சாரதியை ‘கழுதை வாடா – பூருவா, வரேன்’ என அழைத்த அனுர தரப்பு எம்.பி – வலுக்கும் கண்டனங்கள் !
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை பேசுபொருளாகியுள்ளது.
பாதாள உலக குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விடயங்களை ஆராய சுனில் வட்டகல புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். இதன்போது, அவரை சூழ்ந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பினர்.
இவற்றுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், ‘பூருவா, வரேன்’ (கழுதை, இங்கே வா) என கடும் தொனியில் தனது சாரதியை தொலைபேசி மூலம் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுனில் வட்டகல தனது ஓட்டுநரை பூருவா (கழுதை) என்று அழைத்தமை குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வருத்தம் தெரிவித்திருந்ததுடன் குறித்த சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.