‘கெப்டன் அலி’ என அழைக்கப்படும் வணங்காமண் கப்பலிலிருந்து சென்னைத் துறைமுகத்தில் இறக்கப்பட்ட இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் நாளை திங்கட்கிழமை மற்றுமொரு கப்பலில் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கையைச் சென்றடைந்த வணங்காமண் கப்பல், இலங்;கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதெனக் கூறி கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் நாட்டைவிட்டுத் திருப்பியனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இக்கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. இக்கப்பலிலிருக்கும் நிவாரணப் பொருட்களை இலங்கையில் இறக்குவதற்கு இலங்கையை இணங்கச் செய்ய இந்தியா முயற்சிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கோரியிருந்தார்.