01

01

கிளிநொச்சியில் படையினரால் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சிப் பகுதியில் முன்னர் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக்க் கருதப்படும் பெருமளவு வெடிபொருட்கள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கிளிநொச்சியில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதனையடுத்து பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவை திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளைமோர் குண்டுகள் 38, கைக்குண்டுகள் 45, ஆர்பிஜி குண்டுகள் 90, சி-4 ரக வெடிமருந்து 50 கிலோ ஆகியவையே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நாளை வாசுதேவ நாணயக்காரவை சந்திக்கின்றனர்.

Vasudeva Nanayakaraதமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்காரவை நாளை (02-08-2010)  சந்திக்கவுள்ளனர். நீண்டகாலமாக எதுவித விசாணைகளுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் கடந்த மாதம் இவ்விடயம் குறித்து வாசுதேவ நாணக்காரவிடம் தெரிவித்திருந்தனர். இதற்கிணங்கவே இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கள் கிழமை இச்சந்திப்பு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதியை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”விடுதலைப் புலிகளின் தலைவரின் வாகனச்சாரதி சரணடைந்ததாக வெளியான செய்திகள் தவறானவை” என பொலிஸ் பேச்சாளர்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வாகனச்சாரதி சரணடைந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட வாகனச் சாரதியாக நீண்டகாலம் பணியாற்றிய சதீஸ்குமரன் என்ற விடுதலைப் புலி உறுப்பினர் இறுதிக்கட்டப் போரின் போது இவர் வன்னியிலிருந்து தப்பிச் சென்றதாகவும் திருகோணமலையில் வைத்து அவர் பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவற்றில் உண்மை இல்லை எனவும், குறிப்பிட்ட நபர் திருகோணமலையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஒரு காலை இழந்தவர் என்றும், தற்போது அவர் பொலிஸ் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

”தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ் மக்களின் நலன் கருதியே எற்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்தப் பின்னணிகளும் இல்லை.” வி ஆனந்தசங்கரி (தவிககூ)

Chelva_Memorial_Anada_Shangareeதற்போது பத்து தமிழ் கட்சிகள் இணைந்து அமைத்திருக்கும் ‘தமிழ் கட்சிகளின் அரங்கம்’ என்கிற அமைப்பு அரசாங்கத்தினதோ அல்லது வேறு எந்த சக்திகளினதோ தூண்டுதலினால் உருவாக்கபட்டதல்ல. இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்சி பேதங்களை மறந்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு இது என்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று (01-08-2010) யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

Chelva_Memorial_Anada_Shangaree“இப்பொழுது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அம்மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் பணியை விடவும், அப்பகுதிகளில் இராணுவக் கிராமங்கைள அமைக்கும் பணிகளுக்கே அரசாங்கம் அதிகம் முன்னுரிமை வழங்குவதாகத் தெரிகின்றது. முறிகண்டிப் பகுதிகளில் அதனை நேரில் அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களின் துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் தமிழ் கட்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது வரலாற்றுக் கடமையாகவுள்ளது.

இதன் காரணமாகவே தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல கருத்து முரண்பாடுகளையும், கடந்தகால கசப்புணர்வகளையும் மறந்து இக்கட்சிகள் தற்போது ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக இணைந்துள்ளன. இதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் இணைந்துக் கொள்ள வேண்டிய தேவை  மிக அவசியமானதாகவுள்ளது. இதனை இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து க்கட்சிகளும் விரும்புகின்றன. அதற்காக அக்கட்சியினருக்கு நாம் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் விரும்புகின்ற நேரத்தில், அவர்கள் விரும்பும் இடத்தில் சந்திப்பதற்கும் தயாராகவுள்ளோம். தமிழ் மக்களின் நன்மைக்காக செயற்படுவதேயன்றி யாரும் யாரினதும் நிழலிலும் குளிர்காய்வது எமது நோக்கம் அல்ல.

Chelva_Memorial_Audienceஅரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்துவற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுவது சரியானால், அதனை இந்த அமைப்பிற்குள் இணைவதன் மூலம் தடுத்து நிறுத்தலாம் அல்லவா?  தனிப்பட்ட ஒரு கட்சியின் தீர்மானமாக இல்லாமல் அனைத்துக் கட்சிகளின் கூட்டுத் தீர்மானங்களே அந்த அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும். இதில் கூட்டமைப்பின் கருத்துக்களையும் முன்வைக்கலாம். தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற அமைப்பில் தாங்கள் இணைந்து கொள்ள முன்வருவோம் என கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தால் கூட அதனை விரும்பாத தமிழர்கள் யார் இருப்பார்கள்? தேசியம் சுயநிர்ணய ஊரிமைகளை யார் மறுக்கப் போகின்றார்கள்? ஆனால், இவற்றை கவர்ச்சிகரமான கோசங்களாக பாவித்து தமிழர்களை மேலும் இன்னல்களுக்குள் தள்ளிவிடக்கூடாது என்பது தான் எமது நோக்கம். தமிழர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமை நிலையை நீடிக்கவிடக்கூடாது. யதார்த்தமான ஒரு கட்டத்திற்குள் நாம் முதலில் பிரவேசிக்க வேண்டும்” இவ்வாறு திரு. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறப்பினர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு – ஓகஸ்ட் 08, 2010ல் : தேசம்

கிளிநொச்சி பொன்னகரில் மக்கள் மீள்குடியமர படையினர் தடைவிதித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

Suresh_Piremachandranவவுனியா முகாமிலிருந்து கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்ட மக்களை அவர்களின் இடங்களில் மீள்குடியமர படையினர் மறுத்ததால் மீண்டும் அவர்கள் இடைக்கால முகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தின் 35 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்  அவர்களின் இடங்களில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச் செல்லபட்டபோது அப்பகுதியிலுள்ள படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் மீள்குடியேற்றத்தை தடுத்துள்ளனர். இதனையடுத்து அம்மக்கள் தங்களின் இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். இம்மக்களை அழைத்துச்சென்ற மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் இடைக்கால முகாமாக இயங்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை தங்க வைத்தனர்.

கிளிநொச்சியில் ஏ-9 பிரதான வீதிக்கு மேற்கே அமைந்துள்ள வறிய மக்கள் வாழும் கிராமம் பொன்னகர் ஆகும். இக்கிராமத்தில் வலுவிழந்தோர் மற்றும், விதவைகளுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் ஒருவர் அமைத்துக் கொடுத்திருந்தார். அவ்வீட்டுத் திட்டத்தில் குடியிருந்த மக்களே வவுனியா முகாமிலிருந்து மீள்குடியமர்வுக்காக அவர்களின் சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த வீடுகள் விடுதலைப் புலிகளால் அமைக்கபட்டவை என்றும் இவற்றில் குடியமர அனுமதி இல்லை எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளபட்ட சமாதானப் பேச்சுவார்தை காலகட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்கள் கிளிநொச்சிப் பகுதிகளிலுள்ள சில வறிய கிராமங்களில் வீடமைப்புத் திட்டங்களை  அமைத்துக் கொடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போராட்டம் முதலமைச்சர் தலையீட்டால் முடிவு

upavaasa.jpgகாத்தான்குடி நகரசபை அத்துமீறி செயற்படுவதாக கண்டனம் தெரிவித்து ஆரையம்பதியில் உண்ணாவிரதம் ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் காத்தான்குடி நகரசபையின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்பாக தற்காலிகக் கூடாரம் அமைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.

ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர் திருமதி மேரி கிருஷ்ணாசாந்தன் தலைமையில் ஏழு பிரதேச சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குள் கடந்த பல காலமாக காத்தான்குடி நகரசபை பல அத்துமீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது தொடர்பாக இப்பகுதி மக்களும் ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்புகளும் அரசியல் வாதிகளும் அரச உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையெனவும் தொடர்ந்து அத்துமீறல்கள் தொடர்வதால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த அத்துமீறல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் கோரிக்கைகள் தொடர்பான கடிதம் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், பிரதியமைச்சர் வி.முரளிதரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகரசபைக்கெதிராக ஆரையம்பதி பிரதேச சபைத்தலைவர்,மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் \உண்ணாவிரதப்போராட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்நிரகாந்தன் தலையிட்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

தற்காலிகமாக இடைநிறுத்தம்

cadar.jpgஐக்கிய தேசிய கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆன ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் செயற்குழுவில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக ஆளும்தரப்பினருக்கு ஆத்ரவாக வாக்களித்தமையாலேயே, தற்காலிகமாக செயற்குழுவில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்

கொழும்பு – மாத்தறை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

rail.jpgகொழும்பு – மாத்தறை இடையிலான ரயில் பாதை முழுமையாக நவீன மயப்படுத்தப்பட உள்ளதை முன்னிட்டு காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் 01.08.2010 முதல் 4 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

மீண்டும் குண்டுச்சட்டிக்குள் குதிரை!: குலன்

Walk_to_Geneva_Sivanthanமனிதனுடைய செயற்பாடுகள் என்றும் குறிக்கோள் கொண்டதாகவும், பலாபலன்களை நோக்கியதாகவும், எதிர்வினை அறிந்ததாகவும் இருத்தல் அவசியமானது. ஒரு செயற்திட்டத்தைத் திட்டமிடும்போது மைல்கற்கள் திட்டமிடப்பட்டு அதுவரை கிடைத்த பலன்கள் மீளாய்வு செய்யப்படவேண்டும். ஒரினத்தின் போராட்டமும் இதுபோன்றதே. நடந்து முடிந்த ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது தூரநோக்கு, மனிதவிரோதம், ஆத்மீகபலம், புவியியல்சார் ஆழ்ந்த அறிவு, மக்களின் விழிப்புணர்வு, எழுச்சி, போராட்ட குணம், எதிரியின் பலம், பலவீனம், பொருளாதாரபலம், பலவீனம், உலகப்பொருளாதாரம், உலகமயமாதல், இன்னும் எத்தனையோ அடிப்படைக் காரணிகளை அறியாமலேயே ஒரு குருட்டுத்தனமான போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடி முடிந்தது. நாடும், மக்களும் நாசமாய் போனது. போராட்டப்பாதையில் மைல்கற்களான மக்களின் சுயாதீனமான கருத்துக்கள் கணக்கெடுக்கப்படாது போனதே தோல்வியின் முதற்படி. தமிழனின் தலையில் இடி.

கற்பனையில் எழுதப்பட்ட சினிமாப்படங்களைப் பார்த்து, அம்புலிமாமா, கதைப்புத்தகங்கள் வாசித்து போராடப்புறப்பட்டதே காரணமா? பிரபாகரனின் பேட்டியில் ஒருதடவை சொல்லியிருந்தார். சுபாஸ் சந்திரபோஸ்சைப் பார்த்து வீரம் வந்தது என்று. அப்படியென்றால் சுபாஸ்க்கு என்ன நடந்தது என்பதையும் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது நோர்வேயிய அன்றைய சமாதானத்தூதரும், இன்றைய அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சூல்கைம் உடன் தனிமையாக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. எரிக் தனது நோக்கிலும், கடமையிலும் சரியாகவே இருந்தார். அதை அவர் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தினார். நாம் எந்தமுடிவுகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தமாட்டோம். எமது கடமை இருபகுதியினரையும் ஒருமேசைக்குக் கொண்டுவந்து பேச்சுவாத்தைகளினூடாக இருசாராரும் புரிந்துணர்வுடன் ஒரு சமரசமுடிவை எட்டுவதே இதன் நோக்கம். சுருங்கக் கூறின் நாம் வெறும் தரகர் அல்லது புரோகர்கள் மட்டுமே. இருசாராரும் சண்டைதான் பிடிக்கப்போகிறார்கள் என்றால் கவலையுடன் விட்டுவிடுவோம். இருசாராரும் போருக்குப் பணம் சேர்ப்பதும் தெரியும் என்றார். இந்த சிறியவிடயத்தைத் துல்லியமாக விளங்கிக் கொள்ளமுடியாத புலிகள் நோர்வேயிடம் சென்று அரசு அதைச் செய்கிறது இதைச் செய்கிறது என்று குழந்தைப்பிள்ளைகள் அப்பா அவர் அடிக்கிறார், இவர் இடிக்கிறார் என்பது போல குற்றச்சாட்டுக்களை நோர்வேயிடம் கூறி ஒப்பாரி வைத்தது மிக வேடிக்கைக்குரியதே. இதில் முக்கியமான ஒன்று ஏ9பாதையைத் திறக்கவில்லை என்பது புலிகளின் குற்றச்சாட்டு ஆகும். இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கை ஏற்ற ஒரு வெள்ளைப் பெண்மணி என்னிடம் கேட்டார் ஏ9 பாதையைத் திறப்பதற்குத் தானா இத்தனை வருடங்களாக உயிர்பலி கொடுத்தீர்கள், இதுதான் உங்களின் போராட்டத்தின் நோக்கமா என்றார். வெக்கித் தலைகுனிய வேண்டியிருந்தது. புரிகிறதா புலிகளின் போராட்டத்தின் நோக்கமும் குறிக்கோளும். இனியாவது குறிக்கோளுள்ள வெல்லக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுங்கள்.

