திருமலை மேல் நீதிமன்றால் இரு தினங்களில் மூவருக்கு மரண தண்டனை தீர்ப்பு

gallow.jpgதிரு கோணமலை மேல் நீதிமன்றம் நேற்றும், நேற்று முன்தினமும் மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பரபரப்புமிக்க இத் தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கினார்.

நேற்று முன்தினம் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 25 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை ஐந்து குற்றச் சாட்டுகளுக்கு தலா ஐந்து வருட வீதம் வழங்கப்பட்டதாகும். முதலாவது குற்றச்சாட்டுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது படுகொலை குற்றச் சாட்டாகும். நேற்று இருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் கந்தளாய் யூ. ஜி. சி. சந்திரசேன என்பவராகும். ஆறு குற்றச் சாட்டுக்களின் பேரில் குற்றவாளியாக காணப்பட்டதால் இம்மரண தண்டனையும் 25 வருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி கந்தளாயில் வைத்து மயூரி சமரஜீவா என்பவருக்கு குண்டெறிந்து மரணம் விளைவித்ததாகவும் மேலும் நால்வருக்கு காயம் விளைவித்ததாகவும் மற்றும் வீடொன்றுக்கு தீமூட்டி ரூபா 99,290 சேதம் விளைவித்ததாகவும் இவர் மீது சட்டமா அதிபரால் 6 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டிருந்தன.

கந்தளாய் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது சமுகமளித்த எதிரி மேல் நீதிமன்ற விசாரணையின் போது சமுகமளிக்காததால் எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதவான் எம். இளஞ்செழியன் எதிரிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு மரண தண்டனையும், ஏனைய ஐந்து குற்றச் சாட்டுகளுக்கும் தலா ஐந்து வருட வீதம் 25 வருட கடூழிய சிறை தண்டனையும் இந்த ஐந்து குற்றச் சாட்டுகளுக்கும் தலா 5,000 ரூபா வீதம் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரச சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி செல்வி சுகந்தி கந்தசாமி ஆஜராகியிருந்தார். மற்றும் எதிரிக்கும் பிணையாளிக்கும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதேவேளை நேற்று கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். ஏ. கருணாரட்ன சுபசிங்க, யூ. கே. நிமால் ஆகிய இருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனையும் ஒரு வருட கடூழிய சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

2000 ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆந் திகதி கந்தளாய் அக்கோபுர எனும் இடத்தில் விஜயகோன் முதியன்சலாகே ஜயத்திலக பண்டார என்பவரை கொலை செய்ததாகவும், அதே இடத்தைச் சேர்ந்த விஜயகோன் முதியன்சலாகே பிரசன்ன குமார என்பவரைத் தாக்கி கடும் காயம் விளைவித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டி சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இரு எதிரிகளுக்கும் முதலாவது கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டான கடும்காயம் விளைவித்ததற்காக ஒரு வருடக் கடூழிய சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. எதிரிகள் சார்பில் சட்டத்தரணி ஏ. டபிள்யூ. சத்தாரும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி செல்வி சுகந்தி கந்தசாமியும் ஆஜராகியிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *