்வொரு முறையும் நமது நாணயத்தை மறுவடிவமைப்பு செய்யும் போது, நமது நாட்டை பற்றி நாம் எதை மதிக்கிறோம், ஒரு சமூகமாக நாம் எப்படி முன்னேறி வருகிறோம் என்பதை பற்றி ஏதாவது சொல்ல வாய்ப்பு உள்ளது” என கூறினார்.

அடுத்த எட்டு வாரங்களில் ஐரோப்பா ஆட்டம் காணும் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

அடுத்துவரும் ஆறு முதல் எட்டு வாரங்களில், ஐரோப்பாவில் அரைவாசிப்பேருக்கு ஒமைக்ரொன் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக, அலைபோன்று ஒமைக்ரொன் பரவல் இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்தியர் ஹென்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில், இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஏழு மில்லியன் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வார காலப்பகுதியில், தொற்றுப் பரவல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரி – அரவிந்தன் மோதல் பின்னணி என்ன? யார் இந்த அரவிந்தன்!!!

ஒரு காலத்தில் தமிழீழம் கேட்டு இலங்கையின் எதிர்க்கட்சியாகவும் வந்து, தமிழ் அரசியலைத் தீர்மானித்த தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று நொந்து நூடிள்ஸ்ஸாகி சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. அரவிந்தன் கோஸ்டி சங்கரியர் பணத்தை சூறையாடுகிறார் என்பதும் சங்கரியர் அரவிந்தன் பணத்தை மோசடி செய்துவிட்டார் என்று ஒப்பாரி வைப்பதும் சமூக வலைத்தளங்களில் தவறணை உரிமையாளர்கள் வேதம் சொல்லும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. சங்கரி ஐயா சொத்துக்களை விற்று காசடித்தாரா இல்லையா என்பதை அரவிந்தன் தரப்பு ஆதாரத்தோடு வைக்கவில்லை. போக்கடி போக்காக சொல்லி வருகின்றனர்.

இந்தச் சொத்துக்களின் மீது பலருக்கும் கண் இருக்கின்றது என்பது உண்மை. அந்த சொத்துக்களுக்காகத்தான் கட்சியில் பலரும் இன்னும் ஒட்டிக்கொண்டுள்ளனர் என்பது அதைவிடவும் உண்மை. இவர்கள் எல்லோரும் சங்கரி ஐயாவில் பழியைப் போட்டுவிட்டு தாங்களும் சுருட்டிக்கொள்ளவே எண்ணுகின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள முரண்பாடு கட்சியின் கொள்கை சம்பந்தப்பட்டதாக ஒரு போதும் இருக்கவில்லை. அதற்கு அப்படி ஒரு பெரிய கொள்கையும் இல்லை.

லண்டனில் தசாப்தங்களாக வாழ்ந்த சண்முகராஜா அரவிந்தன், யாழ் மாநகரசபை உறுப்பினராக இருந்து காலத்தில் அப்போது மேயராக இருந்த செல்லன் கந்தையாவை தாக்கி தன் சாதியத் திமிரை வெளிப்படுத்தியவர். அதைவிட அவருக்கு குறிப்பான அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. லண்டனில் கூட்டணிக்கு பெரிய காசு சேர்க்கும் அளவிற்கு நாணயமானவரோ நம்பிக்கையானவரோ அல்ல. அவர் வற்புறுத்தியிருந்தால் சில சமயம் சில நூறுகளை யாராவது வழங்கி இருப்பார்கள். அந்த சொற்ப பணத்தை ஏமாற்றும் அளவுக்கு சண்முகராஜா அரவிந்தன் ஒரு முட்டாளும் அல்ல. அவர் ஒன்றும் உழைக்கவும் இல்லை அதே சமயம் ஊரைக் கொள்ளையடிக்கவும் இல்லை. பிரித்தானிய அரசின் உதவிப் பணத்தில் தான் அவர் இலங்கையில் அரசியல் நகர்த்துகிறார் என்பது பலரும் அறிந்த விடயம்.

