அரசியல்வாதிகளே பாதாள உலக குழுக்களை வளர்த்து விட்டார்கள் – அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் – அமைச்சர் விஜேபால !
கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்தால் பாதாள உலகம் வளர்க்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பாதாள உலகத்திற்கு கடந்த காலங்களைப் போல அரசியல் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றும் எந்தவொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ பாதாள உலகத்துடன் தொடர்புகளைப் பேணுவதில்லை என்றும் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாதாள உலகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நடவடிக்கைகளை வெளியிட முடியாது என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
பாதாள உலக குழுக்களின் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என முன்னதாக தெரிவித்துள்ளார்.