இடம்பெயர்ந்த மக்களுக்காகப் பிரார்த்தித்தார் அமெரிக்கா உதவிச் செயலாளர்

us_ass_sec.pngவவுனியா, நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் சனத்தொகை, அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான உதவி இராஜாங்கச் செயலாளர் எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களிடம் நீங்கள் விரைவில் உங்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வாழ்த்துவதுடன் அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி அமைச்சர், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் கண்டறிவதற்காக நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அமெரிக்க உதவிச் செயலாளர் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்.

வவுனியா சென்ற அமெரிக்க உதவி அமைச்சர் தலைமையிலான குழுவினரை மெனிக்பாமில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வரவேற்றார். நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ரிஷாத் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் ஆகியோர் அமெரிக்க உதவிச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதையிட்டு திருப்தி தெரிவித்த அமெரிக்க உதவிச் செயலாளர், இதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரிஷாதிடம் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வசதிகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட அமெரிக்க உதவிச் செயலாளர்,  அங்கிருக்கும் வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் வைத்தியர்களுடனும் உரையாடினார்.

அருணாச்சலம் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்கள், தாங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதையே விரும்புவதாக அமெரிக்க உதவிச் செயலாளரிடம் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த அவர்,  உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இடம்பெயர்ந்த மக்களின் ஆசையும் இதுவே எனக் கூறினார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *