January

January

அடுத்த எட்டு வாரங்களில் ஐரோப்பா ஆட்டம் காணும் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

அடுத்துவரும் ஆறு முதல் எட்டு வாரங்களில், ஐரோப்பாவில் அரைவாசிப்பேருக்கு ஒமைக்ரொன் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக, அலைபோன்று ஒமைக்ரொன் பரவல் இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்தியர் ஹென்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில், இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஏழு மில்லியன் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வார காலப்பகுதியில், தொற்றுப் பரவல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரி – அரவிந்தன் மோதல் பின்னணி என்ன? யார் இந்த அரவிந்தன்!!!

ஒரு காலத்தில் தமிழீழம் கேட்டு இலங்கையின் எதிர்க்கட்சியாகவும் வந்து, தமிழ் அரசியலைத் தீர்மானித்த தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று நொந்து நூடிள்ஸ்ஸாகி சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. அரவிந்தன் கோஸ்டி சங்கரியர் பணத்தை சூறையாடுகிறார் என்பதும் சங்கரியர் அரவிந்தன் பணத்தை மோசடி செய்துவிட்டார் என்று ஒப்பாரி வைப்பதும் சமூக வலைத்தளங்களில் தவறணை உரிமையாளர்கள் வேதம் சொல்லும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. சங்கரி ஐயா சொத்துக்களை விற்று காசடித்தாரா இல்லையா என்பதை அரவிந்தன் தரப்பு ஆதாரத்தோடு வைக்கவில்லை. போக்கடி போக்காக சொல்லி வருகின்றனர்.

இந்தச் சொத்துக்களின் மீது பலருக்கும் கண் இருக்கின்றது என்பது உண்மை. அந்த சொத்துக்களுக்காகத்தான் கட்சியில் பலரும் இன்னும் ஒட்டிக்கொண்டுள்ளனர் என்பது அதைவிடவும் உண்மை. இவர்கள் எல்லோரும் சங்கரி ஐயாவில் பழியைப் போட்டுவிட்டு தாங்களும் சுருட்டிக்கொள்ளவே எண்ணுகின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள முரண்பாடு கட்சியின் கொள்கை சம்பந்தப்பட்டதாக ஒரு போதும் இருக்கவில்லை. அதற்கு அப்படி ஒரு பெரிய கொள்கையும் இல்லை.

லண்டனில் தசாப்தங்களாக வாழ்ந்த சண்முகராஜா அரவிந்தன், யாழ் மாநகரசபை உறுப்பினராக இருந்து காலத்தில் அப்போது மேயராக இருந்த செல்லன் கந்தையாவை தாக்கி தன் சாதியத் திமிரை வெளிப்படுத்தியவர். அதைவிட அவருக்கு குறிப்பான அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. லண்டனில் கூட்டணிக்கு பெரிய காசு சேர்க்கும் அளவிற்கு நாணயமானவரோ நம்பிக்கையானவரோ அல்ல. அவர் வற்புறுத்தியிருந்தால் சில சமயம் சில நூறுகளை யாராவது வழங்கி இருப்பார்கள். அந்த சொற்ப பணத்தை ஏமாற்றும் அளவுக்கு சண்முகராஜா அரவிந்தன் ஒரு முட்டாளும் அல்ல. அவர் ஒன்றும் உழைக்கவும் இல்லை அதே சமயம் ஊரைக் கொள்ளையடிக்கவும் இல்லை. பிரித்தானிய அரசின் உதவிப் பணத்தில் தான் அவர் இலங்கையில் அரசியல் நகர்த்துகிறார் என்பது பலரும் அறிந்த விடயம்.