புலிகளின் போராட்டம் உலகமயமாக்கப்பட்டது என்று இன்றும் பலர் பறையடிக்கிறார்கள். சரியான நோக்கும் தீர்க்கதரினமும் சமயோசிதபுத்தியும் இல்லாமல் புலிகளால் ஒரு இனமே ஏறக்குறைய அழிக்கப்பட்டது என்பதும் உலகமயமாக்கப்பட்ட உண்மை என்றறிக. அரசுடன் சமபலத்தில் இருக்கிறோம் என்று சோ காட்டி மாயை காட்டி இல்லாத பலத்தை இருப்பதாகக் காட்டியே இன்று தமிழர்களுக்கு இந்த நிலை. இரண்டு நாள் வெளிநாடுகளில் தெருவில் இறங்கிப்போராடியபோதே ஏற்பட்ட மறுதாக்கத்தை அல்லது எதிர்விளைவுகளை, பலாபலன்களை மக்கள் புரிந்து போராட்ட வடிவத்தை மாற்றியிருக்கவேண்டும். செய்தார்களா?

மாவிலாற்று அடியிலேயே விளங்கியிருக்க வேண்டும் தொடர்ந்து புலிகள் நிற்பதா இல்லையா என்பதை. முழுமையாக புலிகளினதும், புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடியது தான் மிச்சம். பங்கர்களுக்குள் பதுங்கி வாழ்ந்த நிலத்துப் புலிகளுக்குத்தான் உலகநிலவரம் தெரியாது என்றால் புலத்துப் புலிகளுக்குமா உலகறிவு அற்றுப்போனது? அமெரிக்கா ஒன்றுமில்லாத ஒருபிச்சைக்காரனுடன் சமபந்திப்போசனம் வைப்பதற்கு என்ன அண்ணன் தம்பியா? எதாவது கொடுக்கல் வாங்கல்கள் உண்டா? எந்தவெளிநாட்டு அரசும் இலங்கையரசுடனேயே நட்புறவை வைத்திருக்கவிரும்பும். காரணம் பொருளாதார, அதிகாரபரவலாக்கம். என்றும் பொருளாதாரமே வெளிநாடுகளின் ஆர்வத்துக்குரியதாக இருந்து வந்திருக்கிறது. பணமுள்ள இடத்தில்தானே நட்பும் உறவும். சொந்த இடத்தையே பாதுகாக்க முடியாத புலிகள் அமெரிக்காவுடன் பேரம் பேச என்ன வைத்திருந்தார்கள். கனவுகாண்பது என்றாலும் அதற்கு ஒரு தகுதி வேண்டாமா? இது என்ன எம்.ஜி.ஆர் படமா கூரையைப்பிரித்து இறங்கு புலிகளை மீட்டெடுப்பதற்கு.

பலர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவை குறை கூறுகிறார்கள். வரலாற்று ரீதியாக சிறீமா சாத்திரி ஒப்பந்தத்தில் இருந்து ஜே.ஆர், இராஜீவ் ஒப்பந்தத்தினூடாக மகிந்தாவரை அனைத்தும் தமிழர்களுக்கு பாதகமாகவே இருந்தது. இனியும் பாதகமாகத்தான் இருக்கும். இந்தியாவுக்கு இதைத்தவிர வேறுவழியும் கிடையாது. புலிகளுக்கு உதவி செய்து நேபாளம்வரை வந்துவிட்ட சீனாவை முழுமையாக அழைத்து இலங்கையில் இருத்த இந்தியா விரும்பாது. தமிழகமாநில அரசோ மத்திய அரசில் பல்லுப்பிடுங்கிய பாம்புதான். புரியவில்லையா குறிப்புக்காட்டக் கருணாநிதி கருணையற்றுக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பது. இப்படியான குழந்தைப்பிள்ளைக்கு விளங்கும் விடயங்களைக் கூடப்புரிந்து கொள்ள வலுவற்ற புலிகளால் எப்படி ஒருபோராட்டத்தை அன்றும் இன்றும் இனி என்றும் வென்றெடுக்க முடியும்?

புலிகளின் நன்மைக்காகவும், எம்மக்களின் நலனுக்காகவும் பிழைகளை எடுத்துரைத்தவர்கள் அனைவரையும் துரோகி துரோகி என்றார்கள், சுட்டும் தள்ளினார்கள். ஈற்றில் பக்கத்தில் இருந்த துரோகிகளாலேயே புலிகள் தொலைந்தனர். துரோகிகள் என்றும் பக்கத்தில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எளிய கருத்தைக் கூட உணரமுடியாத புலிகளால் எப்படி ஒரு போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? எதிரி என்றும் எதிரில் இருப்பதால் நாம் அவனை அவதானிக்கலாம் துரோகி பக்கத்தில்தான் இருப்பான்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் என்பதை விட புலிகளின் போராட்டம் என்பதே சரியானது. இந்தப்போராட்டம் என்றும் மக்கள்மயமாகவும் இல்லை, உலகமயமாகவும் இல்லை, வெளிநாடுகளின் உயர்மட்ட அரசியலில் நுழையவுமில்லை, ஏன் பேரம் பேசப்படவும் இல்லை. இப்படிக் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய புலிகளால் எப்படி எம்மக்களின் போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? வாசகர்கள் விரும்பினால் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய விடயங்களை விலாவாரியாக எழுதலாம். இப்படியான வழித்தோன்றல்களின் புதிய குதிரையோட்டமே சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம்.

sivanthan3.jpg
இந்த நடைப்பயணத்தை எடுத்துக்கொண்டால் சிவந்தன் என்பவர் ஏன் ஐ.நா நோக்கி நடக்கிறார் என்பது பலதமிழர்களுக்கே தெரியாத ஒன்றாக உள்ளது. அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பேட்டி கொடுக்கிறார். இது சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. மக்கள் தொலைக்காட்சி என்று இலவசமாக தொலைத்துத் தொலைத்துக்காட்டும் மக்கள் தொலைகாட்சி எனும் ஜிரிவிக்கே இந்த நடைப்பயணி எங்கு எந்தவழியால் போகிறார் என்பது நேற்றுவரை 29.07.2010 தெரியாது இருந்தது. தொலைபேசி நேயர்கள் சொன்னார்கள் சிவந்தன் பலவிடங்களில் தனியாகவே நடந்து போகிறார். அவருக்கு மக்கள் வந்து ஆதரவு கொடுங்கள் என்று. அதையடுத்து சரியாக 15நிமிடத்தில் சிவந்தனுடன் தொடர்பு கொண்டபோது அவர் சொல்கிறார். மக்கள் ஆதரவு இருக்கிறது என்று. இது மீண்டும் புலி, அரசுப்பாணியையே நினைவு படுத்துகிறது.

இலண்டனில் இருந்து ஐ.நா நோக்கி நடக்கும் போராட்டம் ஒரு வலுவான அகிம்சைப் போராட்டம்தான். ஆனால் அது திட்டமிடப்பட்ட விதம், பயணம் செய்யும் முறை, சிவந்தனுக்கு பேச்சில் தெரியும் அவரது போராட்டம் பற்றிய அறிவு, தெளிவு என்பனவும், என்மக்கள், வெளிநாட்டவர், அரசியல், இராஜதந்திரிகள் மட்டங்களில் இப்பயணம் பற்றிய நோக்கம் என்பன கேலிக்கூத்தாகவே இருக்கிறது. இலங்கையில் உலகசாதனை புரிய தெருத்தெருவாய் நடனமாடிய மடையர்கள் போலவே தெரிகிறது.

அகிம்சை முறைப்படி பயணப்போராட்டம் செய்பவர் அகிம்சையுடன், சாந்தமாக, அமைதியாக நடப்பது முக்கியம். சிவந்தன் நடப்பதைப்பார்த்தால் போருக்குப் போகிறவர் போல் போகிறார். அகிம்சை ஐயோ என்று அலறிக்கொண்டு ஓடிவிட்டது. சரி நடந்து போகும் போது பிரித்தானியக் கொடியுடன் போகும் இவர் தான் பிரித்தானியன் என்று உலகத்தவர்களுக்குக் கூறுவதுதானா இப்பயணத்தின் நோக்கம்? மொழியறிவற்றவர்கள் கூட குறிப்பறிய ஏன், எதற்கு நடக்கிறார் என்ற குறிப்பு எதுவுமே கிடையாது. குறைந்தபட்சம் முதுகில் கூட ஒரு குறிப்பெழுதிப்போட முடியாமல் போனதா? மனமில்லாமல் போனதா? ஆங்கிலத்தின் கொடியைக் காவிச்செல்லும் இவர்களுக்கு ஆங்கிலத்தில் நாலெழுத்துத் தெரியாமல் போனது ஏன்? யாருக்குக் காட்ட இந்தப்பயணம். இதைக்காட்டி புலத்துப் புண்ணாக்குகளிடம் மீண்டும் பணம் பறிக்கவா? ருசிகண்ட பூனைகள் சும்மாவா இருக்கும்?

ஐ.நாவை நோக்கி நடக்கும் இவரை எதிர்பார்த்து ஐ.நாவின் பொதுச்செயலாளர் பாங்கி மூன் நிற்கிறார்போலும். சிறையில் வாடுபவர்களை விடுவிக்க வேண்டும், போர்குற்றங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறுமிவர் எந்த நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்? பரமேஸ்வரன் மைக்டொனால்ஸ் வழக்குபோல் சாட்சியில்லாத வெற்றிகள் கிட்டலாமல்லவா? ஒருநாட்டில் உயர்நீதி மன்றத்தால் தனக்குச் சரியான தீர்ப்பு கிடைக்காத தனிமனிதர்கள் வழக்குகளை மனித உரிமைகள் நீதிமன்றுக்குக் கொண்டு போகலாம் என்பதை அறியவில்லையா? இதைச் செய்தார்களா? பிரபாகரன் பிணத்தை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரவலுவற்ற உறவுகளும், நட்புகளும், புலிவீரர்களும், புலம்பெயர்புலிகளும் இருக்கும் போது குண்டிச்சட்டிக் குதிரையோடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.

ஏதாவது தாக்கங்களை உலக அரசியல் மட்டங்களில் ஏற்படுத்துமாறு புதிய முறைகளைக் கையாளுங்கள். கொலஸ்ரோல் உடலில் கூடிவிட்டது என்பதற்காக தமிழரைச் சாட்டி போராடவேண்டாம். இதுவும் ஒரு புலிப்பாணிதான். போராட்டம் தமிழ்மக்களுக்கு என்று கூறி புலிகள் மாபியாவாக வளர்ந்து விழுந்தது தான் மிச்சம். மக்களுக்காகப் போராடியவர்கள் தம்மக்களையே பயணக்கைதிகளாய் வைத்திருந்த நாசகார, நயவஞ்சகச் செயல் புலிகளைத் தவிர உலகில் யாரும் செய்யவில்லை. இப்படியான விவஸ்தை கெட்ட செயல்களை விமர்சித்தால் இன்று ஒரு புதுப்பட்டம் கொடுக்கிறார்கள் அரசாங்கத்தின் ஆள் என்று. புலிகளும், புலிப்பினாமிகளுமே இன்று அரசின் கையாளாக உள்ளனர். எப்போ மாடுசாகும் உண்ணிகளரும் என்று இருந்திருக்கிறார்கள் போலும்.

சிவந்தனிடம் கால்கடுக்கவில்லையா? களைக்கவில்லையா? என்ற கேள்விகளைக் கேட்டபோது அவரின் பதில் குழந்தைப்பிள்ளைக் கூட குலுங்கிச் சிரிக்கவைக்கும். களையைப்பார்த்தால் விடுதலை கிடைக்காதாம். இது விடுதலைப்பயணமா? நீதிகேட்டு பயணமா? ஒன்றுமாய் விளங்கவில்லை யாராவது விளங்கினால் சொல்லுங்கள். இப்படித்தான் எங்களுக்கு ஒன்றும் விளங்காமலே எங்கள் இனத்தையும் நிலத்தையும் அழித்தது போதும். இனியாவது திட்டமிட்டு மக்கள் மயப்பட்ட, இராஜதந்திரரீதியாக, அறிவுரீதியான போராட்டங்களில் ஈடுபடுங்கள். சிலவேளைகளில் விட்டுக் கொடுப்பது கூட இராஜதந்திரம்தான்.

இன்று போரில் விழுந்த இலங்கையையும், சிங்களப்பேரினவாத அரசையும் முண்டு கொடுத்து நிமிர்த்துவது புலிகள் தான். ஈழம் கேட்டுப்போராடியவர்கள் கொழும்பில் வீடுகள் வாங்கினார்கள். எல்லைகள் பறிபோக தமிழர்களின் உறுதிகளைப்பிடுங்கினார்கள். இன்றும் இலங்கைப் பேரினவாத அரசுக்கும் இராஜபக்ச கொம்பனிக்கும் தாராளமாக அள்ளிவழங்குவது புலிகளே. தமிழீழத்தின் தேசியச்சின்னங்கள், சூரியதேவன் பிரபாகரன் வளர்த்த வாரிசுகள் 2009 மே 18 மண்வேண்டி, மண்ணாய், மண்ணில் தலைவன் விழுந்த இரத்தம் காயமுன் விமானரிக்கட்டுகளைப் பதிவுசெய்தார்கள். தலைவன் விழுந்த மண்ணையோ, தண்டிக்கப்பட்ட அப்பாவி மக்களையோ பார்ப்பதற்கல்ல. வியாபாரத்துக்கும் சுற்றுலாவுக்குமாக விமான இருக்கைகள் நிரம்பி விட்டன. இலங்கைத் தயாரிப்புக்களை பகிஸ்கரியுங்கள் என்று வானுயரக்கத்திய புலிகளும் பினாமிகளுமே எயர்லங்காவில் விமான இருக்கைகளைப் பதிவு செய்துள்ளார்கள் என்பதையும் அறிக. தமிழுணர்வும், தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என விடுதலைவேட்கை பொங்கி வழிகிறது. வாருங்கள் நாங்களும் போய் அள்ளுவோம். ஜிரிவியில் ஒரு விளம்பரம்:- “வாணி சீ பூஃட்சே இனி எம்தேசிய உணவு”. கடலுணவு என்று தமிழில் விளம்பரப்படுத்த முடியாத, அன்றித் தெரியாத தமிழர்களுக்கு வாணி சீ பூஃட் தேசிய உணவாம். சுயமிழந்த தேசியம் தேவடியாளாகி தெருத்தெருவாய் கிடக்கிறது. விலைகூறி மலிவுவிலையில் தேசியம் விற்கப்படுகிறது. முடிந்தால் நீங்களும் வாங்குங்கள்.

இன்று இலங்கைப் பேரினவாத அரசுக்கு தேசியம் பேசிய புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் கொடுத்த பணம் ரிஆர்ஓ வினூடாகவம் கே.பி யினூடாகவும் போய்விட்டது. மீதியை புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் விமானம் எடுத்துப் போகிறார்கள் அன்னியச் செலவாணியை அள்ளி இறைப்பதற்கு. நான் பிறந்த சமூகமே ஏறிமிதிப்பற்குக் கூட இலாயக்கற்றுப்போனாயே போ. முட்டாள் சிங்களவன் என்று குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டி கொட்டமடித்த சமூகமே சிங்களவன் எட்டிக்குட்டிவிட்டு கிட்டநின்று சிரிக்கிறான் உன் செய்கைகளைப் பார்த்து. உன்னைவைத்தே உன்னையழிக்கும் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது கொட்டிக் கொடுங்கள். வாழ்க தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம்.

கூனிக்குறியபடி குலன்.
30.07.2010

கொழும்பில் தனியார் ஊடக நிறுவனம் மீது முகமூடி கும்பல் கடும் தாக்குதல் – செய்தியறை தீக்கிரை மூவர் காயம்

siyatha.jpgகொழும்பு02  ஹுணுப்பிட்டிய லேக் வீதியிலுள்ள வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் ஊடக நிறுவனத்தின் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை முகம்மூடி அணிந்த இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்நிறுவனத்தின் செய்தி அறையும் அடித்து உடைத்தும் எரித்தும் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஊடக நிறுவனத்தின் பணியாளர்கள் இருவரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் குண்டர்கள் கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருப்பதாக அந்த நிறுவன பணியாளர்கள் தெரிவித்தனர். “வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் வெற்றி எவ்.எம்., வெற்றி ரி.வி., சியத்த எவ்.எம்., சியத்த ரி.வி., ரியல் ரேடியோ ஆகிய 5 ஊடகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் வெற்றி ரி.வி.யைத் தவிர ஏனைய 4 ஊடகங்களும் செய்திகளை வெளியிடுகின்றன. இவற்றுக்கான செய்தி அறை மீதே நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டு தீயும் வைக்கப்பட்டுள்ளது.

வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் ஊடக நிறுவனப் பணியாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்று அதிகாலை 1.20 மணியளவில் இரு வாகனங்களில் அந்த ஊடக நிறுவனத்துக்குச் சென்ற இனந்தெரியாத கும்பலொன்று நுழைவாயிலருகில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தரிடம் செய்தி அறை எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளது. வந்தவர்கள் அனைவரும் அடையாளம் தெரியாத வகையில் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை கறுப்புத் துணியால் மறைத்துக் கட்டியிருந்ததுடன், கைகளில் துப்பாக்கிகளும் இரும்புக் கம்பிகளும் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

