23

23

பணிப்பெண்களை ஜோர்தான் நாட்டிற்கு அனுப்ப தடை

sri-lankan-maids.jpgஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வேலைவாய்ப்பிற்காக பணிப்பெண்களை ஜோர்தான் நாட்டிற்கு அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சியினர் சந்திப்பு

இன்று மதியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சி பிரநிதிகளை அலரிமாளிகை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ஜக்கிய தேசிய கட்சி சார்பில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, திஸ்ச அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேராவும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துரையாடியுள்ளனர்.

தூற்றுவார் தூற்றட்டும் எனது பணி தொடரும்…… – எனக்குத் தெரிந்த நியாயம்! – 2 : சஹாப்தீன் நாநா

Chankanai_Marketசிறிலங்காவில் நிலத்திற்குக் கீழ் நிறைய வளங்கள் இருக்கின்றதாமே? உண்மையா? என ஒருவர் கேட்க, ஆம் இருக்கின்றது என இன்னொருவர் சொல்ல. இதை ஆராயப் புறப்பட்டது ஒரு குரூப். ஆம் சிறிலங்கா முழுக்க உள்ள நிறையப் பிரதேசங்களின் மண் பரிசோதிக்கப்பட்டது. இறுதியில் ஊவா மாகாணத்தில் ஒரு காட்டுப் பிரதேசத்தில் (மலைப்பிரதேசம்), அரச காணியில், நிலத்திற்குக் கீழ் இரும்பு தாது இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இரண்டு வருடம் (2006 முதல் 2008 வரை) ஓயாத உழைப்பு, அலைச்சல், அமெரிக்க நில ஆய்வாளர்கள், இங்கிலாந்தின் மண்ணியல் நிபுணர்கள், சிங்கப்பூர் கம்பனி ஒன்றின் வழிகாட்டல் என ஓடோ, ஓடென ஓடி, நாலரை கோடி ரூபா சிறிலங்கா பணத்தை தண்ணியாக இறைத்து, சிறிலங்காவில் இரும்பு இருக்கின்றது என்ற உண்மையை கண்டாயிற்று.

அப்புறம் கிட்டத்தட்ட 5000 (ஐயாயிரம்) கோடி ரூபா முதலிட்டு, முதல் வருடம் 1000 பேருக்கு வேலை வாய்ப்பளித்து, சிறிலங்கா பொருளாதாரத்தை ஜம்மென்று உயர்த்துகின்றோம் பேர்வழி எனக் கூறிக்கொண்டு 2009ம் ஆண்டு நவம்பர் 14 முதல் மும்மூர்த்திகளின் கதவை தட்டிக் கொண்டிருக்கின்றோம், தட்டுகின்றோம், தட்டுகின்றேன். ஆனால் இதுவரையும் எம்மூர்த்தியும் எனது புறஜக்ட்டை தூக்கிக்கூட பார்க்கவில்லை. ஆனால் இந்த புறஜக்ட்டுக்காக எனக்கு கடன் தந்த ஒவ்வொருவரும் என்வீட்டுக்கதவை தட்டி, பிடறி மயிர் தெறிக்க திட்டிவிட்டு போகின்றார்கள். காக்கா தொப்பி புரட்டிட்டாண்டா? இதுதான் இப்போதைய நிலமை. இதை விட்டுவிட்டு பசிலுக்கு சாமரம் வீசி, மகிந்தக்கு வீதியில் குடைபிடித்து, கோட்டாபாயவிற்கு பன்னீர் தெளிக்க இன்னும் நம்முட ஆத்மா சாகல. சாகவும் மாட்டாது. அது ஒரு பீனிக்ஸ்.

இப்படித்தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பீனிக்ஸ் உருவாக வேண்டும், உருவாக்கப்பட வேண்டும். போராடு, போராடு, போராடு என்றுதான் நாமும் சொல்கின்றோம். முதலில் உன்னுடன், உனது வாழ்க்கையை வென்றெடுக்க போராடு. கத்தியின்றி, ரத்தமின்றி, வெள்ளேந்திரியாக போராடு. பசிக்குணவு, உனது பசிக்குணவு, பொண்டாட்டி, புள்ளகுட்டியின் பசிக்குணவு, அப்புறம் வீதிக்கு வா. வாழ்க்கையுடன் போராடத் தெரியாதவனுக்கு போராட கற்றுக்கொடு. நோ பொளிடிக்ஸ். இப்படி நாலுபேரை உருவாக்கு. அப்போது உனக்கு புரியும் நீ இங்கே நாயாக உழைக்க, யாரோ உன்னை சுரண்டி தின்பது புரியும், தெரியவரும். நீ உற்பத்திசெய்து, கண்ணீரும், களைப்பு நீரும் கலந்து உருவாக்கிய உருளைக்கிழங்கு சந்தையில் 90 ரூபாவுக்கு விற்கமுடியாமல் திரும்பிவரும். மினிஸ்டர்ர மச்சினன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த உருளைக் கிழங்கு சந்தையில் 55 ரூபா சில்லறை விலை, 43ரூபா ஹோள்சேல் விலை என துதிபாடும். இடிக்கும். மனம் பதறும். அரசையும் ஆட்சியாளர்களையும் திட்ட வேண்டும் போல இருக்கும். ஆனால் உன்னிடம் பலம் இருக்காது.

உனது அடுத்த தோட்டத்தில் தக்காளி செய்தவரின் கதையும் இதுதான். தக்காளி சோஸ் இந்தோனேசியாவில் இருந்து இம்போட் செய்யப்படுவதால் தக்காளி விலை சரியும். சைனாவில் இருந்து பிளாஸ்ரிக் குடம் இறக்குமதி செய்யப்படுவதால், மண்பானை உற்பத்தி படுக்கும். ஆம் அங்கிருந்துதான் நாம், நான் சொல்லும் சொல்லும் புரட்சி வெடிக்கும். அது பொருளாதாரப் புரட்சி, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற புரட்சி.

இல்லை எங்கள் ரத்தம் சிவப்பு, சிங்களவன்ட ரத்தம் கறுப்பு. அதனால நாங்க யுரோப்புல வசதியாக இருந்து கொண்டு மந்திரிப்போம், வன்னியில இன்னும் நேர்த்தி செய்த எங்கட வாரிசுகள் இருக்கு, அவர்கள காவு கொடுத்துப் போட்டுத்தான் சாவோம் என்றால், அல்லாஹ்ச்சாமி, ஹிந்துச்சாமி, புத்தர்ச்சாமி, மாவோச்சாமி, லெனின்சாமி எல்லாமே, எல்லோருமே பொய் என்றுதான் நான் சொல்வேன்.

நாம் எவ்வளவுதான், அய்யன்னா நாவன்னா என்னா, அகிலாண்டேஸ்வரிகள்ற கருவறை வரைதான் நடைபயணம் செய்தாலும், சிறிலங்கா ஒரு முழு நாடு, அதில் சிங்கள, தமிழ், முஸ்லீம் என்ற மூவின மக்கள் வாழ்கின்றார்கள், இனியும் வாழ்வார்கள் என்ற காய் நகர்த்தல்கள்தான் இனி நடக்கும். அரங்கேறும். தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆட்சியாளர்களை திக்குமுக்காடப் பண்ணலாம். திக்குமுக்காடப் பண்ணினோம். அதன் பயனைத்தான் மே17, 2009ல் முள்ளிவாய்க்கால் சகதிக்குள் அறுவடை செய்தோம். அதில் இருந்து கற்றதுதான் இந்த எனக்குத் தெரிந்த நியாயம்.

2009 மே இல் உலகமே தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், மே 19ல் முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் கேகாலை பஸ்நிலையத்துக்கு, முன்னிருக்கும் ஹிந்துக் கோயிலில், பட்டப்பகல் 11 மணிக்கு, லவுட்ஸ்பீக்கர் கட்டி தமிழ்மக்கள் பெரும் ஆரவாரத்துடன் பூஜை, புனருத்தாரணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சிங்களவனும் கோயிலை கடக்கும் போது, குனிந்து, வலதுகையை நெஞ்சில் அமர்த்திக் கொண்டு மௌனியாகச் செல்கின்றான். கோயிலுக்கு 200 அடி தூரத்தில் படா டோபமாக, பணத்தை தண்ணியாக இறைத்து கட்டப்பட்டிருக்கும் முஸ்லீம் பள்ளிவாசலில் இருந்து பாங்கொலியும் அதற்குப் போட்டியாக கேட்கும். எந்த சிங்களவனும் வந்து இது எங்கள் பூமி, தமிழனும், சோனியும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என இதுவரை சொல்லவில்லை. இதுதான் சிங்களவன்.

குருவி சேர்ப்பது போல் ஐரோப்பிய நாடுகளில் சேர்ப்பதை உண்டியல்காறர்களுக்கு கொடுக்காமல், அந்த அகதிகளுக்கு, அந்த மனித தெய்வங்களுக்கு, தனித்தனியாக அனுப்புவோம். ஒரு மனிதனை உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொருவனும்தான், நாளைக்கு அல்லது நாளை மறுதினம் சிந்திக்க தொடங்குவான். தனது உருளைக்கிழங்கு ஏன் மார்கட்டில் விலை போகல என சிந்திப்பான். சிந்திக்கும் வளம் நம்மால் வளங்கப்பட்டிருக்கும். அதுதான் ஆரம்பம். அவ்வாறு அவன் சிந்திப்பதுதான் ஆரம்பம். அவனை தானாக, சுயமாக சிந்திக்க விட வேண்டும். அப்புறம் என்ன செய்யலாம் என அவனே முடிவெடுப்பான். கிட்டத்தட்ட 10 வருடம் எடுக்கும். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாமே. எனவே எம்மவன் முப்பது வருடமெல்லாம் வேஸ்ட் பண்ண மாட்டான். சிங்கள, தமிழ், முஸ்லீம் சகோதரர்களுடன் சேர்ந்து அழகான முடிவெடுப்பான்.

சின்னத்தாயியை இந்திய ஜனாதிபதி தனது மாளிகைக்கு அழைத்துத்தான் பட்டம் வழங்கினார். நாம் பல நுறு சிங்கள, தமிழ், முஸ்லீம் சின்னத் தாயிகளையும், சின்னத் தங்கச்சிகளையும் உருவாக்குவோம். அவர்களாக சுயம்புவாக வெளிவருவார்கள். அப்போது அவர்களைத்தேடி பல கட்சிகள் வரும். வரப்பண்ண வேண்டும். வரப்பண்ணினோம். அதை கண்டி மாவட்டத்தில் பரீட்சார்தமாக செய்தும் பார்த்தோம். எம்மால் உருவாக்கப்பட் ஏழைத்தாய்மாருக்கு கொழும்பு கொமர்சியல் வங்கி வீடு தேடிவந்து கடன் வழங்கியது. பத்தாயிரம் ரூபா முதல் 5லட்ச ரூபா வரை. யாருடைய கரண்டியோ, கால்பிடித்தலோ இல்லாமல் செல்ப் கரண்டி அங்கு வெற்றி பெற்றது. வாட்டசாட்டமான, கறுப்பு அரசியல்வாதி, வீடு தேடிவந்து, வாக்கு வழங்குங்கோ, உங்கள் கணவன்மாரை கொரியாவுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றார். கடந்த இறுதித் தேர்தல் முடிந்து பத்துநாளில் 147 பேரை கொரியாவுக்கு அனுப்பியும் வைத்தார். இதுதான் சிங்களவன். இதுதான் பொருளாதாரப் புரட்சி.

பொருளாதாரப் புரட்சி எப்படி எங்கள் உரிமைப் பிரச்சனைக்கு வடிகாலாகும்? என்று இக்கென்னா வெச்சிப்பேசினால் நாம் கொஞ்சம் பின்னே போய் மீண்டும் மாவோவை துணைக்கழைக்க வேண்டியிருக்கின்றது. இவரென்ன சியாங்கே சேக்குடன் மல்லுக்கு நின்று விட்டா சீனத்தை சிவப்பாக்கினார். பாட்டாளி மக்களுடன் ஏர் பிடித்துவிட்டல்லவா பீல்டுக்கு வந்தார்.

இப்போது ஆசிய அபிவிருத்தி வங்கி, உதவி தலைவர் யாழ்ப்பாண விஜயம் என்ற செய்தியும் காதைக்கடிக்கின்றது. சிறிலங்காவில் நிறைய அபிவிருத்தி திட்டங்களை இந்நிறுவனமே மேற்கொண்டுள்ளது. சில சமயம் நமது அரசியல்வாதிகளின் தில்லு முல்லு காரணமாக ஒதுக்கிய பணம் திரும்பி போன கதைகளுமுண்டு. இம்முறை எமது எம்பிக்குளும், மக்களும் கொஞ்சம் உசாராக இருந்தால் நிறைய சாதிக்கலாம். இந்நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்களை ஐ.ஆர்.டி.பி. (இன்ரர் கிறெட் ரூறல் டெவலப்மென்ட் போரட்) புறஜக்ட் டிரக்டர் என அழைக்கின்றனர். ஒவ்வொரு கச்சேரிகளிலும் ஒவ்வொரு டிரக்டர்களுக்கும், அலுவலகம், ஆள், அம்பு என சகல வசதிகளும் உண்டு. நல்லவர்கள். மனிதாபிமானிகள். நன்கு கற்றவர்கள். சாதி, இனம், மதம் எதுவுமே பார்க்க மாட்டார்கள். யாரும், எப்போதும் போய் இவர்களது கதவை தட்டலாம்.

எம்மிடம் ஏதும் திட்டங்கள் இருந்தால் இவர்களிடம் சொல்லலாம். காது கொடுத்து கேட்பார்கள். அடுத்த வருடம் ஆசிய அபிவிருத்தி வங்கி நமது நாட்டுக்கு பணம் தரும் போது; அந்த திட்டத்துக்கும் அரசிடம் பணம் வழங்கி ஏழைகளின் வாழ்வை நிறைய வைப்பார்கள். ஒவ்வொரு மாவட்ட கிராம அபிவிருத்திக்கும், வங்கிகள் வழங்கும் சிறு கைத்தொழில்கள் கடன்களுக்கும், இவர்களது கைப்பட காசோலைகளில் கையொப்பமிடப்படும்.

ஒரு முறை ஒரு புறஜக்கட் டிரக்டரை சந்திக்க வேண்டிய வாய்பு ஏற்பட, மலையகத்தில் ஏழைத்தாய்மார் படும் அல்லல்களை அள்ளி வைத்தேன். என்ன செய்யலாம் என கேட்டார். சிறிலங்காவில் கிராமங்களில், அப்போது கிராம்பு விலை 130 ரூபா. இதை கிராம மக்களிடம் துட்டுக்கு இரண்டாக வாங்கும் பண முதலைகள்; கிலோ முன்னூறு ரூபாவாக எற்றுமதி செய்து கொள்ளையடிக்கின்றார்கள். ஏன் ஐயா நீங்களே கோடவுணை (சேமிப்பகம்) உருவாக்கி, உங்கள் கிராமத்தில் உள்ள மக்களிடம் வாங்கி, நேரடியாக எற்றுமதி செய்து அவ்விலாபத்தின் ஒரு பகுதியை இவ் ஏழைகளுக்கு வழங்கலாமே என்றேன். அதை எம்மால் செய்ய முடியாது! உன்னால் செய்ய முடியுமா என்றார். பணம் ஒரு 40 லட்ச ரூபா இருந்தால் செய்ய முடியும் என்றேன். டண். 40 லட்ச ரூபாவுக்கு காசோலை கிழித்து, அடுத்த நாளே, ஒரு இருபத்தைந்து தாய்மார்களை அழைத்து; அதாவது கணவன்மார்களை இழந்த தாய்மார்களை அழைத்து, ஒவ்வொருவரிடமும் காசாக இருபதாயிரம் கொடுத்து, அம்மக்களே உங்கள் கிராமத்தில் இருக்கும் கிராம்புகளை வாங்கி வீட்டில் வையுங்கள், நாம் வந்து சேகரிக்கின்றோம் என்றோம். வெற்றி. வெற்றி பூரண வெற்றி. அவர்களது கராம்பு கனடா சந்தையில் 340 ரூபாவுக்கு விலை போது. 90 வீத இலாபம் அவ்வேழைத் தாய்மாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போது அம்மாவட்டத்தில் 132 காந்தா சமிக்திய (பெண்கள் அமைப்பு) உருவாகி உள்ளது. இவர்களுக்கு அரசியலும் தெரியாது. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. ஆனால் அத்தொகுதி மெம்பர் ஒப் பார்ளிமென்ட்டை தெரிவுசெய்யும் பவரில் இருக்கின்றார்கள். இதைவிட ஆச்சரியம். 40 லட்ச ரூபாவைத் தூக்கித்தந்த அந்த புறஜக்ட் டிரக்டருக்கும் எனக்கும் எந்த மாமன், மச்சான், தோழர், கோம்ரேட் உறவும் கிடையாது. அவர் ஒரு சிங்களவர். சிங்கள மகாத்மா. அவர் வீட்டில் நாலு பேர் போனால் உட்காருவதற்கு கூட இன்றுவரையும் கதிரை கிடையாது.

இப்படி மகாத்மாக்களைத் தேடி கண்டு பிடித்து தார்மீக, ஜனநாயக, சோசலிச சிறிலங்காவை உருவாக்கிவிட்டு, எங்க கோயில் கட்டுற, எங்க பன்சல கட்டுற, எங்க பள்ளிவாசல்கட்டுற என யோசிப்போம். எங்கள உட்டா இஸ்லாத்த பலோ பண்ற ஆட்களே கிடையாது, நாங்க வேற, நீங்க வேற என்று இஸ்லாம் பேசின அரபு நாட்டு காக்காமார்களே இப்போ எறங்கி வந்து, கட்டுங்கோடா கிறிஸ்தவ தேவாலயத்த என்று சொல்லி, கட்டார் மாநகரின் மத்தியில் தேவாலயமும் கட்டி, திறப்பு விழாவும் வச்சின்டான். ஆனால் நீ  அவன்ட மாளிகைக்கு முன்னால தேரோட்டம் போறதை மகின்தவும், பொண்டாட்டியும் தரிசிக்கின்றார்கள், ஆனால் நீ எங்க பகுதியில் வந்து யாவாரமும் செய்யக் கூடாது, கோயில் பூசையும் செய்யக் கூடாது….புரியல ? புரியல…நம்ம இதயத்துக்குள்ள இருக்கிற அந்த சாமான் என்ன என்று புரியல. என்கு நியாயமாயும் படல.
(தூற்றுவார் தூற்றட்டும் எனது பணி தொடரும்……)

எச்சரிக்கை :
யாழ்ப்பாண மாநகரில், ஐரோப்பிய ஸ்டைலில் பெற்றள் கராஜ் திறப்பதற்குரிய கோட்டா, யாரோ ஒரு பெரும் புள்ளியின் கையில் இருப்பதாகவும், கொஞ்சம் காக்காமாரும், சிங்கள சகோதரயோக்களும் அதற்கு முயற்சி பண்ணுவதாகவும் தூது வந்துள்ளது. தயவு செய்து நாட்டுப்பற்றுள்ளவர்கள் முயற்சி பண்ணுங்கள். அப்புறம் சோனி எங்கட எல்லைக்குள்ள பெற்றள் செற் திறந்துட்டான், சிங்களம் புகுந்து அராஜகம் பண்ணுகின்றது என கட்டுக்கதைகள் சொல்லாமால் புத்திமான் பலவான் என்பதை நிரூபியுங்கள் பிளீஸ். இன்வெஸ்ட்மென்ட் ஒரு கோடி ரூபாவாம்.

._._._._._.

எனக்குத் தெரிந்த நியாயம்! – 1

Micro_Credit_Project//இக்கட்டுரையாளர் தேசம்நெற் க்கு நன்கு அறிமுகமானவர். இலங்கையில் ஒடுக்கப்பட்டுள்ள சமூகங்கள் சார்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருபவர். சில பொதுத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார். புலம்பெயர்ந்து வாழ்கின்ற இவர் காலத்திற்குக் காலம் இலங்கை சென்று அம்மக்களுடன் இறுக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளவர். அவர் புனைப்பெயரிலேயே தனது ஆக்கத்தினைத் தந்துள்ளார். இது தேசம்நெற் இல் வருகின்ற அவருடைய முதலாவது ஆக்கம். எதிர்காலத்தில் இவரது ஆக்கங்கள தொடர்ந்து வரும் என நம்புகிறோம். – தேசம்நெற். //

அட எல்லோருமே திரிந்திவிட்டார்கள் போல தெரிகின்றது. ஏரோப்பிளேன் வாங்க, ரொக்கட் லோன்ஜர்கள் வாங்க, எறிகணைகள் வாங்க, வெடிமருந்துகள் வாங்க, அழிவாயுதங்கள் வாங்க என பணத்தை கத்தை கத்தையாக சேர்த்தவர்களும்; அந்த நாலுகால் மிருகத்துக்கும், அதற்கு துணை போகின்றவர்களுக்கும் எப்படி ஆப்பு வைக்கலாம் என மூளைகளை கசக்கியவர்களும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு; இப்போ புதுசாக வடக்கின் அபிவிருத்தி, வடகிழக்கின் புனர்நிர்மாணம் என பேசத்தொடங்கியுள்ளார்கள். வாழ்க மகிந்த பிறதர்ஸ். அந்தப் புண்ணியவான்கள்தானே இதற்கெல்லாம் பிள்ளையார் சுழிபோட்டவர்கள்.

ஆனால் இந்த மகிந்த பிறதர்ஸின் நடவடிக்கைகள்தான் ஒன்றும் புரியாத புதிராக இருக்கின்றது. ஏதோ நல்லது செய்கின்றது மாதிரியும் தெரிகின்றது. சில நேரம் குப்புற கவுத்து விடுவார்களோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது. அவர்கள் நல்லது செய்வார்கள் என நினைப்போம். அப்படித்தானே இப்போ ஏ டபுள் பிளஸ் கைதியாக இருக்கும் கேபி சகோதரயா சொல்லியுள்ளார். நம்பிக்கைதான் வாழ்க்கையாம். அட போங்கப்பா இத சொல்றத்துக்கு இந்த ஆயுத கொள்வனவாளர் பிளஸ் கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் ரத்தம் குடிக்க காரணமாக இருந்த தொப்பிச் சாமியாருக்கு  30 வருசம் எடுத்திருக்கின்றது. அவ்வளவு மூளை. இந்த மயிரத்தான் எங்களுக்கு 7ம் வகுப்பில் பைதாகரசின் தேற்றம் சொல்லித்தந்த சோதிலிங்கம் வாத்தியாரும், காத்தான்குடி பள்ளிவாசலில் 75 தலைகள் வெடித்து சிதறிய போதும், அறந்தலாவ புத்த பன்சலவில் 43 குட்டி ஆமுதுறுக்களின் தலைகள் வெட்டிச் சரிந்த போதும் நாங்க சொன்னோம். கேட்கல, கேட்கல, யாருமே காது கொடுத்துக் கேக்கல. அதுதான் சிங்களவன நம்புவோம், சோனிக்காக்காமாரயும் கொஞ்சம் நம்புவோம், அடுத்த இயக்க காறர்களையும் கொஞ்சம் நம்புவோம்டா புள்ளைகளே என தலையால அடிச்சிக்கிட்டு சொன்னோம். ஹ்ம். யார்தான் நமது புலம்பல்களை காது கொடுத்துக் கேட்டார்கள். எனிவே விடயத்துக்கு வருவோம்.

