2022

2022

பிரித்தானியாவில் மதச்சண்டை – இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் !

பிரித்தானிய நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு பிரிவினர் இடையே நேற்று வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே, லீசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார்.

இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர்.இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியான நிலையில் லீசெஸ்டர்ஷையர் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில்,

பிரித்தானிய அதிகாரிகளிடம் இந்த விவகாரம் பற்றி எடுத்து சென்று உள்ளோம். இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

லீசெஸ்டர் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.மத வழிபாட்டு தலத்திற்கு வெளியே கொடி ஒன்றை இழுத்து அவமதிப்பு செய்தது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என லீசெஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை முழங்கியபடி இந்து குழுக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகளும், காணொளியாக வெளிவந்துள்ளன.

இந்த குழுக்கள், லெய்செஸ்டரில் உள்ள முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடி உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.லெய்செஸ்டரில் வன்முறை, ஒழுக்கக்கேடு அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்றவற்றை நாங்கள் சகித்து கொள்ளமாட்டோம். அமைதி மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது கற்களை கொண்டு வீசி தாக்கிய இலங்கை கடற்படையினர் – அதிருப்தியில் மீனவர்கள் !

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி அங்கிருந்து சென்று, இன்று செவ்வாய்க்கிழமை காலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியுள்ளனர்.

மேலும் விசைப்படகில் இருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பியுள்ளதுடன், படகு ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜெகதாபட்டிணம் மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்தநிலையில், இன்று காலை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக பொலிசாரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட பெண் – ஈரானில் ஹிஜாபை எரித்து பெண்கள் போாராட்டம் !

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

 

இரானில் இறுகும் ஆடைக் கட்டுப்பாடு; தலைமுடியை வெட்டி, ஹிஜாபை எரிக்கும்  பெண்கள்! - என்ன காரணம்? - Daily Tamil News - No.1 Tamil news website in the  world | Latest Tamil News

சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது. எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க நடிகையும் நாவலாசிரியருமான லியா ரெமினியின் டுவீட் காரணமாக, ஹிஜாப் அணியாத ஈரானியப் பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் அரசு நிர்வாகத்தின் வன்முறை ஆகியவை உலகின் கவனத்தைப் பெற்றன. அதன்பின், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் போராட்டம் தொடர்பாக ஈரானிய பத்திரிகையாளரும் ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

📰 'முறையற்ற' உடையில் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞர் இறந்ததை அடுத்து  ஈரானிய பெண்கள் ஹிஜாப்களை தூக்கி எறிந்தனர் - ToTamil.com

போலீசாரால் மஹ்சா அமினி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஈரானிய பெண்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 7 வயதில் இருந்து பெண்கள் நாங்கள் எங்கள் முடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்ல முடியாது, வேலையும் கிடைக்காது. இந்த பாலின வெறி ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம். அமைதியான போராட்டக்காரர்கள் மீது ஈரானின் சக்சேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். முதலில் போலீசார் 22 வயது பெண்ணை கொன்றனர், இப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்துகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் எந்த தீர்மானமாயினும் ஏற்கப்போவதில்லை – இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது  இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைபு தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் பேசிய அமைச்சர் அலி சப்ரி,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும். தற்போதைய தருணத்தில் இந்தத் தீர்மானம் தேவையற்ற ஒன்றாகும். முக்கிய நாடுகளின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானம், பிளவுபடுத்தும் பொறிமுறை என்பதால், அதனை ஏற்கப் போவதில்லை.

தீர்மானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இந்த கடமையை நிறைவேற்றும் பணிகள் தொடரும். உள்நாட்டு பொறிமுறைக்கு அப்பால், அரசியலமைப்பை மீறும் எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.

இலங்கை தொடர்பான புதிய வரைவுத் தீர்மானம், அதிகாரப் பகிர்வு, தேர்தலை நடத்துதல், காணாமல் போனவர்களின் அவல நிலையை நிவர்த்தி செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுதல், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இதன்போது அமைச்சரிடம் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடனான சந்திப்புக்களு் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது,

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் எந்தக் கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை. என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண விரிவான சர்வதேச அணுகுமுறை தேவை என்று நான்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் முன்வைத்த தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,

அது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, வெவ்வேறான நபர்கள் இந்த விடயத்தில் பணியாற்றுகின்றார்கள் எனவும் அது எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள உலக உணவுப் பணவீக்க சுட்டி – முதல் பத்து நாடுகளில் இலங்கையும் !

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உணவுப் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.

லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் ஆட்சியால் உயர்கல்வியை இழந்த ஒரு மில்லியன் ஆப்கானிய பெண்கள் !

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதை தொடர்ந்து அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை விதித்து தலிபான்கள் உத்தரவு பிறப்பித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.

இதனால் கடந்த ஒரு ஆண்டாக அங்கு பெண்கள் மேல்நிலை கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தலிபான்களை வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உயர் கல்வியை இழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு தெரிவித்துள்ளது.

பெண்கள் கல்வி கற்க முடியாமல் போன கடந்த ஓராண்டானது, ஒரு சோகமான, வெட்கக்கேடான மற்றும் முற்றிலும் தவிர்க்கப்படக்கூடிய ஒரு ஆண்டுவிழா என்று ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திற்கு ஆழமான சேதத்தை ஏற்படுத்துகிறது என ஐநா தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – புத்தகக்கல்வியை மட்டுமே போதிக்கும் பாடசாலைகளே காரணம் !

இலங்கையில் போதைப்பொருள் பாவைனை தொடர்பான அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி “ போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே எனவும் அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.” எனவும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலை வட-கிழக்கில் இன்னமும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இது தொடர்பான பதற்றமான நிலை தொடர்பில் பாராளுமன்றில் பதிவு செய்திருந்தனர். போதைப்பொருள் ஒழிப்புக்கான முறையான தீர்வுத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி பாராளுமன்றின் ஏனைய உறுப்பினர்களாலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இது தொடர்பான கேள்வியை கல்வி அமைச்சரிடம் எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றிய போது “பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன எனவும் இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதனை தற்காலிகமான – வழமையான அமைச்சர்கள் வழங்கும் சராசரியான உறுதிப்பாடற்ற பதிலாகவே எடுத்துக்கொளள முடியும். தவிர இது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப்போதில்லை என்பதையும் கல்வி அமைச்சரின் பதில் மூலமாக உணர முடிகிறது. ஒப்பீட்டளவில் தெற்கை விட வட-கிழக்கில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள், ஊசி போதப்பொருள் பாவனை அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் இதன் விளைவாக வாள்வெட்டு மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒன்றும் நமது பகுதிகளில் மேலோங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்து முடிந்த குறுகிய கால இடைவெளியில் ஊசி போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து இளைஞர்கள் வரையில் உயிரிழந்துள்ளமையும் இங்கு நோக்கப்பட வேண்டியது. இது அண்மைய காலத்தில் போதைப்பொருள் பாவனையின் தீவிர தன்மையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

“கிரிக்கெட்டில் வென்றாலும் ஆப்கானிஸ்தானை விட நாம் வீழ்ச்சியடைந்த நிலையிலுள்ளோம்.”- ஜனாதிபதி ரணில்

“கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கயாஞ்சலி அமரவன்சவுடனான வலைப்பந்தாட்ட அணியும் , தசுன் ஷானக தலைமையிலான கிரிக்கட் அணியும் ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைப் போன்று நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இந்த வெற்றிகள் எமக்கு கிடைக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு நாம் தோல்வியடைந்தோம். எனினும் இந்த தோல்வியைக் கண்டு எமது அணி பின்வாங்கவில்லை. தசுன் இந்த தோல்வியை , தமது அணியை பலமிக்கதாக்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இது கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர். கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானை விட வீழ்ச்சியடைந்துள்ளோம். சிலர் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று எண்ணுகின்றனர். தசுனைப் போன்று அனைவரும் எண்ணினால் இந்த நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் மீள முடியும்.

நாம் ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிலும் வெற்றியாளர்களாவதற்கு , எவ்வித அச்சமும் இன்றி உலகத்துடன் போட்டியிடத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்கு பதிலாக, உலகிலுள்ள சட்டங்களை எமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். இது ஒருபோதும் சாத்தியமாகவில்லை.

இதற்கு முன்னர் இது போன்ற வெற்றிகளின் ஒரு பங்கினை அரசியல்வாதிகள் தம்வசப்படுத்திக் கொண்டனர். எனினும் நாம் அந்த நடைமுறையை முற்றாக நீக்கி, வெற்றியின் நூற்றுக்கு 200 சதவீத பங்கினையும் வீர, வீராங்கனைகளுக்கே உரித்தாக்கியுள்ளோம் என்றார்.

இலங்கைக்கு புத்துயிர் அளிக்க வாருங்கள் – வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் குமார் சங்கக்கார கோரிக்கை !

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.facebook.com/Official.Kumar.Sangakkara/posts/pfbid0CRNjvqWUo1jXh44y2G7EXZYdTfb6ugn6iyFaeVoEwGCMXnzzuBZkz2fwr49Xz4fcl

உள்ளூர் புகைப்படக் கலைஞர் பிரதீப் கமகேயினால் பிடிக்கப்பட்ட இலங்கையின் இயற்கை காட்சிகளை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட குமார் சங்கக்கார,

“நிச்சயமாக பிரமிக்க வைக்கிறது! எங்கள் தீவு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது.

குறித்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ள குமார் சங்கக்கார, இலங்கை மீண்டும் விருந்தினர்களுக்கான திறக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..

தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள குமர் சங்கக்கார,

“எங்கள் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து நண்பர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால், நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி, இங்கு சில சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் பயண ஆலோசனைகளை தளர்த்துவதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையை நம்பிக்கையுடன் மீண்டும் இங்கு கழிக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, தேவையற்ற செய்திகள் நல்ல செய்திகளை விட வேகமாக பரவுகின்றன. எனவே தயவுசெய்து இதனை பகிரவும், ”என்று சங்கக்கார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீண்டாமைக் கொடுமை – மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மறுத்த கடை முதலாளி !

தமிழ்நாடு – தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில், கடைக்கு வந்த குழந்தைகளிடம் கடைக்காரர் , “இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. நீங்கள் போங்க. இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். தின்பண்டம் கொடுக்க மாட்டுறாங்க எனச் சொல்லுங்க. இனி கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” என்று சொல்கிறார்.

உடனே, அதில் ஒரு குழந்தை என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறார். உடனே, ‘கட்டுப்பாடுன்னா… ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்காங்க. உங்கத் தெருவுல யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” என்று சொல்வி அந்தக் குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார்.

இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோவை அந்தக் கடைக்காரர் தன் சுய சாதியினர் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதன் பிறகு பல வாட்ஸ்அப் குழுக்கள் இந்த வீடியோ வைரல் ஆனது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமசந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும், அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கான பின்னணி தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் (கோனார் மற்றும் பட்டியல் சாதியினர்) சேர்ந்தவர்கள் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோனார் சாதியினர் பட்டியல் சாதியினரிடம் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டியல் சாதியினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, பட்டியல் சாதியினருக்கு தங்கள் கடைகளில் எந்த பொருளும் கொடுக்கக் கூடாது என கோனார் சமூகத்தினர் தீர்மானம் செய்ததாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் பாஞ்சாகுளம் கிராமத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.