அரவிந்தனுக்கு மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் அவருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் எப்போதும் ஒரு கண் இருந்தது மிகவும் உண்மை. ஆனால் அதற்கான தகுதி அவருக்கு இருக்கின்றதா என்றால் இன்றைக்கு இலங்கையில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு (சுமந்திரன் தவிர்ந்த) என்ன தகுதி இருக்கின்றதோ அது அரவிந்தனிடமும் இருக்கின்றது. அரவிந்தன் ஒரு வடிகட்டிய தமிழ் குறும் தேசியவாதி. சாதிய பிரதேச வெறியில் ஊறியவர். பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே பார்ப்பவர். பதவி ஆசையைத் தவிர கட்சியைப் போல் அவரிடம் கொள்கையும் இல்லை கோதாரியும் இல்லை. தமிழ் காட்சி ஊடகங்களுக்கு நேரத்தை நிரப்புவதற்கு சங்கரி ஜயாவிலும் பார்க்க இவர் சிறந்த தெரிவாக ஐபிசி மற்றும் ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

தலைவர் எப்ப சாவார் கதிரை எப்ப காலியாகும் என்று லண்டனில் இருந்து வந்த அரவிந்தனுக்கு சங்கரி ஐயா ஒமிக்கிரோனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு இருப்பது பெரும் சங்கடம் தான்.

தான் தாயகத்திற்கு வரும் முன்பே பொன் சிவகுமாரனின் சகோதரர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டு, அதன் பிறகு அவருக்கே முதுகில் குத்தியவர் அரவிந்தன். சங்கரி ஐயா பொன் சிவசுப்பிரமணியத்திற்கு எதிராகத் திரும்பிய போது அதற்கு முழுவீச்சாக ஆதரவு கொடுத்து அவரைக் கட்சியில் இருந்தே நீக்க முயற்சித்தனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் இப்போது அரவிந்தன் – சங்கரி ஐயா இழுபறி இப்போது சில ஆண்டுகளாகவே தொடர்கிறது.

சங்கரி ஐயா இன்னும் நிறைய காலம் வாழ முடியுமா என்பது கேள்விக்குறி. இந்நிலையில் அவரும் கட்சியின் பொறுப்புக்களை ஒப்படைத்து தன் தலைமைத்துவப் பண்பைக் காட்டவில்லை. சாகும் வரைக்கும் தான் தான் தலைவர் என்று இலங்கையில் உள்ள ஏனைய தலைவர்களைப் போல் தானும் சன்னதம் ஆடுகின்றார். இன்றைய நவீன தத்துவவியல் உலகத்திலும் நாம் இன்னும் பரராஜசேகரனை சங்கிலியன் முதுகில் குத்திய அரசியலில் தான் நின்று கொண்டிருக்கிறோம்.

இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் சங்கரி ஐயாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் இருந்தது உண்மை. ஆனால் அவர் அதை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு வந்தது மிகத் துரதிஸ்டம். இன்றுள்ள இலகைத் தமிழ் தலைவர்கள் எல்லோரும் மதிக்கக் கூடியவராக அவர் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதை கெடுத்துக்கொண்டு அரவிந்தன் போன்ற சில்லறைகளுடன் எல்லாம் கீழ்நிலைக்கு இறங்கி சண்டை செய்வது தமிழ் அரசியலின் துரதிஸ்டம்.

2010க்கயையொட்டி சங்கரி ஐயாவின் 75வது பிறந்த தின நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. அப்போது நான் எழுதிய பதிவில் ‘சங்கரி ஐயா அரசியலில் இருந்து ஒதுங்குவது அவருக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது எனச் சுட்டிக்காட்டி இருந்தேன். அதற்குப் பின்பும் அவரோடு பல தடவைகள் நேர்காணலை மேற்கொண்டு இருந்தேன். அபோதெல்லாம் சங்கரி ஐயாவுடன் மட்டுமல்ல அவரது குடும்பத்தவர்களில் ஒருவராக ஏன் பொன் சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்திலும் ஒருவராக இருந்தவர் அரவிந்தன். குடும்பம் என்பது சின்ன அரசியல் என்றால் அரசியல் என்பது பெரிய குடும்பம். ‘அரசியலில் இதெல்லம் சகஜம் அப்பா!’