05

05

பரீட்சை வினாத்தாள் குளறுபடிகள் கல்விப் பணிப்பாளர்களின் கவனயீனமே தவறுக்கு காரணம்

0309susil-premajayantha_.jpgநாட்டின் பல்வேறு பாகங்களிலும் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிப்பது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்விப் பணிப்பாளர்களின் கவனயீனம் மற்றும் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே இத்தகைய தவறுகள் நிகழ்ந்துள்ளன.  சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

பல்வேறு வலயங்களில் தவணைப் பரீட்சை வினாத்தாள் களில் தவறுகள், தாமதம் மற்றும் பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன. இதனால் மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கு கல்விப் பணிப்பாளர்களே பொறுப்புக்கூற வேண்டும். தகுதியான நபர்களே பொருத்தமான பதவிகளுக்கு நிறுத்தப்பட வேண்டும். தகுதியற்றவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதாலேயே இவ்வாறு பிரச்சினைகள் எழுகின்றன.

வட மாகாணத்தில் முதலமைச்சரோ மாகாணசபையோ இல்லாத நிலையில் அங்கு தவணைப் பரீட்சைகள் குளப்பமின்றி நடைபெறுகிறது. அங்குள்ள கல்விப் பணிப்பாளர்கள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்படுவதன் காரணமாகவே வடக்கில் பிரச்சினை எதுவுமின்றி தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.

தவணைப் பரீட்சைகளின்போது இடம்பெற்ற குளறுபடிகள் குறித்த விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி அமைச்சினூடாகவும் மாகாண அமைச்சுக்களினூடாகவும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.

ஊவா மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, வளக்குறைபாடு, அடிப்படை வசதியின்மை என்பன காரணமாக கல்வித் துறை பின்னடைந்திருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் ஊவா மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பு 30 வீதமான மக்களுக்கே மின்சார வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 80 வீதமான மக்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. 3 1/2 வருடகாலத்தில் 5644 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 3719 தோட்ட ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டது. இதில் 600 ஆசிரியர்கள் ஊவாவில் நியமிக்கப்பட்டனர் என்றார்

5 வருடங்களில் சுயமாக வழங்கப்படும் பிரஜாவுரிமை பிரிட்டனில் இனி இல்லை

பிரிட்டனில் 5 வருட காலம் எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் வசிக்கும் எவருக்கும் தன்னிச்சையாகவே குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமிக்ஞையை அந்நாடு விடுத்துள்ளது.  தற்போது முன் மொழியப்பட்டுள்ள உத்தேச சட்ட விதிகளின் பிரகாரம் பிரித்தானிய குடியேற்றவாசிகள் அங்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு அவர்களின் திறமை, தொழில் மற்றும் தகுதியடிப்படையிலான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்புள்ளிகளைத் தன்னார்வப் பணிகள் மற்றும் சமூக சார் நடவடிக்கைகளில் பங்களிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை, அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்கள் குறிப்பாக பிரித்தானிய இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட சர்ச்சைக்குரியதும் சட்டவிரோதமானதுமான நடவடிக்கையில் ஈடுபட்டால் புள்ளிகள் கழிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் குடியேற்றவாசிகளின் தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான இப்புதிய புள்ளித்திட்டம் அண்மையில் அந்நாட்டு உள்விவகார அமைச்சர் அலன் ஜோன்சனால் முன்மொழியப்பட்டது. கடுமையான தகுதிகளுக்கான விதிகளினால் வெளிநாட்டவர்கள் பிரித்தானிய குடியுரிமையைப் பெற 10 வருடங்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களின் தற்காலிக வேலைகள் நிரந்தரமாக்கப்படுவதற்கான இடைவெளி அதிகமில்லை எனத் தெரிவித்த ஜோன்சன் தவறான நடத்தைகள் தண்டனைக்குரியவை எனவும் எச்சரித்துள்ளார்.

வழமைக்கு மாறான போராட்டங்களில் பங்குபற்றுவோரின் புள்ளிகளும் கழிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குடியேற்ற ஆலோசனைச் சேவைகளின் தலைமை நிறைவேற்றதிகாரி கீத் பெஸ்ட் தெரிவித்துள்ளார். இத் திட்டத்தை ஆதரித்துள்ள குடிவரவுத்துறை அமைச்சர் பில்வூல்ஸ், ஆனால், தவறான நடத்தையால் விண்ணப்பதாரிகள் புள்ளிகளை இழக்கும் விசேட திட்டம் தொடர்பாக கருத்துக்கூற மறுத்துள்ளார்.

இப்புள்ளித் திட்டத்தின் படி நாட்டின் சட்டவிதிகளை மீறாதவர்களுக்கே குடியுரிமை எனும் கொள்கை சிறப்பானதே. ஆனால், குடியுரிமைக்காக விண்ணப்பதாரிகள் சட்டவிதிகளை மீறாதிருப்பது மட்டும் போதியதல்ல. நமது நாட்டிற்குப் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இதையே எதிர்பார்க்கின்றன. நாமும் அதையே செய்கின்றோமென வூல்ஸ் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

பயிரிடக்கூடிய நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உச்ச பயனை பெறவேண்டும் – ஜனாதிபதி

mahi2222.jpgஉணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளக் கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்வது தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்வதாக அமையும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் தேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக கட்சி, அரசியல் மற்றும் பிரதேச பேதங்கள் பாராமல் ஒன்றுபட்டு பங்களிப்பு செய்ய வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பு என்றும் ஜனாதிபதி கூறினார். ‘ரன்பிம’ (தங்க பூமி) காணி உறுதி வழங்கும் நாலாம் கட்ட வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், மஹிந்த சிந்தனையின் கீழ் காணியற்றோருக்கு காணிக்கான உரிமை ‘ரன்பிம’ காணி உறுதி மூலம் பெற்றுக் கொடுக்கப்படுவதையிட்டு நான் பெரிதும் சந்தோஷப்படுகின்றேன். இருப்பினும் கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டின் மூன்றிலிரண்டு பங்கு நிலத்தின் உரிமை அரசின் கீழிலிருக்கவில்லை. இக்காலப் பகுதியில் உடன்படிக்கை மூலம் அப்பிரதேசங்கள் பயங் கரவாதிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தன. இது பெரும் கவலையான நிலையாகும்.

இவ்வாறான நிலையில் எமது பாதுகாப்பு படையினர் தான் பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் முற்றாக ஒழித்துக் கட்டி இப்பிரதேசங்களுக்கான உரிமையை மீண்டும் அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் நிறையவே அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார்கள்.

அவர்கள் ஒரு அங்குலம் நிலம் கூட இல்லாத நிலையில்தான் இந்த மகத்தான பணியைச் செய்தார்கள். நாட்டை ஐக்கியப்படுத்தினார்கள்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டை பாதுகாப்பதும், அபிவிருத்தி செய்வதும் இந்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இதற்காக சகலரும் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதும் அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதும் தனியே ஒரு கட்சியின் பொறுப்பல்ல. இதற்குச் சகலரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இந்நாட்டில் பயிரிடப்படக்கூடிய நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நாட்டில் நிலம் அதிகரிக்காது. ஆனால் சனத்தொகையே பெருகும். அதன் காரணத்தினால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும். நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் உச்ச பயனைப் பெறும் நடவடிக்கையில் ஜப்பானியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை நான் அங்கு சென்றிருந்த சமயம் அவதானித்தேன்.

ஆகவே தேசியக் கொடியின் கீழ் சகலரும் ஒன்றுபட்டு வாழவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார்.

வடக்கிற்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை தடுக்க ஐ.தே.க சதி – மைத்திரிபால சிறிசேன

sirisena.jpgவடக்கிற்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை தடுக்க ஐ. தே. க சதி செய்து வருகிறது. ஆனால், வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக வட பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊவா மற்றும் யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வடக்கு அபிவிருத்திக்கு அரசாங்கம் தெரிவிப்பதுபோல பெருமளவு நிதி தேவையில்லை எனவும் அரசாங்கம் சகல தரப்பினரையும் ஏமாற்ற முயல்வதாகவும் ஐ. தே. க. குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போதும் ஐ. தே. க. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு சதிகளை முன்னெடுத்தது.

அதேபோன்றே தற்பொழுது அரசாங்கம் வட பகுதியை அபிவிருத்தி செய்வ தற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கவும் வெளி நாட்டு உதவிகள் கிடைப்பதை நிறுத்தவும் ஐ. தே. க. சதி செய்து வருகிறது. ஆனால் அரசாங்கம் வடபகுதியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை கைவிடாது. வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக அபிவிருத்திப் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் ஊவா, மற்றும் யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைத தேர்தல்களில் ஐ. ம. சு. முன்னணியை வெற்றி பெற வைக்க மக்கள் தீர்மானித்துவிட்டனர். பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை விடுதலை செய்யவும் ஊவாமாகாணத்தில் விவசாயத்துறையை முன்னேற்றவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். இதனால், ஊவா மாகாண மக்கள் அரசாங்கத்துடனே உள்ளனர். ஐ. தே. க. மீண்டும் படுதோல்வி அடைவது உறுதியாகவிட்டது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் கூறியதாவது:-

நான் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தேன். அங்கு மக்கள் சுதந்திரமாக அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 30 வருடங்களாக இழ ந்த அபிவிருத்திப் பணிகள் அங்கு மீண்டும் முன்னெடுக் கப்படுகின்றன. தேர்தல் பணிகள் எதுவித வன்முறைகளும் இன்றி முன்னெடுக்கப்படுகிறது. ஊவா மாகாணத்திலே ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ் தேசிய கூட்ட மைப்புத் தலைவர்களுக்கு யாழ்ப்பாணம் சென்று பிரசாரப் பணிகளில் ஈடுபடும் சூழல் காணப்படுகிறது.

மோதல் காரணமாக அதிகமான மக்கள் வேறு இடங் களுக்குச் சென்றுள்ளனர். ஒரு இலட்சம் வாக்காளர்களில் 50 வீதமானவர்களே அங்குள்ளனர்.

யாழ். மக்களின் விவசாய உற்பத்திகளை கொழும்புக்கு அனுப்பும் சூழல் காணப்படுகிறது. மீன்பிடித்தடை நீக்கப் பட்டுள்ளதால் மீனவர் ஒருவர் ஒரு நாளில் 17 ஆயிரம் ரூபாவரை உழைக்கக் கூடியதாக உள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர் ஜயசிங்க கைது

அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர் ஜயசிங்க நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பகுதியிலுள்ள இவரது வீட்டிற்கு திங்கட்கிழமை இரவு சென்ற மிரிஹான விஷேட பொலிஸ் குழுவொன்றே இவரைக் கைதுசெய்துள்ளது.

கொலைகள் மற்றும் கொள்ளைகள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே மேலதிக விசாரணைகளுக்காக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நேற்றுக் காலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது வீட்டிற்கு முன்னால் வாகனங்களில் வந்திறங்கியவர்கள் வீட்டுக்குள் நுழைந்து இவரை பலவந்தமாக இழுத்துச் சென்றதால் இவர் கடத்தப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு7 ஆம் திகதி விடுமுறை

school-children.jpgநாட்டி லுள்ள அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் நாளை மறுதினம் 7 ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

2009-08-07 ஆம் திகதி முதல் 2009-09-06 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை தினமாகும் என கல்வி அமைச்சு அறிவிக்கிறது. மூன்றாந் தவணைக்காக 2009-09-07 ஆம் திகதி சகல தமிழ், சிங்கள பாடசாலைகளும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

பாடசாலை விடுமுறை தினங்களுக்குள் ஆகஸ்ட் 11 ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகின்றன. ஆகஸ்ட் 23 ஆம் திகதி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

திருமலை மேல் நீதிமன்றால் இரு தினங்களில் மூவருக்கு மரண தண்டனை தீர்ப்பு

gallow.jpgதிரு கோணமலை மேல் நீதிமன்றம் நேற்றும், நேற்று முன்தினமும் மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பரபரப்புமிக்க இத் தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கினார்.

நேற்று முன்தினம் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 25 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை ஐந்து குற்றச் சாட்டுகளுக்கு தலா ஐந்து வருட வீதம் வழங்கப்பட்டதாகும். முதலாவது குற்றச்சாட்டுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது படுகொலை குற்றச் சாட்டாகும். நேற்று இருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் கந்தளாய் யூ. ஜி. சி. சந்திரசேன என்பவராகும். ஆறு குற்றச் சாட்டுக்களின் பேரில் குற்றவாளியாக காணப்பட்டதால் இம்மரண தண்டனையும் 25 வருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி கந்தளாயில் வைத்து மயூரி சமரஜீவா என்பவருக்கு குண்டெறிந்து மரணம் விளைவித்ததாகவும் மேலும் நால்வருக்கு காயம் விளைவித்ததாகவும் மற்றும் வீடொன்றுக்கு தீமூட்டி ரூபா 99,290 சேதம் விளைவித்ததாகவும் இவர் மீது சட்டமா அதிபரால் 6 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டிருந்தன.

