2025

2025

மட்டு பள்ளி மைதானத்தில் கொலைவெறி வாள்வெட்டு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் !

மட்டு பள்ளி மைதானத்தில் கொலைவெறி வாள்வெட்டு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் !

 

மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் அண்மையில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இதன்போது அங்கு வாள்களுடன் நுழைந்த இந்த கும்பல் விளையாடிக்கொண்டிருந்த சிலரை துரத்தி துரத்தி வாளால் வெட்டித் தாக்கியுள்ளனர்.

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !

தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, இந்தப் பிரச்சினையை முடிவுறுத்துவோம். அதற்கு எமக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று யாரும் குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என்றனர்.

தொடரும் துப்பாக்கி சூடுகள் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு !

தொடரும் துப்பாக்கி சூடுகள் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு !

 

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முழு சேவைக் காலத்தையும் முடிப்பதற்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய இராணுவ வீரர்கள் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளமை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் பயிற்சி பெற்று ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் வெளியேறுபவர்கள், பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளமை நிகழ்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.

தற்போது பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எவ்விதமான அரசியல் பாதுகாப்பும் இல்லை. அரசாங்க துப்பாக்கிகள் தொடர்பான கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு, கணிசமான அளவு பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன – என்றார்.

இதேவேளை, வீட்டில் கசிப்பு வகை போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடற்படை அதிகாரி ஒருவர் பதுளையில் நேற்று கைதாகியுள்ளார். அத்துடன் பேருந்துக்குள் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 123 துப்பாக்கி ரவைகள் பண்டாரவளையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

 “பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத் 

“பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு: பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்” – அமைச்சர் விஜித ஹேரத்

 

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து, மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பில் உரையாற்றியிருந்த அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதை கண்டு அரசாங்கம் கலக்கமடைய போவதில்லை. மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுவோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் காலாவாதியடைந்துள்ள இந்த அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு அமைய இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும். அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மரணதண்டனையை மீளக் கொண்டுவரும் எண்ணம் எமக்கு இல்லை – நீதியமைச்சர் 

மரணதண்டனையை மீளக் கொண்டுவரும் எண்ணம் எமக்கு இல்லை – நீதியமைச்சர்

 

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் எந்த சூழ்நிலையிலும் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து நீதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சராகவுள்ள உள்ள ஜனாதிபதி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்து தெளிவாக உள்ளார். நீதிமன்ற கொலையின் பின்னரும் இது குறித்து ஆராயப்படவில்லை.

தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம் மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதிமன்றங்களில் மரணதண்டனை தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் 1976ம் ஆண்டு முதல் மரணதண்டனையை நிறைவேற்றுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பழக்கடைச் சிறுவனிடம் ஆளுநர் பேச வேண்டும் ! தனது அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் !

பழக்கடைச் சிறுவனிடம் ஆளுநர் பேச வேண்டும் ! தனது அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் !

ஆளுநர் வேதநாயகன் விழாக்களில் சொற்பொழிவாற்றுவதோடு நின்று விடாமல் இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் நகரப் பகுதியில் தெருவோரம் பாடசாலை மாணவன் ஒருவர் வைத்திருந்த பழக்கடையை அகற்றி யாழ் மாநகரசபை அதிகாரிகள் சர்ச்சையில் சிக்கியிருந்தனர்.

அது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்தது.

பாடசாலை செல்ல வேண்டிய வயதில் தெருவோரம் பழ விற்பனையில் ஈடுபடும் மாணவனிடம் பழங்களை மாநகரசபை ஊழியர்கள் வழமையாக இலஞ்சமாக பெற்று வந்திருக்கின்றனர். குறிப்பிட்ட தினத்தில் தான் பழங்கள் கொடுக்காமையாலேயே அதிகாரிகள் தனது கடையை அகற்றினர் என்கிறார். மேலும் இரு அதிகாரிகள் தன்னை பிடித்துக் கொள்ள தனக்கு முதுகில் அடிகள் விழுந்ததாகவும் கூறினார்.

இம் மாணவனின் பழக்கடைக்கு விஜயம் செய்த யுரியூப்பர் ரஜித் இடம் அம் மாணவன் இவ்வாறு கூறினார். அவர் மொத்த பழ வியாபாரியான ஒரு முதலாளியிடம் பழங்களை வாங்கி விற்பனை செய்கிறார். அம் மாணவனுக்கு நாளாந்த கூலியாக 2500 ரூபாய் கிடைப்பதாக தெரிவித்தார். இந்த விடயத்தில் மாநாகர சபை அதிகாரிகள் ஏனைய நடைபாதை வியாபாரிகளிடமும் மணிக்கூடு மற்றும் ரிசேர்ட் என இலஞ்சம் வாங்கின்றனர் என்பதைக் கேள்வியுற்றதாகவும் இச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாநகரசபை நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்களை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்கள் நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வழிசமைத்திருக்கின்றது.

3000 நாட்களை தொட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டமும் அதன் அரசியலும் – மேலுமொரு தாய் மரணம் ! 

3000 நாட்களை தொட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டமும் அதன் அரசியலும் – மேலுமொரு தாய் மரணம் !

 

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டம் 3000ஆவது நாளை நேற்று எட்டியது. வவுனியா தபால் திணைக்களத்துக்கு அருகில் 3000ஆவது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உருவப்படத்தை தாங்கியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெவ்வேறு நாடுகளாலும் வெவ்வேறு குழுக்களாலும் தத்தம் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் போராட்டங்கள் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டது. மேலும் இப்போராட்டங்கள் பரவலாக அரசியல் மயப்படுத்தப்பட்டதால் தமிழ்கவி மற்றும் அனந்தி சசிதரன் போன்ற பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்தல் கால பிரச்சாரங்களில், காணாமல் ஆக்கப்படுதலின் வலியை நானும் உணர்ந்துள்ளதாகவும், நாங்கள் ஆட்சியமைக்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தான் என்றும் நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் சில உறவுகள் தங்களுடைய பிரச்சினையை ஐநாவில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டதாகவும் அவ்வாறு சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டதால் இவர்களை ஐநாவுக்கு அழைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ ஐநா கூட்டத் தொடரில் ஜனவரி 16இல் கிட்டத்தட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டது போல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரயதாஸ் பொஸ்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடையே மிகுந்த பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் மரியதாஸ் பொஸ்கோ தனது மனித உரிமைச் செயற்பாடுகள வைத்து வெளிநாடுகளுக்கு அழைத்து வந்து பணம் சேர்த்தார். என்கின்றனர்.

மற்றைய தரப்பினர், கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய வாழ்க்கையை தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக அர்ப்பணித்த ஒருவரை தங்களுடைய சுயநலன்களுக்காகக் காட்டிக்கொடுத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். ஐநா மனித உரிமை அரங்கில் வைத்து சட்டவிரோதமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்ற அடிப்படை விதிமுறைகூட மரியதாஸ் பொஸ்கோ விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை யாரும் இதுவரை கேள்விக்கு உட்படுத்துவதாக இல்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புகள் சர்வதேசக் கொடிகளை ஏந்தி, காஸாவில் பாலஸ்தீனியர்களின் படுகொலைக்கு உதவிய சர்வதேச நாடுகள் தங்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்று கோருகின்றன. சர்வதேச நாடுகள் உள்ளிட்ட கலப்புப் பொறிமுறையை முன்மொழிந்த அமெரிக்கா நேற்று ஆரம்பித்த ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடரிலிருந்து விலகியுள்ளது. தமிழ் மக்கள் சார்பில் ஐநாவுக்கு பேச்சாளர்களை அழைத்து வருகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மார்ச் 23 இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறைக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்கும்.

இதனிடையே காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார்.

இவரின் மகன் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இறுதி போரில் இழந்த தமது உறவுகளை தேடி போராட்டம் நடாத்தி வந்த நூற்றுக்கும் அதிகமான பெற்றோர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

 

“தமிழர்களுக்கு அனுர குமார பிச்சை போடத் தேவையில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் நாங்கள் பிச்சை தருகிறோம் உங்களுக்கு” தனது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத்திலேயே ஆரம்பித்து விட்டார் பா. உ அர்ச்சுனா. வடக்குக்குகான நிதி ஒதுக்கீட்டை வரவேற்றுப் பேசிய அர்ச்சுனா நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் தடாலடியாக பல்டி அடித்து எங்களுக்கு பிச்சை வேண்டாம், உங்களுக்கு நாங்கள் பிச்சை போடுகிறோம் என்றார்.

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கினால் நாட்டிற்கு பில்லியன் கணக்கான முதலீடுகளை எமது சகோதரர்கள் கொண்டு வருவார்கள் என நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மொத்த மூலதனச் செலவில் வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 0.1 வீதம் மட்டுமே ஆகும். இது அநுர அரசாங்கம் தமிழர்களுக்கு போட்ட பிச்சை. 45,000 தமிழர்களை கொன்றுவிட்டு இதுவே எங்களுக்கு போடும் பிச்சை.