அந்த மனுஷன் இறப்பதற்கு முந்திய மாவீர் தின உரையில் ஒரு விடயத்தை மிக ஆளமாகவும், அகலமாகவும், தெளிவாகவும் சொல்லிவிட்டுப்போனார். இனி போராட்டம் புலம்பெயர்ந்தவர்களின் கையிலேயே தங்கியுள்ளது என. அந்த மனுஷன்ட வாய்க்கு சக்கர போடணும். இல்லா விட்டால் ஜீஎஸ்பி வரிச்சலுகையை ஏன் நீக்க வேண்டும். ஐ.நா.தலைமைச் செயலர் சிறிலங்காவுக்கெதிராக ஒரு ஆணைக்குழுவை ஏன் நியமிக்க வேண்டும். ஏதோ சம்திங் எல்ஸ். யாரோ ஐநூறு பேர்களோ அல்லது நூத்தி அம்பது நபர்களோ புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு அரசுக்கெதிராக டூ விட்டுக் கொண்டிருக்கின்றார்கள் போலத்தான் தெரிகின்றது. இப்படியே புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு டூ விட்டுக் கொண்டிருந்தால் அந்த பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையக, ராணுவத்தில் கணவர்மார்களை இழந்து கைம் பெண்களாக இருக்கும் தாய்மார் எல்லோரையும் பற்றி யார் கவலைப்படுவது. நாம் கொஞ்சம் கவலைப்படுவோம்.

சிறிலங்கா பொருளாதாரம் பார்க்கிறதுக்கு அழகாகத் தெரிந்தாலும் ரசிக்கிறதுக்கு, மூச்சுவிடுவதற்கு, மூணுவேளை றிலாக்ஸாக உண்பதற்கு அவ்வளவு அழகாகத் தெரியல. சன்லைட் 27 ரூபா, சீனி 105 ரூபா, லாம்பெண்ணை போத்தல் 56 ரூபா, தக்காளி கிலோ 120 ரூபா, அரிசி (ஒன்றுக்கும் உதவாத புண்ணாக்கு அரிசி) கிலோ 65 ரூபா, தேங்காய் எண்ணை போத்தல் 180 ரூபா, மீன் கிலோ 700 ரூபா, இறைச்சி கிலோ 350 ரூபா, தங்கம் பவுண் 34,000 ரூபா, பஸ்ஸில் ஒரு ஹோல்ட்டில் இருந்து அடுத்த ஹோல்ட்டில் இறங்க 6 ரூபா, தத்தக்க பித்தக்கா பணிஸ் 12 ரூபா, பாண் 55 ரூபா, அங்கர் 400 கிராம் பக்கட் 450 ரூபா என, இப்படி பொருட்களின் விலை தினமும் ஏற, ஒரு நபரின் நாட்சம்பளம் 600 ரூபா. ஆம் வரவு எட்டணா செலவு பதினெட்டணா. அதிகம் 10 அணா, அதனால் பாமரர்கள் பாடு, படு ஜோர் என்று சொல்வதற்கில்லை.

அரசு திட்டங்களை தீட்டுகின்றது. தினமும் விளம்பரங்கள் வருகின்றது, மக்களும் ஆவலுடன் எதையோ எதிர்பார்க்கின்றார்கள். மகின்த பிறதர்ஸ் எங்கேயாவது ஆப்படித்து நம்மை முன்னேற்றுவார்கள் என அரசியல்வாதிகளும் தினமும் ஏதோ ஒரு இலவு காத்த கிளி கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். சரி நம்புவோம், நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை. ஆனால் நாளைக்கு சமைத்துச் சாப்பிட சட்டி பானையும் இல்லாமல், தீப்பெட்டியும் இல்லாமல், அரிசி, தேங்காயும் இல்லாமல் அவதிப்படும் அந்த ஜீவன்களுக்கு ஆறுதல் சொல்ல மகின்த மட்டும் போதுமா? நமது கைகளும் நீள வேண்டாமா? நமது கைகளையும், அதி புத்திசாலித்தனத்தையும் கொஞ்சம் நீட்டலாமே.

நமது எம்பிக்கள் ஒவ்வொருவருக்கும் வருடாவருடம் 60லட்சம் ரூபா, தமது தொகுதி அபிவிருத்திக்கென அரசால் ஒதுக்கப்படுகின்றதாமே? ஓள்ரெடி இந்த வருடத்துக்குரிய நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாமே? இதுவரை, வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வடம் பிடித்து, நம்மையெல்லாம் உசுப்பேத்திய அந்த அதி புத்திசாலிகள்?  அந்தப் பணத்தை எடுத்து, அந்த அப்பாவி உள்ளங்களுக்கு கொடுக்கவில்லையாமே? இது உண்மையா? யாரும் விபரங்கள் தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுச் சொல்லுங்கோவன். அந்த பணம் திறைசேரிக்கு திரும்பி போக முன்னர், அந்த அப்பாவிகளின் வயிற்றை, அப்பணம் சென்று சேர ஒரு ஐடியா சொல்லுங்கோவன்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள சோமாலி நாட்டை சேர்ந்தவர்கள், வங்கிகளில் கணக்கோ வேறு தொடர்புகளோ வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பள்ளி வாசல்களில் அச்சமூகத்தவர்கள் கூடி, ஒரு குழுவைத்தெரிந்து, அப்பகுதி வாழ் சோமாலி நாட்டவர்களுக்கு ஒரு பணக்கஸ்டமோ, மனக்கஸ்டமோ வரும் போது அந்நபரை அழைத்து சகல உதவிகளும் செய்வார்கள். ஆம் நீண்டகால, குறுங்கால கடன்களை வழங்குவார்கள். வழங்குவது மட்டுமல்ல அவருக்கு பின்னாலேயே நின்று, அந்த நபர் எழும்பி மூச்சுவிடும் வரை கை கொடுப்பார்கள்.

இதே தன்மையை இப்போது சிங்கள கிராமங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. கண்டி தலதா மாளிகை தியவதன நிலமே, கண்டியை அண்டிய சகல கிராமங்களிலும் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்திருக்கின்றார். இக்குழு ஒவ்வொரு கிராமத்திலும், வீதிகளிலும் இயங்குகின்றது. உதவி தேவைப்பட்டவர்கள் இவர்களை அணுகலாம். அந்த தெருவில் உள்ள அல்லது அடுத்த தெருவில் உள்ள ஐந்து பேருடன் குறித்த நபர் அவர்களை அணுகலாம்.

Micro_Credit_Projectகுறிப்பாக பெண்கள். உண்மைகளை அவர்களிடம் கக்க வேண்டும். அதாவது என் புருஷன் குடிகாறன். வீட்டுக்கு உதவுவதே இல்லை. எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்தால் ஒரு தொழிலை செய்வேன், பிள்ளைகளுக்கு கூழோ, கஞ்சியோ ஊற்றுவேன் என்ற தன் ஆதங்கத்தை சொல்ல வேண்டும். டண். பத்தாயிரம் கேஷ் வழங்கப்படும். இவருடன் செல்லும் மற்ற நான்கு பேரும்தான் காரண்டி. நோ பேப்பர் வேக். 6 வீத வட்டி.6 மாத கடன். ஒவ்வொரு வாரமும் ஒரு குட்டித்தொகை கட்ட வேண்டும்.

இவருடன் செல்லும் மற்றவர்களுக்கும் அன்றே கடன் வழங்கப்படும். ஒருவர் பணம் கட்டா விட்டால் மற்ற 4 பேரும் சேர்ந்து அப்பணத்தை கட்ட வேண்டும். இதனால் தில்லு முல்லு குறைவு. தில்லு முல்லே கிடையாது. இரண்டு மாதம் தொடர்ந்து பணம் கட்டினால் அடுத்த தினமே தனியாக, தைரியமாக அவர்களிடம் சென்று ஐந்து லட்ச ரூபா வரை கடன் பெறலாம்.

ஆச்சரியம் என்னவென்றால் இவர்களிடம் இக்கடன்களை பெறும் அனேகம் பேர் கண்டியை அண்டிய பகுதிகளில் உள்ள தமிழர்களும், முஸ்லீம்களும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. விபரம் தெரிந்தவர்கள் யாராவது எங்கட கோயில், பள்ளிவாசல்களில் குவிந்து கிடக்கும் செல்வங்களை இப்படி திருப்புவதற்கு முயற்சித்திருக்கின்றார்களா? அல்லது முயற்சிக்கலாமா என கேட்டுச் சொல்லுங்கோவன். இல்ல நாங்க அந்தப் பணங்களை சாமிக்கு படைக்க வெச்சிருக்கோம், பள்ளிவாசல்ல கந்தூரி கொடுக்க வெச்சிருக்கோம் என்றால் உங்கள எந்தச் சாமியும் மன்னிக்காது. திரும்பவும் நாசமாப்போவயள்.

இல்ல மகின்த வருவார். எங்க வீட்டுக்குள்ள வந்து எங்களுக்கு கஞ்சி காய்ச்சித் தருவார், தர வேண்டும். இல்லாவிட்டால் அவரை உண்டு இல்லை என பண்ணி விடுவோம் என இறுமாந்திருந்தால் அங்குள்ள நம்மவன் செத்துடுவான். அது பெரிய தல. பெரிய கை. அவர்கள் இந்தியாவுக்கு அசைந்து கொடுத்து, சைனாவுக்கு வளைந்து கொடுத்து, ஜீஎஸ்பி என்ற பெரும் பூதத்துக்கு விட்டுக்கொடுத்து, நம்ம வீட்டுக்கு வந்து விருந்து படைக்க நாளெடுக்கும் அல்லது காலம் கடக்கும். அதுவரை டோர் ரூ டோர் சேவையை நாம்தான் செய்ய வேண்டும்.

புலம் பெயர்நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதுவராலயங்களில் அமைந்துள்ள கொமர்ஷியல் டிவிஷன்கள் நன்கு கால் நீட்டி, குறட்டை விட்டுத் தூங்கிக் கிடக்கின்றன. இந்த வர்த்தகப்பிரிவென்பது அந்த, அந்த நாட்டை பொறுத்த வரை ஒரு சக்தி. ஒரு ஊக்கி. இதை எமது அரசு இயக்குவதும் இல்லை. இயங்க வைப்பதும் இல்லை. ஜீஎஸ்பி வரியை தூக்கி விட்டால் எங்களால் எழும்பி நடக்க முடியாதா? முடியும் என்பதை இந்த வர்த்தகப் பிரிவுகளை வைத்து அரசு வெற்றி கொள்ளலாம். நமது நாட்டின் ஒவ்வொரு உற்பத்திப் பொருட்களையும், இவ்வர்த்தகப் பிரிவில் பார்வைக்கு வைத்து, நம்மவர்களை அழைத்து விருந்து படைத்து நமது பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை பெறலாம். இதப்பத்தி கவலைப் படவும் ஆள் இல்ல, ரெண்டு அதட்டு அதட்டவும் ஆள்கிடையாது. இது பற்றி அந்தந்த நாடுகளில் உள்ள கொமர்ஷியல் டிவிஷன்களை கேட்டால், அதற்கெல்லாம் எங்களிடம் பணம் கிடையாது என்கின்றனர்.

குறிப்பாக இங்குள்ள கொமர்ஷியல் டிவிஷன்களில் போர்ட் ஒப் இன்வெஸ்ட்மென்ட் (முதலீட்டு சபை) பற்றி எந்த தகவல்களும் இல்லை. அப்புறம் எப்படி தமிழன் சிறிலங்கா போவது, அங்கு போய் முதலிடுவது. இது பற்றி யாராவது மெத்தப்படித்தவர்கள் கொஞ்சம் விபரம் சொல்லலாமே? முடிந்தால் பின்னூட்டத்தில் நம்மட பொறின் மினிஸ்டரை ரெண்டு திட்டு, திட்டி நம் பொருளாதாரம் உயர்ந்து, குடி உயர்ந்து, கோன் உயர ஒரு அன்பு பாலம் கட்டலாமே? கட்டுவார்களா?

கொழும்பு, போர்ட் ஒப் இன்வெஸ்ட்மென்ட் (BOI) அலுவலகத்தில் நிறைய முதலிட்டாளர்களுக்கான துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் குவிந்து கிடக்கின்றது. அனைத்துமே ஆங்கிலத்தில்; அப்பிரசுரங்களில் ஒன்றில் சிறிலங்காவை மூன்றாக பிரித்து, அதாவது ஏ, பி, சி வலயமென பிரித்து கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் ஏ எனவும். இங்கு முதலிட கொஞ்சம் ஹெல்த்தி பிளஸ் வெல்த்தியானவர்கள் முன்வரலாம் எனவும், வடக்கு, கிழக்கு பகுதிகளை சீ வலயமாக பிரித்து, இங்கு பத்தாயிரம் டொலருடன் முதலிடலாம், நிறைய சலுகைகள் வழங்கப்படும் எனவும் பறை சாற்றியிருக்கின்றார்கள். ஆனால் இது பற்றி யாருக்குமே தெரியாது. மகின்த பிரதர்ஸ் இது பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் தினமும் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு தலைப்புச் செய்தி வந்து கொண்டே இருக்கின்றது முதலிட வாருங்கள் என்ற தோரணையில். இந்த பிரசுரங்களை தமிழிலும், சிங்களத்திலும் பிரசுரித்து உலகம் முழுக்க உள்ள எம்மவர்களின் கைகளை அடைய அரசு முயற்சிக்கலாமே? உல்லாசப் பிரயாணிகளை கவர, பல லட்சம் டாலர் கொடுத்து பிபிசியில் விளம்பரம் செய்யும் அமைச்சுக்கு, பிஓஐ யை தூக்கி விட பணம் இல்லையா? அமைச்சு தூங்குகின்றதா? யாராவது விபரம் தெரிந்தவர்கள் அமைச்சுக்கும், நமது தூதுவராலயங்களுக்கும் ஒரு மொட்டைக்கடிதம் போடலாமே?

நியாயம் தொடரும்…..
(பின்னூட்டங்களில் யாரும் என்னை திட்டாமல் இருந்தால் தொடருவேன். மோதிரக்கைகளால் குட்டு படத் தயாராகவே உள்ளேன்….)

கொசுறு.

ஒரு மாதிரியாக ஒரு வெள்ளையனின் காலில் விழுந்து யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இரண்டு கொலேஜ்களை ஆரம்பித்துள்ளார். இது செப்டம்பர் ஒன்று இயங்கத் தொடங்கும். எமது இளைஞர்களை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு போகும் ஒரு சிறு முயற்சி இது. யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தடுமாறுகின்றார்கள். ஆர்வமுள்ளவர்கள், புலம்பெயர் நாடுகளில் இருந்து ஊர் புதினம் பார்க்க செல்பவர்கள் முடிந்தால் ஒரு 10 நாளோ அல்லது 15 நாளோ இங்கு வந்து கற்பிக்கலாம். எமது இளைஞர்களுக்கு உலக நாகரிகம் சொல்லித்தரலாம். சம்பளம் தேவைப்பட்டால் வழங்கப்படும். இருக்க இடம், உணவும் வழங்கப்படும்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில உயர் பாடசாலைகள், தமது மாணவர்களை 20 அல்லது 25 நாட்களுக்கு, மூன்றாம் உலக நாடுகளுக்கு கற்பிப்பதற்காகவும், அவர்களது உளப்பாங்கை விருத்தி செய்வதற்காகவும் வருடா வருடம் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அப்படி உங்கள் குழந்தைகள் படிக்கும் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, நமது மண்ணுக்கு அவர்களை அனுப்ப முயற்சிக்கலாமே. அப்படி நீங்கள் செய்வதால் நாம் எல்லோரும் செய்த பாவங்களுக்கு ஒரு துளியளவாவது விமோசனம் பெறலாம் அல்லவா. வட் டூ யூ திங்?

17 – 08 – 2010

காலம்சென்ற ரெலோ தலைவர் சு சிறிசபாரத்தினத்தின் தாயார் காலமானார்.

Mother_of_Srisabaratnamகாலம் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சு சிறிசபாரத்தினத்தின் தாயார் சுந்தரம்பிள்ளை ராஜலட்சுமி ஓகஸ்ட் 21ல் காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் 23.08.2010 காலை 11 மணி அளவில் 31/11 ஸ்டேட் பேங்க் காலனி இரண்டாவது தெரு விருகம்பாக்கம் சென்னை 92 (சாலிக்கிராமம் 17ஏ 12ஸ்ரீ பேருந்து நிலையம் அருகில்) நடைபெறும்.

1925 செப்ரம்பர் 22ல் பிறந்த இவர் சுந்தரம்பிள்ளை அவர்களை மணந்து கொண்டார். இவர் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம், சு. கந்தசாமி (டாக்டர் கந்தா), திருமதி ஜெ பாக்கியம் , சு. செல்வரெத்தினம், திருமதி தி ஜெயராணி ஆகியோரின் தாயாராவார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் பிள்ளைகள் பெற்றோரின் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்கும் நிலை தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் மாற்றமடைந்து பெற்றோர் பிள்ளைகளின் இறுதிக் கிரியைகளை நடாத்தும் நிலை உருவானது. ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் உட்பட ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளை அவர்களது பெற்றோரே அடக்கம் செய்யும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது.

யாழ். குற்றச் செயல்களை தடுக்க ‘பொலிஸ் கார்’

Police_Carயாழ். குடாநாட்டில் எங்காவது குற்றச்செயல்கள் நடைபெற்றால் அங்கு உடனடியாக பொலிஸ் வாகனம் வந்து நிற்கக் கூடியதான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக வசதிகள் கொண்ட ‘பொலிஸ் கார்’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுப்பாதற்காக இந்நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்   மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்த இடத்தில் குற்றச்செயல் நடைபெற்றாலும் அந்த இடத்திலிருந்து பொது மக்கள் 0213210827 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தால் அந்த இடத்திற்கு பொலிஸ் கார் வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் மக்களை ஏமாற்றி பணம் சேகரிக்கும் தென்னிலங்கை நபர்கள்!

மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள கிளிசொச்சிப் பகுதிகளில்  மக்களை ஏமாற்றி நிதி சேகரிக்கும் நபர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தென்னிலங்கையிலிருந்து வரும் சில சிங்களம் பேசும் நபர்கள் அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதாக சில ஆவனங்களைக் காட்டி பணம் பெற்று வருகின்றனர்.

 வீடுகளில் ஆண்கள் இல்லாத வேளைகளில் மொழி தெரியாத பெண்கள் இவர்கள் காட்டும் ஆவணங்ளை நம்பி அல்லது, பயம் காரணமாக பணத்தைக் கொடுத்து வருகின்றனர். கடந்த சிலதினங்களாக கிளிநொச்சி வீடுகளுக்கு வந்த நபரொருவர் தென்னிலங்கையிலுள்ள அநாதை விடுதி ஒன்றிற்கு நிதி சேர்ப்பதாகவும், அதற்கான அனுமதியை படையினர் தந்துள்ளதாகவும் தெரிவித்து, கையெழுத்திட்ட சில ஆவணங்களைக் காட்டி பணம் சேகரித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக யாழ்ப்பாணம் வருவதற்கு தடை!

Signpost_to_Jaffnaவெளிநாட்டுக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக வடபகுதிக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி  தரைவழியாக யாழ் செல்வதற்கு தொடர்ந்தும் தடை அமுலில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வரும் சுற்றுலாப்பயணிகள், ஊடகவியலாளர்கள்  உட்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் விமானம் மூலமாக மட்டுமே யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதியின்றி தரைவழியாக பயணிக்க அனுமதி இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரவித்துள்ளார்.

வெளிநாட்டிலுள்ள இரட்டைக் குடியுரிமையுள்ள இலங்கையர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தும்; எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளுர் ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே வவுனியாவிற்கு அப்பால் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் பயணம் செய்வதற்கு மூன்று தினங்களுக்கு முன் பயணவிபரங்களையும் கடவுச்சீட்டு விபரங்களையும் தொலை அஞ்சல் செய்தால் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை இலங்கையில் வழங்கப்படும் தொலைஅஞ்சலுக்கு அனுப்பி வைக்கும். இல்ரலையானால் நேரடியாகச் சென்றும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். இந்நடைமுறை வெளிநாட்டவர்கள் சிலர் ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபடுவதையொட்டியே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது பற்றிக் கருத்து வெளியிட்ட மற்றுமொருவர் இவ்வாறான நடைமுறைகள் தமிழ் மக்கள் மீது தமிழ் பிரதேசங்கள் மீது அரசு நெருக்கடியை வழங்குவதையே வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம். : பி எம் புன்னியாமீன்

arab_slave_tradeசில சர்வதேச நினைவு தினங்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவதைப்போல சகல நினைவு தினங்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. குறித்த நினைவு தினங்களின் முக்கியத்துவம் நவீன கால சமூக வாழ்வில் உணரப்படாமையினால் அவை பற்றி விரிவான விளக்கங்கள் மக்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வகையில் அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினத்தையும் குறிப்பிட முடியும்.

ஆனால் மனிதகுல வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை  ஒழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எளிதில் மறந்து விட முடியாது. குறிப்பாக தொழில்நுட்பத்திலும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளிலும் முன்னேறியுள்ள இந்த மிலேனிய யுகத்தில் அக்கரை படிந்த வடுக்களை ஞாபகமூட்டப்படுவதினூடாக பல படிப்பினைகளைப் பெறக்கூடியதாக உள்ளதென்பதை மறுக்கமுடியாது. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றைய மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மைக்கு அடிப்படையை இட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

சர்வதேச ரீதியில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஞாபகமூட்டுவதற்கான தினம் 1998 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 23 ஆகஸ்ட்  1998 இல் ஹெய்டி நாட்டிலும், 23 ஆகஸ்ட் 1999 இல் செனகல் நாட்டிலும் இத்தினத்தின் பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இத்தினத்தை நினைவு கூருகின்றன.

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பை ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினம் யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத்  தொடரில் (29 C/40) பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் ஜுலை 29. 1998ம் திகதி இடப்பட்ட CL/3494  இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைச்சர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint Domingue  (தற்போதைய ஹெய்டி) இல் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.

ஆபிரிக்க – அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. எல்லா இனங்களும், எல்லா கலாசாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் மானிய முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் மாற்றினார்கள். உலகில் காணப்பட்ட அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்புநோக்கும்போது ஐரோப்பியர்களின் அடிமை முறையே மிகவும் கேவலமான முறையாக வர்ணிக்கப்படுகின்றது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்துள்ளது. சுமார் 60 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும்,  துயரத்தாலும் இறந்துள்ளனர் என வரலாற்றுக் கணிப்புகள் சான்று பகர்கின்றன.    

அடிமைமுறை வரலாற்றினை நோக்குமிடத்து பண்டையக் காலங்களில் இனங்களிடையே ஏற்பட்ட யுத்தங்களில்; தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர் எனக்கூறப்படுகிறது. இங்கு பெண்களும், குழந்தைகளும் கூட அடிமைகளாக்கப்பட்டனர். அடிமைமுறை மொஸப்பத்தோமிய நீதிமுறைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக காணமுடிகின்றது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் ஒரு பண்பாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய இராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மணை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அல்லது பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள் சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப் பட்டனர். பல புராதன சமூகங்களில் “சுதந்திர” மனிதர்களை விட அடிமைகளே அதிகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அடிமைமுறையின் முக்கியமான காரணம் பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடகாலங்களாக நீடித்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

தற்போது கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும்போது அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது. புராதன எகிப்தியர் யுத்தங்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப் படுத்தினர். இங்கு அடிமைகள் முதலில் அரசர் “பாரோ”விற்க்கு தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3ம் துத்மாஸ் (கிமு 1479-1425),  2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை,  எப்படிப் பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் ஆட்கொண்டனர் என்று தெரிவிக்கிறனர். உயிர்போகும் வரை கட்டாய வேலையில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

யூத பிதாமகன் மோசஸ் காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்க்கு திரும்பினர் என்றும், சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிடும்போது,  எகிப்திய அடிமைகள் ஒப்பீட்டளவில் சுமாராக  நடத்தப்பட்டிருக்கலாம்; என எண்ணத் தோன்றுகிறது.

புராதன கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததாகவும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் ஊழியம் செய்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ இருக்கலாம். உதாரணமாக ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற வீரர்கள் சைராகூஸ் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர்.

ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, ‘அடிமைத் தனம்”, இவற்றை பொருத்து தீர்மானிக்கப்பட்டது. பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளை கூட வைத்திருக்கலாம். கிரேக்க அடிமைகள் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்ள கூடாது. ஏஜமானரால் வைக்கப்படும் பெயர்களே இவர்களின் பெயர்களாகும். ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில்; 21,000 சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்பட்டுள்ளதாக சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததைப் போலவே உரோமர் காலத்;திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது. உரோம சாம்ராச்சிய எழுச்சியுடன் பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல நாட்டினர்; அடிமைகளானர். இதனை தெளிவுபடக் கூறுவதாயின் உரோமர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாகினர் என்றால் மிகையாகாது. கி.பி.400 களில் அங்கு  அடிமைமுறை மேலும் தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின் படி கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் மணம் செய்யமுடியாது, சொத்துக்களை வைத்திருக்க முடியாது.

உரோமர் கால அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமைக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்களாகவும் வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருந்துள்ளனர். அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71ல் நடந்த “ஸ்பார்டகஸ்” எழுச்சியாகும்.

புராதன காலத்தில் அரேபிய சாம்ராச்சியங்களிலும் சீன சாம்ராச்சியத்திலும் அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏந்தவொரு அடிமை முறையை எடுத்துக் கொண்டாலும்கூட, அதன் பண்புகள், தன்மைகள் ஒன்றாகவே காணப்பட்டன.

பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாக தெரியவில்லை. ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசு10லச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade)

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணத்தில் வளர்ச்சியடையலாயிற்று. இங்கு அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள் தோற்றவர்களை ஆபிரிக்காவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையே அடிமை வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அடிமைகளாக விற்றனர். காடுகளிலோ, தோட்டங்களிலோ தனியாக இருந்தவர்களைத் திருட்டுதனமாகப் பிடித்து வந்து அவர்களுக்கு விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் இனத்தவர்களையே திருட்டுத்தனமாகப் பிடித்துக் கொடுத்த சில கிராமத் தலைவர்களும் உளர்.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) அட்லாண்டிக் பெருங்கடலை அண்மித்து நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி “புதிய உலகம்” என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து முதன் முதலில் வடஅமெரிக்காவுக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்களே. அமெரிக்காவிற்கு வந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு தங்கள் உடைமையாக்கிக்கொண்ட பிறகு அந்த நிலங்களில் உழைக்க அவர்களுக்கு உழைப்பாளிகள் தேவைப்பட்டனர். அப்போது ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களைத் தந்திரமாகப் பிடித்து வந்து ஐரோப்பாவில் அடிமைகளாக விற்பது பரவலாக இருந்து வந்தது. இதைப் பின்பற்றி அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர்களும் ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து அடிமைகளாக விற்கத் தொடங்கினர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து “பெரும் அனர்த்தம்” என்பதாகும்.

16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில் பெரும் இலாபகரமான வியாபாரமாக விளங்கியது. இதனால் மற்ற நாடுகளும் அடிமை வியாபாரத்தில் போட்டியிட ஆரம்பித்தன. ஊதாரணமாக போர்த்துக்கள், ஸ்பானியர்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆபிரிக்கர்களைக் கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆபிரிக்க தலைவர்களிடமிருந்து வாங்கினர். அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய ஆபிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தனர். சில சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும் பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தமை போருக்கு வித்திட்டது.

அடிமை வியாபாரம் நடப்பதற்காகவே மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டன. உள்நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் இந்தக் கோட்டைகளில் சில மாதங்கள் அடைக்கப்பட்டனர். பின்பு கழுத்திலிருந்து காலுக்குச் சங்கிலி போடப்பட்டும், கையோடு கையும், காலோடு காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், நான்கு அடி உயரமே உள்ள அறைகளில் திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. தப்பிப்பிழைத்தவர்கள் அங்கே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அடிமையாகச் செல்வதைவிட ஆபிரிக்க மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர் சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள். வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர்.

உயிர் பிழைத்துக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களிலும் வீடுகளிலும் ஊதியம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடாமலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து வந்தனர். அமெரிக்காவில் பெரும்பாலான வேலை பருத்தியை பறிப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி இரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100 சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதைத் தோன்டிப் போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிக்க வேண்டிய நிலை இந்த அடிமைகளுக்கு இருந்தது.

அறுவடையின் போது 18 மணி நேரமும், கர்ப்பமான பெண்களுக்கு பிரசவிக்கும் கடைசி நாள் வரையும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

அடிமை முறையிலிருந்து விடுபட முயன்ற சில ஆபிரிக்கர்களுக்கு பிடிபட்டபின் பெரிய தண்டனைகள் காத்திருந்தன. வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவதாகும். இதனால் விடுபட விரும்பிய பலரும்; முயற்சிகளை மேற்கொள்ளாமலே வாழ்க்கை முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

அடிமைச் சமூகத்தில் தற்கொலை விகிதமும் அதிகரித்து காணப்பட்டது. அடிமைகளை வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்தனர்.

மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில், அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே வைக்கப்பட்டனர், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள். கருப்பு நிறப் பெண்களில் பலர் வெள்ளை ஆண்களின் உடல் பசிக்கு ஆளாகி நிறையக் கலப்புக் குழந்தைகள் பிறந்தனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கலப்பு என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும் இவர்களைக் கறுப்பர்கள் என்றே பாவித்தனர். இந்தக் குழந்தைகளுக்குத் தகப்பன்மார்களாகிய வெள்ளையர்கள் இவர்களை தங்கள் குழந்தைகள் என்று கூறிக்கொள்ளாததால் இவர்கள் தாய்மார்களோடேயே வளர்ந்தனர். அல்லது தாயின் கணவனான கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் இவர்களுக்குத் தகப்பனாகக் கருதப்பட்டான். தங்களிடம் அடிமைகளாக இருந்த பெண்ககளுக்குத் திருமணம் செய்விக்கும் முன்பு அந்தப் பெண்களோடு உடல் உறவு வைத்துக்கொள்ளும் முதல் உரிமை எஜமானுக்கே இருந்தது.

ஆபிரிக்கர்களுக்கு எழுதப் படிக்க உரிமை இல்லை. அப்படிப் படிக்க முயன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி குடியிருப்புகள், தனி கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. இந்தியாவில் தீண்டாமை இருந்தது போல் அமெரிக்காவிலும் ஆபிரிக்கர்களை வெள்ளையர்கள் தனிமைப்படுத்தினர்.

இவ்வாறாக  ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்

பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிமை ஒழிப்பு குழுவின்” முதல் தலைவர்.

பிரெஞ்சு புரட்சியின் போது ‘முதல் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன்,  அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும்,  பிடிப்பதும், விற்று வாங்குவதும்,  கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி,  அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும்,  கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும்  island of Saint Domingue  (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது.

இக்கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும்,  டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும்,  ஈகுவடார் 1854இலும்,  பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

இன்று அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆபிரிக்கர்களை அதிக அளவில் அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்) தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். இதனால் 1861இல், அதாவது ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது.

உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும் ஆபிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன் வெளியிட்டார்.

சட்டப்படி ஆபிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆபிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார்.

அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த,  ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள் ஆபிரிக்க – அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த தனிப் பள்ளிகள்,  தனிக் கோவில்கள்,  தனிப் பொழுதுபோக்கு இடங்கள் என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின.

கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு மற்ற ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. இவர் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகளில் ஒருவர் அல்ல. இவர் தந்தை கென்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காக வந்த இடத்தில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இவரது தாயை மணந்திருக்கிறார். இவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத் தன் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டார். நல்லவேளையாக இவரைத் தன்னோடு அழைத்துச் செல்வேன் என்று அடம்பிடிக்கவில்லை. இவருடைய தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் மட்டுமே இவருக்கும் ஆபிரிக்க இனத்திற்கும் தொடர்பு உண்டு.

ஒபாமாவுக்கு முன்பே ஆபிரிக்க அமெரிக்கர்களின் தலைவர்கள் சிலர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்க முயன்றும் தோல்வியைத் தழுவியிருந்தனர். அவர்கள் எல்லோரும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஆபிரிக்க இனத்தவர்களை முன்னேற்றுவதும் தங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்று தேர்தல் களத்தில் அறிவித்தனர்.

ஒபாமா “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரு பிரிவுகள் இல்லை. இரண்டு இனங்களும் உள்ள ஒற்றை அமெரிக்கா, அகில உலக அளவில் இழந்த செல்வாக்கை நான் மறுபடி நிலைநாட்டுவேன். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவைச் சரிசெய்வேன்” என்று கூறி வருகிறார்.

“நாட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவேன்” என்று இவர் கூறி வருவது இளைஞர்கள் இடையில் இவருக்கு மிகுந்த செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

20ம் நூற்றாண்டில்,  ஐ.நா. சபை,  சர்வதேச தொழிலாளர் தாபனம் போன்றவை,  பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட முடியாது. புராதன காலங்களில் காணப்பட்ட முறைபோலல்லாது நவீன காலத்தில் புதிய கோணத்தில் அடிமை முறை வளர்ந்து கொண்டிருக்கின்றது.

 தற்காலத்தில் அடிமைகள்

தற்காலத்தில் அடிமைத்தனம் பின்வரும் விதமாக இருப்பதாக அடிமை ஒழிப்பு சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கைபடி நவீன கால அடிமை முறையாக அவர்களால் இனங்காட்டப்பட்ட ஒரு சிலதை பின்வருமாறு நோக்கலாம்.

அடகு தொழிலாளர் – இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில் மறைமுகமாகக் கட்டுண்டுள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கிää அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும்ää தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து,  தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். இத்தகைய முறை இந்தியாவில் இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இளவயதில் கட்டாயத் திருமணம் – இது இளம் பெண்களைப் பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து வைக்கப்பட்டுää வன்முறைகளுக்கு ஆளாகிறனர்.

கட்டாய சேவை – அரசாங்கம்,  அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள்,  தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு,  கட்டாய வேலைகளை – துன்புறுத்தியோ,  வன்முறை பீதியை ஏற்படுத்தியோ – பெற்றுக் கொள்கின்றன.

அடிமைச் சந்ததி – சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ,  கட்டாய வேலை எடுக்க ஏற்பட்டவர்கள் எனவோ கருதுகிறது.

ஆள் கடத்துதல் – மனிதர்கள்,  பெண்கள், சிறார்கள் இவர்களைத் கடத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவது,  ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்க்கு எடுத்துச் செல்லுதல்.

சிறுவர் தொழிலாளர்கள் – இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான சு10ழ்நிலையில்,  குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர்.

நவீன காலத்தில் வீடுகளில் பணிப்பெண்களாகக் கடமை புரிவோரும் ஒரு வகையில் அடிமைத்துவ வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர்.

பழையகால வாங்கி/விற்கும் பொருள் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தடை செய்யப் பட்டாலும் கூட,  இன்றும் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இத்தகைய அடிமைமுறை நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுடான்,  மௌரிடேனியா போன்ற நாடுகளில் இது நடைபெறுகிறது. சர்வதேச அடிமை எதிர்ப்பு ஸ்தாபனம் 1997 ஆண்டறிக்கைப்படி “சுடானிய அரசு நேர்முகமாக அடிமை முறையில் பங்கு எடுக்கிறது என சொல்ல முடியாவிட்டாலும், அவ்வரசு அடிமை முறைக்கு உகந்த சமூக சீரழிவைத் தூண்டிவிட்டு, அதனால் இலாபமடைந்துள்ளது.”எனக் கூறப்பட்டிருந்து.

ஐக்கிய அமெரிக்கா அரசின் 1994 கணக்குப் படி, மௌரிடேனியாவில் 80,000 கருப்பர்கள் “பெர்பெர்” இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கின்றனர். பெர்பெர்கள் கருப்பர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துகிறனர் என்று கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தனது உரிமையைப்போல மனிதசமூகத்தைச் சேர்ந்த அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கும் நிலையை எம்முள் வளர்த்துக் கொள்ள அனைவரும் இத்தினத்தில் திடசங்கட்பம் பூணுவோமாக.

மழையினால் அவதியுறும் மீள்குடியமர்த்தப்பட்ட வன்னி மக்கள்!

Rainy_Dayவடக்கில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியமர்ந்த மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வீடுகள் அழிவுற்ற நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்களை அமைத்து வசித்து வருபவர்களும், கூரைகள் கதவுகளற்ற நிலையில் சேதங்களுடன் காணப்படும் சுவர்களுக்குள் தங்கியிருக்கும் மக்களும் இம்மழை காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இடைக்காலத்தில் பெய்யும் மழையினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் பருவ மழை பெய்யத்தொடங்கும் இப்பாதிப்புகள் அதிகமாகவிருக்கும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அழிவுற்ற வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகளை அமைக்கு பணிகளும் சேதமுற்ற வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகளும் மிகவும் தாமதமாகி வருகின்றமையினால்  மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்கள் சிறு பிள்ளைகளோடு என்ன செய்வதென்று தெரியாமலுள்ளனர்.

பலர் கடன்பட்டு அல்லது தங்கள் நகைகளை விற்று வீடுகளைப் புனரமைக்கின்ற போது அவ்வாறு புனரமைக்கப் படுகின்ற வீடுகளுக்கு உதவிகள் வழங்கப்பட மாட்டாது என உதவி புரியும் நிறுவன உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் காதல் தோல்வி- தமிழ் மாணவி தற்கொலை

fasebook.jpgலண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வத்தளைத் தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வத்தளைப் பிரதேத்தைச் சேர்ந்த 16 வயதுப் பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்தத் தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.