கந்தளாய் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது சமுகமளித்த எதிரி மேல் நீதிமன்ற விசாரணையின் போது சமுகமளிக்காததால் எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதவான் எம். இளஞ்செழியன் எதிரிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு மரண தண்டனையும், ஏனைய ஐந்து குற்றச் சாட்டுகளுக்கும் தலா ஐந்து வருட வீதம் 25 வருட கடூழிய சிறை தண்டனையும் இந்த ஐந்து குற்றச் சாட்டுகளுக்கும் தலா 5,000 ரூபா வீதம் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரச சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி செல்வி சுகந்தி கந்தசாமி ஆஜராகியிருந்தார். மற்றும் எதிரிக்கும் பிணையாளிக்கும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதேவேளை நேற்று கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். ஏ. கருணாரட்ன சுபசிங்க, யூ. கே. நிமால் ஆகிய இருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனையும் ஒரு வருட கடூழிய சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

2000 ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆந் திகதி கந்தளாய் அக்கோபுர எனும் இடத்தில் விஜயகோன் முதியன்சலாகே ஜயத்திலக பண்டார என்பவரை கொலை செய்ததாகவும், அதே இடத்தைச் சேர்ந்த விஜயகோன் முதியன்சலாகே பிரசன்ன குமார என்பவரைத் தாக்கி கடும் காயம் விளைவித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டி சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இரு எதிரிகளுக்கும் முதலாவது கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டான கடும்காயம் விளைவித்ததற்காக ஒரு வருடக் கடூழிய சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. எதிரிகள் சார்பில் சட்டத்தரணி ஏ. டபிள்யூ. சத்தாரும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி செல்வி சுகந்தி கந்தசாமியும் ஆஜராகியிருந்தனர்.

உடப்பு திரெளபதை அம்மன் வருடாந்த ‘தீ’ மிதிப்பு இன்று

உடப்பூர், அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம் இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. கடந்த ஜுலை 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் 18 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புத்தளம் மாவட்டத்திலமைந்துள்ள உடப்பு தமிழ்க் கிராமத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் அருள்மிகு திரெளபதிஅம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

தீ மிதிப்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆலயத்தின் பஸ் வண்டிகள் உட்பட போக்குவரத்து சபை, தனியார் விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன. நாளை தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல் நிகழ்வும், துவஜாவரோஹனமும் நடைபெறும். நாளை மறுதினம் காலை பால்குட பவனியுடன் மஹோற்சவம் நிறைவுபெறும்.

தாண்டிக்குளம் சாவடி அகற்றப்பட்டது

police-traffic-stop00.jpgவவுனியா வடக்கு ஓமந்தை வரையிலான பகுதிகளிலுள்ள சுமார் 35 கிராமங்களிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் தாண்டிக்குளம் சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 20 கிராம சேவகப் பிரிவுகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ள பகுதிகளிலுள்ள தமது வீடுவாசல்களை சென்று பார்வையிடவும், அதிகாரிகள், இலகுவாக இப்பகுதிக்கு சென்றுவரவும் ஏதுவாக இச்சோதனைச் சாவடி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். யாழ். நோக்கி செல்பவர்கள் இனிமேல் ஓமந்தை சாவடியை மட்டுமே கடந்து செல்ல வேண்டும். இதுவரை காலமும் தாண்டிக்குளம் சோதனை சாவடியை கடந்தும் செல்ல வேண்டியிலிருந்தது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கு தாண்டிக்குளம் சோதனைச் சாவடி நீக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் பசில் ராஜபக்ஷ எம்.பி தலைமையில் வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது தீர்மானிக்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

480 கிலோ கிளேமோர்கள், ஆயுதங்கள் பெருமளவு மீட்பு

07-srilanka-army.jpg480 கிலோ எடையுள்ள அதி சக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொன்றும் 10 கிலோ எடையுள்ள அதி சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-10, 5 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-76, சிறிய ரக கிளேமோர் குண்டுகள்- 20, ரி-56 துப்பாக்கி ரவைகள்-300, படகுகளுக்கு பொருத்தப்படும் வெளி இணைப்பு இயந்திரம்- 01 மற்றும் பல்வேறு ஆயுதங்களையும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.