வன்னி பிரதேசத்தில் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் – புனரமைப்புப் பணி இன்று ஆரம்பம்; மாத இறுதியில் பூர்த்தி

வன்னிப் பிரதேசத்தில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத் தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கான கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் இன்று 2ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னி பிராந்திய பணிப்பாளர் ரி. விணோதராஜா நேற்று தெரிவித்தார்.

இத் தொழிற் பயிற்சி நிலையங்கள் கனடா நாட்டின் உலக பல்கலைக்கழகங்கள் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்திய அரசாங்கம் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றை இரண்டு ஏக்கர் நிலத்தில் வவுனியா ஓமந்தையில் அமைப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வன்னிப் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கும் நோக்கில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மாந்தை கிழக்கு, பூநகரி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று, மன்னார் மாவட்டத்தில் இரண்டு என பத்து நிலையங்கள் அமைக்கப்படும். தற்போது வன்னி பிரதேசத்தில் ஒரே ஒரு தொழிற் பயிற்சி நிலையம் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு இயங்குகின்றது.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களின் அமைப்பு பணிகள் பூர்த்தியானதும் உடனடியாக ஆறு மாத கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும். மேசன், தச்சுத் தொழில், அலுமினியம் பொருத்துதல், வெல்டிங்க், மோட்டார் சைக்கிள் திருத்துதல், படகுகளில் இணைக்கப்படும் மோட்டார்களைத் திருத்துதல் ஆகிய கற்கைகள் தொடங்கப்படவுள்ளன.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களில் கற்கையை மேற்கொள்ளுபவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 100.00 முதல் ரூ. 200.00 வரையிலான கொடுப்பனவும், அவர்களது போக்குவரத்துக்காக துவிச்சக்கர வண்டியும் வழங்கப்படும். தொழிற் பயிற்சியைப் பூர்த்தி செய்பவர்களுக்கு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த பத்து தொழிற் பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி அளிக்கலாமென எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை, இந்திய அரசாங்கம் ஒரு வருட காலப் பகுதியில் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையத்தை ஓமந்தையில் இரண்டு ஏக்கரில் அமைக்கவிருக்கின்றது. இங்கு தொழிற் பயிற்சி கற்கையை மேற்கொள்ளுபவர்களுக்கு இந்தியாவிலும் தொழிற் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான இணக்கப்பாடுகளும் காணப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனமும் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றை மன்னாரில் அமைப்பதற்கும் முன்வந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *