2025

2025

தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சிகள் கதறுகின்றன ! தேர்தல் ஆணைக்குழு திணறுகிறது ! என்பிபி உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீட்டு வாய்ப்பு அதிகம் ! ஜனாதிபதி அனுர

தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சிகள் கதறுகின்றன ! தேர்தல் ஆணைக்குழு திணறுகிறது ! என்பிபி உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீட்டு வாய்ப்பு அதிகம் ! ஜனாதிபதி அனுர

யாழில், மன்னாரில் ஏப்ரல் 17, நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட உரை அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ஆனால் மற்றைய கட்சிகள் ஆட்சி அமைக்கும் சபைகளுக்கு அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்பதை ஒன்றுக்கு பத்துதடவை யோசித்துத்தான் நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதே கருத்துப்பட நாட்டின் பல பாகங்களிலும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

மன்னாரில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க உள்ளுராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்டது தமிழ் தேசியக் கட்சிகளைக் கதறவிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இது மக்களை அச்சுறுத்தும் முயற்சி என்றும், தேர்தல் விதிமீறலாகும் என்றும் தெரிவித்தார். அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழ் மக்கள் ஜனாதிபதி உரையின் பின்னணியை புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதே கருத்தை வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எம் ஏ சுமந்திரன், ‘மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

பா உ சிறிதரன் ஜனாதிபதி அவ்வாறு செய்தால் தனிநாடு தமிழீழம் கோருவோம் என உசுப்பியுள்ளார். ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்தான் ஆட்சியமைக்கும். இங்குள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்க முடியாது என அரசாங்கம் கூறுமேயானால் எமக்கான தனிநாட்டை பிரித்துத் தருவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் அதனை முன்னிறுத்தி நாம் பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு தயாராவோம்’ – இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பா உ சிறிதரனின் இந்த உசுப்பல் பேச்சுக்களுக்கு மக்கள் மசியவில்லை. அதனால் பொதுவேட்பாளர் அரயநேந்திரன் மண் கவ்வியமை தெரிந்ததே.

இந்த விடயம தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் குற்றம்சாடியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுவது ஒழுக்கத்துக்கு முரணானதாகும். இது தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் ஜனாதிபதி அச்சுறுத்துகின்றார். ஜனாதிபதியால் தெரிவிக்கப்படும் இந்த கருத்துக்கள் முற்றுமுழுதாக தேர்தல் சட்டத்துக்கு முரணானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வருண தீப்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, மன்னாரில் தேர்தல் பிரசாரத்தின்போது உள்ளுராட்சிமன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்து தேர்தல் விதிமீறல் எனக் குறிப்பிட்டுத் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இவ்விடயம் தொடர்பில் ஏப்ரல் 21 அன்று ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக அரசியல் செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரயசேகரம், இவ்விடயத்தை ஜனாதிபதி அனுர வேறு விதமாகத் தெரிவித்து இருக்கலாம் என்றும் ஆனால் ஏனைய கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சபைகளுக்கு நிதியைக் கொடுக்காமல் இருக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்றால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் ! பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்றால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் ! பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நிராகரித்தால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் கொகக்குவிலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று ஏப்ரல் 18இல் தெரிவித்தார்.

நேற்று ஏப்ரல் 17இல் யாழுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தமிழ், சிங்களக் கட்சிகள் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து விலத்திக்கொண்டால் அப்பிரச்சினையை தன்னால் இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இக்கருத்து குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நோக்கி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஏப்ரல் 18இல் யாழ் கொக்குவில்லில் பத்திரிகையார் சந்திப்பை ஏற்பாடு செய்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தாங்கள் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவதற்குத் தயார் எனத் தெரிவித்தார். அச்சந்தர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கு தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவும் ஏனைய சிங்களத் தலைவர்கள் போன்ற மோசமான இனவாதியே எனவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டினார்.

‘வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். உள்ளுராட்சி சபைகளிலும் அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிப்பார்கள்’ என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகச் சந்திப்பில் ஏப்ரல் 18இல் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் எமக்கு வாக்களித்த மக்களை நாங்கள் ஒரு போதும் கைவிடமாட்டோம் எனத் தெரிவித்தார். நாட்டில் இனவாதம் மதவாதம் இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே என அவர் வலியுறுத்தினார்.

ஓடும் ரயிலில் ஏரிஎம்மெஷின் (ATM)

ஓடும் ரயிலில் ஏரிஎம்மெஷின் (ATM)

அபிவிருத்தி அடைந்த நாடுகள் என மார் தட்டும் நாடுகளுக்கே முன்னோடியாக இந்தியா ஓடும் ரயிலில் முதன்முறையாக ஏரிஎம் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. மும்பையிலிருந்து மான்மாட் வரை இயக்கப்படும் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ் புகையிரத சேவையிலேயே இந்தியாவின் மத்திய ரயில்வே இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

உலகத்தில் இணையவழி மற்றும் பண அட்டைகள் மூலம் பரிவர்த்தணை அதிகமாகி வருகிறது. எப்படியாயினும் வங்கிகளிலிருந்து நாணயத்தாள்களாக பணத்தை எடுத்து பயன்படுத்துவதும் இன்னும் தொடரத்தான் செய்கின்றது. அந்தவகையில் பணம் எடுக்கும் ஏரிஎம் இயந்திரங்கள் தமது செல்வாக்கை இன்னும் கூட இழக்கவில்லை என்று கூறலாம்.

புளியம்பொக்கணை வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்பு !

புளியம்பொக்கணை வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்பு !

ஏப்பிரல் 16 பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிd; mடிப்படையில் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 85 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி புளியம் பொக்கணை இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் நுட்பமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பளையை சொந்த இடமாகக் கொண்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் கஞ்சா வியாபாரத்திற்காக புளியம் பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவர் புஸ்பராணி – காலமானார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவர் புஸ்பராணி – காலமானார்

ஈழப் போராட்டத்தின் மூத்த பெண் போராளி, சிறையில் அடைக்கப்பட்ட முதல் இரு பெண்களில் ஒருவர். ஈழப் போராட்டத்தில் தன் அனுபவத்தை “அகாலம்” நூலாக தந்தவர். புஸ்பராணி சிதம்பரி நேற்று ஏப்ரல் 17இல் காலமானார். புற்றுநோயல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வாழ்ந்த இவர் நேற்று அவர் புலம்பெயர்ந்த மண்ணாண பாரிஸில் காலமானார்.

அவருடைய வாழ்க்கையின் ஒரு காலத்தை அவரே தன் எழுத்துக்களால் பதிவு செய்த குறிப்பு: “என் சகோதரன் புஷ்பராஜா வெலிக்கடைச்சிறை ஆண்கள் பிரிவிலும், கண்டிச் சிறையில் தம்பி வரதனும் (பபா), தங்கை ஜீவரட்ணராணி சில மாதங்கள் என்னுடன் வெலிக்கடைச் சிறை பெண்கள் பிரிவிலும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருந்த காலங்களில் காவல் நிலையங்களிலும், சிறை வாசல்களிலும் எமக்காகத் தவம் கிடந்து பரிதவித்து ஊணுறக்கமில்லால், கண்ணீருடன் அலைந்த என் அம்மா.

அம்மாவை நினைத்தாலே இந்த நினைவுகள்தான் கண்ணீருடன் முன்னே வருகின்றன. நான் வெளிநாடு வரப் புறப்பட்டபோது, அந்த ஏக்கத்தில் யாருமே எதிர்பாராமல், தனது ஐம்பதாவது வயதில் எம்மைவிட்டு அம்மா மறைந்தது ஒரு கனவுபோல் இருக்கின்றது. பிள்ளைகளால் மகிழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டிய தருணத்தில் துர்பாக்கியமாக என் தாய் எம்மைவிட்டுப் பிரிந்ததை எண்ணுந்தோறும் கலங்குகின்றோம் பிள்ளைகள் நாம். எம்மைத் தவிக்க விட்டு அம்மா மறைந்த நினைவுநாள் இன்று” என ஏப்ரல் 4 இல் தன் முகநூல் பதிவில் பதிந்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையை கண்டறிவோம் ! ஜனாதிபதி அனுர

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையை கண்டறிவோம் ! ஜனாதிபதி அனுர

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உண்மையை கண்டறிவது, பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இன்று யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் பூங்காவில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் “காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பிலான பிரச்சனை உள்ளது” எனக்கு தெரியும். “உங்களது பிள்ளைகளை நீங்கள் அரசாங்கத்திடமோ அல்லது போலீஸ் நிலையம் ஒன்றிலோ இல்லாவிட்டால் இராணுவ முகாமிலோ கையளித்து இருந்தால் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். அது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகும்.

சாதாரணமாக ஒருவர் உயிரிழந்தால் நாம் சடலத்தை காண்போம். இரண்டு மூன்று வாரங்கள் கண்ணீர் வடிப்போம், சிறிது காலத்தின் பின் ஓரளவு வழமை நிலைக்கு திரும்பி விடுவோம். ஆனால் ஒரு பிள்ளை காணாமல் போனால் அவ்வாறு அல்ல. அந்தப் பிள்ளை இன்னும் உயிருடன் வாழ்கின்றார் என்று அந்த தாய் நினைப்பார். அந்த வேதனை எனக்கு நன்றாக தெரியும் எனது உறவும் முறை சகோதரர்களும் காணாமல் போயுள்ளனர்.

எனவே அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உண்மையை நாம் எடுத்துக் கூற வேண்டும், அது யாரையும் பழிவாங்கும் விடயமோ, அல்லது சிறைக்கு அனுப்புவதற்கான விடயமாகவோ இல்லை. அது அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கு தேவைப்படுகிறது. அரசாங்கம் என்பதற்காகவே நாம் அதனை செய்வோம்,” என என ஜனாதிபதி அனுர உறுதியளித்தார்.

அனுர – தமிழர் தேன்நிலவு, ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளையும் தாண்டி ஓகோ என்றுள்ளது ! ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களின் மனங்களோடு உறவாடுகிறார் !

அனுர – தமிழர் தேன்நிலவு, ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளையும் தாண்டி ஓகோ என்றுள்ளது ! ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களின் மனங்களோடு உறவாடுகிறார் !

ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவின் வடக்கு – கிழக்கு சுனாமிப் பயணம் மீண்டுமொரு அலையைக் கிளப்பியுள்ளது. அனுர ஜனாதிபதியாகி ஏழுமாதங்களான பின்னும் தமிழ் மக்களுக்கும் அனுராவுக்குமான தேன்நிலவு தொடர்கின்றது. ஏப்ரல் 17ம் திகதி வடக்கிற்கும் அதற்கு முன் கிழக்கிற்கும் பயணித்த ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் தனது உரையை நிகழ்த்தினார்.

இராணுவ வசமிருந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும், தமிழ் மக்களின் கடல்பரப்பு பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு உறுதியளித்தார். மக்களும் கைதட்டி ஆரவாரித்து தங்கள் அதரவை வழங்கினர்.

பாதுகாப்பு காரணத்துக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன எனவும் தற்போது யுத்தம் என்ற ஒன்று நம் நாட்டில் இல்லை எனினும் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் தன் வசம் வைத்திருப்பதற்கு எவ்வித உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தையிட்டி விகாரையும் ஒரு பெரிய பிரச்சினையில்லைஇ வடக்கில் இதனை வைத்து அரசியல் செய்யும் தமிழ் கட்சிகள் அதிலிருந்து விலத்த வேண்டும். தெற்கில் இதனை வைத்து அரசியல் செய்யும் சிங்களக் கட்சிகள் விலத்த வேண்டும். இப்பிரச்சினையை சாதாரணமாகத் தீர்த்துவிட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் மீனவர் பிரச்சினை தொடர்பில் நாங்கள் இந்தியப் பிரதமருடன் பேசியுள்ளோம். எமது எல்லைகளைப் பாதுகாக்கும்படி கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் இந்திய மீன்பிடிப் படகுகளின் வருகை கணிசமான அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான கைதுகுள் மற்றும் அபராதம் என்பன இலங்கைக் கடற்பரப்பினுள் நுழையும் இந்திய மீனவர்களுக்கு லாபத்தைத் தராது என்ற நிலையேற்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதி வழங்கி இருந்தார். தமிழ் – சிங்கள தேசியவாதத்தை முன்நிறுத்தும் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை, மதவாதத்தை வளர்க்க முற்படுகின்றனர். ஆனால் தேசிய மக்கள் கட்சி அதற்கு அனுமதிக்காது என ஜனாதிபதி அனுர கண்டிப்புடன் தெரிவித்தார்.

மே 6இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இடம்பெற்ற பிரசாரத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

விடுவிக்க கூடிய அனைத்து காணிகளையும் நாம் விடுவிப்போம், அதில் சென்று மக்கள் வசிக்கலாம், அதில் விவசாயம் செய்யலாம், நாம் அந்த காணிகளை உங்களுக்கு மீண்டும் வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என நினைத்து ஏனையவர்கள் காணிகளை தொடர்ந்தும் இராணுவ முகாம்களாக அவ்வாறே வைத்திருந்தனர் எனினும் நாம் அவ்வாறு செயல்படுவதில்லை. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என்ற எண்ணத்துடன் நாம் செயல்படவில்லை, மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாது என்றும் ஜனாதிபதி அனுரா உறுதியளித்தார்.

