அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல் உட்பட உத்தேச தேர்தல் திருத்தச் சட்ட மூலத்துக்கு முன்மொழியப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளை முற்றாக நீக்குவதற்கு தேர்தல் சட்டதிருத்தம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு இணக்கப்பாடு கண்டுள்ளது.
நேற்று புதன்கிழமை பாராளுமன்றக் கட்டிடத்தில் தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூடியபோது அரசியல் கட்சிகளால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளையடுத்து சர்ச்சைக்குரிய அம்சங்களை நீக்குவதற்கும் திருத்தச் சட்ட மூலத்தை புதிதாக தயாரித்து முன்வைப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
நேற்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் டியூகுணசேகர, திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் பலர் இச் சட்ட மூலத்தால் ஏற்படக் கூடிய பாதகங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேற்படி திருத்தங்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்காமல் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதானது சம்பிரதாயத்தை மீறி திருத்தங்களை திணிப்பதாகவே காணப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார். இதே அடிப்படையில் அமைச்சர்கள் டியூகுணசேகர, திஸ்ஸ விதாரணவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனைக் கருத்திலெடுத்த தெரிவுக்குழு சர்ச்சைக்குரிய பகுதிகளை முற்றாக நீக்கிவிடுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. அத்துடன், திருத்தங்கள் மீள வரையப்பட்டு புதிய சட்டமூலமாக தயாரித்து தெரிவுக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற யோசனையையும் தெரிவுக்குழு இணக்கம் கண்டுள்ளது.
இன, சமய ரீதியிலான பெயர்களைக் கொண்டு புதிதாக கட்சிகளை அமைப்பதற்கே சட்டதிருத்தம் வரையப்பட்டதாகவும் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு பாதகம் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியபோது அதனை கடுமையாக எதிர்த்த ரவூப் ஹக்கீம், டி.யூகுணசேகர, திஸ்ஸ விதாரண போன்றோர் அதன் பின்விளைவுகள் பாரதூரமானவையாக அமையலாமென விளக்கியதையடுத்து சர்ச்சைக்குரிய சகல பகுதிகளையும் நீக்கிவிடுவதென தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய கூட்டத்தில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, சட்டமா அதிபர் மொஹான் டி.சில்வா ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ்பிரேமச்சந்திரன், மலையக மக்கள் முன்னணி எம்.பி. பி.இராதாகிருஷ்ணன், அமைச்சர் பி.தயாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை மனித உரிமைக்கு முரணாகவும் ஜனநாயக ரீதியான கொள்கை அடிப்படையில் அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுவதை தடைசெய்யும் முயற்சி இதுவெனவும் இதே அடிப்படையில் பல்வேறு திருத்தங்களில் பல்வேறு பகுதிகளும் காணப்படுவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிகளின் உள்விவகாரங்களில் அளவுக்கு மீறி தலையிடுவதாக சட்டதிருத்தம் அமைந்துவிடக் கூடாது. அத்துடன் இன,மத, ரீதியான பெயர்களில் உருவாகும் கட்சிகளை ஏற்பதும் நிராகரிப்பதும் மக்கள் சார்ந்த விடயமாவதால் அதில் அமைப்புகளோ, தனி நபர்களோ தலையிடக் கூடாது. தொடர்ந்து செயற்படாத கட்சிகள் விடயத்தில் அவசரப்பட்டு முடிவுகள் எட்டப்படவும் கூடாது. விரிவாக ஆராயப்படுவதோடு அக் கட்சிகளுடன் பேசப்படவும் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம் உதாரணத்துக்கு 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேரடியாக தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படிப் பார்க்கும்போது முதலில் தடை செய்யப்படவேண்டிய கட்சி சுதந்திரக் கட்சியாகும் எனவும் எடுத்துக் காட்டினார்.
அத்துடன் இதனால் பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகளும் பாதிக்கப்படலாம். கட்சிகளில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைச்சாத்தியம் குறித்தும் ஆராயப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவற்றையெல்லாம் கவனத்திலெடுத்தே சர்ச்சைக்குரிய சகல பகுதிகளையும் நீக்குவதற்கு தெரிவுக்குழு உடன்பாடு கண்டது.
இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்போது தெரிவுக்குழு எட்டியுள்ள உடன்பாடுகளை சட்டமா அதிபர் நீதிமன்றில் முன்வைக்க முடியுமென தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
புதிய திருத்தச் சட்ட மூல அறிக்கையை அடுத்த தெரிவுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அதனை தெரிவுக்குழு அங்கீகரித்ததன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது.