2025

2025

AFD யை ஆதரிக்கும் தமிழர்கள்; ஈழத் தமிழர்கள் வலதுசாரிகளா?

AFD யை ஆதரிக்கும் தமிழர்கள்; ஈழத் தமிழர்கள் வலதுசாரிகளா?

21 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் வலதுசாரிகள் மிகப் பெரும் வெற்றிகளைப் பெற்று எழுச்சியடைந்து வருகின்றனர். அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு முதல் தடவையாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றமை தீவிர வலதுசாரி அரசியலுக்கு கிடைத்த வரவேற்பு எனலாம். அதேபோன்று 2014 இல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடென கருதப்படுகிற இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு படிப்படியாக இந்த நூற்றாண்டில் பல நாடுகளிலும் எழுச்சியடைந்து வந்த தீவிர வலதுசாரிகள், இன்று அமெரிக்கா, நெதர்லாந்து, ஒஸ்ரியா போன்ற பல நாடுகளில் அரியணையில் அமர்ந்து விட்டனர். ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் கடும்போக்குடைய வலதுசாரிகள் பெரும் செல்வாக்குடைய கட்சிகளாக வளர்ந்து வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் இன் ஆட்சி மூன்றாவது தடவையாக நடக்கின்றது. 2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல பொருளாதாரப் பிரச்சினைகளை உலகமே எதிர்கொண்டது. இதனால் உள்நாட்டில் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் குடியேறிகள் மற்றும் புலம்பெயர் மக்களே காரணம் என்ற கருத்துருவாக்கம் வலதுசாரிகளினால் பரப்பப்படுகிறது. கோப்பிறேட் நிறுவனங்களும் முதலாளிகளும் தமதுக் கெதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளை தவிர்க்க இந்த கருத்துருவாக்கதை ஊக்குவிக்கின்றன.

அந்தவகையில் ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களில் ஒரு சிலர் இன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் ஜேர்மனியின் கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான ஏஎப்டியை ஆதரிக்கும் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் அல்லது ஈழத்தமிழர்கள் 2009 இறுதித் யுதத்தின் பின்னரான அரசியல் போக்கில் புலத்திலும் சரி நாட்டிலும் சரி தீவிர வலதுசாரிப் போக்கினை அவதானிக்க கூடியதாக இருப்பதாக சமூக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2009 பின்னர் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் பேசப்படும் கடும்போக்கு தமிழ்த் தேசியம் அல்லது குறுந்தமிழ்த் தேசியம் – குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலில் இனத் தூய்மை வாதம் பேசும் தமிழ் வலதுசாரி சீமானை கொண்டாடும் ஆதரிக்கும் கூட்டம் ஒன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

எப்படி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முதலிடம் என்கிறாரோ அதேபோன்று ஜேர்மனியில் ஏஎப்டி ஜேர்மனியர்களுக்கு முதலிடம் என்கிறதோ அதேமாதிரி சீமான் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே முதலிடம் என்கிறார். தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்கிறார்.

சீமானின் தமிழ் நாஸிஸத்தை இனப்பற்று மற்றும் தமிழ்த் தேசியம் என கொக்கரிக்கும் ஈழத்தமிழர்கள் நாட்டிலும் புலத்திலும் அதிகரித்துள்ளார்கள். அதைவிட கணிசமான அளவு இஸ்லாமிய போபியா ஈழத்தமிழர்களிடையேயும் அதிகரித்துவருகின்ளது. ஒரு பக்கம் வெள்ளாள சாதிய மேலாதீக்க பெருமை பீத்தல்களும் அதன்பாலான வன்முறைகளும் பெருகியுள்ளன.

2009 வரையான ஆயுதப் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த போது நீறு பூத்த நெருப்பாக சாதிய வேறுபாடுகள் அமுங்கியிருந்தன. 2009 பின் சாதிய வெறி கொழுந்துவிட்டெரிகிறது.

