23

23

ஈழத்தமிழின வரலாற்றில் கோரத்தாண்டவம் ஆடி (1983), இருண்ட பக்கங்களை எழுதி நிற்கும் இருபத்தியாறவது இருண்ட ஜூலை (1989) : புலம்பெயர்ந்து வாழும் TELO உறுப்பினர்கள்

Black_July_Anjaliசுதந்திரம் அடைந்த இலங்கைத்தீவில், சுதந்திரக் காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல், பெரும்பான்மைவாதம் வேரூன்றி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு, தமிழினம் ஓரங்கப்பட்டதோடு, ஈழத்தமிழினத்தின் இருப்பையே இல்லாதொழிக்க மாறி மாறி வந்த இலங்கை அரசுகள் எடுத்த முயற்சிகள் ஏராளம் ஏராளம்.

ஈழத்துக்காந்தி தந்தை செல்வா போன்ற உன்னதமான அரசியல் தலைவர்களால் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காக்க தொடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் சாகடிக்கப்பட்டபோது அகிம்சை முறைப்போராட்டங்கள் அனைத்தையும் அதிகாரவர்க்கம் ஆயதம் கொண்டு அழித்தொழித்தபோது, இல்லாது ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காப்பாற்ற இறுதி முயற்சியாய் கையிலே ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டபோது. தலைமை ஏற்றவர்தான் தங்கத்துரை என்ற தங்கண்ணா.

நடராஜா தங்கவேல் என்று அழைக்கப்படும் தங்கத்துரை என்ற தங்கண்ணா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைலவர் மட்டுமல்ல. அவர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அமைதியும், அன்பும், அடக்கமும், கொண்ட கொள்கையிலே உறுதியும் அணிகலன்களாக அமையப் பெற்ற இந்த இலட்சியமறவன், வாதத்திறமையும், சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர். “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்.“ என்று நீதிமன்ற விசாரணையின்போது இவர் உதிர்த்த வார்த்தைகள் சரித்திரத்தில் சாகா வரம் பெற்றவை.

 தளபதி குட்டிமணி: செல்வராஜா யோகச்சந்திரன் என்ற குட்டிமணி, தலைவர் தங்கண்ணா கூறும் தத்துவங்களையெல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத்தளபதி. கயமைத்தனங்களை கட்டவிழ்த்து விட்ட சிங்கள இராணுவத்தினருக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவன். களத்திலே இவன் இறங்கிவிட்டால், இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தபோது, ஆயதங்களோடு நேருக்கு நேர் வந்த ஆயுதப்படைகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அலறியடித்து ஓடிய  சம்பவங்கள் பல உண்டு.

இவன் தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவன் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றான். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவன் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவன் நாவும் அறுக்கப்பட்டது. ஏ! அஞ்சா நெஞ்சமே! உன் மறுபெயர் தான் குட்டிமணியோ?

முன்னணிப் போராளிகள்:
ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இயந்திரத்துப்பாக்கியும் கையுமாக இந்த இளம்சிங்கம் கண்ட களங்கள் பல. வயதிலே சின்னவன்; வேட்டுக்களை குறி வைப்பதில் மன்னவன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவன். அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன்.

சிவசுப்பிரமணியம் என்கின்ற தேவன் தலைவர் தங்கண்ணாவின் மெய்ப்பாதுகாவலர். பட்டத்து யானை போன்று நெடிய, கம்பீரமான தோற்றம் ஜெகனைப் போலவே இராணுவத்தின் பிடியிலிருந்து பலமுறை தப்பி சாகசம் புரிந்தவர். பொலிசாரின் துப்பாக்கிக் குண்டுகள் வயிற்றைக் கிழித்தபோதும், சாரத்தைக் கிழித்து, வயிற்றில் கட்டிக் கொண்டே கடலை நீந்தித் தாண்டித் தப்பிய மனோதைரியம் கொண்டவர்.

இப்படி தொடர்ந்தது இளைஞர்படை. தொகை தொகையாய் தலைவர் பின்னால், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்து நின்ற மறத்தமிழ் வீரர்களின் மரணத்துக்கு அஞ்சாநிலை கண்டு, அகிலமே முதல் முறையாய் அண்ணாந்து பார்த்தது. அடக்கி ஆண்டவர்களோ அச்சத்தால் மிரண்டனர். தலைகுனிந்த நம்மினமோ தலை நிமிர்ந்து நின்றது. அடலேறுகளின் ஆக்கிரோசத்தில் அகமகிழ்ந்த  அன்னை தமிழும் அரியணையில் ஏற ஆயத்தமானாள். தமிழினத்தின் விடிவுக்காய் தமிழர்படை தொடர்ந்த வேளை துரோகக்கரம் ஒன்று பின்னால் தொடர்ந்ததை யார் அறிவார். பதவி வெறியால் பாவி அவன் சதியாய் பாதியிலே (1981) கைதானார்கள் எங்கள் பைந்தமிழ் வீரர்கள்.

காட்டிக் கொடுத்தவர்களே கடைசிவரை நீங்கள் சிறை மீண்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கேசன்துறை சீமேந்துக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள ஊழியரோடு பேரம் பேசி சிறையில் வைத்தே உங்களை தீர்த்துக்கட்ட முயற்சி எடுத்தார்கள். கைதான உங்களைக் காக்கவென்று புறப்பட்டோம். ஆத்திரமுற்றிருந்த அதிகாரவர்க்கம் கோர்த்தது கை இந்தக் கோடாலிக்காம்புகளோடு. சாய்த்தது சிறையில் வைத்தே எங்கள் சரித்திர நாயகர்களை. “இலட்சியத்தை கை விடுங்கள். இன்னொரு நாட்டில் இல்லறத்தோடு இனிதே வாழ வசதிகளோடு வாய்ப்புக்கள் தரப்படும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.“ என்று பேரம் பேசியது ஜெயவர்த்தனா அரசு. அன்று மாத்திரம் நீங்கள் ஆம் என்று சொல்லியிருந்தால், இன்றும் இருந்திருப்பீர்கள் இன்னொரு நாட்டில் வளமாக. ஈழத்தமிழினத்திற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட துன்பங்கள் எண்ணில் அடங்காதவை; கல்நெஞ்சையும் கரைக்கக் கூடியவை.

உங்கள் உயிரிலும் மேலான இலட்சியத்தைக் கைவிட மறுத்ததினால், பூட்டிய சிறையினில் மாட்டிய விலங்கோடு தீட்டிய ஆயுதத்தினால் காடையரின் துணையோடு உங்கள் கண்கள் தோண்டப்பட்டு, கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன. கழுத்து அறுக்கப்பட்டு, உடல்கள் சிதைக்கப்பட்டன. உங்கள் உயிர்கள் பிரியும் முன்பே அங்கங்கள் அறுக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு போராளிகளின் உறுப்புக்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு புத்தருக்கு காணிக்கையாக்கப்பட்டன.

தென்னிலங்கை வீதிகளில் தமிழர்களின் அவலக்குரல்கள், தெருவெங்கும் தமிழர் பிணங்கள். தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள் தீயிடப்பட்டன. இப்படி மனிதநாகரிகம் வெட்கித் தலைகுனிந்த நிலைமையில் நடத்தப்ட்ட கோழைத்தனமான தாக்குதலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடித்துநின்ற இளைஞர்கள் பின்தொடர ஆயதப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்ஈழத் தேசபிதா திரு. தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட புதுயுகத்தின் அத்தியாயங்களை எழுதத் துடித்துநின்ற தோழர்கள் ஜெகன், தேவன், நடேசுதாஸ், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் போன்ற முன்னணிப்போராளிகள் உட்பட ஐம்பத்திமூன்று உயிர்கள் வெலிக்கடைச்சிறையில் வெட்டிக் குதறப்பட, நலிவுற்ற நம்மினமோ இன்று நடுத்தெருவில், மரணித்துவிட்ட எங்கள் விடியல்களே! எங்கள் இனத்தின் இன்றைய இன்னல்கள் தீர்க்க இன்னும் ஒருமுறை எழுந்துவர மாட்டிரோ? உங்கள் அனைவருக்கும் எமது ஆத்மாந்தமான கண்ணீர் அஞ்சலிகள் காணிக்கையாகட்டும்.

புலம்பெயர்ந்து வாழும்
தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள்
TELO

விடியலிற்கான நம்பிக்கை – கறுப்பு யூலை அவலம்.

blackjuli.jpgஅவுஸ் திரேலிய சர்வமத குழுவுன் ஏற்பாட்டில் “விடியலிற்கான நம்பிக்கை” எனும் சர்வமத பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

காலம்:  யூலை மாதம் 25ம் திகதி மாலை 2 மணிதொடக்கம்
               4 மணிவரை   (25.07.2009 Saturday)  
      
இடம்:    ST.PATRICKS CATHEDRAL
                Cnr of Gipson street and Cathedral Place
                MELBOURNE.
                (Near the parliament Railway station)
 
வரலாற்றின் இருண்டகால பகுதியின் ஊடாகப்பயணிக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமைக்காகவும்,சுபீட்சத்துக்காகவும் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்துசமய மற்றும் கிறிஸ்த்தவ சமய பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.
 
இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய மதத்தலைவர்களும் அரசியல்பிரமுகர்களும் மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
 
எனவே அனைத்து தமிழ் உறவுகளையும் இந்த சர்வமத பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுக்கின்றனர்.
 
யூலை மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒரு “துயரமான மாதம்”.எனவே இந்த மாதத்தில் நிகழும் இந்த நிகழ்வானது தமிழ் மக்களின் விடியலுக்கான நம்பிக்கையை துளிர்விடவைக்கும்.
 
ஆயிரம் ஆயிரம் மனங்களின் உணர்வுகளும் ஆத்மார்த்தமான வேண்டுதல்களும் ஒரே நேரத்தில் ஒன்றாய் குவியும் போது,அதன் ஆன்மீக ரீதியான சக்தி நிச்சயம் பலனைப்பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை.

– அவுஸ்திரேலிய சர்வமத குழு

பிரான்சில் கறுப்பு யூலை நாளினை முன்னிட்டு ஒன்றுகூடல்

blackjuli.jpgகறுப்பு ஜூலை நினைவாக பிரான்ஸில் இன்றும், நாளை மறுநாளும் ஒன்றுகூடலும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.  1983 யூலை 23 தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கத்தில் நடைபெறவுள்ளது

இடம்  – பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கம்
காலம் – 23.07.2009 வியாழக்கிழமை
நேரம் – பி.ப 16.00 மணி தொடங்கி 18.00மணி வரை
Métro  – Trocadéro – Ligne 6, 9

கறுப்பு யூலை நாளை முன்னிட்டு நடைபெறும் ஒன்றுகூடலைத் தொடர்ந்து 24 மற்றும் 26ம் திகதிகளில் பஸ்ரில் பகுதியில் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 19.00 மணிவரை கவனயீர்ப்புப்போராடட்டம் நடைபெறும் அதேவேளை 26ம் திகதி மதியம் இரண்டு மணிக்கு றீப்பப்ளிக் பகுதியிலிருந்து மாபெரும் கண்டனப்பேரணி ஆரம்பமாகி ஏற்கனவே கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஸ்ரில் பகுதியை வந்தடையவிருக்கிறது.

மாபெரும் தமிழினப்படுகொலையின் 26 ஆண்டுகள் கடந்தும் இன்றும் திட்டமிட்ட இனப்படுகொலையும், மிகக்கொடுமையான வதைப்புக்களும் நடைபெற்றபடியே இருக்கிறது எமது மக்களைக்காப்பாற்ற பிரான்சு வாழ் தமிழ் அணிதிரள்வோம் என பிரான்ஸ் ஒருங்கமைப்பு குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளது.

இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா 14 மில். அமெ. டொலர் நிதியுதவி

jams_usa.jpgஇடம் பெயர் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது.

இடம்பெயர் மக்களது உணவு விநியோகத்தைச் சீர் படுத்தும் நோக்கில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்காக இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் பதில் தூதுவர் ஜேம்ஸ் மெர் இந்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இந்தப் பணம் பயன்படுத்தப்படவுள்ளது.

மீளக் குடியமர்த்துவதற்கு தெளிவான திட்டம். கால அட்டவணை அவசியம் – ஐ.நா

அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான தெளிவான திட்டத்தையும் கால அட்டவணையையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென ஐ.நா. செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருக்கிறது. உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு இவை முக்கியமான விடயங்கள் என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களில் 35 முகாம்களில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் திரும்பிச் செல்வது தொடர்பான தெளிவான திட்டங்களும் கால அட்டவணையும் இருப்பது முக்கியமானது என்று ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்திருக்கிறார்.

“மாதக்கணக்காக நீங்கள் தொடர்ந்தும் 3இலட்சம் மக்களை அங்கு (முகாம்களில்) நீண்டகாலத்திற்கு வைத்திருந்தால் நிதியைப்பெற்றுக்கொள்வது (நிவாரண நடவடிக்கைகளுக்கு) மிகவும் கடினமானதாக இருக்கப்போகின்றது, என்று நான் நினைக்கிறேன்’ என்று நீல் புனே கூறியுள்ளார். நல்லிணக்கத்தின் முதல் கட்டமானது எவ்வாறு (இடம்பெயர்ந்தோர்) நடத்தப்படுகிறார்கள் என்பதாகும். அரசு அதனை அடையாளம் கண்டுள்ளது. நாங்கள் அதனை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால் இதுவொரு பாரிய சவாலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடம் பெயர்ந்த மக்களை பராமரிக்கும் பொது மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டமானது 155 மில்லியன் டொலர் நிதித் தொகையை மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் அது 270 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதுவரை 97 மில்லியன் டொலரே கிடைக்கபெற்றுள்ளது.( தேவைப்படும் தொகையில் 36 ./.) 185 திட்டங்களுக்கு தேவையான 173 மில்லியன் டொலர் பற்றாக்குறையாக உள்ளது. ஆயினும் இடம்பெயர்ந்தோரின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதில் இப்போது அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நான் தற்போது நினைக்கிறேன் என்று புனே கூறியுள்ளார்.

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு – இன்றுமுதல் அமுலில்

mosquitfora.jpgநுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சரியாக விளங்கிக்கொள்ளாமையின் காரணமாக சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள்  தவறியுள்ளனர். இவர்களுக்கு அரசியல் யாப்பினூடாக மேலதிக அதிகாரங்களை வழங்க முடியாதுள்ளது. எனினும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை,  தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாகவுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் தொகுக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். டெங்கு நோயைப் பரப்பக்கூடிய சுற்றுச் சுழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அபராதம் அறவிடுவதுடன் மற்றும் தண்டனை வழங்குவதற்கான சட்டம் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.  இதன்படி குற்றவாளியாகக் காணப்படுகின்றவர்களுக்கு ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அணிக்கு 492 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

srilanka-cri.jpgபாகிஸ் தான் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 492 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு இலங்கை அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலேனும் தனது ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் பாகிஸ்தான் அணி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் 299 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட் இழப்புக்கு 425 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களையே பெற்றது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட 66 ஓட்டங்களைக் குறைவாகப் பெற்றிருந்த இலங்கை அணி தற்போது 492 எனும் ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியின் நான்காம் நாளான இன்று சற்று நேரத்துக்கு முன்னர் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது இலங்கை அணி விக்கட் இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லண்டன் நிலாந்தனின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை : த ஜெயபாலன்

Nilanthan Moorthiஎந்தத் தாய்க்கும் இந்த வயதில் தன் பிள்ளையை பறிகொடுக்கும் நிலை ஏற்படக்கூடாது!!! என கடந்த ஆண்டு குரொய்டனில் கொலை செய்யப்பட்ட நிலாந்தனின் தாயார் கலா மூர்த்தி லண்டன் குரல் பத்திரிகைக்கு அப்போது தெரிவிததிருந்தார். இந்தக் குற்றத்தைச் செய்தவர் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்று அன்று வேதனையுடன் தெரிவித்த அத்தாயின் வேண்டுகோளுக்கு சட்டம் பதிலளித்துள்ளது. யூன் 26 2009ல் ஸ்னேஸ்புருக் கிறவுண்கோட் ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) இக்கொலையைப் புரிந்ததாகத் நீதிபதி டேவிட் றட்போட் தீர்ப்பளித்து உள்ளார். யூலை 3ல் இதற்கான தண்டனை வழங்கப்பட்டது. வெள்ளை இனத்தவரான குரொய்டனில் வாழ்பவரான ஸ்ரீபன் பிறித்வெயிற் நான்கு குழந்தைகளின் தந்தையாவார்.

ஓகஸ்ட் 16 2008 அதிகாலை 1:30 மணியளவில் குரொய்டனில் இடம்பெற்ற தெருவோரக் கை கலப்பில் நிலாந்தன் கத்தி வெட்டுக்கு இலக்காகி சில சிலமணி நேரங்களில் உயிரிழந்தார். நியூஎடிங்ரன் பகுதியில் வாழும் முன்னாள் அன்ன பூரண உரிமையாளர்களான மூர்த்தி (காங்கேசன்துறை) – கலா (கரணவாய்) தம்பதிகளின் புதல்வனே நிலாந்தன். நிலாந்தனும் அவருடைய நண்பர்களும் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை குவேசியரும் ஜக் டானியலும் அருந்திக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த நிலாந்தன் தெருவில் சென்று வந்த சிலரை வம்புக்கு இழுத்ததாக இவர்களுடைய நண்பரான மாணவன் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அப்படி வம்புக்கு இழுக்கப்பட்டவர்களில் ஒருவரே கொலையாளியான ஸ்ரீபன் பிறித்வெய்ற்.

Place_Where_Nilanthan_Murderedஅவ்வழியால் மினிகப்பில் பயணம் செய்துகொண்டிருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை சம்மர் ரோட்டில் உள்ள ரபிக் லைற்றில் வைத்து நிலாந்தன் வம்பிற்கு இழுத்ததாக நிலாந்தனின் நண்பர்களில் ஒருவரான ரக்டிப் சிங் (23) நிதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். அப்போது ஸ்ரீபன் பிறித்வெயிற் நிலாந்தனை ‘பக்கி’ என்று இனத்துவேசத்துடன் விழித்துள்ளார். அப்போது நிலாந்தன் மினிகப்பின் பின் இருக்கையில் இருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை யன்னலினூடாக இழுக்க முயன்றதாக அரச சட்டவாதி கியூசி கிறிஸ்தொப்பர் கின்ச் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சலசலப்பில் அவ்விடத்தை விட்டகன்ற ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் 20 நிமிடங்கள் கழித்து நிலாந்தனுடனான தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள கத்தியுடன் வந்துள்ளார்.

கத்தியை விசுக்கி நிலாந்தனின் கழுத்தில் ஆழமான வெட்டை ஏற்படுத்தியதில் நிலாந்தன் நினைவற்று வீழ்ந்ததை அவருடைய நண்பர்கள் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்தனர். நிலாந்தனின் உயிரைக் காப்பாற்ற நண்பர்கள் போராடிக் கொண்டிருக்கையில் கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் லண்டன் வீதியில் இறங்கி நடந்து சென்றார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை அருகில் அடிங்ரன் ரோட்டில் உள்ள குப்பைப் பையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். சம்பவ தினம் தனது நான்கு பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்த மைத்துனியின் பிளற்இற்கு ஸ்ரீபன் பிறித்வெயிற் சென்றுள்ளார்.

நிலாந்தனை தான் தாக்கியதோ அல்லது நிலாந்தன் கொல்லப்பட்டதோ தனக்கு சில நாட்களின் பின்னர் பத்திரிகையில் பார்க்கும் வரை தெரியாது என கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

உடனடியாக மருத்துவவண்டி அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயப்பட்ட நிலாந்தன் அருகில் உள்ள மேடே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மதுபோதையில் இருந்த சில தமிழ் இளைஞர்களை அள்ளிச் சென்றனர். அங்கிருந்த மதுப் போத்தல்களையும் அவர்கள் கொண்டு சென்றனர்.

நிலாந்தன் மூர்த்தியுடைய இறுதி நிகழ்வுகள் ஓகஸ்ட் 31 2008ல் ஸ்ரெத்தம் கிரெமற்ரோரியத்தில் இடம்பெற்றது.

நிலாந்தனுடைய கொலை தொடர்பாக சில தினங்களிலேயே ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் பதிவு செய்யப்பட்டது. கொலையாளி சட்டன் மஜிஸ்ரேட் கோட்டில் ஓகஸ்ட் 21 2008ல் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Nilanthan’s Final Journeyஓகஸ்ட் 21 2008ல் நிலாந்தனின் துயர சம்பவத்தை அடுத்து நிலாந்தனின் பெற்றோரை லண்டன் குரல் பத்திரிகை சந்தித்தது. அப்போது ”எமது பிள்ளைகள் கால நேரத்துடன் வீடுகளுக்கு வந்துவிட வேண்டும், குழுக்களாக குழுமி நிற்பது போன்றவைகளை தடுக்க நாங்களும் பொலிஸாரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது” என நிலாந்தனின் தாயார் தனது துக்கத்திலும் வேதனையிலும் உறுதியாகத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் நிலாந்தன் உட்பட ஐந்து தமிழர்கள் வரை பிரித்தானியாவில் வேற்று இனத்தவர்களால் இனத்துவேசத்துடன் கொல்லப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் அணி வலுவான நிலையில்

pakisthan-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 வது இன்னிங்சில் பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவின்போது 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது.

பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் 16 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் இழந்த நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இருந்தது. பின்னர் வந்த மலிக், மிஸ்பா உல் ஹக் ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த சோடி இணைப்பாட்டமாக 119  ஓட்டங்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணி 186 ஓட்டங்களைப் பெற்றிருந்த நேரத்தில் மிஸ்பா 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பின்பு மலிக்குடன் அக்மல் இணைந்து 3ம் நாள் ஆட்ட முடிவின் போது இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பெற்று அணியை மேலும் ஸ்திரனப்படுத்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது மலிக் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்கங்களையும், அக்மல் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்கங்களையும் பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அணி முதலாவது விக்கெட்டை 16 ஓட்டங்களுக்கும், 2வது விக்கெட்டை 22 ஓட்டங்களுக்கும் 3வது விக்கெட்டை 54 ஓட்டங்களுக்கும் 4 வது விக்கெட்டை 67 ஓட்டங்களுக்கும் 5 வது விக்கெட்டை 186 ஓட்டங்களுக்கும் இழந்தது.

இலங்கை அணியின் சார்பாக பந்து வீச்சில் ஹேரத் 2 விக்கெட்டையும், துஷார, குலசேகர, மெதிவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது பாகிஸ்தான் அணி 366 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Pakistan  1st innings: 299
Sri Lanka 1st innings: 233

PAKISTAN 2nd innings (overnight 16-1)
Khurram Manzoor b Herath    2
Fawad Alam c and b Thushara    16
Younus Khan lbw b Kulasekera    19
Mohammad Yousuf c Sangakkara b Herath    23
Misbah-ul Haq c Sangakkara b Mathews    65
Shoaib Malik not out    106
Kamran Akmal not out    60

Extras: (b6, lb2, w1)     9

TOTAL (for 5 wkts, 95 overs)    300

Fall of wickets: 1-16 (Manzoor), 2-22 (Alam), 3-54 (Younus), 4-67 (Yousuf), 5-186 (Misbah).Bowling: Kulasekera 15-5-33-1 (w1), Thushara 19-2-84-1, Herath 37-6-113-2, Vaas 14-6-29-0, Mathews 10-1-33-1.

மன்னார்-திருமலை பஸ் சேவை இன்று ஆரம்பம்

bus_ctb_logos.jpgமன்னாரி லிருந்து திருகோணமலைக்கு நேரடி பஸ் போக்குவரத்துச் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைப் போக்குவரத்துச் சபை இதனை ஆரம்பிக்கவுள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படவுள்ளது. மன்னாரிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பஸ், வவுனியா சென்று அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக திருகோணமலையைச் சென்றடையும்.

பின்னர் அதே பஸ் பிற்பகல் 1.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து அதே வீதியூடாக மன்னாரை வந்தடையும். இச்சேவை நாளாந்தம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 வருடங்களின் பின்னர் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு அரச பஸ் சேவை, போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.