அரவிந்தனுக்கு மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் அவருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் எப்போதும் ஒரு கண் இருந்தது மிகவும் உண்மை. ஆனால் அதற்கான தகுதி அவருக்கு இருக்கின்றதா என்றால் இன்றைக்கு இலங்கையில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு (சுமந்திரன் தவிர்ந்த) என்ன தகுதி இருக்கின்றதோ அது அரவிந்தனிடமும் இருக்கின்றது. அரவிந்தன் ஒரு வடிகட்டிய தமிழ் குறும் தேசியவாதி. சாதிய பிரதேச வெறியில் ஊறியவர். பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே பார்ப்பவர். பதவி ஆசையைத் தவிர கட்சியைப் போல் அவரிடம் கொள்கையும் இல்லை கோதாரியும் இல்லை. தமிழ் காட்சி ஊடகங்களுக்கு நேரத்தை நிரப்புவதற்கு சங்கரி ஜயாவிலும் பார்க்க இவர் சிறந்த தெரிவாக ஐபிசி மற்றும் ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

தலைவர் எப்ப சாவார் கதிரை எப்ப காலியாகும் என்று லண்டனில் இருந்து வந்த அரவிந்தனுக்கு சங்கரி ஐயா ஒமிக்கிரோனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு இருப்பது பெரும் சங்கடம் தான்.

தான் தாயகத்திற்கு வரும் முன்பே பொன் சிவகுமாரனின் சகோதரர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டு, அதன் பிறகு அவருக்கே முதுகில் குத்தியவர் அரவிந்தன். சங்கரி ஐயா பொன் சிவசுப்பிரமணியத்திற்கு எதிராகத் திரும்பிய போது அதற்கு முழுவீச்சாக ஆதரவு கொடுத்து அவரைக் கட்சியில் இருந்தே நீக்க முயற்சித்தனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் இப்போது அரவிந்தன் – சங்கரி ஐயா இழுபறி இப்போது சில ஆண்டுகளாகவே தொடர்கிறது.

சங்கரி ஐயா இன்னும் நிறைய காலம் வாழ முடியுமா என்பது கேள்விக்குறி. இந்நிலையில் அவரும் கட்சியின் பொறுப்புக்களை ஒப்படைத்து தன் தலைமைத்துவப் பண்பைக் காட்டவில்லை. சாகும் வரைக்கும் தான் தான் தலைவர் என்று இலங்கையில் உள்ள ஏனைய தலைவர்களைப் போல் தானும் சன்னதம் ஆடுகின்றார். இன்றைய நவீன தத்துவவியல் உலகத்திலும் நாம் இன்னும் பரராஜசேகரனை சங்கிலியன் முதுகில் குத்திய அரசியலில் தான் நின்று கொண்டிருக்கிறோம்.

இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் சங்கரி ஐயாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் இருந்தது உண்மை. ஆனால் அவர் அதை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு வந்தது மிகத் துரதிஸ்டம். இன்றுள்ள இலகைத் தமிழ் தலைவர்கள் எல்லோரும் மதிக்கக் கூடியவராக அவர் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதை கெடுத்துக்கொண்டு அரவிந்தன் போன்ற சில்லறைகளுடன் எல்லாம் கீழ்நிலைக்கு இறங்கி சண்டை செய்வது தமிழ் அரசியலின் துரதிஸ்டம்.

2010க்கயையொட்டி சங்கரி ஐயாவின் 75வது பிறந்த தின நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. அப்போது நான் எழுதிய பதிவில் ‘சங்கரி ஐயா அரசியலில் இருந்து ஒதுங்குவது அவருக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது எனச் சுட்டிக்காட்டி இருந்தேன். அதற்குப் பின்பும் அவரோடு பல தடவைகள் நேர்காணலை மேற்கொண்டு இருந்தேன். அபோதெல்லாம் சங்கரி ஐயாவுடன் மட்டுமல்ல அவரது குடும்பத்தவர்களில் ஒருவராக ஏன் பொன் சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்திலும் ஒருவராக இருந்தவர் அரவிந்தன். குடும்பம் என்பது சின்ன அரசியல் என்றால் அரசியல் என்பது பெரிய குடும்பம். ‘அரசியலில் இதெல்லம் சகஜம் அப்பா!’