வெள்ளாள சாதிப் பெருமை பேசும் பாதாள உலகக் குழுக்களும் கூட யாழ்ப்பாணத்தில் இயங்குகின்றன.

இலங்கையில் தமது அரசியல் சுயலாபத்திற்காக தீவிர வலதுசாரி தமிழ்த் தேசியவாதத்தை சில கட்சிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் பேசுகின்றன. குறிப்பாக சிவஞானம் சிறிதரன், கனகரட்ணம் சுகாஸ், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், இராசையா உமாகரன் என பட்டியல் நீண்டு கொண்டு போகின்றது. இதனை சிங்களத் தரப்பிலும் செய்கின்றனர்.

நாட்டில் நடந்த போரை காரணம் காட்டி சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே இந்த கடும்போக்கு வலதுசாரிச் சிந்தனைகள் மேலோங்கியிருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் பெரும்பாலும் குழுக்களாக பிரிந்து வாழ்கின்றனர். உழுத்துப்போன சாதியை புலம்பெயர் நாடு வரை கொண்டுவந்து தமக்குள்ளேயே பிளவுபட்டு நிற்கின்றனர். புலம்பெயர் நாடுகளிலிருந்து கொண்டு பணம் அனுப்பி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் சாதிய குழுக்களை நடத்துகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் தமக்காக போராடிய முன்னாள்ப் போராளிகளும் மாவீரர்களின் குடும்பங்களும் வறுமையில் வாட கோடிக்கணக்கான பணத்தை கோயில்கள் கட்டவும், கோயில்களை புனரமைப்பு செய்யவும் மற்றும் திருக்குறளுக்கு மண்டபமும் இந்துசமயத்திற்கு கண்காட்சி மையமும் அமைக்க கொட்டுகிறார்கள். மாம்பழத் திருவிழாவில் படைத்த மாம்பழத்தை இலட்சங்கள் கொடுத்து ஏலம் எடுக்கிறார்கள். இத்தகைய தான் தோன்றித்தனமான நடவடிக்கைகளை ஆதரிக்க என யாழ் மையவாத வலதுசாரி ஊடகங்களும் துணை போகின்றன.

தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெள்ளையர்கள் அல்லாத இஸ்லாமிய மக்களை சந்தேகத்தோடு பார்க்கின்றனர். தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெள்ளையர்களிடம் குட்டு வாங்கிக் கொண்டு சமரசம் செய்து கொண்ட வாழ தயாராக இருக்கும் ஈழத்தமிழர்கள் சக பிற வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனநிலையை கொண்டிருக்கின்றனர். இந்தப்போக்கு புலம்பெயர் நாடுகளில் இரண்டாம் தலைமுறையினரிடம் குறைவாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஈழத்தமிழர்களிடம் மேலோங்கி வரும் பேரினவாத மனப்பாங்கு தமிழர்கள் நாம் தான் உயர்ந்தவர்கள். எங்களுடைய கலாச்சாரம் , மொழி மற்றும் மதம் மட்டுமே உயர்ந்தது என்ற உயர்வுச் சிக்கல் அதிகரித்திரிக்கின்றது. இதனாலேயே சீமான் போன்ற பிற்போக்குவாதிகளை ஆதரிக்கின்றனர்.

கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் “நம்ம பொடியல் ‘’ என்ற தலைப்பில் இசைப்பயணம் மேற்கொண்ட ரப் பாடகர் வாகீசன் இராசையா குழுவினரின் இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கலந்துரையாடல் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சமூகச் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

சிறுபான்மை மக்களுக்கெதிரான கருத்துக்களை விதைத்து எவ்வாறு மோடி அரசு இந்தியாவில் இந்துத்துவ மத அரசியலை நடத்துவதை விமர்சிக்கும் ஆய்வாளர்கள். ஈழத்தமிழர்கள் இடையே வளர்ந்து வரும் தீவிர தேசியவாத வலதுசாரிச் சிந்தனைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கனடாவில், லண்டனில் தமிழர் ஒருவர் எம்பியானால் கொண்டாடும் புலம்பெயர் தமிழர்கள், சீமான் பேச்சை கேட்டு தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்கின்றனர். அதேநேரம் உலகெங்கும் புலம்பெயர்ந்து தொழில் புரியும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடாது என்கின்றனர். கிட்லர் எப்படி யூத இனமக்களை ஜேர்மனியர்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி யூதர்களை எதிரிகளாக சித்தரித்து தனது ஆட்சியை நிலைநிறுத்தினார், அதேமாதிரி ஏஎப்டி கட்சி இஸ்லாமியர்களை மற்றும் வெளிநாட்டு மக்களை ஜேர்மனியர்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி வாக்கு சேகரிக்க முயற்சிக்கின்றது. இதேபாணியை சீமான் தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கையை தமிழத் தேசியத்துக்கு எதிராக நிறுத்தி தனது பிழைப்பு அரசியலை முன்னெடுக்க முயல்கிறார்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் மெல்ல மெல்ல உருவாகி வரும் இந்த தீவிர வலதுசாரி தமிழ்த்தேசிய வாதம் முறியடிக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சரிபிழைக்கு அப்பால் எப்போதுமே பிறிதொரு இனத்தினை முற்றுமுழுதாக வெறுத்து இனவழிப்பு செய்யும் மனநிலையோ கொள்கையோ காணப்பட்டிருக்கவில்லை. அவ்வப்போது பரஸ்பர சந்தேகம், தவறான புரிந்துணர்வு மற்றும் பழிவாங்கல் என தமிழர் தரப்பால் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அத்தாக்குதல் தற்காலிகமானவையாகவும் பிழையான வழிநடத்தல்களாகவுமே காணப்பட்டிருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய போராட்ட இயக்கங்களிடமும் கூட இஸ்லாமிய வெறுப்பு காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் புலிகள் அற்ற தற்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் ஒரு இஸ்லாமிய போபியா காணப்படுகின்றது.

ஜேர்மனியில் வருகிற தேர்தலில் 20 வீத த்திற்கு அதிகமான வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படும் கடும்போக்கு தேசியவாதம் பேசும் ஏஎப்டி கட்சியை கண்டித்து ஜேர்மன் மக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள். கிட்லரின் நாஸி ஆட்சியினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து பாடம் படித்த ஜேர்மனியர்கள் ஏஎப்டியை வெறுக்கிறார்கள். தமிழர்களும் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 30 வருட யுத்தம் தந்த வடுக்கள் மற்றும் வலிகளை மறக்க கூடாது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் அறம் நிலைநாட்டபட வேண்டும்.

எண்பதுக்களில் தாயகத்தின் குரலாக இருந்த ஆனந்தி அக்கா பிற்காலத்தில் புலிகளின் குரலாகி மௌனித்துக் கொண்டார் ! : தேசம் த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் முற்பகுதியில், இலங்கைப் பேரினவாத அரசுகளின் கொடும் கரங்கள் தமிழ் மக்களை நசுக்கிய நாட்கள். இலங்கையின் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பதை இலங்கைத் தேசிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்த காலம். மின்சார வசதியற்ற கிராமங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வரவேற்பறைகள். வானொலிகள் கோலோச்சிய காலகட்டம். அன்று பத்திரிகைகளை வாங்கும் வசதி குடும்பங்களில் இல்லை. சனசமூக நிலையங்களில் போய் பத்திரிகை படிக்கின்ற காலம். சன சமூக நிலையங்களிலும் ஒவ்வொரு பக்கத்தை ஒவ்வொருவர் வைத்து வாசிப்பார்கள். தகவலுக்கான கேள்வி மித மிஞ்சியிருக்கும். ஆனால் தகவல் கிடைப்பதற்கான வழிகள் மிக மிக அரிதாக இருந்த அந்தக் காலம்.

விரல் நுனியில் தட்டினால் செய்திவரும் இன்றைய காலத்தில் செய்திகளின் ஆயட்காலம் மிக மிக அரிது. அன்று நிலைமை அவ்வாறில்லை. 1986 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதை அந்த ரெலோ இயக்கப் போராளிகள் அறிந்து உணர்ந்து கொள்ளவே பல மணிநேரம் ஆகியது. ஆவ்வாறான ஒரு காலகட்டத்தில் மக்கள் செய்திகளுக்காக ஏங்கினர்.

பிபிசி தமிழோசையில் ஆனந்தி அக்காவின் குரலால் தாயகத் தமிழர்கள் ஈர்க்கப்பட்டு இருந்தனர். அதேபோல் பிபிசி தமிழோசையில் சங்கர் அண்ணா, விமல் சொக்கநாதனும் குறிப்பிடத்தக்கவர்கள். சமகாலத்தில் பணியாற்றியவர்கள். விமல் சொக்கநாதன் சில ஆண்டுகளுக்கு முன் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை வருத்தத்திற்குரிய பதிவு. இவர்கள் வரிசையில் தாயக மக்களை தன்வசப்படுத்திய மற்றையவர் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலி அறிவிப்பாளராக இருந்த ஜெகத் கஸ்பர்.

எண்பதுக்களில் இவர்களின் குரல்களுக்காக மக்கள் தவமிருந்தனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களே ஒலிபரப்பாகும் இச்செய்தித் சேவைவைகளினூடாக மட்டுமே வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் என்ன நடக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அன்றை நாட்களில் அப்போதைய இலங்கை அரசு பற்றரிகளைத் தடைசெய்த போது சைக்கிள் டைனமோக்களை வைத்து செய்தி கேட்ட காலங்கள் அது. தமிழ் மக்கள் மிக நெருக்கடியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த குரல் பிபிசி ஆனந்தியின் குரல். அதனால் அவர் என்றும் தமிழ் மக்களின் ஒரு செலிபிரேற்றியாகவே வாழ்ந்தார்.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நெருக்கமானவராகவும் குடும்ப நண்பராகவும் மாறினார். செய்தி சேகரிப்புக்காகவும் அதற்கு மேலாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கும் மிகுந்த நட்பானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நேர்கண்ட மிகச் சிலரில் பிபிசி ஆனந்தி அக்கா குறிப்பிடத்தக்கவர். அதைவிட இந்தியாவின் ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளர் அனிதா பிரதாப், ஜெகத் கஸ்பர் ஆகியோரும் வே பிரபாகரனை நேர்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் பிபிசி ஆனந்தி அக்கா ஒரு ஊடகவியலாளராக அல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாகவே மாறினார். துரதிஸ்ட்ட வசமாக பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்களின் பாத்திரம் இவரோடு முடிவுக்கு வந்தது. ஆனந்தி அக்கா, விமல் சொக்கநாதன் ஆகியோரின் காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் உள்வாங்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வளர்த்தெடுக்கப்பட வில்லை. அதனால் பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்கள் அதன் பாத்திரத்தை இழந்தனர்.

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் தனது சொந்த வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர். உறவை விபத்தில் இழந்தவர். பிற்காலங்களில் முதமையில் தனது கணவரையும் இழந்தவர். இலங்கை வானொலியில் தயாரிப்பாளராக இருந்தவர். அப்போது வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். 1970க்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து பின் முழுநேர அறிவிப்பாளராக 2005 ஓய்வுபெறும்வரை இருந்தார். 2025 பெப்ரவரி 21இல் அவர் குரல் மௌனமானது.

ஆனந்தி அக்கா முரண்பட்ட கருத்துடையோருடனும் உறவைப் பேணி வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அவர் பற்றுக்கொண்டிருந்த போதும் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஈபிடிபியினருக்கும் இடையே மோசமான பகைமுரண்பாடு நிலவிய காலகட்டத்திலும், தோழர் டக்ளஸ் தேவானந்தவுடனும் நல்லுறவைப் பேணியவர்.

தமிழ் புலமை மிக்க ஆனந்தி அக்கா தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர். தொலைபேசி உரையாடல்களில் தமிழ் இலக்கியத்திலிருந்து பாடல்களை எனக்கு பாட்டிக்காட்டியுள்ளார். எப்போதும் ‘டேய்’, ‘என்னடா’ என்று வாஞ்சையோடு அழைக்கும் அவர், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு என்னையும் வற்புறுத்தி அழைத்திருந்தார். அவர் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே என்னை அழைத்திருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். அப்போது என்னருகில் வந்து சொன்னார், “எப்பிடியும் போய் என்னைத் திட்டித்தான் எழுதப்போகின்றாய்” என்று வாஞ்சையுடன் திட்டிக்கொண்டார். நான் பிரித்தானியாவில் அவரைச் சந்தித்த பின் அவரை ஒரு ஊடகவியலாளராக ஒரு போதும் பார்த்ததில்லை.

இடையிடையே தொலைபேசியல் கதைத்துக் கொள்வார். என்னுடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் உட்பட. ஒரு சகோதரியாக ஒரு நல்ல பண்பாளராக எனக்கு ஆனந்தி அக்கா மீது எப்போதும் ஒரு கௌரவம் உண்டு.

ஜேர்மன் தேர்தலுக்குப் பின் இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா? ஜேர்மன் தேர்தல் பார்வை

ஜேர்மன் தேர்தலுக்குப் பின் இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா? ஜேர்மன் தேர்தல் பார்வை

ஜேர்மனி எஸ்டிபி கட்சியின் பிரமுகர் ரட்ணசிங்கம் அனஸ்லி உடன் நேர்காணல்

 

இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்த பாராளுமன்ற விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு !

இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்த பாராளுமன்ற விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு !

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையே இவ்வாறு சமர்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமலி வீரசேகர தலைமையின் கீழ், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும், இந்த அறிக்கை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து சபாநாயகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவ்வப்போது விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்தாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரை கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

 

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில், “தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் …” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றை நடாத்தி அவை போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம், “விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 02 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது.

தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அண்மையில் நேரில் சென்று சந்தித்து கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பு கடிதத்தை வழங்கியிருந்தனர். இந்த அழைப்பிற்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழரசுக் கட்சியை உடைக்கும் திடடம் பலிக்காது என்பதை தேசம்நெற் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தது. எம் ஏ சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி போடும் கணக்கு பலிப்பதற்கான வாய்ப்பில்லை. மாறாக எம் ஏ சுமந்திரன் மீண்டும் கட்சிக்குள் பலம்பெற்று வருகின்றார்.

சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் அதற்கான முன்வரைவு எதையும் சமர்ப்பிக்காத நிலையிலும், நாம் அரசமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது.

மேலும் எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்தி வரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசாங்கம் அதன் அரசமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசியல்வாதிகளே பாதாள உலக குழுக்களை வளர்த்து விட்டார்கள் – அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் – அமைச்சர் விஜேபால !

அரசியல்வாதிகளே பாதாள உலக குழுக்களை வளர்த்து விட்டார்கள் – அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் – அமைச்சர் விஜேபால !

 

கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்தால் பாதாள உலகம் வளர்க்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பாதாள உலகத்திற்கு கடந்த காலங்களைப் போல அரசியல் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றும் எந்தவொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ பாதாள உலகத்துடன் தொடர்புகளைப் பேணுவதில்லை என்றும் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாதாள உலகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நடவடிக்கைகளை வெளியிட முடியாது என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

பாதாள உலக குழுக்களின் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என முன்னதாக தெரிவித்துள்ளார்.

சாரதியை ‘கழுதை வாடா – பூருவா, வரேன்’ என அழைத்த அனுர தரப்பு எம்.பி – வலுக்கும் கண்டனங்கள் !

சாரதியை ‘கழுதை வாடா – பூருவா, வரேன்’ என அழைத்த அனுர தரப்பு எம்.பி – வலுக்கும் கண்டனங்கள் !

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை பேசுபொருளாகியுள்ளது.

பாதாள உலக குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விடயங்களை ஆராய சுனில் வட்டகல புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். இதன்போது, அவரை சூழ்ந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பினர்.

இவற்றுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், ‘பூருவா, வரேன்’ (கழுதை, இங்கே வா) என கடும் தொனியில் தனது சாரதியை தொலைபேசி மூலம் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுனில் வட்டகல தனது ஓட்டுநரை பூருவா (கழுதை) என்று அழைத்தமை குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வருத்தம் தெரிவித்திருந்ததுடன் குறித்த சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நாடாளுமன்றில் கேள்வி பதில் நேரத்தில் நேற்று அவர் கருத்து தெரிவிக்கையில், புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு பிரதான சந்தேக நபரை 8 மணித்தியாலங்களில் கைது செய்தாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் கூறினார். பொலிஸ் திணைக்களம் 8 மணித்தியலங்களில் திறமையாக சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் மற்றைய சந்தேக நபரான பெண்ணை இதுவரை கைது செய்யவில்லை. அந்தப் பெண் நீர்கொழும்புக்கு சென்று துப்பாக்கிதாரியிடம் இருந்து பிரிந்து தனியாக சென்றுள்ளார். ஆனால் பிரதான துப்பாக்கிதாரி மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் நீங்கள் இவ்வாறு கூறினாலும் ஊடக செய்திகளில் டுபாயில் இருந்து துப்பாக்கிதாரி காட்டிக்கொடுக்கப்பட்டமையினாலேயே துப்பாக்கிதாரியை கைது செய்தாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இது எமது திறமையால் அன்றி டுபாயில் இருந்து பாதாள கும்பலால் காட்டிக்கொடுத்தமை ஊடாகவே அவர் கைதாகியுள்ளார். இப்படிதான் ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சந்தேக நபரின் படங்களை வெளியிட்டு நாட்டுக்கு வீரராக்கியுள்ளீர்கள். இவ்வாறு புகைப்படங்களை பகிர்வதற்கு இடமளிக்க வேண்டாம். அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரை பார்த்து சிரித்து, காதல் கொள்வது போல் காணொளிகள், படங்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளியாகின என்பது தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார் சாமர சம்பத்.

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கியைக் கடத்தி வந்த பெண் சில சமயங்களில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகங்களும் தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரின் தாகம் வெள்ளாள சாதியத் தாயகம்: Jaffna College – யாழ்ப்பாணக் கல்லூரியில் வண பிதா பத்மதயாளனுடன் முரண்படும் பழையமாணவர்கள் !

தமிழரின் தாகம் வெள்ளாள சாதியத் தாயகம்: Jaffna College – யாழ்ப்பாணக் கல்லூரியில் வண பிதா பத்மதயாளனுடன் முரண்படும் பழையமாணவர்கள் !

வட்டுக்கோட்டை சாதியத்தின் கோட்டையாகி தவறான காரணங்களுக்காக பிரபல்யம் அடைந்து வருகின்றது. அங்குள்ள சில சாதி வெறியர்களோடு யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் தங்கள் சாதிய முகத்தைக் காட்டியுள்ளனர். தற்போதைய பிசப் வண பிதா பத்மதயாளன் கல்வியில் முன்நிற்கும் வெள்ளாளர் அல்லாத சமூகத்தவர். இதனைக் காரணமாக வைத்து பழைய மாணவர் சங்கத்தினர் அவருக்கு எதிராகக் காய்களை நகர்த்துகின்றனர். இந்தச் செயற்பாடுகளுக்குப் பின்னணியில் வண பிதா தியாகராஜா இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

தற்போதைய அதிபர் ஓய்வுபெறும் நிலையில் புதிய அதிபரை நியமிக்கும் பொறுப்பு வண பிதா பத்மதயாளனுக்கு உள்ளது. பழைய மாணவர் சங்கத்தினர் தங்களுடைய யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வெள்ளாளரல்லாத ஒருவர் அதிபராக வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளனர்.

ஆறுமுகநாவலர், வெள்ளாளர் அல்லாதோருக்கு பெண்களுக்கு கல்வியை மறுத்துவந்தவர். ஆனால் கத்தோலிக்கத்தின் வளர்ச்சியால் வெவ்வேறு சமூகங்களிலுள்ளவர்களும் கல்வியில் வளர்ச்சி கண்டனர். அதன்பின் கன்னங்கராவின் இலவசக் கல்வித் திட்டத்தால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத்தியிலும் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது. யுத்ததைத் தொடர்ந்து வசதிபடைத்த வெள்ளாளர் சமூகம் பெரும்பாலும் புலம்பெயர ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விகிதம் யாழ் மண்ணில் அதிகரித்தது. யாழில் தற்போது வெள்ளாளரல்லாத சமூகத்தவர் 60 வீதம் வரை காணப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. இருந்தாலும் கல்விக்க மற்றும் கட்டமைப்புகளின் முக்கிய பொறுப்புக்களில் வெள்ளாளரல்லாதோர் வருவது இன்னமும் போராட்டமாகவே உள்ளது. அது யாழ்ப்பாணக் கல்லூரியிலும் எதிரொலிக்கின்றது.

கல்வி மற்றும் தகமைகளில் மேன்மையானவர்கள் இருந்த போதும் அவர்கள் பொறுப்பான பதவிகளுக்கு வருவதை வெள்ளாள சமூகத்தினர் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். அதே சமயம் தகுதியற்றவர்கள் வெள்ளாள சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டால் அதைப் பற்றி மௌனமாகவே இருக்கின்றனர். யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபர் இந்திரகுமாரை அவர் மேலதிக தகுதி பெற்றிருந்த போதும், வெள்ளாளர் அல்ல என்பதால், அவரை பதவியிலிருந்து அவரை வெளியேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது சிவபூமி அறக்கட்டளையூடாக் கோடிக்கணக்கில் பணம் சேர்க்கும் அதிபராவதற்கான தகுதியற்ற ஆறு திருமுருகன் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் அதிபராக இருந்த போது அவரை வெளியேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்கந்தவரோதயா மாணவர்களின் பெற்றோர் ஆறுதிருமுருகனை பாடசாலையிலிருந்து விரட்டினர்.

வட்டுக்கோட்டை சாதிய வெறியாட்டங்களின் பின் முக்கிய புள்ளியாக நின்றவர் தன்னை வேளாள வட்டுர் குருவி என்று சாதியை முன்நிறுத்தி அழைத்தவரும் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரே. இந்த வட்டூர் குருவி மீது அடிதடி, கொள்ளை, கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளது. இருந்தாலும் சங்கரத்தை பத்திராளி கோயிலில் இவர் முடிசுடா மன்னனாக தனது மோட்டார் சைக்கிளில் குருவி என்று எழுதி, தன்னுடைய சாதியத் திமிரைக் காட்டி வருகின்றார். தேசம்நெற் இல் செய்தி வெளியானதையடுத்து இவர் தனது முகப்பக்கத்தில் சாதிய கோசத்தை நீக்கியுள்ளார்.

தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பற்றி எவ்வளவு ஓங்கிக் குரல்கொடுத்த போதும் தம்மோடு வாழ்கின்ற 60 வீதமான ஒடுக்கப்பட்ட சமூகங்களை இன்னமும் சரிசமானமாக நடத்தவில்லை. சிங்களவர்கள் தங்களைச் சரிசமானமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தங்களுக்குள் 60 வீதமானவர்களை மிக மோசடாக இன்றும் அடக்கி ஒடுக்கி கேவலப்படுத்தி வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர்கள் அப்போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் வே பிரபாகரனின் சமூகத்தில் கை நனைக்க மாட்டார்கள், பெண் எடுக்க மாட்டார்கள் பெண் கொடுக்க மாட்டார்கள். தமிழரின் தாகம் வெள்ளாள சாதியத் தாயகம் மட்டுமே.