வவுனியா வடக்கு ஓமந்தை வரையிலான பகுதிகளிலுள்ள சுமார் 35 கிராமங்களிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் தாண்டிக்குளம் சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 20 கிராம சேவகப் பிரிவுகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ள பகுதிகளிலுள்ள தமது வீடுவாசல்களை சென்று பார்வையிடவும், அதிகாரிகள், இலகுவாக இப்பகுதிக்கு சென்றுவரவும் ஏதுவாக இச்சோதனைச் சாவடி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். யாழ். நோக்கி செல்பவர்கள் இனிமேல் ஓமந்தை சாவடியை மட்டுமே கடந்து செல்ல வேண்டும். இதுவரை காலமும் தாண்டிக்குளம் சோதனை சாவடியை கடந்தும் செல்ல வேண்டியிலிருந்தது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கு தாண்டிக்குளம் சோதனைச் சாவடி நீக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் பசில் ராஜபக்ஷ எம்.பி தலைமையில் வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது தீர்மானிக்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.