27

27

‘உயிர்க்கும் தமிழீழம்’ – நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் ஐரோப்பா வருகை

rudrakumaaran_v.jpgஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம், 2 ஆம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிடவுள்ளனர். ‘உயிர்க்கும் தமிழீழம்’ என்ற பெயரில் இந்த மாபெரும் பேரெழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் உயிர் கொடுத்து வளர்த்த தலைவன் இலட்சியம் தோற்காது என்ற கொள்கைப் பிடிப்போடு அணிதிரளுமாறும் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பான விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்கப்பிரகடனமும் இந்நிகழ்வில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1 ஆம் 2 ஆம் நாள் நிகழ்வுகளில் சுவிஸ், யேர்மனியில் நடைபெறும் கருத்தமர்வுகளில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் எதிர்வரும் 2 ஆம் நாள் சுவிஸ் சூரிச் அல்விஸ் கூட்டிலி மண்டபத்தில் நடைபெறும் மாபெரும் பேரெழுச்சி நிகழ்வான ‘உயிர்க்கும் தமிழீழம்’ நிகழ்விலும் கலந்துகொண்டு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டிய எதிர்காலப் பணிகள் தொடர்பாக கருத்துரை வழங்கவுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான விசுவநாதன் உருத்திரகுமாரன் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் சுவிஸ் தமிழர் பேரவை தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவசரமாய் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்

27-air-arabia-a.jpgசென்னை யிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் அவசரமாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் மிக அவசரமாகத் தரையிறங்கியது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏர் அரேபியா ஏர்வேஸ் விமானம் 128 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார் விமானி. இதைத் தொடர்ந்து அந்த விமானம் 9.30 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 128 பயணிகளும் இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்

indonesiya.jpgஇந்தோ னேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று காலை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. இருப்பினும் இது 6.2 என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.  இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வனாட்டு தீவிலும்…

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள வனாட்டுத் தீவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இந்த தீவில் இருந்த கட்டடங்கள் அதிர்ந்தன. நில நடுக்கம் ரிக்டர்கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கொழும்பு தினசரி பஸ் சேவை குறித்து இன்று இறுதித் தீர்மானம்

bussss.jpgகொழும்பு யாழ்ப்பாணத்திற்கு இடையில் ஏ9 வீதியூடாக இ.போ.ச.பஸ் சேவையை தினசரி சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏ9 வீதியூடான தனியார் போக்குவரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.

இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை நாளாந்தம் நடத்துவது குறித்து இன்றைய உயர்மட்ட சந்திப்பில் முடிவு செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வடக்கு அபிவிருத்திக்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையிலான செயலணிக்குழுவின் பிரதிநிதிகளும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளும் பாதுகாப்பு தரப்பினரும் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.

இதேநேரம், ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான இ.போ.ச. பஸ் சேவையை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கடந்த 22ஆம் திகதி யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பித்து வைத்திருந்தார்.

எனினும் அது பரீட்சார்த்த சேவை ஆரம்பமேயென தெரிவித்த டலஸ் அழகப்பெரும, இன்று நடைபெறும் கூட்டத்திலேயே நாளாந்த சேவை குறித்து இறுதி முடிவெடிக்கப்படுமென்றும் கூறினார்.

இன்றைய கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய, இம்மாத இறுதிக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குமான ஏ9 வீதியூடான நாளாந்த இ.போ.ச. பஸ் சேவையை ஆரம்பித்து விடமுடியுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம், தனியார் போக்குவரத்துக்கான அனுமதி பற்றி கேட்டபோது, எதிர்வரும் நாட்களில் நிலைவரங்களுக்கு அமைய ஆராய்ந்து அதற்கான அனுமதிகள் வழங்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், “ஏ9 வீதியூடான பொது போக்குவரத்து சேவைகள்’ எனும் விடயத்தின் கீழ் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தினூடாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்;

“”யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் கொழும்பு வந்து திரும்பிச் செல்ல அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து சோதனை சாவடிகளும் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்குமென்பதுடன், ஏனைய தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். எவ்வாறிருப்பினும், யாழ்ப்பாண மக்கள் கொழும்பு வந்து திரும்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இ.போ.ச. பஸ் சேவைக்கான அனுமதியே இங்கு வழங்கப்பட்டிருப்பதுடன், தனியார் போக்குவரத்துகளுக்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காகப் பிரார்த்தித்தார் அமெரிக்கா உதவிச் செயலாளர்

us_ass_sec.pngவவுனியா, நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் சனத்தொகை, அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான உதவி இராஜாங்கச் செயலாளர் எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களிடம் நீங்கள் விரைவில் உங்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வாழ்த்துவதுடன் அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி அமைச்சர், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் கண்டறிவதற்காக நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அமெரிக்க உதவிச் செயலாளர் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்.

வவுனியா சென்ற அமெரிக்க உதவி அமைச்சர் தலைமையிலான குழுவினரை மெனிக்பாமில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவேற்றார். நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ரிஷாத் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் ஆகியோர் அமெரிக்க உதவிச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதையிட்டு திருப்தி தெரிவித்த அமெரிக்க உதவிச் செயலாளர், இதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரிஷாதிடம் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வசதிகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட அமெரிக்க உதவிச் செயலாளர்,  அங்கிருக்கும் வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் வைத்தியர்களுடனும் உரையாடினார்.

அருணாச்சலம் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்கள், தாங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதையே விரும்புவதாக அமெரிக்க உதவிச் செயலாளரிடம் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த அவர்,  உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இடம்பெயர்ந்த மக்களின் ஆசையும் இதுவே எனக் கூறினார். 

குறைந்த கட்டணத்தில் யாழ். நகருக்கான முதலாவது உள்ளுர் விமான சேவை இன்று ஆரம்பம்

flight_domestic.jpgகட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான முதலாவது உள்ளுர் விமான சேவை இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானதாக இலங்கை விமானப் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.  இதுபற்றி அவர் மேலும் தகவல் தருகையில், இந்த விமான சேவை திங்கள், புதன்,  மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் வாரத்துக்கு மூன்று தடவைகள் நடத்தப்படவுள்ளதோடு இருவழிப் பாதைக்குமான கட்டணமாக 19 ஆயிரத்து 100 ரூபா அறவிடப்படும்.

திருகோணமலை மற்றும் சீகிரியா ஆகிய நகரங்களுக்கும் விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன. வாரமொருமுறை நடத்தப்படவுள்ள இச்சேவை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணிக்கு ரத்மலானையிலிருந்து ஆரம்பமாகும். திருகோணமலைக்கு இருவழிப் பாதைக் கட்டணமாக 15, 300 ரூபாவும் சீகிரியாவுக்கு இருவழிப் பாதைக் கட்டணமாக 9000 ஆயிரம் ரூபாவும் அறிவிடப்படும்.
 
கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விமான சேவை அனுமதிப்பத்திர கருமபீடத்தில் தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சகல விமான சேவைகளுக்குமான அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை,  இவ்வாரம் யாழ். அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியிலும் விமான அனுமதிப்பத்திர கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறை வைக்கப்பட்டுள்ள 1850 படை வீரர்கள் விடுதலை!

சிறை வைக்கப்பட்டுள்ள 1850 படை வீரர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். சேவையில் இருந்து தப்பிச்சென்று மீண்டும் சேவைக்கு சமூகமளிக்காததால் யுத்த நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முப்படை வீரர்களே இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

நாட்டுக்காக போராடிய  இவர்கள் மீது கருணைகாண்பிக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்டதையடுத்து அதனைக் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று முஸ்லிம்களுக்குத் தேவையானது அரசியல் அதிகாரமா? உரிமைத்துவ அரசியலா? – எம்.எம்.எம். நூறுல்ஹக்

sri-lankan-muslim00.jpgஅரசியல் அதிகாரம் குவிந்திருக்கும் பக்கம் மக்கள் திரட்டி அணிதிரள்வது இயல்பானது. அதேபோன்று அரசியல் அதிகாரம் இல்லாத இடத்திலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறிச் செல்வதும் தவிர்க்க முடியாத ஒரு பண்பாக வளர்ந்து காணப்படுகின்றது.

அபிவிருத்தி கலாசாரம் விருத்தி பெறுவதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்கின்ற ஒரு பிழையான கோட்பாட்டுக்குள் நமது மக்களை கட்டி வைத்து அரசியல் செய்கின்ற ஒரு செயற்பாட்டினையும் நமது அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

மேற்படி கூறுகள் அராங்கத்தின் பால் சார்ந்து நின்றால் தான் எதனையும் சாதிக்கலாம் என்கின்ற பதிவை பரவலாக நமக்குள் விதைக்கும் பாதைகளின் திறப்பு பெருகிவரும் ஒரு சூழலும் நமக்குள் வெகுவாக ஆட்சி புரியத் தொடங்கி இருக்கின்றது.

நமது அரசியல் தலைமைகள் காட்டும் பந்தாக்களின் பின்னால் அள்ளுப்பட்டுச் செல்லும் ஒரு சமூகமாக நாமிருக்கும் வரை நமது சமூகத்தள மேம்பாட்டை நோக்கிய நகர்வுகள் கொண்ட ஓர் அரசியல் முறைமை நமக்குள்ளிலிருந்து விடை பெற்றுச் செல்வதும் தவிர்க்க இயலாது.

ஒரு சமூகத்தின் இருப்பில் கட்டிட வளர்ச்சி, பௌதிக வளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற நலன்கள், தொழிலில்லாப் பிரச்சினை இன்றி இருத்தல் போன்ற பக்கங்கள் முக்கிய பாத்திரத்தைக் கொண்டதாகும்.

ஆனால், இவைகளைப் பார்க்கிலும் அதிக கூடிய முக்கியத்துவம் கொண்ட சில பக்கங்கள் ஒரு சமூகத்தின் இருப்பையும் எழுச்சியையும் வலியுறுத்துவதிலும் நிலைப்படுத்துவதிலும் பங்கு கொள்கின்றன.

அவற்றினை தக்கவைத்துக் கொள்வதில் தான் நமது இருப்பு அசையாது வேரூன்றிக் கொள்ளும். இல்லையேல் ஆட்டம் கொண்ட அத்திவாரமாகவே நமது சமூக கட்டிடம் எழுந்திருக்கும். அது உறுதியான பிடியிலிருந்து அகன்று உருக்குலைவை நோக்கிய நகர்ச்சிக்குள் இலகுவாக அகப்பட்டுவிடக்கூடும்.

உரிமத்துவம், தனித்துவமான செறிவான குடியிருப்பு, ஒற்றுமை போன்ற உயரிய கூறுகளை மிகவும் வலுவாக பற்றிக் கொள்ள வேண்டிய தேவைகள் பெருக்கெடுத்துக் காணப்படும் தருணத்தில் வெறும் அபிவிருத்தி அரசியல் நகர்வே இன்றைய அவசியம் எனப் பிதற்றுவது அர்த்தமுள்ள நகர்வல்ல.

வீதி அபிவிருத்தி, கட்டிட வளங்கள், தொழில் வாய்ப்பு போன்ற விடயங்கள் இயல்பாக நடைபெறும் ஒரு கோணத்தை நமது நாட்டு அரசியல் போக்குகள் நிர்ணயித்து வைத்திருக்கின்றது. ஆதலால் இவைகள் இயல்பாக நடைபெறுவதற்கான ஏதுக்கள் நிறையவே உள்ளன.

சமூக இருப்பு அரசியல் என்பது இயல்பாக நிகழ்ந்து விடக்கூடிய ஒன்றல்ல. அதற்கென்று கடுமையாகப் பாடுபடவேண்டிய சூழலில் தான் தங்கி இருக்கின்றது. ஏனெனில், ஆளுந்தரப்புக்கள் கைக்கொள்ளும் ஆதிக்க வன்முறைகள்தான் பாதிப்புக்களையும், இழப்பீடுகளையும் ஒரு சமூகத்தின் மீது குறிப்பாக்கி பாய்ச்சும் போதே இந்நிலை தொடர்கின்றது அல்லது படிகின்றது.

இங்கு இருந்துதான் ஒரு சமூகத்தின் உரிமத்துவ அரசியல் தொடங்கப்பட காரணமாகின்றது. தனித்துவப் பதிவை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்தை சுமத்துகின்றது. இதன் வழியில் பயணிக்கும்போது சில துன்பங்களையும் இழப்புகளையும் அனுபவிக்க நேரிடுவது யதார்த்தமானது.

அரசியல் அதிகாரமுடையோர்களுக்கு எதிராகவே உரிமத்துவ அரசியல் கூறுகள் அநேகமாக அமைந்திருக்கின்றன. இவற்றினை கட்டுடைப்பு அல்லது அறுத்தெறிந்து கொள்வதில் தான் நமது உரிமத்துவ அரசியல் போராட்டம் வெற்றியை நோக்கியதாகவும் அதனை அடைந்து கொண்டதாகவும் மாறும்.

இதற்கு சில விலைகளை நாம் செலுத்த நேரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனைப் பொறுப்பெடுக்க நமது சமூகம் தயார் இல்லையாயின் அரசியல் அதிகார வன்முறைகளுக்கு அடங்கி, கட்டுண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்காது.

இதுதான் நமக்குச் சாதகமானது என உறுதியாக நாம் நம்பத் தொடங்கிவிட்டால், நமது பிரச்சினைகள் என்று கதையாட வேண்டிய தேவையிலிருந்து எம்மை விடுதலையாக்குகின்றது. அரசியல் அதிகாரம் இருக்கும் பக்கம் நமது மக்களின் பார்வையும், விருப்பும் ஓட்டத் தொடங்கும்.

இந்த நெருக்கம் நமது பல பிரச்சினைகளில் சிலவற்றுக்குத் தீர்வாக அமையமுடியும். அதேநேரம் அடங்கி வாழ்ந்து சில சலுகைகளைப் பெறும்பேற்றைக் கொண்ட “சலுகை அரசியல் ‘ பண்பின் பின்னால் நமது செல்நெறியை மாற்றிக் கொள்ளவைக்கும். இதனை வேறுவார்த்தையில் செல்வதாயின் அடிமைப்பட்டவர்களாகவும் பாவப்பட்டவர்களாகவும் நமது மக்கள் வாழ்வதை வலியுறுத்தி நிற்கும்.

இன்று நாம் போராட வேண்டிய தேவையைக் கொண்டவர்களாக இல்லை என்கின்ற ஒரு மாயைத் தோற்றத்தினை நிஜமுகமாக நமது அரசியல் தலைமைகள் காட்டும் புள்ளியைத் தொடங்கி இருக்கின்றனர். அது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டதன் பின்னர்.

ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் ஆயுதப் போராட்டத்திற்கு உந்துதள்ளிய வடுக்கள் காயங்கள் அனைத்தும் இல்லாமல் போய் இனப்பிரச்சினைகள் யாவும் ஓந்து விட்டனவா என்கின்ற வினாவை எழுப்பினால் அதன் விடை “பிரச்சினைகள் இன்னும் தீர்வுக்குவரவில்லை’ என்றே காணப்படும்.

இவ்வாறான ஒரு நிலையில் சலுகை அரசியல், அபிவிருத்தி அரசியல் என்கிற வட்டங்களுக்குள் நம்மை சிறைப்படுத்தமுனைவது ஆரோக்கியமான பதிவுகளைத் தருமா? என்கின்ற கேள்வி இவ்விடத்தில் முக்கியப்படுகின்றது.

தனிக்கட்சிகளின் ஊடாக எதனையும் சாதிக்கும் வல்லமையைப் பெறமுடியாது என்றும், இனி நமக்கான கட்சிகளின் அவசியமில்லை என்போர்களின் வரவு சற்று கூடிச் செல்லும் பாங்கைப் பெற்றிருக்கின்றது. அதேநேரம் தனிக்கட்சிகள் இனிப்பயனில்லை என்போர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனிக்கட்சித் தாயிலிருந்து பிறந்து பிறழ்ந்தவர்களே.

தனிக்கட்சி நமக்கு அவசியமில்லை என்ற கூற்றை ஒரு இயக்கமாக முன்னெடுக்கும் எத்தனங்கள் நிறையவே காணப்படுகின்றது. ஆனால் இதன் பின்னால் நிற்போர்கள் ஏதோ ஒரு சிறிய கட்சியின் தலைமைத்துவத்தின் பின்னாலிருப்பதை அவதானிக்கலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி போன்றோர்களும் கட்சிகளை அமைத்து நமக்கு மத்தியில் அரசியல் செய்வது பிரத்தியட்மானது. தனிக் கட்சியினால் இனிப் பயனில்லை எனில் ஏன் இவர்களுக்கு கட்சியும் தலைமைத்துவமும் என்கின்ற பெரும் வினா எழுவது தவிர்க்க முடியாது.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு தமிழர், சிங்களவர்களை குறிப்பிட்டளவு அங்கத்துவத்தைக் கொண்டும் கட்சியை அமைத்துவிட்டால் அது தேசிய கட்சி என்ற வரையறைக்குள் ஆகிவிடும் என்கின்ற புதிய ஓர் அரசியல் கலாசாரத்தின் துவக்கமாக இதனைக் கொள்ள வேண்டும் என்கின்ற பாடத்தை சொல்லித்தர இவர்கள் முனைகின்றனரா?

அவ்வாறாயின், இந்நாட்டின் ஆளுங்கட்சிகளாக வரக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய பெருங்கட்சிகளுடன் நமது நேரடி அங்கத்துவத்தை வைத்துக்கொள்வது சலுகை அரசியல் அல்லது அதிகார அரசியல் வெதற்கும் கூடிய பயனை நெருங்கி இருந்து பெறுவதற்கும் மிகவும் இலகுவான வழியாகும்.

இதுதான் நமக்கான தனித்துவ அரசியல் கட்சிகளின் தோற்றத்திற்கு முன்னிருந்த நிலையுமாகும். அதற்குள்தான் நாமின்றும் பயணிக்க விரும்புகின்றோம் என்றால், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளை கலைத்துவிடலாமே? அதனைச் செய்வதற்கு முன்வராத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மட்டும் குறிவைத்து குறைகூறி தேவையற்றது எனச் சாடுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் தமிழர், சிங்களவர் அங்கத்துவம் குறைவாகவும் முஸ்லிம்களின் பிரசன்னம் அதிகமாகவும் இருக்கின்றது. ஆகவே, இக்கட்சியை இலக்கு வைத்து விமர்சிப்பது முறையற்றதும் விமர்சிக்கத் தகுதியற்றதுமாகும். ஏனெனில், ஏனைய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கட்சிகளும் இதன் அங்கத்துவப் பாங்கையே கொண்டிருக்கின்றது.

ஆகவே,  தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தம்மிடமிருக்கும் அமைச்சுப் பதவியை வைத்து உருவாக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்படி அல்ல. மக்களின் தேவை குறித்து பேசி அதனை நமது மக்களும் ரிகண்டு பாராளுமன்ற உறுப்புரிமையை உறுதிப்படுத்தி, அதன் ஊடாக அமைச்சுப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் மக்களே காலாக நின்று உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரம் பேசும் ஆற்றலுடனும் நிபந்தனையுடனும் ஆட்சியமைக்கும் கட்சியோடு கைகோர்த்து சமூகநலன் சார்ந்து உழைப்பதும் பெயரளவில் இணைந்துகொண்டு முழுக்க முழுக்க பெருங்கட்சிக்கு இரையாகிக் கொண்டும் செயற்படுவதும் ஒரே அந்தஸ்து கொண்ட செயற்பாடுகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்வதில் அதிக சிரமமில்லை.

கட்சியின் தலைமைத்துவம், அங்கத்துவம் போன்ற உரித்தை வைத்துக்கொண்டு தனிக்கட்சி அவசியமில்லை என கர்ஜிப்பது வெறும் காழ்ப்புணர்வுகொண்ட கூப்பாடேயாகும். ஏனெனில், அவர்களின் கட்சி பங்கு பற்றுதலே நமக்கான கட்சியின் அவசியத்தை வலியுறுத்தப்போதுமானது. இன்றைய சூழலிலும் தனிக் கட்சி தேவை அற்றுப் போகவில்லை என்பதையும் இது புலப்படுத்துகின்றது.

அரசியல் அதிகாரத்தின் பக்கம் சாய்ந்து கொள்வதுதான் இன்றைய காலத்திற்கு பொருத்தமானது என்று கொண்டால், அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் அதிகமிருக்கின்றது. ஏனெனில், இன்று நமக்குள் இருக்கும் அனைத்து அரசியல் பிரதிநிதித்துவத்திலும் முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு நல்கப்பட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் பிரதிநிதிகளுக்குமாகும்.

ஆகவே, சமூகத்தளத்தில் நின்று செயற்பட வேண்டிய தேவைகளும் அவசியங்களும் நமக்குள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த முன் நிபந்தனையுமின்றி அரசாங்கத்துடன் சேர வேண்டும் என எதிர்பார்ப்பது உகந்ததல்ல.

இன்றிருக்கும் சூழலில் அராங்கம் சார்ந்த போக்கு நமக்கு சிறந்ததென்று உன்னிப்பாக நோக்கி உணரப்படும் கருத்தாக நம்பப்படுமாயின் அதற்கான ஓர் அரசியல் காநகர்த்தலாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை உபயோகித்துக் கொள்ளும் கையாள்தலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறவிடுமாயின் அது பாரிய வரலாற்றுத் தவறாக எம்மை நோக்கி பதிவுசெய்யத் தவறாது என்பதையும் கருத்திற்கொண்டு செயற்படுவோமாக!

நன்றி: தினக்குரல் 27.07.2009

இலங்கை இந்தியாவுக்கு இடையில் மீண்டும் கப்பல் மற்றும் ரயில் சேவை!

ship121212.jpgஒருங்கி ணைக்கப்பட்ட கப்பல் மற்றும் ரயில் சேவையை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் ஆரம்பிப்பது  தொடர்பாக சார்க் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். இதனால்,  சாதாரண வருமானம் பெறும் பிரிவினரும் இலகுவாக இரு நாடுகளுக்குமிடையில் சென்று வர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இம்மாநாட்டு அமர்வின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவையையும் அத்துடன் இணைக்கப்பட்ட ரயில் சேவையையும் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்துவதான யோசனை முன்வைக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஜனாதிபதியின் 25 வருட கனவு நனவாகப் போகின்றது.

1985 ஆண்டுக்கு முன் போக்குவரத்து சேவை இடம்பெற்ற நிலையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் கொச்சினுக்குமிடையில் போக்குவரத்து இடம்பெறுவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் தலைமன்னார் வரை ரயில் தண்டவாளம் போடும் அதேநேரம் இந்திய ரயில்வே பிரிவினர் ராமேஸ்வரம் வரை விஸ்தரிப்பர் இந்நிலையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் கப்பல் சேவை இடம்பெறும்.

தெற்காசியாவில் பல்வேறுபட்ட சமூகங்கள் உள்ள நிலையில் பிணைப்பை ஏற்படுத்த இது வழிவகுக்கும். தெற்காசிய அமைப்பில் இலங்கையும் மாலைதீவும் தவிர ஏனையவை நிலத் தொடர்புடையவையாகும். இதேவேளை இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு ரயிலூடாக நேரடியாக செல்வதற்கும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதி பிரதமர் நாளை இலங்கை வருகை

kalifa-shik-binsalman.jpgபஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் நாளை இலங்கை வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். இவர்களது வருகையையொட்டி கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

பஹ்ரேன் பிரதமர் செய்க் கலீபா பின்சல்மான் அல்கலிபா எதிர்வரும் 29ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அன்றைய தினம் பல இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை வரும் பஹ்ரேன் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்கலிபா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து பேச்சு நடத்துவார். இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.