August

August

தரவரிசையில் சானியா முன்னேற்றம்

sania-mirza.jpgலெக் சின்டன் டென்னிஸ் பட்டம், வான்கூவர் டென்னிஸ் தொடரில் இறுதி வரை வந்தது ஆகியவற்றால் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 74-வது இடம் பிடித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் உலக தரவரிசைகளில் சானியா மிர்சா 49-வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆடவர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 140-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

லெக் மேசன் டென்னிஸ் தொடரில் உயர் தரவரிசையில் உள்ள மாரின் சிலிச்சை வென்றதன் மூலம் சோம்தேவ் தேவ்வர்மன் இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.

கம்பஹா ஆயுர்வேத நிறுவனத்துக்கு நூலகக் கட்டிடம்

wiswa_warnapala_00.jpgகம்ப ஹாவில் உள்ள விக்கிரம ஆரச்சி ஆயுர்வேத நிறுவனத்துக்கு நூலகக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இம்மூன்று மாடிக் கட்டடத்தை அமைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால சமர்பித்திருந்தார். இரண்டு வருடங்களில் 85 மில்லியன் ரூபா செலவில் 990 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் மூலம் இதனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேர்க்’ நிறுவனம் ரத்து செய்யப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

‘பேர்க்’ எனப்படும் பொது நிறுவன மறுசீராக்கல் ஆணைக்குழு ரத்துச் செய்யப் படவுள்ளது. இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆணைக்குழு ரத்துச் செய்யப்பட்டவுடன் இந்நிறுவனத்தின் சொத்துக்களும் பொறுப்புக்களும் நிதியமைச்சின் பொறுப்பில் இயங்கும் பொதுநிறுவன திணைக்களத்துக்கு மாற்றப்படும்.

பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டவுடன் இடம்பெறும் விவகாரங்களை கையாளவென பேர்க் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதென அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், மஹிந்த சிந்தனை கோட்பாட்டின் கீழ் அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டா. எனவே ‘பேர்க்’ அமைப்பின் அவ சியம் அற்றுப்போய்விட்டதாக அவர் தெரிவித்தார்.

எனது அமைச்சு சம்பந்தப்பட்ட விடயத்தில் மற்றொருவர் தலையிடுவது விரும்பத் தக்கதல்ல – தகவல் ஊடகத்துறை அமைச்சர் கவலை

anura_priyadarshana_yapa00.jpgதம்முடன் கலந்தாலோசிக்காமல் தொலைக்காட்சி தொடர் மற்றும் விளம்பரங்கள் தொடர்பாக வர்த்தமாணி மூலம் மற்றுமொரு அமைச்சர் கட்டுப்பாடு விதிப்பது கவலைக்குரிய விடயம் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் கேள்வி நேரத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

திரைப்படம்,  தொலைக்காட்சி நாடகம் மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிப்பதோ கட்டுப்பாடு விதிப்பதோ தமது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாக இருக்கின்ற போதிலும் மற்றுமொரு அமைச்சர்  அவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதை தம்மால் வரவேற்க முடியாது. தமக்கு சம்பந்தமில்லாத அமைச்சின் விடயம் ஒன்றை சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடிய பின்னரே மேற்கொள்ள வேண்டும் என்ற ஞானம் பிறந்த பின்னராவது அவர் என்னுடன் கதைப்பார் என நம்புகிறேன்.

அவரின் இந்த செயற்பாட்டை என்னால் அங்கீகரிக்க முடியாது என்றும் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை அரசு நவம்பருக்கு பின்பே வெளியிடும்

அரசியல் தீர்வு யோசனை அடங்கலான அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் எதிர்வு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு அமையவே அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலும் அந்தத் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது தேசிய மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் அரசாங்கத்தின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படுமென்றும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனையும் அதில் உள்ளடக்கப்படுமென்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும், சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நவம்பர் மாதம் 15 ஆம் திகதியே நடைபெறுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதற்கமையவே, அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சி நிரலும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியே வெளியிடப்படவுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து படகு இயந்திரங்கள ஆயூதங்கள் மீட்பு – இராணுவப் பேச்சாளர் தகவல

udaya_nanayakkara_brigediars.jpgநான்கு படகு இயந்திரங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு,  அம்பகாமம் பிரதேசங்களில் இராணுவத்தின் விஷேட அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே மேற்படி ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் புதுக்குடியிருப்பின் ஐந்து பிரதேசங்களில்; தேடுதல்களை மேற்கொண்ட போது,  ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் 6 பெட்டிகள்,  தேசிய அடையாள அட்டைகள்- 29, ரெலோ அடையாள அட்டை- 01, புலிகளின் அடையாள அட்டை – 02,  பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள்-1.700,  கையடக்க தொலைபேசிகள்- 07,  இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள்,  கைக்குண்டுகள்- 04 மற்றும் படகுகளுக்கும் பொருத்தப்படும் வெளிஇணைப்பு இயந்திரங்கள்- 04 என்பவற்றை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை அம்பகாமம் பிரதேசத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள்- 1.042, கைக்குண்டுகள்- 10 மற்றும் பெருந்தொகையான மோட்டார் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐந்து வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

ஐந்து வெவ்வேறு ரக வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த சம்பவம் நேற்று கொஹுவலையில் இடம்பெற்றுள்ளது.

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுனு வீதியில் வைத்தே நேற்று மாலை 5.35 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்களும் இரண்டு லொறிகளும் வான் ஒன்றும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டுள்ளன. இதில் 05 வாகனங்களும் சேதமாகியுள்ளதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஐவரும் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட சிறுவர் வைத்தியசாலை – வடக்கின் வசந்தம் திட்டம் மூலம் நடவடிக்கை

north-governor.jpg
யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட கொழும்பிலுள்ள லேடி றிஜ்வே வைத்தியசாலைக்கு நிகரான சிறுவர் வைத்தியசாலையொன்றை அமைப்பது தொடர்பாக வடக்கின் வசந்தம் இடண்டாவது அபிவிருத்திக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரஸ்ரீ தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கின் வசந்தம் இரண்டாவது அபிவிருத்திக் கூட்டத்தில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

80 மில்லியன் ரூபா செலவில் 100 படுக்கை அறைகளுடன் கூடிய இந்த சிறுவர் வைத்தியசாலையை எங்கு அமைக்கலாம் என்பது குறித்தும் ஆளுநர் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திகளுக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொண்ட ஆளுநர், எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்காக முன் மொழியப்பட்டிருக்கும் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி பற்றியும் பேச்சு நடத்தினார்.

இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ், பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமி,  ஆளுநரின் செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன் உள்ளிட்ட பல அமைச்சின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்தின் சர்ச்சையான விடயங்களை நீக்க உடன்பாடு – பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணக்கம்

அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல் உட்பட உத்தேச தேர்தல் திருத்தச் சட்ட மூலத்துக்கு முன்மொழியப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளை முற்றாக நீக்குவதற்கு தேர்தல் சட்டதிருத்தம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு இணக்கப்பாடு கண்டுள்ளது.

நேற்று புதன்கிழமை பாராளுமன்றக் கட்டிடத்தில் தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூடியபோது அரசியல் கட்சிகளால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளையடுத்து சர்ச்சைக்குரிய அம்சங்களை நீக்குவதற்கும் திருத்தச் சட்ட மூலத்தை புதிதாக தயாரித்து முன்வைப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் டியூகுணசேகர, திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் பலர் இச் சட்ட மூலத்தால் ஏற்படக் கூடிய பாதகங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்படி திருத்தங்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்காமல் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதானது சம்பிரதாயத்தை மீறி திருத்தங்களை திணிப்பதாகவே காணப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார். இதே அடிப்படையில் அமைச்சர்கள் டியூகுணசேகர, திஸ்ஸ விதாரணவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனைக் கருத்திலெடுத்த தெரிவுக்குழு சர்ச்சைக்குரிய பகுதிகளை முற்றாக நீக்கிவிடுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. அத்துடன், திருத்தங்கள் மீள வரையப்பட்டு புதிய சட்டமூலமாக தயாரித்து தெரிவுக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற யோசனையையும் தெரிவுக்குழு இணக்கம் கண்டுள்ளது.

