யாழ் – முல்லைத்தீவு பஸ் சேவையை மீண்டும் திங்கள் முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இருபது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண பிராந்திய முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ் டிப்போ யுத்த சுழ்நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய பஸ் நிலைய தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை பருத்தித்துறைக்கும் – கொழும்புக்குமான நேரடி பஸ் சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.
பருத்தித்துறைக்கும் – கொழும்பு பஸ் சேவை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமே அதிகமாகப் பயன்படுகின்றது. இச்சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
பலாலி தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ் சேவையினை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.