இதேவேளை, சுகாதாரத் துறையில் வடக்கிற்கு 0.6 வீதமும் கிழக்கிற்கு 0.8 வீதமும் ஒதுக்கியுள்ளீர்கள். முடிந்தால் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குங்கள். பில்லியன் கணக்கான பணத்தை நாம் நாட்டிற்குள் கொண்டு வருகின்றோம். நான் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது” என்றார்.

அடிக்கடி நிறம்மாறும் அர்ச்சுனா விழுகின்ற பக்கம் குறிவைக்கிறார் என்கிறார் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம். பா உ அர்ச்சுனா வெளியிடும் புள்ளிவிபரங்கள் அவர்களுக்கு ஏற்றவகையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் 2009 மே 17 வரை சர்வதேச அளவில் புலி உறுப்பினர்களிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் இருந்தது. அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் வருமானம் வந்தகொண்டிருந்தது. அனால் 2009 மே18 இல் தலைவர் வந்து கேட்டால் தான் தருவோம் என்று பா உ அர்ச்சுனா குறிப்பிடும் சகோதரர்கள் அறிவித்துவிட்டார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கிய அத்தனை பில்லியன் சொத்துக்களும் ஒரே இரவில் காணாமல் போனது என்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் ஆய்வாளர் சோலையூரான். முடிந்தால் அர்ச்சுனா வேறு யாருக்கும் பிச்சை போட வேண்டாம் அவர் நேசிக்கும் தலைவனுடைய பாசறையில் வழந்தவர்கள் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு 15 வருடங்கள் துன்பத்தில் உளல்கின்றார்கள் அவர்களுக் உதவட்டும். அர்ச்சுனா தன்னுடைய சகோதரர்களைக் கேட்டு உதவச் சொல்வாரா? எனக் கேள்வி எழுப்புகின்றார் பாரிஸில் வாழும் சோலையூரான்.

“பாதாள உலக குழுக்கள் பழைய அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டார்கள் – எங்களால் இல்லாதாக்கப்படுவார்கள்” – அருண் ஹேமச்சந்திரா !
 பாதாள உலக பிரச்சினை நாம் உருவாக்கிய ஒன்றல்ல என பிரதியமைச்சர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார். முன்னாள் அரசியல்வாதிகளே பாதாள உலக கோஸ்டிகளை உருவாக்கியதாக கூறிய அவர், சொத்தி உபாலி, பொட்ட நௌபர் போன்ற பல பாதாள உலக தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளின் பிரதிபலனாக உருவானதாகவும் அவர்கள் அரசியல் தயாரிப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். பழைய அரசியல் கலாசாரத்தால் பாதாள உலக கோஷ்டி உருவானார்கள், ஆனால் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கலாசாரத்தில் அது இல்லாமல் போகும் என அவர் கூறினார்.
இதுவேளை, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும். நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவுத்துள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அரசாங்க அதிபர் மகன் ஏற்படுத்திய விபத்தினால் இருவர் காயம் 

அரசாங்க அதிபர் மகன் ஏற்படுத்திய விபத்தினால் இருவர் காயம்

 

யாழ் அரசாங்க அதிபர் ம. பிரதீபனின் மூத்த மகன் ஆதிரையன் செலுத்தி வந்த சொகுசு கார் யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ஆதிரையனும் அவரது நண்பனும் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பல்வேறு சர்ச்சையான தகவல்கள் ஊடகங்களில் பரப்படுகின்றன.

அரசாங்க அதிபரின் மகன் செலுத்தி விபத்திற்குள்ளான வாகனம் அரசாங்க அதிபரின் உத்தியோக பூர்வ வாகனம் எனவும் அதனை சாரதி இன்றி மாவட்ட செயலாளரின் மகனே செலுத்தி சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. மறுபுறம் விபத்திற்குள்ளான வாகனம் அரசாங்க அதிபரின் தனிப்பட்ட வாகனம் எனவும் கூறப்படுகிறது. அதேநேரம் அரசாங்க அதிபரின் வாகனம் என பிறிதொரு காரின் படமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இவ் விபத்து தொடர்பாக பிறிதொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. காரை செலுத்திய அரசாங்க அதிபரின் மகன் ஆதிரையன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கூறப்படுகிறது. விபத்து இடம்பெற்ற வேளையில் ஆதிரையன் போதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவரை இந்தப் பிரச்சினையிலிருந்து பாதுகாக்க அரசாங்க அதிபரின் இரண்டாவது மகனான ஆரணனை மது அருந்தினாரா? என்ற சோதனைக்கு காவல்துறையினர் ஈடுபடுத்தியதாகவும் பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஆள்மாறாட்ட பின்னணியிலேயே அரசாங்க அதிபரின் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தை விசாரிக்கும் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர் மற்றும் எம்பிக்கள் இவ்விடயம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.