டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாத்திரம் நுளம்புகளை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முற்றாகவே டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாளை சனிக்கிழமை கொழும்பில் 27 பாடசாலைகளில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கிளாசோ, ஸ்மித்கிளைன், ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கொழும்பு மாநகர சபையும் இணைந்து நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இது தொடர்பான செய்தியாளர் மாநாடு கொழும்பு மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றது. இலங்கையில் மட்டுமல்ல ஏனைய உலக நாடுகள் சிலவற்றிலும் டெங்கின் தாக்கம் இருந்து வருகின்றது. கியூபாவை எடுத்துக் கொண்டால் இலங்கையைவிட மோசமான நிலையில் டெங்கின் தாக்கம் இருந்துள்ளது. ஆனால், அந்நாட்டில் டெங்கினை ஒழிப்பதற்கு பரவலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதன் மூலம் அந்நாட்டில் டெங்கு ஒழிக்கப்பட்டது.
இதன் காரணமாகவே கியூபாவைச் சேர்ந்த இரு நிபுணர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சேவை எமக்கு இன்றியமையாததாக உள்ளது. நாட்டில் இதுவரை 18 ஆயிரத்து 452 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் டெங்கினை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொழும்பு மாநகரசபையுடன் இணைந்து டெங்கினை ஒழிப்பதற்கு கிளாசோ ஸ்மித்கிளைன் மற்றும் ரோட்டறிக் கழகம் இணைந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
பொதுவேலைத்திட்டம் ஒன்றிற்காக அரசுடன் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம். 25 ஆம் திகதி சனிக்கிழமை (நாளை) கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 27 பாடசாலைகளில் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
பின்னர் தொடர்ச்சியாக இத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரோட்டரிக் கழக உறுப்பினர்களும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டு ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படுவர்.
இதில் ஒரு குழுவினர் பாடசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட ஏனைய 4 குழுவும் பாடசாலையை சுற்றிய 300 மீற்றருக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களை சுத்திகரிப்பர்.
இவ்வாறாக 27 பாடசாலைகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தலா ஐந்து குழுக்கள் செயற்படும். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 40 வீதமானோர் பாடசாலை மாணவர்களாகவே உள்ள அதேவேளை மரணவீதமும் கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் அதிகரித்துள்ளது.
மரண வீதத்திலும் வயதுவந்தவர்களைவிட சிறுவர்களே அதிகளவில் காணப்படுகின்றனர். இந்நிலையில் 8 வாரகால டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் அனைவரும் கலந்து டெங்கினை ஒழிக்க ஒன்று சேரவேண்டுமெனத் தெரிவித்தார்.