July

July

புலிகளுடன் தொடர்புபடுத்தி என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. – மங்கள சமரவீர

mangala_saramaweera.jpgஎதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணிக்கு பயந்தே அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கு எதிராக கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். எந்த பிரச்சினை வந்தாலும் அடிபணியாது முகம்கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு கூட்டணியுடன் இணைந்து போராடுவேனெனவும் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இது தொடர்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்; நான் புலிகளின் இலக்காக இருந்தவன். அவர்களுக்கு எடுத்துக் கூறியதுடன் அவர்கள் எமில் காந்தனை தெரியுமாவென கேட்டனர். ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடர்பில் இணைப்பாளராக நியமித்திருத்த வேளை அவரை சந்தித்திருந்தேன். வேண்டுகோளின் பேரில் அவரை தொடர்புபடுத்தியதாகவும் தெரிவித்தேன்.  இரு சந்திப்புக்கு பின்னர் அவரை சந்திக்கவில்லை. என்னுடனான சந்திப்பில் ஸ்ரீபதி சூரியாராச்சி, டிரான் அலஸ், பசில் ராஜபக்ஷவுடன் நானும் இருந்தேன் என்றேன். இந்த இரு சந்திப்புக்கு பின் நான் அவரை சந்திக்கவில்லை. அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.

அரசியல்வாதிகள் மீது தாக்குதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கு எதிராகக் கெடுபிடிகளை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.  சில தினங்களுக்கு முன் எனது கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரூபன் பேடினவின் வீட்டின் முன்னால் பத்திரிகை ஆசிரியர் லசந்த மீதான தாக்குதலில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளை ஒத்த குழுவினர் இருந்துள்ளனர்.

அதேபோல் எமது கட்சியின் செயலாளரான டிரான அலஸை புலனாய்வுப் பிரிவினர் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்து வாக்கு மூலங்களைப் பெற்ற நிலையில் என்னை அவர்கள் வியாழக்கிழமை அழைத்தனர். மக்கள் கவனத்தை திசைதிருப்பி ஆட்சியைத் தொடர்வதற்கே கெடுபிடிகள் எம்மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படையினர் இரத்தம், வியர்வை சிந்தி நாட்டை மீட்ட நிலையில் சமாதானத்தை ஏற்படுத்தாது சர்வாதிகார நடவடிக்கைக்கே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எவ்வாறான கெடுபிடிகள் வந்தாலும் அடிபணியாது நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் எதிர்கட்சிக் கூட்டணியுடன் இணைந்து போராடுவேன். இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, ஜனநாயக மக்கள் முன்னணி உபதலைவர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வணங்காமண் நிவாரணம் தொடர்ந்தும் சுங்கத்தில் – இந்திய தூதரகத்தின் தலையீட்டைகோரும் செஞ்சிலுவை

containers.jpgவவுனி யாவில் முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் (ஐ.ஆர்.சி.) அனுப்பி வைக்கப்பட்டுள்ள 27 கொள்கலன் நிவாரணப்பொருட்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் தலையீட்டை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் கோரியுள்ளது.

இந்த 27 கொள்கலன்களும் இலங்கை சுங்கப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படாமல் உள்ளது. இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்குக் கடிதம் அனுப்பியிருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இந்தியத் தூதரகத்துடன் தான் கதைத்ததாகவும் தாங்கள் கவனம் எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பும் பொருட்களுக்கான சகல வரிகளையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்காகச் சேகரித்து எம்.வி.கப்டன் அலிக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கொழும்பில் இறக்க அரசு அனுமதி வழங்க மறுத்ததையடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்று பல நாட்களின் பின் இந்திய அரசின் அனுமதியுடன் (தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் தலையீட்டால்) சென்னைத் துறைமுகத்தில் இறக்கப்பட்டது. அவற்றை பொறுப்பேற்ற இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கொலராடோ என்ற மற்றொரு கப்பலில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுப்பிவைத்திருந்தது. ஆனால், அப்பொருட்களை இறக்கி விநியோகிக்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கட்டண நிதி கோரியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் மூன்றாம் தரப்பு எவரிடமும் அவ்வாறு தாங்கள் கோரியிருக்கவில்லை என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருந்தது.

27 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட நிவாரணப்பொருட்கள் சுங்கப்பிரிவிலேயே வைக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக இந்திய தூதரகத்தினை தலையிடுமாறும் நேற்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.

உடத்தலவின்ன கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் விடுதலை!

supremecourtphoto.jpgகண்டி உடத்தலவின்ன என்ற இடத்தில்  10 முஸ்லிம் இளைஞர்கள்  சுட்டுக்கொல்லப்பட்ட கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐந்து இராணுவ வீரர்கள்  இன்று உச்ச நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு கொழும்பு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் ஐவருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேல் முறையீட்டு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் செய்த முறையீட்டை அடுத்து,  பிரதம நீதிபதி தலைமையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த ஐவரையும்  நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது. இவ்வழக்கின் குற்றவாளிகள் மீதான குற்றங்களை நிருபிப்பதற்கான சாட்சியங்கள் சந்தேசங்களுக்கு அப்பால் நிருபிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவர்கள் முன்னாள் பாதுகப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின்  மெய்ப்  பாதுகாவலர்களாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். அலுவலக பஸ் சேவை இன்று ஆரம்பம்

bussss.jpgயாழ்ப் பாணத்தில் அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கான விசேட பஸ் சேவையொன்று இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பொது மக்கள் மற்றும் அரச தனியார் ஊழியர்களின் நன்மை கருதி பருத்தித்துறையிலிருந்து யாழ் நகர் வரை இச்சேவை நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து சபை யாழ் முகாமையாளர் கே. கணேஷபிள்ளை தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மேலும் பல பஸ் வண்டிகள் யாழ். டிப்போவுக்கு வழங்கப்படும் என்றும் பழுதடைந்த பஸ்வண்டிகள் உடனடியாகத் திருத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். யாழ். அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கான மற்றொரு சேவை விரைவில் கொடிகாமமத்துக்கும் யாழ்பாணத்துக்கும் இடையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேல்கொத்மலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!

he_kotmale-2009-07-24.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை மேல்கொத்மலை நீர்மின்சார உற்பத்தித் திட்ட அமைப்புப் பணிகளை நேரில் பார்வையிடுதவற்கான திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அமைப்புப் பணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்துக்குள் அல்லது அதற்கு முன்னர் இத்திட்டத்தை நிறைவு செய்ய துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேல்கொத்மலை நீர் மின்சார உற்பத்தித் திட்டம் 2006 ஆம் ஆண்டு ஜப்பான் அரசின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்டது. 950 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் இத்திட்டத்தை 2011 ஆம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர்களான ஜோன் செனவிரத்தன, கெஹெலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே,  மற்றும் மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ ஆகியோரும் அரச உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தூதரகத்தை மூடிவிட சுவீடன் முடிவு

swedish-flag.jpgஇலங் கையில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு சுவீடன் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது: “வெளியுறவு அமைச்சகத்தின் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்குள் இலங்கையில் உள்ள தூதரகம் மூடப்பட்டுவிடும். இலங்கையில் வளர்ச்சிப் பணிகளுக்கு சுவீடன் செய்து வரும் உதவியை நிறுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு மேற்படி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தோருக்கு ரஷ்யா 5 இலட்சம் டொலர் நிதி உதவி

வடக்கிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக ரஷ்யா ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கான ரஷ்யாவின் வருடாந்த தன்னார்வ பங்களிப்பின் ஒரு பகுதியாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஜெனீவாவில் உள்ள ரஷ்யாவின் தூதுவரும் ஐ.நா. வுக்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கெலரி லொஸ்சினீ மூலம் ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா. வுக்கான இலங்கைத் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக்கவினூடாக வழங்கப்பட்டதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க விமான நிறுவனம் மன்னிப்பு கோரவில்லை – அப்துல் கலாம் தெரிவிப்பு

abdulkalam-200.jpgமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமெரிக்க விமான நிறுவனமான கொன்டினென்டல் எயார்லைன்சிடம் இருந்து தனக்கு மன்னிப்பு கடிதம் எதுவும் வரவில்லை என அப்துல் கலாம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை டில்லி விமான நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கொன்டினென்டல் எயார்லைன்ஸ் வருத்தம் தெரிவித்து, கலாமுக்கு நேர்ந்த அசௌகரியத்துக்கு மன்னிப்பு கேட்பதாக கூறியது.

மேலும் அவருக்கு மன்னிப்பு கடிதம் ஒன்று அனுப்பியதாகவும் கூறியது. இந்நிலையில் அவ்வாறு மன்னிப்பு கடிதம் ஏதும் கிடைக்கவில்லை என அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அவமரியாதையாக கருதுகின்றீர்களா என அவரிடம் கேட்டதற்கு, இது குறித்து பாராளுமன்றத்தில் நிறையவே பேசப்பட்டு விட்டது என கூறி முடித்தார்.

27 கொழும்பு பாடசாலைகளில் நாளை டெங்கு ஒழிப்புத் திட்ட வேலைகள் ஆரம்பம்

mosquitfora.jpgடெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாத்திரம் நுளம்புகளை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முற்றாகவே டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாளை சனிக்கிழமை கொழும்பில் 27 பாடசாலைகளில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கிளாசோ, ஸ்மித்கிளைன், ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கொழும்பு மாநகர சபையும் இணைந்து நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பான செய்தியாளர் மாநாடு கொழும்பு மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;  நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றது. இலங்கையில் மட்டுமல்ல ஏனைய உலக நாடுகள் சிலவற்றிலும் டெங்கின் தாக்கம் இருந்து வருகின்றது. கியூபாவை எடுத்துக் கொண்டால் இலங்கையைவிட மோசமான நிலையில் டெங்கின் தாக்கம் இருந்துள்ளது. ஆனால், அந்நாட்டில் டெங்கினை ஒழிப்பதற்கு பரவலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதன் மூலம் அந்நாட்டில் டெங்கு ஒழிக்கப்பட்டது.

இதன் காரணமாகவே கியூபாவைச் சேர்ந்த இரு நிபுணர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சேவை எமக்கு இன்றியமையாததாக உள்ளது. நாட்டில் இதுவரை 18 ஆயிரத்து 452 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் டெங்கினை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொழும்பு மாநகரசபையுடன் இணைந்து டெங்கினை ஒழிப்பதற்கு கிளாசோ ஸ்மித்கிளைன் மற்றும் ரோட்டறிக் கழகம் இணைந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

பொதுவேலைத்திட்டம் ஒன்றிற்காக அரசுடன் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம். 25 ஆம் திகதி சனிக்கிழமை (நாளை) கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 27 பாடசாலைகளில் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.

பின்னர் தொடர்ச்சியாக இத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரோட்டரிக் கழக உறுப்பினர்களும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டு ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படுவர்.

இதில் ஒரு குழுவினர் பாடசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட ஏனைய 4 குழுவும் பாடசாலையை சுற்றிய 300 மீற்றருக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களை சுத்திகரிப்பர்.

இவ்வாறாக 27 பாடசாலைகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தலா ஐந்து குழுக்கள் செயற்படும். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 40 வீதமானோர் பாடசாலை மாணவர்களாகவே உள்ள அதேவேளை மரணவீதமும் கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் அதிகரித்துள்ளது.

மரண வீதத்திலும் வயதுவந்தவர்களைவிட சிறுவர்களே அதிகளவில் காணப்படுகின்றனர். இந்நிலையில் 8 வாரகால டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் அனைவரும் கலந்து டெங்கினை ஒழிக்க ஒன்று சேரவேண்டுமெனத் தெரிவித்தார்.

மறைந்த எம்.பி.க்கள் நால்வருக்கு அனுதாபப் பிரேரணை

26parliament.jpgமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மீதான அனுதாபப் பிரேரணைகள் சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றன.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அலிக் அலுவிகார, ஹரேந்திரகொரயா, ஐயூப், ராஜா குலதிலக ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணைகளே இடம்பெற்றன.

இந்த அனுதாபப் பிரேரணையில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ரிசாட் பதியுதீன், நியோமல் பெரேரா, எம்.பிக்களான ஜோசப்மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் செனவிரட்ன, ரவூப்ஹக்கீம், இபாம், ஸ்ரீகாந்தா உட்பட பலர் உரையாற்றினர்.