தம்முடன் கலந்தாலோசிக்காமல் தொலைக்காட்சி தொடர் மற்றும் விளம்பரங்கள் தொடர்பாக வர்த்தமாணி மூலம் மற்றுமொரு அமைச்சர் கட்டுப்பாடு விதிப்பது கவலைக்குரிய விடயம் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் கேள்வி நேரத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிப்பதோ கட்டுப்பாடு விதிப்பதோ தமது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாக இருக்கின்ற போதிலும் மற்றுமொரு அமைச்சர் அவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதை தம்மால் வரவேற்க முடியாது. தமக்கு சம்பந்தமில்லாத அமைச்சின் விடயம் ஒன்றை சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடிய பின்னரே மேற்கொள்ள வேண்டும் என்ற ஞானம் பிறந்த பின்னராவது அவர் என்னுடன் கதைப்பார் என நம்புகிறேன்.
அவரின் இந்த செயற்பாட்டை என்னால் அங்கீகரிக்க முடியாது என்றும் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.