நியூயோர்க்கில் தொடர் மாடிக் குடியிருப்பில் தீப்பரவல் 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் பலி !

நியூயோர்க்கில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் இந்த தீப்பரவலில் காயமடைந்த மேலும் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர முதல்வர் எரிக் அடம்ஸ் (Eric Adams) தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 தளங்களை கொண்ட குறித்த தொடர் மாடிக் குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும் பலர் தீப்பரவலில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு தரப்பினரும் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குற்றங்கள் நிரூபணம் – ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை !

மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் – தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.

சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பத்துடன் செயற்கை சூரியனை உருவாக்கி சீனா சாதனை !

சீனா உருவாக்கி உள்ள செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். உலக நாடுகளில் அரசியல், எல்லை பிரச்சினை, கடல் பகுதி ஆக்கிரமிப்பு, ஏவுகணை தயாரிப்பு மற்றும் சோதனை, விளையாட்டு, அறிவியல், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் என அனைத்து துறைகளிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரையை சீனா தொடர்ந்து பதித்து வருகிறது. இந்த சாதனைக்கு அணி சேர்க்கும் விதமாக சீனாவின் செயற்கை சூரியன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகிறது.

சூரியனின் மையப் பகுதி ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, பல வகைகளில் மனித இனத்துக்கு பலனை அளித்து வருகிறது. சீனா கடந்த 1999ம் ஆண்டிலிருந்தே ‘ஈஸ்ட்’ என்ற பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரூ.70 லட்சம் கோடி வரை செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில், மிக குறைந்த நேரம் மட்டுமே குறைந்த அளவிலான வெப்பத்தை மட்டுமே இந்த செயற்கை சூரியன் உற்பத்தி செய்தது. இதை படிப்படியாக மேம்படுத்திய சீன விஞ்ஞானிகள், சில தினங்களுக்கு முன் 7 கோடி டிகிரி செல்சியசிஸ் வெப்பத்தை உருவாக்கினர்.

இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். 17 நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. மாசு ஏற்படாத வகையில் சுத்தமான எரிசக்தியை தயாரிப்பதற்கான சீனாவின் செயற்கை சூரியன் திட்டத்துக்கு உலகளவில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், சீனா இந்த திட்டத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் செயற்கை சூரியனை உருவாக்கிய அதே விஞ்ஞானிகள் பிரான்ஸ் நாட்டிலும் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு, ‘இட்டர்’ என பிரான்ஸ் பெயரிட்டுள்ளது.

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்! – பாகம் 23

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 23 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 23

தேசம்: இப்ப நீங்கள் முழு வீச்சாக இந்த பின்தள மாநாட்டை நடத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்து இருக்கிறீர்கள். பின்தள மாநாட்டில்…

அசோக்: பின் தள மாநாடு அல்ல தள மாநாடு…

தேசம்: மன்னிக்க வேணும். தள மாநாட்டில் எல்லாரும் கலந்து கொண்டார்களா? எப்படி என்ன மாதிரி?

அசோக்: நாங்கள் வட கிழக்கு மாவட்டங்கள் அனைத்திலும் புளொட் தோழர்களை சந்தித்து உட்கட்சிப் போராட்டம், மாநாடு, அதன் அவசியம் பற்றி உரையாடுகிறோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் போய் மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள் என எல்லா அணிகளோடும் நாங்கள் கதைக்கிறம். அங்க இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னணி தோழர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து அவர்களை கொண்டு மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் உத்தேசிக்கிறோம்.

தேசம்: தனிய மாவட்ட அமைப்பாளர்கள் என்று இல்லாமல் முன்னணி தோழர்களை, விரும்பின ஆட்களும்…

அசோக்: ஓம். அந்தந்த மாவட்டம் தெரிவு செய்து அனுப்பும். நாங்கள் தெரிவு செய்வதில்லை. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த தோழர்களே மாநாட்டில் தங்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் தோழர்களை தெரிவு செய்து அனுப்புவார்கள். நான் நினைக்கிறேன் எண்பத்தி ஆறாம் ஆண்டு பெப்ரவரி கந்தரோடை கிராமத்தில் ஒரு பாடசாலையில் ரகசியமாக 6 நாட்கள் அந்த தள மாநாடு நடந்தது.

தேசம்: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்…

அசோக்: எல்லா மாவட்டங்களிலிருந்து சுமார் 200 தோழர்கள் வந்திருப்பார்கள். அதற்கு பூரணமான ராணுவ பாதுகாப்பு சின்ன மென்டிஸ் தான் கொடுத்தது. மெண்டிஸ் தான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் ஆனா மாநாடு நடப்பதற்கான பாதுகாப்பு எல்லாத்தையும் தான் செய்வதாக சொல்லிவிட்டார். அது எங்களுக்கு உதவியாக இருந்தது.

தேசம்: அதுவே ஒரு பெரிய விஷயம்…

அசோக்: ஆறு நாட்களும் பாதுகாப்பு தந்தார்.

தேசம்: நீங்கள் இந்த மாநாடு நடத்துகிறீர்கள் என்று சொல்லி பின் தளத்துக்கும் தெரியும் உமா மஹேஸ்வரனுக்கும் தெரியும்.

அசோக்: எல்லாருக்கும் தெரியும். மாநாடு நடக்கும் போது படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில்தான் நின்றவர். நாங்கள் மாநாடு நடாத்துவது பற்றி பின் தளத்தில் முகுந்தன் ஆட்களுக்கு தெரியும். தள மத்திய குழு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்த மாநாடு பற்றி பின் தள மத்திய குழுவுக்கும், முகுந்தனுக்கும் நாம் அறிவித்திருந்தோம்.

தேசம்: அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கலயா?

அசோக்: ஒன்றும் நடக்கவில்லை. எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தேசம்: ஏனைய அமைப்புகளாலும்…

அசோக்: அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் இல்லை. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

தேசம்: அந்த விவாதத்தில் எது முக்கியமாக இருந்தது.

அசோக்: பின்தள படுகொலைகள். தலைமையினுடைய எதேச்சதிகார அராஜக போக்குகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மத்திய குழுவும், தலைமையும் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லியும் ,அதன் மீதான நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் புதிதாக நிர்வாகம் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு புளொட்டில் நடந்த படுகொலைகள் சித்திரவதைகள் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடாடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் புளொட்டின் சீர்குழைவுகளுக்கு காரணமான முகுந்தனின் மூல உபாயம் அற்ற அரசியல் இராணுவ போக்குகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரியான அரசியல் இராணுவ மூல உபாயங்கள் வகுப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கவேண்டும் என்றும் அத்தோட தீர்மானிக்கபட்டது. உண்மையிலேயே மிக சிறப்பான கோட்பாட்டு அரசியல் சார்ந்த மாநாடு என்றுதான் சொல்ல வேணும்.

தேசம்: தள மாநாட்டுக்கு முதலே செல்வம் அகிலன் கொலை நடந்து விட்டதா?

அசோக்: ஓம். மாநாட்டுக்கு முதலே செல்வம், அகிலன் படுகொலை விட்டது. அந்தக் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என்று சொல்லியும் அதில் சிவராம், வெங்கட் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக விசாரணை கமிஷன் போட வேண்டும் என்று சொல்லியும் முடிவுகள் எடுக்கப்படுகின்றது.

தேசம்: என்னென்ன தீர்மானங்கள் நீங்கள் முக்கியமாக எடுத்தீர்கள்?