 

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வடக்கு புலனாய்வு, ஊர்க்குருவி, யாழ்ப்பாண புலனாய்வு, மயிர் புலனாய்வு, மட்டை புலனாய்வு மற்றும் மண்ணாங்கட்டி புலனாய்வு என இன்ன பல போலி முகநூல் கணக்குகளில் ஒளிந்திருக்கும் கோழைகளின் கொட்டத்தை என்பிபி அரசாங்கம் உடனடியாக அடக்க வேண்டும். ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை ஆளும் என்பிபி அரசாங்கம் இயற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தளம் ஊடாக பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்படியான பதிவுகளை போலி முகநூல் கணக்குகளை இயக்குபவர்கள் ஓரினசேர்க்கையை சட்டபூர்வமாக அங்கீகரித்த நாடுகளிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு துணிவு இருந்தால் தமது முகங்களை காட்டி சொந்த முகநூல் கணக்கில் வந்து பதிவுகளை இட வேண்டும். அப்போது அவர்கள் வாழும் நாடுகளிலேயே அதற்கான வரவேற்பை பெறுவார்கள். கம்பி எண்ணுவார்கள். அது மட்டுமல்ல இவர்களது பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களுமே இவர்களைத் துரத்திவிடுவார்கள்.

ஊழல் ஒழுப்பு அணி வன்னி “ஓரினசேர்க்கை கழுதைகளை அடையாளம் காட்டி கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பதிவையும் ஒரு சிலர் பகிர்ந்தும் ஆதரித்தும் கருத்திட்டும் உள்ளனர். எல்ஜிபிரிகியு (LGBTG) சமூகத்தினரை மிக இழிவாகவும், அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடப்பட்டுள்ளது. பகிரங்கமாக இவ்வாறான கொலை அச்சுறுத்தல் விடுவதை இலங்கை அரசாங்கம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

ஆரம்பத்தில் ஊழலை வெளிப்படுத்துகிறோம் என ஆரம்பித்து பெண்களின் நிர்வாணத்தை வெளியிட்டு கீழ்த்தரமான பிரபல்யம் தேடிய போலி முகநூல் கணக்குகள், இப்போது ஓரினச் சேர்க்கை வெறுப்பாகவும் பரிணமித்துள்ளது. பெண்கள் மீதான கருத்தியல் ரீதியான வன்முறையும் தொடர்கின்றது. இதுவும் யாழ்ப்பாண ஆண் மையவாத கருத்தியலின் நீட்சியாகவே தான் பார்க்க வேண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் துலங்கும் பெண்களை ஒடுக்கும் முனையும் இந்த போலி முகநூல் கணக்குகளும் அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆண்களும் சீழ்பிடித்த பழமைவாத அழிவுச் சமூகத்தின் எச்சங்களேயாகும்.

மனவக்கிரமும் உளவியல் சிக்கல்களுமுடைய இந்த ஆண்களையும் இவர்களை ஆதரிக்கும் ஒரு சில பெண்களையும் அடையாளங் கண்டு விலக்குவதன் மூலமே ஆரோக்கியமான முற்போக்கான தமிழ்ச் சமூகத்தை வளர்த்தெடுக்கலாம். ஈழத்தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இனம். அந்தவகையில் எல்ஜிபிரிகியூ (LGBTG) சமூகத்தினர் சந்தித்து வருகின்ற ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். துணிவோடு வெட்கமின்றி பிற்போக்குத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஹோமோபோவியோக் கருத்துக்களை பரப்புவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசாங்கம் சட்டம் கொண்டு வர வேண்டும். அதன்மூலம் எல்ஜிபிரிகியூ சமூகத்தினரின் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும்.

காணாமல் போன இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு !

காணாமல் போன இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு !

வவுனியா பாவற்குளம் சூடுவெந்த புலவு அலைக்கரையிலிருந்து இரத்தக் காயங்களுடன் உளுக்குளம் பொலிஸாரால் சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் விநாயகபுரத்தைச் சேர்ந்த 33 வயதான கோபிதாஸன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போய்யிருந்ததாக உறவினர்களால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் சடலாமாக மீட்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.