இன, சமய ரீதியிலான பெயர்களைக் கொண்டு புதிதாக கட்சிகளை அமைப்பதற்கே சட்டதிருத்தம் வரையப்பட்டதாகவும் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு பாதகம் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியபோது அதனை கடுமையாக எதிர்த்த ரவூப் ஹக்கீம், டி.யூகுணசேகர, திஸ்ஸ விதாரண போன்றோர் அதன் பின்விளைவுகள் பாரதூரமானவையாக அமையலாமென விளக்கியதையடுத்து சர்ச்சைக்குரிய சகல பகுதிகளையும் நீக்கிவிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, சட்டமா அதிபர் மொஹான் டி.சில்வா ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ்பிரேமச்சந்திரன், மலையக மக்கள் முன்னணி எம்.பி. பி.இராதாகிருஷ்ணன், அமைச்சர் பி.தயாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை மனித உரிமைக்கு முரணாகவும் ஜனநாயக ரீதியான கொள்கை அடிப்படையில் அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுவதை தடைசெய்யும் முயற்சி இதுவெனவும் இதே அடிப்படையில் பல்வேறு திருத்தங்களில் பல்வேறு பகுதிகளும் காணப்படுவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிகளின் உள்விவகாரங்களில் அளவுக்கு மீறி தலையிடுவதாக சட்டதிருத்தம் அமைந்துவிடக் கூடாது. அத்துடன் இன,மத, ரீதியான பெயர்களில் உருவாகும் கட்சிகளை ஏற்பதும் நிராகரிப்பதும் மக்கள் சார்ந்த விடயமாவதால் அதில் அமைப்புகளோ, தனி நபர்களோ தலையிடக் கூடாது. தொடர்ந்து செயற்படாத கட்சிகள் விடயத்தில் அவசரப்பட்டு முடிவுகள் எட்டப்படவும் கூடாது. விரிவாக ஆராயப்படுவதோடு அக் கட்சிகளுடன் பேசப்படவும் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம் உதாரணத்துக்கு 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேரடியாக தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படிப் பார்க்கும்போது முதலில் தடை செய்யப்படவேண்டிய கட்சி சுதந்திரக் கட்சியாகும் எனவும் எடுத்துக் காட்டினார்.

அத்துடன் இதனால் பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகளும் பாதிக்கப்படலாம். கட்சிகளில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைச்சாத்தியம் குறித்தும் ஆராயப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவற்றையெல்லாம் கவனத்திலெடுத்தே சர்ச்சைக்குரிய சகல பகுதிகளையும் நீக்குவதற்கு தெரிவுக்குழு உடன்பாடு கண்டது.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்போது தெரிவுக்குழு எட்டியுள்ள உடன்பாடுகளை சட்டமா அதிபர் நீதிமன்றில் முன்வைக்க முடியுமென தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

புதிய திருத்தச் சட்ட மூல அறிக்கையை அடுத்த தெரிவுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அதனை தெரிவுக்குழு அங்கீகரித்ததன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான சொகுசு பஸ் சேவை

bus_luxury.jpgயாழ்ப் பாணத்தில் இருந்து கொழும்புக்கான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்கு 1950 ரூபா இந்தப் பயணத்திற்கு கட்டணமாக அறவிடப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வரும் இந்த சொகுசு பஸ் வண்டிகளில் வவுனியா ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் அலுவலகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பயணிகளிடம் யாழ்ப்பாணத்திற்கு கட்டணமாக 950 ரூபா அறவிடப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்கு கப்பல் அல்லது விமானம் மூலமாக அனுமதி பெற்று பிரயாணம் செய்தவர்களே யாழ் – வவுனியா பஸ் சேவைகளின் மூலம் யாழ்ப்பாணத்திற்குப் பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நாட்டின் தென்பகுதிக்குப் பிரயாணம் செய்ததற்கான கப்பல் அல்லது விமான டிக்கட்டின் போட்டோ பிரதியும் பயணியின் அடையாள அட்டை பிரதியும் இந்தப் பிரயாணத்திற்கு கோரப்படுகின்றது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது