05

05

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்

yusuf.jpgமொஹம் மட் யூசுப்பின் அபார சதத்தின் மூலம் இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய தினத்தில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த யூசுப், மிஸ்பா உல் ஹக் ஜோடி 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. இதில் சிறப்பாக ஆடிய மிஸ்பா உல் ஹக் 128 பந்துகளுக்கு 9 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களை பெற்றார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய மொஹம்மட் யூசுப் தனது 24 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தார். 185 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 10 பௌண்டரிகளுடன் 114 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸுக்காக 94 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றது.

இதன்மூலம் அது முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 292 ஓட்டங்களை விடவும் 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் பிரிட்டன் பயணம்

ranil.jpgசர்வதேச ஜனநாயக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை பிரித்தானியா நோக்கி பயணமானார் என்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஜனநாயக சங்கதின் உப தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றார். அத்துடன் ஜனநாயக சங்கதின் ஆசிய வலய பிரிவின் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

he_at_norochcholai-2009-07-05.jpgநுரைச் சோலை அனல் மின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பார்வையிட்டார்;. ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ஜோன் செனவிரட்ன,  மிலிந்த மொறகொட,  மஹிந்தானந்த அளுத்கமகே,  ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அதிகாரிகள் இப்பயணத்தில் இணைந்துகொண்டனர். இதன் முதற்கட்டப் பணிகள் அடுத்தாண்டு பூர்த்தியடைகின்றன.

முதற்கட்டத்தில் 300 மெகவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். விரைவில்  ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாhம் கட்டத்தின்மூலம் 600 மெகவொட் மின்சாரம் கிடைகும். இரண்டாம் கட்டப் பணிக்கு 891 மில்லியன் டொலர் செலவிடபடவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சீன அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை,  இலங்கையின் மின்சாரத் தேவையை ஈடுசெய்யும் நோக்கில் இலங்கையின் இரண்டாவது அனல் மின் நிலையம் திருகோணமலையில் அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் இந்திய அரசுடன் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.

‘வணங்காமண்’ கப்பல் நிவாரணப் பொருட்கள் நாளை கொழும்புக்கு வருகிறது!

_vanankaman-captionali.jpg‘கெப்டன் அலி’ என அழைக்கப்படும் வணங்காமண் கப்பலிலிருந்து சென்னைத் துறைமுகத்தில் இறக்கப்பட்ட இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் நாளை திங்கட்கிழமை மற்றுமொரு கப்பலில் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கையைச் சென்றடைந்த வணங்காமண் கப்பல், இலங்;கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதெனக் கூறி கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் நாட்டைவிட்டுத் திருப்பியனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இக்கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டது.  இக்கப்பலிலிருக்கும் நிவாரணப் பொருட்களை இலங்கையில் இறக்குவதற்கு இலங்கையை இணங்கச் செய்ய இந்தியா முயற்சிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி,  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கோரியிருந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு 25,000 டாலர் செலவில் சவப்பெட்டி

maical-jak.jpgமைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கத்தை ஆடம்பரமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஏற்பாட்டையும் கிராண்ட் ஆக செய்கின்றனர். சவப்பெட்டி மட்டும் 25 ஆயிரம் டாலர் செலவில் உருவாக்கியுள்ளனராம்.

தி புரோமெதியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சவப்பெட்டி தங்க முலாம் பூசப்பட்டதாகும். வெண்கலத்தால் ஆன அந்த சவப்பெட்டியின் உள்ளே வெல்வெட் விரிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆடம்பர சவப்பெட்டியை ஜாக்சனின் சொந்த மாகாணமான இன்டியானாவைச் சேர்ந்த பேட்ஸ்வில்லி காஸ்கட் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.

ஜாக்சனின் உடல் அடக்கம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.

ஈரானில் ஒரே நாளில் 20 போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு தூக்கு

ஈரானில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேர் நேற்று ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகே உள்ள கராஜ் என்ற இடத்தில் உள்ள சிறையில் இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்கள் அனைவரும் கடந்த 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களிடமிருந்து 700 கிலோ போதைப் பொருட்கள் பிடிபட்டன. விசாரணைக்குப் பின்னர் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 20 பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் நாட்டு மதச் சட்டத்தின்படி கற்பழிப்பு, கொலை, ஆயுதங்களைக் காட்டி கொள்ளையடிப்பது, 5 கிலோவுக்கு மேல் போதைப் பொருளை வைத்திருப்பது கொலைக் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கால் 163 பேர் மரணம் 14,635 பேர் இதுவரை பாதிப்பு

aedes_aegypti.jpgடெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் தொகை 163 ஆக அதிகரித்திருப்பதுடன், இதுவரை 14,635 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பதாக நேற்று சனிக்கிழமை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. டெங்கு நுளம்பு உருவாகும் இடங்களை சோதனையிடும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது.

10 மாவட்டங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு சுகாதார அமைச்சு 10 அதிகாரிகளை நியமித்துள்ளது. 10 மாவட்டங்களில் 68 இடங்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படும் இடங்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிவில் பாதுகாப்பு குழுக்களை கிராம அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி களிலுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் டெங்கு கட்டுப்பாட்டு செயல் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கல்வியறிவூட்டுதல், சிரமதான நடவடிக்கைகள், பரிசோதனைகள், அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை என்பன இந்த டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

நாடு கடந்த அரசாங்கமும் அரசியல் தீர்வு முயற்சிகளும் – கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்

sri-lanka.jpgஇலங்கையில் தமிழ் அரசியல் என்பது சுவையானதும் முக்கியமானதுமான ஒரு காலகட்டத்தில் இருப்பதினாலும், தென்னிலங்கையில் கூறிக்கொள்ளக்கூடிய நிகழ்வுகள் எதுவும் இன்மையினாலும் தவிர்க்க முடியாதபடி தமிழ் அரசியல் பற்றியே கவனம் செலுத்த வேண்டிய ஒரு அவசியம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் செயற்பாடுகளின் எதிர்காலம் அல்லது எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று அவசியப்படுகின்ற பின்னணியில் இவ்விடயம் பற்றிய ஆவுகள் பயனற்றவையாக இருக்கப்போவதில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழ் சமூகத்தினுள் காணப்பட்ட மாற்றுக் கருத்துகள் மென்மையான ஒரு முறையிலேயே முன்வைக்கப்பட்டிருந்தன. மாற்றுக் கருத்துகள் உரத்துக் கூறப்படவில்லை அல்லது அவ்விதம் கூறக்கூடிய சூழ்நிலை ஒன்று காணப்பட்டிருக்கவில்லை. இதன் கருத்து என்னவெனில் குறைந்தது மிக அடிப்படையான பிரச்சினைகளில் பெரும்பான்மை அபிப்பிராயம் ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்நிலை இன்று காணப்படவில்லை. அடிப்படையான பிரச்சினைகளில் தமிழ் அபிப்பிராயம் பாரிய அளவிற்குப் பிளவுபட்டுள்ளது போன்றே தோன்றுகின்றது. தேசிய மட்டத்தில் இவ் அபிப்பிராயம் வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றதோ இல்லையோ சமூக மட்டத்தில் தெளிவானதாகவே உள்ளது. இதற்குப் பல்வேறு உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படலாம்.

அவ்வகையில் பிரதானமான ஒரு விடயம் அரசியல் இலக்கு என்பது பற்றி இலங்கையில் தற்போது வாழ்ந்துவரும் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையிலான அபிப்பிராய வேறுபாடு அல்லது வேறுபட்ட நிலைப்பாடு ஆகும். இவை இரண்டும் முழுமையாக வேறுபட்ட திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளது போல் தோன்றுகின்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் உள்ளூர் அபிப்பிராயம் ஒன்றிணைந்த இலங்கையினுள் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டை நோக்கி நகரத் தொடங்குகின்றபோது புலம்பெயர்ந்த தமிழர்கள் தனிநாடு என்ற நிலைப்பாட்டை கைவிடாதிருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவே நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற வாசகம், அல்லது கோஷம்.

முதலில் உள்ளூர் அபிப்பிராயத்தை எடுத்துக் கொள்வோமாயின், நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று தற்போது அவர்களது அரசியல் எதிர்பார்ப்பும் தன்நம்பிக்கையும் பாரியளவில் நகர்ந்துள்ளது. இதன் காரணமாக எதைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்ற ஒரு சாரார் காணப்படவே செய்கின்றனர். இன்னுமொரு சாரார் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கருதப்பட்ட 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இன்று பேசப்படுகின்ற 13 ஆவது திருத்தம் 1987 ஆம் ஆண்டு பேசப்பட்டதிலும் குறைவானதாகும். ஏனெனில் 87 ஆம் ஆண்டு வடக்கும் கிழக்கும் இணைந்த பொதியையே நாம் சட்டமாக்கியிருந்தோம். இன்றைய நிலை அதுவல்ல.

தமிழ் ஈழம் என்பது உரத்துக் கூறப்பட்ட காலத்திலேயே இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே சமஷ்டி, (அதாவது ஒன்றிணைந்த இலங்கையினுள் தீர்வு) என்பதற்கு பாரிய ஆதரவு காணப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் சமஸ்டி பற்றிய இணக்கம் காணப்பட்டபோது அதற்கு தமிழ் மக்களிடையே பாரிய வரவேற்பு இருந்தது. ஆயினும் இந்த தமிழ் சமூகத்தினுள் இருந்து சமஸ்டி என்ற பதத்தை பார்ப்பதோ கேட்பதோ கடினமானதாக மாறிவிட்டுள்ளது. இது அவர்களது அரசியல் தன்னம்பிக்கையில் ஏற்பட்ட தளர்வின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. இருப்பினும் தெரிவு ஒன்று வழங்கப்படுமாக இருப்பின் அவர்கள் சமஸ்டி தீர்வு ஒன்றை நாடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இதன் கருத்து ஒன்றிணைந்த இலங்கை என்ற எண்ணக் கருவினுள் வழங்கப்படக் கூடிய தீர்வு இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்கள் மட்டில் ஏற்புடையதாகவே இருக்கும் என்பதாகும்.

இதன் மறுபக்கம் என்னவெனில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களிடையே தனிநாடு என்ற எண்ணக்கரு பலவீனமானதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கான தனியான ஒரு நாடு என்ற எண்ணக்கரு என்றுமே நடைமுறைச் சாத்தியமான அரசியல் இலக்காக இருக்கவில்லை. அன்று அது பிராந்திய அரசியல் யதார்த்தங்களினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக 1980 களில் இந்தியா, தமிழ் இராணுவர் குழுக்களுக்கு ஆதரவு வழங்கிய செயற்பாடே கூட ஈழ எதிர்ப்பு கொள்கையின் மீதே தோற்றுவிக்கப்பட்டிருந்தது. புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட போது சட்டரீதியாகக் கூறப்பட்ட காரணம் தனிநாடு எனும் புலிகளின் அரசியல் இலக்கு இந்திய தேசிய நலனுக்கு எதிரானது என்பதே ஆகும்.

செப்டெம்பர் 11 தாக்குதலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச யுத்தமும் இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு பாகத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக வன்முறைப் போராட்டங்களை வெற்றி பெற முடியாதவையாக மாற்றி இருந்தன. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்ட சமூகங்களில் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் கூடியளவான அரசியல் இலாபத்தை அடைந்து கொள்ளும் செயன்முறை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. துரதிஷ்ட வசமாக இலங்கையில் இந்த யதார்த்தம் புரிந்துகொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல், சமூக நட்டங்கள் சாதாரணமானவை அல்ல.

யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை இராணுவம் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் நிரூபித்துள்ள ஒரு விடயம் இலங்கையில் தமிழர்களுக்கு தனியான ஒரு நாடு சாத்தியமற்றது என்பதாகும். இதுவும் ஒன்றிணைந்த இலங்கையினுள் தீர்வு என்பதற்கான ஆதரவு அதிகரிப்பதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

இத்தகைய ஒரு நிலையிலேயே புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இருந்து நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் ஏற்கனவே, குறிப்பாக தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனங்களுக்கு அப்பால், இந்த யோசனை உள்ளூர் ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இதுதொடர்பில் நோக்கப்பட வேண்டிய பிரதானமான விடயம் நாடுகடந்த அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதாகும். பொதுவாக நாட்டிற்கு வெளியிலான அரசாங்கங்கள் குறுகிய எதிர்காலத்தில் நாடு திரும்பி உண்மையான அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திலேயே தோற்றுவிக்கப்படுகின்றன. இலங்கையில் அவ்விதமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான கோட்பாட்டு ரீதியான, நடைமுறை ரீதியான சாத்தியம் இல்லை என்பது தெளிவாகப் புரிகின்றபோது நாடுகடந்த அரசாங்கத்தின் நோக்கம் பற்றிய கேள்விகள் நியாயமானவையாகவே காணப்படும்.

அதேசமயம், யோசனை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வரலாற்றில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது. நடைமுறை சாத்தியமற்ற இலக்கு மீதான பற்று பல அரசியல் தவறுகளுக்கு இட்டுச் சென்றுள்ள பின்னணியில் இது முக்கியமானதொரு கேள்வியாக அமைந்து விடுகின்றது. இதன் கருத்து நடைமுறை சாத்தியமான இலக்குகளை வகுத்துக் கொள்வது சகல தரப்பினருக்கும் நலன்களைக் கொண்டுவரும் என்பதாகும். உதாரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுகடந்த அரசாங்கமாக அன்றி தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கான இயக்கமாக செயற்படுகின்றபோது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் அதிகமாகும்.

இருப்பினும், நாடுகடந்த அரசாங்கத்தினால் உள்ளூர் ரீதியாக ஏற்படக்கூடிய பிரதான பிரச்சினை என்னவெனில், அது உள்ளூர் ரீதியாக அரசியல் தீர்வு ஒன்றை தேடுகின்ற செயன்முறையைக் கடினமானதாக ஆக்கிவிடக்கூடும். இச் செயன்முறையில் இரு பிரதானமான காரணிகள் காணப்படுகின்றன. ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தீர்வு ஒன்றைத் தேடுவதற்கான ஆர்வம் காணப்படவேண்டும். நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தனிநாடு பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கின்றபோது தீர்வை தேடும் நாட்டம் குறைந்து விடலாம். இரண்டாவது நியாயமான அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் பெறப்படுகின்ற அதிகாரங்களும், நலன்களும் தமிழர்களினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுவது அவசியம். இந்த நம்பிக்கை அதிகரிக்கின்றபோது தீர்வின் மூலம் பெறப்படுகின்ற கட்டமைப்பின் அதிகாரங்கள் உறுதியாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமானவையாகும்.

இருப்பினும், தனிநாடு என்கின்ற சுலோகமும் கடல்கடந்து செயற்படுகின்ற அரசாங்கம்போன்றதொரு குழுவும் விஸ்வரூபமெடுத்து நிற்கின்ற போது சிங்கள மக்களிடையே இந்த நம்பிக்கை ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவானதாகும். எனவே, நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற எண்ணக்கரு தென்னிலங்கையில் அரசியல் தீர்விற்கான எதிர்ப்பியக்கத்தை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், இராணுவ வெற்றியை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மையினர், குறிப்பாக தமிழர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் ஒன்றும் காணப்படுகின்றது. இவ்வித அடக்கி ஆளும் செயற்றிட்டத்தை நாடுகடந்த அரசாங்கம் போன்ற எண்ணக்கருக்கள் இலகுபடுத்தி நியாயப்படுத்திவிடக் கூடும்.

நாடு கடந்த அரசாங்க யோசனை ஏற்படுத்திய நடைமுறை ரீதியான சிக்கல்களுக்கு ஒரு உதாரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் உள்ளூர் முகவராக செயற்படும் என்று அறிவித்தமையாகும். புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து த.தே.கூட்டமைப்பை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி ஒன்று காணப்பட்டிருந்தது. இது அவர்கள் புலிகளின் முகவர்களாக செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி ஆகும். ஆயினும் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தின் பின்னணியில் தலைமைத்துவத்தை வழங்குவதில் த.தே.கூட்டமைப்பிற்கு முக்கிய பங்கு ஒன்று காணப்படுகின்றது. இப்பங்கு தம்மை கடந்த காலத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு சுயாதீனமான அரசியல் கட்சியாக மாறுவதன் மூலமே பூர்த்தி செய்யப்படலாம். இதனை அறிவிப்பு நிச்சயமாகப் பாதித்திருந்தது. உண்மையில் இவ் அறிவிப்பு த.தே.கூட்டமைப்பை தனிமைப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டிருகக்கூடும். எனவே, த.தே.கூட்டமைப்பு இவ் அறிவிப்பிற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலைப்பாடு கட்சியின் எதிர்கால செயற்பாட்டிற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், தற்போதைய நிலையில் அனைத்து தமிழ் அரசியல் குழுக்களுமே வன்முறையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக இது அகிம்சை பயனளிக்கும் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்ட நிலைப்பாடு அல்ல. மாறாக தமிழ் மக்களைப் பொருத்தவரை வேறு மாற்றுவழி ஒன்று காணப்படவில்லை. ஜனநாயகக் கட்டமைப்பினுள் அமைந்த ஒன்றிணைந்த இலங்கையினுள் நியாயமான தீர்வு ஒன்றை அடைந்து கொள்வதற்கான வன்முறை அற்ற இயக்கம் புதிய நண்பர்களை உருவாக்கக் கூடும் என்பது முக்கியமானது.

நன்றி: தினக்குரல் 05.07.2009

யாழ்தேவி இன்ரசிற்றி ரயிலில் தீ- பயணிகளுக்கு சேதமில்லை சாலியபுர பகுதியில் சம்பவம்

train_.jpgகொழும்பி லிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற யாழ் தேவி இன்ரசிற்றி ரயிலில் சாலியபுரம் பதியில் தீப்பற்றியதாகவும் எனினும் பயணிகளுக்கு உயிர்ச்சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயில் அனுராதபுரத்தைக் கடந்து சாலியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 10.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலில் இணைக்கப்பட்டிருந்த உணவு வண்டியில் பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டர் வெடித்ததனால் தீவிபத்து ஏற்பட்டதாகவும், உணவு வண்டியும், முதலாம் வகுப்புப் பெட்டியும் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும், பயணிகளுக்கு சேதமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் உணவு வண்டியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உடனடியாகத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மட்டு, வவுனியாவில் மூவர் சுட்டுக்கொலை

udaya_nanayakkara_brigediars.jpg வவுனியா பாரதிபுரத்திலும் மட்டக்களப்பு கிரான் குளம் வாவி பகுதியிலும் நேற்று மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பாரதிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பாரதிபுரம் வித்தியாலய அதிபரான நடராசா ரமேஷ்கந்தா (வயது 34) என்பவரும், அரிசி ஆலை முகாமையாளரான குணரத்தினம் சிவரூபன் (வயது 31) என்ற நபருமே இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் புலி உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலி உறுப்பினரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கிரான் வாவியோரப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் அவ்வழியே வந்த நபர் ஒருவரை சோதனை செய்யமுற்பட்டுள்ளனர். இச்சமயத்தில் குறித்த நபர் படையினரின் துப்பாக்கியை பறித்து சுட்டுள்ளார். படையினரும் திருப்பிச் சுட்டதில் புலி உறுப்பினரும் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்துள்ள புலி உறுப்பினர் மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த படைவீரர் அம்பாறையைச் சேர்ந்த சுமனதிஸ்ஸ என்றும் காயமடைந்த படைவீரர்கள் இருவரும் பண்டார, ராஜபக்ஷ என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.