எனினும் பாதுகாப்புக் கடமையில் இருந்தவர் செய்தி அறையைக் காட்டாமல் யார் என்று வினவிக் கொண்டிருக்கவே அவரை அந்தக் குழுவினர் தாக்கியுள்ளனர். அதில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் சத்தமிட்ட போது குண்டர்கள் நுழைவாயில் கதவைப் பலவந்தமாகத் திறந்துகொண்டு உள்ளே புகுந்துள்ளனர். அங்கு செய்தி அறை அடங்கலான ஒரு கட்டிடத்தொகுதியும் எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான இன்னுமொரு கட்டிடத் தொகுதியும் இருந்ததால் குண்டர்கள் இரண்டு பக்கமும் சென்றுள்ளனர். இதன்போது எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான கட்டிடத்தொகுதியின் கீழ்ப்பகுதி கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் சத்தத்தையும் கண்ணாடி உடைக்கப்படும் சத்தத்தையும் கேட்டு செய்தி அறைக்குள் இருந்த ஒருவர் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்துள்ளார். இதன்போது வெற்றி எவ்.எம். செய்திப் பிரிவைச் சேர்ந்த இருவர் மட்டுமே செய்தி அறைக்குள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் வெளியில் வந்த போது கதவின் இரு மருங்கிலும் பதுங்கியிருந்த குண்டர்களில் இருவர் அவரைப் பிடித்து செய்தி அறை எதுவென்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் செய்தி அறைக்குள் இருந்த மற்றையவர் வெளியில் விபரீதம் நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொண்டு கதவை மூட முயற்சித்திருக்கிறார். இதன்போது வெளியில் இருந்தவர் உள்ளே வர கதவைத் திறக்குமாறு தட்டியதை அடுத்து உள்ளிருந்தவர் கதவைத் திறக்க, வெளியில் சென்றவருடன் சேர்ந்து குண்டர்களும் செய்தி அறைக்குள் புகுந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு ஒருவரைத் துப்பாக்கிப் பிடியாலும் மற்றவரை இரும்புக் கம்பியாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது செய்தி அறைக்குள் இருந்த கணினிகள், பிரின்டர்கள், போட்டோ கொப்பி மெஷின், ஸ்கேனர் என அனைத்தையும் இரும்புக் கம்பிகளால் குத்தியும் அடித்தும் உடைத்து நொருக்கியுள்ளனர். இதேபோல் செய்தி அறைக் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கலன்களில் கொண்டு வந்திருந்த பெற்றோலை செய்தி அறை முழுவதும் தெளித்துள்ள குண்டர்கள் பின்னர் பெற்றோல் குண்டுகள் சிலவற்றை பற்ற வைத்து செய்தி அறைக்குள் வீசி விட்டுத் தப்பிச் செல்லமுயற்சித்துள்ளனர். எனினும் தீ அதிகமாக பரவவே, அங்கிருந்த வெற்றி எவ்.எம்.செய்திப் பிரிவுப் பணியாளர்கள் இருவரையும் வெளியில் இழுத்து வந்து விட்டு விட்டு வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

செய்தி அறை அடித்து உடைக்கப்படும் சத்தம் கேட்டு எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான கட்டிடத் தொகுதியில் இருந்த பணியாளர் அந்தக் கட்டிடத்தின் மின் விநியோகம் முழுவதையும் நிறுத்தியுள்ளார்.

செய்தி அறை கட்டிடத்தொகுதிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பற்றி 119 பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தொலைபேசி மூலம் உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சுமார் 45 நிமிடம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்ததாக வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை சுமார் 6 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் செய்தி அறை மட்டுமே எரிந்து நாசமாகியிருந்தாலும் அதற்கு மேல் மாடிகளில் இருந்த பிரதான கட்டுப்பாட்டு அறை மற்றும் ரி.வி., ஸ்ரூடியோ என்பன புகையினால் பாதிப்படைந்திருப்பதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வெற்றி எவ்.எம். செய்திப் பிரிவின் உதவி செய்தி ஆசிரியர் கே.ரஜினிகாந்த், ஊடகவியலாளர் லெனின் ராஜ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகிய மூவரே காயமடைந்துள்ளனர்.இதில் லெனின் ராஜ் துப்பாக்கியினால் தாக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது அவர் கைகளைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சித்ததில் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் மீது இரும்புக் கம்பியைக் கொண்டு தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு விட்டதாகவும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மட்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடக நிறுவன பணியாளர்கள் கூறினர்.இதேநேரம், இச்சம்பவம் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பி.ஜயகொடி தெரிவித்தார். அத்துடன், சம்பவத்தை அடுத்து வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நன்றி:தினக்குரல்