08

08

நான் உங்கள் நண்பன்! நீங்கள் என்னை நம்பலாம் – ஜனாதிபதி : முஸ்லிம் மக்களை பிழையாக ஜனாதிபதி வழிநடத்துகின்றார் – கபீர் ஹசீம்

mahinda-rajapa.jpgkabir_hashim.jpg இனிமேல் இந்த நாட்டில் இன, மத, குல, பேதம் எதுவும் இருக்க முடியாது. இனங்கள் மத்தியில் நிலவிய உறவை இல்லாமல் செய்ய பயங்கரவாதிகள் எண்ணினார்கள். ஆனால் எமது உறவு அன்றுபோல் என்றும் உறுதியாக இருக்கும். இதை யாரும் மறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம் இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்ப முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பும் அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (07) முஸ்லிம் சமயப் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றின்போதே ஜனாதிபதி தமிழ் மொழியில் இவ்வாறு தெரிவித்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள் உட்பட மேலும் பல இஸ்லாமியப் பிரமுகர்கள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்  ரிஸ்வி முப்தி ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் கையளித்தார்.

இவ்வைபவத்தில்  தமிழில் ஆற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில், அலரி மாளிகைக்கு வந்த உங்கள் எல்லோரையும் நான் அன்போடு வரவேற்கிறேன். இது எமது தாய் நாடு. இந்த நாட்டில் வாழும் நாமெல்லோரும் ஒரு தாய் மக்களே! இந்த அழகான நாட்டின் அபிவிருத்தி வேலைகள் இப்போது மிகவும் வேகமாக இடம்பெறுகின்றன. மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைகளும் வேகமாக இடம்பெறுகின்றன. முஸ்லிம் சமயப் பிரமுகர்களான நீங்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

சாந்தி, சமாதானம், சகோதரத்துவம்,சகவாழ்வு இவை இஸ்லாம் மார்க்கத்தின் அத்திவாரம். உணர்வுகளுக்கு அடிமையாகாமல், எப்போதும் புத்தியைப் பயன்படுத்துவோம். அதுதான் மிகமிக முக்கியம். அது எமக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை தரும். முதலாவதும்,  இரண்டாவதும், மூன்றாவதும்,  எமது தாய்நாடுதான் எமக்கு முக்கியம். இங்கே வாழும் எல்லா மக்களும் பயம், சந்தேகம் இல்லாமல் பாதுகாப்பாக,  சமஉரிமையோடு வாழ வேண்டும். அது எனது பொறுப்பு!

நான் உங்கள் நண்பன்! நீங்கள் என்னை நம்பலாம். நாமெல்லோரும் ஒன்றுபட்டு இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

பலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ஜனாதிபதி முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்துகின்றார் – கபீர் ஹசீம் குற்றச்சாட்டு

இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீன போராட்த்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ஜனாதிபதி முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக அமெரிக்க தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் எந்தவித கருத்துக்களையும் வெளியிடாமை பெரும் ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் அரேபிய மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு பெரும் தொகை உதவிகளை வழங்கியுள்ளமை எவராலும் மறுக்க முடியாததொன்றென அவர் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்து வரும் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலஸ்தீனத்திற்கு உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ள இலங்கை, இஸ்ரேலுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அனுப்பி உறவுகளைப் வலுப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த இரட்டை நிலைப்பாடு பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கப்படும் என ஆளும் கட்சி குறிப்பிட்ட போதிலும்,  நடைமுறையில் ஆளும் கட்சியின் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கைகள் பூஜ்ஜிய நிலையிலேயே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதென கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். 

‘வணங்கா மண்’ நிவாரண பொருட்கள் இன்று நள்ளிரவில் கொழும்பு வந்தடையும்

_vanankaman-captionali.jpgஐரோப் பாவில் வாழும் இலங்கைத் தமிழர்களால் இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த ‘கெப்டன் அலி’ என்ற கப்பலில் இருந்த பொருட்கள் ‘கேப் கொலராடோ’ கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

திங்கட்கிழமை நள்ளிரவு ‘கொலராடோ’ கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்கள் செவ்வாய்கிழமையன்று சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணமானது. பெரும்பாலும் இந்நிவாரணப் பொருட்கள் இன்று நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 884 தொன் நிவாரணப் பொருட்களுடன் ‘கொலராடோ’ கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு வருகிறது.

நிவாரண பொருட்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ9 வீதியூடாக இன்னும் சில தினங்களில் பேரூந்து சேவை – அமைச்சர் டக்ளஸ்

21deva.jpgயாழ் குடாநாட்டுக்கு ஏ9 வீதியூடான பேரூந்து சேவைகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார் என்றும் அந்த அமைச்சின் ஊடகத்துறை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு மக்கள் தரைவழிப் போக்குவரத்தின்றி எதிர்நோக்கியுள்ள பிரயாண கஸ்டங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக ஒன்றுவிட்ட ஒரு தினம் ஐந்து சொகுசு பஸ் வண்டிகள் கொழும்பிலிருந்தும், வவுனியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ் குடாநாட்டுக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து விமானம் மூலமாகவும் கப்பல் மூலமாகவுமே நடைபெறுகின்றன என்பதும், இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் பெருந்தொகைப் பணச் செலவினையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

மீட்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெளத்த புராதன இடங்களை இனங்கண்டு பாதுகாப்பதும் அவசியமாகும்.- எல்லாவல மேதானந்த தேரர்

parliament.jpgபயங் கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப சகலரும் முன்வரவேண்டிய அதேவேளை, மீட்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெளத்த புராதன இடங்களை இனங்கண்டு பாதுகாப்பதும் அவசியமாகும்.

இன, மத பேதங்களுக்கப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் சகல கட்சிகளும் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகிறது. மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு நாட்டைச் சீரழித்த பிரபாகரன் அழிக்கப்பட்டுவிட்டார். அவர் செய்த படுகொலைகளே இறக்கும்போது சயனைட்குப்பி கூட இல்லாத நிலையை அவருக்குத் தோற்றுவித்தது. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எல்லாவல மேதானந்த தேரர்: (ஹெல உறுமய கட்சி எம்.பி) மேற்கண்டவாறு கூறினார்.

அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் அல்ல – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna-20.jpgஅவசர காலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் அல்ல என்று தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, புலிகள் பெருந்தொகையான அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்திருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு எதிராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பியது கிடையாது. என்றாலும் பயங்கரவாதம் இப்போது ஒழித்துக் கட்டப்பட்டிருக்கின்றது. கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுமார் மூன்று தசாப்தங்களாகப் பின்னடைந்துள்ள பிரதேசங்களை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாது. வெற்றிபெற முடியாத திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அபிவிருத்திக்கான சர்வகட்சிக்குழு கூட்டத்தில் அண்மையில் பங்கு பற்றினார்கள். இது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றி இருக்கமாட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.ஒருவர், பிரபாகரன் உண்மையில் கொல்லப்பட்டு விட்டாரா என்று என்னிடம் கேட்டார். அந்தளவுக்கு அவர்கள் பிரபாகனுக்கு பயந்து செயற்படுகிறார்கள்.

அவசரகாலச் சட்டம் முழு நாட்டிலுமே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. மாறாக இது தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கில் மட்டும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. இச்சட்டம் நடைமுறையில் இருப்பதன் பயனாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுகின்றனர்.

இதேவேளை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிழல் அரசாங்கம் என்ற மாயை கே.பி. பரப்பி வருகின்றார். முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கும் புலிகளால் இதனை ஒரு போதும் சாத்தியப்படுத்த முடியாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் நிவர்த்திக்கக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளேன். தமிழ் மக்களின் குறைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி போன்ற தேசிய கட்சியில் இணைந்து செயற்படுவது அவசியம்.

தமிழ் மக்கள் மத்தியில் சுமார் 15 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. இவற்றை உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

அதிபர்கள் சுற்றறிக்கைக்கு மாறாக பணம் அறவிட்டால் ஒழுக்காற்று விசாரணை – பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர்

26parliament.jpgசுற்ற றறிக்கைக்கு முரணாக நிதி அறவிட்ட அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

தற்போது அமுலில் உள்ள சுற்றறிக்கைக்கு ஏற்ப பாடசாலை மாணவர்களிடம் சேவை மற்றும் வசதிக்கட்டணம்  அபிவிருத்திக் கட்டணம் ஆகியவற்றை மட்டுமே அறவிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

சுற்றறறிக்கைக்கு  மாறாக கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களிடம் அதிபர்கள் கட்டணம் ஏதும் அறவிட்டிருந்தால் அவற்றை  திருப்ப ஒப்படைப்தற்கான உத்தரவை நாளை விடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

அபிவிருத்திப் பணிகளில் புனர் வாழ்வளிக்கப்பட்ட சிறுவர்கள் – வன்னிப் பிரதேச கட்டளைத் தளபதி தகவல்

tamil_ex_child.jpgபுலிகளின் படையில் இருந்து  அரசாங்கத்திடம் சரணடைந்த சிறுவர்கள் புனர் வாழ்வளிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்திப் பணிகளில்; ஈடுபடுத்தப்படுவர் என வன்னிப் பிரதேச கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.தம்பமடுவ மற்றும் பூந்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் இயங்கும் சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முகம்களுக்கு அவர் அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இத்தகவலைத் தெரிவித்தார். இது தொடர்பில்; கட்டளைத் தளபதி மேலும் கூறியதாவது,

புலிகளின் பிடியிலிருந்த தப்பி அரசாங்கத்திடம் சரணடைந்த சிறுவர்களுக்கு புனர் வாழ்வளிக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் புலிகளினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டவர்களே. அவர்கள் இப்போதுதான் சுதந்திரக் காற்றை சுவாசித்து சுயமாக இயங்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு விருப்பமான துறைகளில் அவர்களை வழி நடத்தி நாட்டின் நற்பிரஜைகளாக்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். 

விலா எலும்பில் காயத்தால் முதல் போட்டியில் பிரட்லீ இல்லை?

cricket.jpgஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், அபாரமாக பந்துவீசி வரும் பிரட் லீ திடீரென இடது விலா எலும்பில் ஏற்பட்ட வலி காரணமாக ஸ்கேன் எடுக்க லண்டன் அனுப்பப்பட்டுள்ளார். இதனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
சோபியா கார்டன்ஸில் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியில் பிரட் லீ கலந்து கொள்ளவில்லை. மேலும், இந்தத் தொடர் முழுதும் அவர் விளையாடுவதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சோதனைச் சாவடிகள் பெருமளவில் அகற்றம்

batticheckpoint.gifஇலங் கையின் கிழக்கு மாகாணத்தில் நெடுஞ்சாலைகளிலுள்ள காவல் துறையினரின் சோதனைச் சாவடிகளும், வீதித்தடைகளும் கனிசமான அளவில் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் எளிதாகியுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் அதிகமான வீதித்தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு இடையேயான பயண நேரம் பாதியளவாக குறைந்துள்ளதாக வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் போல கெடுபிடிகள் ஏதுமின்றி தங்களால் பயணிக்க முடிவதாகவும் பயணிகள் கூறுகிறார்கள்.

வவுனியா மாவட்ட முதலாவது மீள்குடியேற்றம் அடுத்தவாரம் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தகவல்

risadbadurudeen.jpgவவுனியா மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது மீள்குடியேற்ற நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள எட்டு கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் இந்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் அண்மையில் நடைபெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு வடக்கே புலிகளின் பிடியிலிருந்த சுமார் 20 கிராம சேவகர் பிரிவுகளைச்சார்ந்த  எட்டு கிராமங்களில் முதற்கட்டமாக மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவாகும் என்பதுடன் வவுனியாவுக்கு வடக்கே மூன்றாம் கட்டமாக நடை பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கையாகும். முதற்கட்டமாக மன்னார் சிலாவத்துறையிலும்ää இரண்டாம் கட்டமாக மன்னார் முசலியிலும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் நெடுங்கேணி தெற்கு கிராமசேவகர் பிரிவிலுள்ள மருதன்குளம், புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள கலீமடு, புலியன்குளம்,  கனகராயன்குளம், குஞ்சுகுளம்,  பரந்தன், நெடுஞ்கேணி,  மன்னார்குளம் ஆகிய எட்டு கிராமங்களிலுள்ள மக்களே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர