கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது.

தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அண்மையில் நேரில் சென்று சந்தித்து கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பு கடிதத்தை வழங்கியிருந்தனர். இந்த அழைப்பிற்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழரசுக் கட்சியை உடைக்கும் திடடம் பலிக்காது என்பதை தேசம்நெற் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தது. எம் ஏ சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி போடும் கணக்கு பலிப்பதற்கான வாய்ப்பில்லை. மாறாக எம் ஏ சுமந்திரன் மீண்டும் கட்சிக்குள் பலம்பெற்று வருகின்றார்.

சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் அதற்கான முன்வரைவு எதையும் சமர்ப்பிக்காத நிலையிலும், நாம் அரசமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது.

மேலும் எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்தி வரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசாங்கம் அதன் அரசமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *