தொடரும் துப்பாக்கி சூடுகள் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு !
முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முழு சேவைக் காலத்தையும் முடிப்பதற்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய இராணுவ வீரர்கள் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளமை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் பயிற்சி பெற்று ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் வெளியேறுபவர்கள், பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளமை நிகழ்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.
தற்போது பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எவ்விதமான அரசியல் பாதுகாப்பும் இல்லை. அரசாங்க துப்பாக்கிகள் தொடர்பான கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு, கணிசமான அளவு பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன – என்றார்.
இதேவேளை, வீட்டில் கசிப்பு வகை போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடற்படை அதிகாரி ஒருவர் பதுளையில் நேற்று கைதாகியுள்ளார். அத்துடன் பேருந்துக்குள் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 123 துப்பாக்கி ரவைகள் பண்டாரவளையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.