புலிகளின் சகோதரப் படுகொலைகளாலே நடாத்தப்பட்ட தமிழர் போராட்டத்தின் சிதைவு என்பது புலிகளின் அழிவின் பின்னரும் நியாயம் கேட்டுநிற்கிறது.
இன்றும் புலிகளின் இயக்கப்பெயரை, இயக்கத்தின் கொடியை, சின்னங்களை பாவிப்பவர்களிடமும், பிரபாகரன் தமது தலைவர் என்று கூறுபவர்களும், புலிகளின் தொடர்ச்சியாக போராட்டம் என்ற கண்துடைப்பை செய்பவர்களிடமும், இந்த ரெலோ அழிப்பிற்கான நியாயத்தை பாதிக்கப்பட்டவர்கள் கேட்கின்றனர். ரெலோ அழிப்பின்போது கொல்லப்பட்ட இளைஞர்களின் உறவினர்களும் முன்னாள் ரெலோ தோழர்களும், இன்றும் புலிகளின் தொடர்ச்சி என்று தமது போராட்டங்களை செய்பவர்களிடம் ரெலோ மீதான புலிகளின் கோரப் படுகொலைக்கான நியாயம் கேட்டு நிற்கிறார்கள்.
இன்று புலிகளின் தொடர்ச்சி என்ற போராட்ட சுத்துமாத்துக்களை கொண்டு திரிபவர்களில் பலர் ரெலோ அழிப்பின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகளேயாகும். இவர்கள் ரெலோ மட்டுமல்ல இதர சகோதரப் படுகொலைகளுக்கும் தொடர்புடையவர்களாகவே இருந்துள்ளனர். இன்று 24 வருடங்கள் கழிந்துவிட்டன என்ற காரணத்தை கூறிவிட்டு எவரும் ஒதுங்கிடவிட முடியாது என்பதே பல ரெலோ தோழர்களின் கருத்தாக உள்ளது.
புலிகள் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை என்பது திட்டவட்டமாக ரெலோ அழிப்பின்போது வெளிப்படுத்தப்பட்டு விட்டதொன்று. புலிகள் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து தமிழ் மக்களின் அடையாள இருப்பையே கேள்விக்குள்ளாக்கினர். பெருந்தொகையான மக்களை அரசும் இராணுவமும் கொன்று குவிக்க ஆதரவு கொடுத்தது மட்டுமல்லாமல் தனது இறுதிக்கால அழிவின்போது தமிழ் மக்களை கொலை செய்யவும் புலிகள் தயங்கவில்லை.
சகோதர இயக்கத்துடன் ஏற்படும் முரண்பாடுகளை பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக எதிரி முகாம்களை சுற்றி வளைத்து தாக்குவதுபோல் தாக்கி சகோதரர்களைக் கொலை செய்தனர். இது சரி என்று வாதிடும் புலிகள், இன்றும் தமிழர் சமூகத்தில் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புலிகள் இயக்கத்தை இன்று தமது சுயநலத்திற்காக பாவிக்கின்றனர். அதற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம் இப்படி பலவகையான பெயர்களில் இந்த கைங்கரியத்தை நிறைவேற்றி வருகின்றனர்.
தமிழர்களை கொன்றுதான் சர்வதேச சமூகத்தின் கவனத்தை திருப்ப முடியும் என்ற கருத்தை கொண்டிருந்த புலிகளின் செயற்பாடுகள் புலிகள் மக்களில் அல்ல, தமது சொந்த நலனில் மட்டும் அக்கறையுள்ளவர்கள் என்பதைக் காட்டியது. இன்று இதன் தொடர்ச்சியினை செயற்படுத்துபவர்களும் மக்களின் நலனிலிருந்து விலகி தமது நலன்களையே பிரதிபலிக்கின்றனர். இவர்கள் போராட்டத்தின், மக்களின், சமூகமாற்றத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் என்பதைவிட தமது சொந்த நலனில் இருந்தே மக்கள் நலனை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் சுயநலக் கும்பல்களாகும்.
எதிரியிடமிருந்து தப்பித்துக்கொள்ள இயக்க இரகசியங்களை காப்பாற்ற சயனைட் கொடுத்து கொலை செய்த புலிகள் தாம் மட்டும் உயிர்தப்பவே சரணடைந்தனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் துரோகிகள் என்றால் தாமும் தமது துரோகத்தை பதிவுசெய்துவிட்டனரேயாகும்.
தமது போராட்ட யுக்திகளுக்காக பயன்படுத்திய செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு, பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு ஒரு வருடமாகியும் இன்றுவரையில் புலம்பெயர் புலிகள் அமைப்பினர் கைகொடுக்க முன்வரவில்லை. அவர்களுடைய கவனம் முமுவதும் தங்கள் வசம் உள்ள சொத்துக்களையும் வருமானங்களையும் பாதுகாப்பது பெருக்குவது என்பதிலேயே உள்ளது. மே 18 வரை செல்வந்த இயக்கமாக இருந்த புலிகள் மே 18ல் தங்கள் தலைவர் அழிக்கப்பட்டதும் செயர் மார்கற் வீழ்ந்ததால் நிறுவனங்களின் சொத்துக்கள் காணாமல் போவது போல் புலிகளது சொத்துக்களும் மே 18 உடன் காணாமல் போனது.
முள்ளிவாய்க்காலில் அழிவு ஏற்பட்டு ஒரு வருடமாகியும் தமது இயக்கத்தின் தலைமைகள் யார்? என்பது இன்று வரையில் வெளியிடவில்லை என்றால் மக்களுக்கான ஒரு தலைமை இருந்தது என்று சொல்வதில் அர்த்தமில்லை. இவர்கள் அடிப்படையில் மக்கள் நலனுக்காக போராடவில்லை. பிரபாகரனின் தனிப்பட்ட தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்காக இத்தனை மக்களையும் இத்தனை மக்களின் சொத்துக்களையும் மானத்தையும் மரியாதையையும் அழித்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் உயிர் மூச்சையும் அழித்துவிட்டனர் புலிகள். இந்த இயக்கத்தினால் இவற்றைவிட வேறு ஏதும் செய்யத் தெரியாது. தமிழர் உரிமைப் போராட்டத்தை பிரபாகரன் மாற்றுவார் என்பது 1980 களிலிருந்து தமிழர் போராட்ட ஆரம்பகால உறுப்பினர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இப்படியாக பேசப்பட்ட பல கூட்டங்களில் கலந்து கொண்டோர் பலர் இன்றும் புலம்பெயர்ந்த நாட்டிலும் இக்கருத்துக்களுடன் வாழ்கின்றனர். உதாரணமாக யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள கம்யூனிஸ்கட்சி எழுதுவினைஞர் சங்கத்தின் கட்டிடத்தில், மணியம் கட்டிடத்தில் நடைபெற்ற 14 இயக்கங்களின் ஒன்று கூடலின்போதும் இவை மனம் திறந்து பேசப்பட்டது.
புலிகளினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட இன்றுள்ள ரெலோ இயக்கத்தின் செயற்பாடுகளும் அன்னிறிலிருந்து இன்று வரையில் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்தோ அல்லது சமூகத்தின் தேவைகளிலிருந்தோ பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றும் ரெலோ தனது பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிலும் கடந்த காலத்தில் 4 பாராளுமன்ற ஆசனங்களையும் இன்று ரிஎன்ஏ கூட்டாக 2 ஆசனங்களையும் ரெலோ பெற்றிருந்த போதும் மக்களின் தேவைகள், மக்கள் உரிமைப் போராட்டதின் பங்காளிகளாக ரெலோவினரின் செயற்பாடுகள் என்ன? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. வெறுமனே பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவது மட்டும் போராட்டமா? இன்றுள்ள ரெலோவினர் ‘உங்கள் கடந்தகால மக்கள் சேவைகள் என்ன?’ என்ற கேள்விக்கு என்ன பதில்களைக் கொண்டிருக்கிறார்கள்? எப்போதும் போல் புலிகளையே காரணம் காட்டும் ரெலோவினர் இன்று புலிகளின் அழிவின் பின்னர் ஒரு வருடமாகியும் ‘ரெலோவின் நிலைப்பாடு என்ன?’ என்ற எந்த அறிக்கைகளும் வெளிவரவில்லை?
புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளின் காலத்தில் ரெலோவின் அடையாள அட்டைகளை பயன்படுத்தியே கொழும்பிலும் இலங்கையின் இதர பகுதிகளில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என்றும் பல ஆயுத தளபாடங்களை கொழும்பிற்குள் புலிகள் கடத்தினர் என்றும் விசேடமாக புலிகளின் பிஸ்டல் பிரிவினர் ரெலோவின் அடையாள அட்டையுடன் கொழும்பில் நடமாடினர்.
இன்றுவரையில் ரெலோ தனது கட்சியினை மறுசீரமைப்பு செய்யவில்லை. ரெலோ உறுப்பினர்களின் அந்தஸ்துக்கள் என்ன? ரெலோவின் அடுத்த செயற்பாடுகள் என்ன? என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் வெறுமனே பாராளுமன்றத்திற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவே பல பொதுமக்களும், பல முன்னாள் ரெலோ போராளிகளும், புலிகளுடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டு இன்று ரெலோவிலிருந்து விலகி வாழ்பவர்களின் கருத்தாகவும் உள்ளது.
மேற்குறிப்பிட்ட விடயங்களின் தாக்கம் காரணமாகவும் ரெலோவிருந்து வெளியேறிய சிறீ ரெலோவினரும் அதன் பின்னர் சிறீரெலோவிலிருந்து பிரிந்து சுதந்திரக்கட்சியுடன் இணைந்த ஒரு பிரிவினரும்கூட, இன்றைய ரெலோவினரின் கட்சி அமைப்பு செயற்பாடுகள் மற்றும் ரெலோவின் இன்றைய நிலைப்பாடுகளையே தெளிவுபடுத்துகின்றது.