பாராளு மன்றத்தில் இராணுவச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்”சயனைட்’ கொடுத்து அழித்தது போல் பாராளுமன்றத்துக்கும் “சயனைட்” ஊட்ட வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;ஒரு விடயம்தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது சட்டமா அதிபருடன் மட்டும் கலந்துரையாடாது சம்பந்தப்பட்ட இருதரப்பினருடனும் அது தொடர்பில் பேசப்பட வேண்டும். கருத்துகள் கேட்கப்பட வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதி அமைச்சின் கீழ் இல்லை. ஜனாதிபதியின் கீழேயே சட்டமா அதிபர் உள்ளார். பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழேயே உள்ளது. வழக்குகளை விசாரிப்பவர்களை நீதிச்சேவை ஆணைக்குழுவே நியமிக்க வேண்டும்.
ஜி.எஸ்.பி.+ பெற வேண்டுமானால் முதலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு “சயனைட்” கொடுத்து அழித்துவிட்டீர்கள். பாராளுமன்றத்துக்கும் “சயனைட்” ஊட்ட முயற்சிக்கின்றீர்கள். தற்போது பாராளுமன்றத்தில் இராணுவச் சட்டங்களே பயன்படுத்தப்படுகின்றன. நகர அபிவிருத்தி தற்போது பொருளாதார அபிவிருத்தியாக மாறிவிட்டது. நகர அபிவிருத்தி ஒரு சகோதரரிடம் பொருளாதார அபிவிருத்தி இன்னொரு சகோதரரிடம். ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான 3 புதிய விதிகள் வர்த்தமானி மூலம் கடந்த நவம்பரிலேயே சமர்ப்பிக்கப்பட்டன. அது பழைய பாராளுமன்றம். தற்போது கூடியுள்ளது புதிய பாராளுமன்றம். எனவே, வர்த்தமானி மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.