இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்த பாராளுமன்ற விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு !
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையே இவ்வாறு சமர்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமலி வீரசேகர தலைமையின் கீழ், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும், இந்த அறிக்கை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று சபாநாயகர் மேலும் அறிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து சபாநாயகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவ்வப்போது விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்தாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரை கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.