பயிரிடக்கூடிய நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உச்ச பயனை பெறவேண்டும் – ஜனாதிபதி

mahi2222.jpgஉணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளக் கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்வது தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்வதாக அமையும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் தேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக கட்சி, அரசியல் மற்றும் பிரதேச பேதங்கள் பாராமல் ஒன்றுபட்டு பங்களிப்பு செய்ய வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பு என்றும் ஜனாதிபதி கூறினார். ‘ரன்பிம’ (தங்க பூமி) காணி உறுதி வழங்கும் நாலாம் கட்ட வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், மஹிந்த சிந்தனையின் கீழ் காணியற்றோருக்கு காணிக்கான உரிமை ‘ரன்பிம’ காணி உறுதி மூலம் பெற்றுக் கொடுக்கப்படுவதையிட்டு நான் பெரிதும் சந்தோஷப்படுகின்றேன். இருப்பினும் கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டின் மூன்றிலிரண்டு பங்கு நிலத்தின் உரிமை அரசின் கீழிலிருக்கவில்லை. இக்காலப் பகுதியில் உடன்படிக்கை மூலம் அப்பிரதேசங்கள் பயங் கரவாதிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தன. இது பெரும் கவலையான நிலையாகும்.

இவ்வாறான நிலையில் எமது பாதுகாப்பு படையினர் தான் பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் முற்றாக ஒழித்துக் கட்டி இப்பிரதேசங்களுக்கான உரிமையை மீண்டும் அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் நிறையவே அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார்கள்.

அவர்கள் ஒரு அங்குலம் நிலம் கூட இல்லாத நிலையில்தான் இந்த மகத்தான பணியைச் செய்தார்கள். நாட்டை ஐக்கியப்படுத்தினார்கள்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டை பாதுகாப்பதும், அபிவிருத்தி செய்வதும் இந்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இதற்காக சகலரும் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதும் அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதும் தனியே ஒரு கட்சியின் பொறுப்பல்ல. இதற்குச் சகலரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இந்நாட்டில் பயிரிடப்படக்கூடிய நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நாட்டில் நிலம் அதிகரிக்காது. ஆனால் சனத்தொகையே பெருகும். அதன் காரணத்தினால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும். நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் உச்ச பயனைப் பெறும் நடவடிக்கையில் ஜப்பானியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை நான் அங்கு சென்றிருந்த சமயம் அவதானித்தேன்.

ஆகவே தேசியக் கொடியின் கீழ் சகலரும் ஒன்றுபட்டு வாழவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    ஜயா இந்த பயிர்களில் காட்டும் தரிசனம் அந்த சிறையில் இருக்கும் மக்கள் மீது காட்ட கூடாதா? ஏன் இந்த ……..

    Reply