02

02

வன்னியில் மீள்குடியமர அழைத்துச் செல்லப்படும் மக்கள் படையினரால் திருப்பியனுப்பப்படுகின்றனர்.

வன்னியில் மக்களை மீள்குடியமர்த்தும் அரச அதிகாரிகளுக்கும் படையினருக்குமிடையில் இணைந்த செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்படுகின்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மயில்வாகனபுரம். குமாரசாமிபுரம் பகுதிகளில் மீள்குடிமர்த்தப்படுவதற்காக அழைத்துச செல்லப்பட்ட 301 குடும்பங்கள் படையினர் அனுமதி மறுத்தமையினால் குடியமர முடியாத நிலை எற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படாமலுள்ளதால் அப்பகுதிகளில் மக்கள் மீள்குடியமர அனுமதியில்லை என படையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அம்மக்கள் பாடசாலைக் கட்டங்களில் அடிப்படை வசதிகளின்றி தங்கயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள படையினருடன் சரியான அனுமதியினைப் முதலிலேயே பெற்று மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளை மேற்கொண்டால் மக்கள் இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதும், துன்பங்களுக்குள்ளாவதும் தவிர்க்கப்படலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சி பொன்னகரில் மீள்குடியமர அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்கள் படையினரால் திருப்பியனுப்பப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி பொன்னகரில் மக்கள் மீள்குடியமர படையினர் தடைவிதித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களில் பலருக்கு காணி உரிமம் இல்லாததால் வீடமைப்பு உதவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அக்காணி உரிமையாளர்கள் வீடமைப்பு உதவிகளைப் பெறமுடியாத நிலை எற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 3290 பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், காணி உரிமம் இல்லாத காரணத்தினால், 2466 பேருக்கு உதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பலருக்கு காணி உரிமம் இல்லாததால் வடக்கு, கிழக்கு வீடமைப்பு மீள்நிர்மான திட்டமான ‘நேர்ப்’ திட்டத்தின் கீழ் வீடமைப்பு பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக ‘நேர்ப்’ திட்டத்தின் பிரதித் திட்டப் பணிப்பாளர் கந்தையா தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகளுக்கு காணி உறுதி வழங்கப்படாமையினால் வங்கிகளில் கூட வீடமைப்பு கடன்களைப் பெறமுடியாத நிலை மக்களுக்கு எற்பட்டுள்ளது. பலருக்கு தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அநேகமான காணிகளில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் மக்கள் பல வருடங்களாக குடியிருந்து வருகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கது.

இந்திய அதிகாரி விரைவில் இலங்கை செல்வார் – ப. சிதம்பரம்

citam.jpgஇந்திய வெளியுறவுத் துறையின் முக்கிய அதிகாரியொருவர் விரைவில் இலங்கை செல்லவுள்ளாரென மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். சென்னையில், முதலமைச்சர் மு. கருணாநிதியைச் சந்தித்ததன் பின் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவரும் பணிகளை அய்வு செய்யவும்; இடம்பெயர்ந்தோருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிகளைப் பார்வையிடவும் இந்த அதிகாரி கண்டறிவாரென சிதம்பரம் கூறினார். பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைமுகம் இவைகளை மேம்படுத்த இந்திய அரசு உதவி செய்துள்ளது. இந்த பணியும் எந்த அளவு நடந்துள்ளது என்பதைக் கண்டறிவார்.

கேள்வி:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சுடப்படுகிறார்களே?

பதில்:- இந்த ஆண்டு ஒரு நிகழ்வுதான் நடந்துள்ளது. அது வருந்தத்தக்க விசயம். இந்தியா- இலங்கை ஒப்பந்தப்படி கடலில் மீனவர்களை சுடக்கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கைது செய்யலாம் சுடக்கூடாது என்பதை மீண் டும் வலியுறுத்தி உள்ளோம்.

வடக்கில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற்செய்கை

வடக்கில் பெரும்போக நெற்செய்கையினை பாரியளவில் முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி திட்டமிட்டு வருவதாக அதன் செயலாளர். எஸ். பி. திவாரட்ன  தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவின் குறித்த பகுதிகளில் காணப்படும் விளைச்சல் நிலங்களை இலக்காகக் கொண்டே இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனக் கூறிய செயலாளர் எஸ். பி. திவாரட்ண, எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பமாகவிருக்கும் பெரும்போகத்தில் 75 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து நெல் விளைச்சலை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்திற்கு இந்தியா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன உதவ முன்வந்துள்ளன. இதனடிப்படையில், இந்திய அரசாங்கம் பெரும்போகத்திற்கு முன்னர் விளைநிலங்களை உழுவதற்காக 500 ட்ரக்டர் வண்டிகள் மற்றும் நீர் பம்பிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 400 ட்ரக்டர் வண்டிகளையும் நீர்ப் பம்பிகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. ட்ரக்டர் வண்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் பழமையான முறையான ஏர் பூட்டும் முறையை கையாளவும் விவசாயிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செயலாளர் எஸ். பி. திவாரட்ன கூறினார்.

மேலும் விவசாய அமைச்சும் உலக விவசாய ஸ்தாபனமும் வட மாகாணத்தின் பெரும்போகத்துக்கென மூன்று இலட்சம் புசல் விதை நெற்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளன. அத்துடன் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கென போதியளவு உரம் கையிருப்பிலுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் நெல் விளைச்சல் மற்றும் வீடமைப்பு ஆகியவற்றிலேயே வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணி கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அதன் செயலாளர், இம்மாத இறுதிக்குள், இந்திய அரசாங்கம் வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியை ஆரம்பிக்குமெனவும் சுட்டிக்காட்டினார்.

கே.பிக்கு சொந்தமான சொத்துக்களுக்கு என்ன நிகழ்ந்தது

tilvin.gifஇலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் மூலமுமான கே.பிக்கு சொந்தமான சொத்துக்களுக்கு என்ன நிகழ்ந்தது என ஜே.வி.பியின் பிரதானச் செயலாளர் ரில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

அசிட் வீச்சில் பெண் பலி – மீரிகமவில் பஸ்ஸில் பயணம் செய்யும் போது சம்பவம்

பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் மீது அசிட் வீசப்பட்டதில் அந்தப் பெண் பலியாகியுள்ளதுடன் சிறுமியொருவரும் காயமடைந்த சம்பவமொன்று மீரிகம, பஹலகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிறுமி, அசிட் வீச்சுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகள் எனத் தெரியவந்துள்ளது. வரக்காபொலையில் இருந்து மீரிகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி பெண்ணை இலக்கு வைத்து, அதே பஸ்ஸ¤க்குள் பிரவேசித்த சந்தேகநபர் ஒருவர் இந்த அசிட் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு அருகிலிருந்த அவருடைய மகளும் பாதிக்கப்பட்டநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசா ரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக வும் அவர் மேலும் கூறினார்.

வட மாகாண டெங்கு நோய் ஒழிப்புத் திட்டம் இன்று ஆரம்பம் – யாழ். நகரசபையில் நிகழ்வு: மன்னாருக்கு விசேட வைத்தியக்குழு

mos.jpgவட மாகாணத்தில் டெங்கு நோய் ஒழிப்பிற்கான தேசிய வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் இதற்கான தேசிய நிகழ்வு இன்று காலை யாழ். மாநகர சபையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இம்மாதம் குறித்த நான்கு நாட்கள் தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப் படவுள்ளன. அந்த வகையில் இன்று 02 ஆம் திகதி முதல் வட மாகாணத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி வவுனியா அதிபர் அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணத்தின் சகல பகுதிகளிலும் அந்தந்த மாவட்டத்திற்குரிய அரச அதிபர் தலைமையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளிலேயே இன்று டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தற்போது ஒப்பீட்டளவில் வடமாகாணத்தில் மிக மிக குறைந்த எண்ணிக்கையானோரே டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். மன்னாரில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து வவுனியாவிலிருந்து விசேட வைத்தியர் குழுவொன்று மன்னார் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வன்னி பிரதேசத்தில் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் – புனரமைப்புப் பணி இன்று ஆரம்பம்; மாத இறுதியில் பூர்த்தி

வன்னிப் பிரதேசத்தில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத் தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கான கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் இன்று 2ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னி பிராந்திய பணிப்பாளர் ரி. விணோதராஜா நேற்று தெரிவித்தார்.

இத் தொழிற் பயிற்சி நிலையங்கள் கனடா நாட்டின் உலக பல்கலைக்கழகங்கள் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்திய அரசாங்கம் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றை இரண்டு ஏக்கர் நிலத்தில் வவுனியா ஓமந்தையில் அமைப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வன்னிப் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கும் நோக்கில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மாந்தை கிழக்கு, பூநகரி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று, மன்னார் மாவட்டத்தில் இரண்டு என பத்து நிலையங்கள் அமைக்கப்படும். தற்போது வன்னி பிரதேசத்தில் ஒரே ஒரு தொழிற் பயிற்சி நிலையம் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு இயங்குகின்றது.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களின் அமைப்பு பணிகள் பூர்த்தியானதும் உடனடியாக ஆறு மாத கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும். மேசன், தச்சுத் தொழில், அலுமினியம் பொருத்துதல், வெல்டிங்க், மோட்டார் சைக்கிள் திருத்துதல், படகுகளில் இணைக்கப்படும் மோட்டார்களைத் திருத்துதல் ஆகிய கற்கைகள் தொடங்கப்படவுள்ளன.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களில் கற்கையை மேற்கொள்ளுபவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 100.00 முதல் ரூ. 200.00 வரையிலான கொடுப்பனவும், அவர்களது போக்குவரத்துக்காக துவிச்சக்கர வண்டியும் வழங்கப்படும். தொழிற் பயிற்சியைப் பூர்த்தி செய்பவர்களுக்கு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த பத்து தொழிற் பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி அளிக்கலாமென எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை, இந்திய அரசாங்கம் ஒரு வருட காலப் பகுதியில் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையத்தை ஓமந்தையில் இரண்டு ஏக்கரில் அமைக்கவிருக்கின்றது. இங்கு தொழிற் பயிற்சி கற்கையை மேற்கொள்ளுபவர்களுக்கு இந்தியாவிலும் தொழிற் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான இணக்கப்பாடுகளும் காணப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனமும் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றை மன்னாரில் அமைப்பதற்கும் முன்வந்துள்ளது.

சவூதியில் 40 பணிப்பெண்கள் நிர்க்கதி; 6 பேருக்கு சுகயீனம்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நிர்க்கதியான நிலையிலிருக்கும் 40 இலங் கைப் பணிப்பெண்களுள் சுகயீனமுற்றிரு க்கும் ஐவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டிருப்பதாக அதன் பொது முகாமையாளர் ருகுனுகே தெரிவித்தார்.

அந்நாட்டின் குறித்த வைத்தியசாலை யொன்றில் வேலை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி இலங்கையிலிருந்து 41 பணிப்பெண்கள் அண்மையில் ரியாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவர்களுக்கு குறித்த வேலை வழங்கப்படவில்லை.

இருப்பினும் குறிப்பிட்ட மாதாந்த சம்பளத்தின் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சென்ற ஆறு பெண்கள் சுகயீனமுற்றுள்ளனர். இவர்களுள் ஒருவர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்

mos.jpgதேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள்இன்று 2ம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றன. இந்த மாதத்தின் நான்கு தினங்களை அரசாங்கம் தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைமையில் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டம் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்திலும், கிராம சேவகர் மட்டத்திலும் அரச, தனியார் நிறுவனங்களிலும் முன்னெடுக்கப் படவுள்ளது. இப்பணியில் கிராம சேவகர் மட்டத்தில் அமைக்கப்பட்டி ருக்கும் 16,500 குழுக்கள் ஈடுபடவுள் ளன.

அரசாங்கம் இம்மாதத்தின் 2ம், 9ம், 21ம் , 28ம் ஆகிய நான்கு தினங்களையும் தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகவும் 16ம் திகதி முதல் 22 வரையான தினங்களை டெங்கு ஒழிப்பு வாரமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.

டெங்குநோய் காரணமாக இவ் வருடத்தின் முதல் ஏழு மாதங்களி லும் 171 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் 23145 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தீவிர மாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.