அசோக்: ஒரு பதினாறு பதினேழு முக்கிய தீர்மானங்கள். தலைமை இழைத்த அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் தவறுகள். இதுவரை தோழர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அதுல சொல்லப்படுது. அதில 17 பேர் கொண்ட அரசியல் வழிகாட்டி குழு ஒன்று தெரிவு செய்யப்படுது. அவர்கள் பின் தளம் போய் இந்த தீர்மானங்களை முன் வைத்து அங்கொரு பின்தள மாநாட்டை பின் தள தோழர்களின் ஒத்துழைப்போடு நடாத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தேசம்: பின் தளத்தில்…

இது தள மாநாடு. ஏனென்றால் நாங்கள் மாத்திரம் தீர்மானிக்க இயலாது தானே. பின் தளத்தில் பயிற்சி முகாங்களில் இருக்கும் தோழர்கள், மற்றய ஏனைய தோழர்களும் இருக்கிறார்கள்தானே. அவர்களை உள்ளடக்கிய பின் தள மாநாடு நடத்தத்தானே வேண்டும். அதுதானே முழுமையான ஜனநாயக பூர்வமான செயற்பாடாக இருக்க முடியும். இதன் மூலமே ஜனநாயக மீட்புக்காக ஒரு புதிய வடிவத்தை உருவாக்க முடியும் என நாங்க நம்புகிறோம்.

தேசம்: தெரிவு செய்பட்ட அந்த முக்கியமான தோழர்கள் ஞாபகம் இருக்கா?

அசோக்: எல்லா வெகுன அமைப்புக்களிருந்தும் ஜன நாயக அடிப்படையில் தேர்தல் மூலம்தான் இந்த தோழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பிரசாத்…

தேசம்: பிரசாத் இப்ப எங்க இருக்கிறார்.

அசோக்: பிரசாத் லண்டனில் இருக்கிறார்.

தேசம்: வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரா?

அசோக்: இல்லை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், கிராமம் மறந்துட்டேன். தீபிநேசன் அமெரிக்காவிலயோ கனடாவிலயோ இருக்கிறார். பெண்கள் அமைப்பில் இருந்து கலா, தொழிற் சங்கத்தில் இருந்து கௌரிகாந்தன், முத்து, ராஜன், ஐ பி மூர்த்தி, சத்தியன் மாணவர் அமைப்பிருந்து தீபநேசன், டேவிட் அர்ச்சுனா ஏனைய அமைப்புக்களிலிருந்து தவநாதன் செல்வம் , துரைசிங்கம் , எல்லாளன், இப்படி 17 தோழர்கள். பெயர்கள் ஞாபகம் இல்லை. மொத்தம் 17 பேர் அதோட நாங்கள் நான்கு பேர் சென்றல் கமிட்டீ.

தேசம்: இங்கேயும் ஒரு பெண் தோழர்தானா…

அசோக்: இல்லை. ஜெயந்தி என்ற தோழரும் இருந்தவங்க என நினைக்கிறேன்.

தேசம்: முத்து என்டுறது?

அசோக்: சிறிதரன். லண்டனில் இருக்கிறார்.

தேசம்: ராஜன்?

அசோக்: ராஜன் கனடாவில் இருக்கிறார்.

தேசம்: ஜென்னியும் வருகின்றாரா?

அசோக்: இல்லை. முன்றாம் நாள் மாநாட்டிலிருந்து வெளியேறி விட்டாங்க என நினைக்கிறேன்.

தேசம்: அவர் ஏன் வெளியேறினவர்…?

அசோக்: குற்றச்சாட்டுகள் அவங்க மீதும் வந்தது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உடன் அவர் வெளியேறிட்டாங்க. முகுந்தனின் விசுவாசி என்றும் தளத்தில் தோழர்களை உளவு பார்த்ததாகவும் அவங்க மீது குற்றச்சாட்டுக்கள் வந்ததென நினைக்கிறேன். பல விடயங்கள் ஞாபகம் இல்லாமல் இருக்கிறது.

தேசம்: தள மாநாடு நடந்து உடனடியாக அங்க போனீர்களா அல்லது?

அசோக்: தள மாநாடு முடிந்தவுடன் எல்ரீரீஈ, ரெலோ பிரச்சனை தொடங்கி விட்டது. அதனால் உடனடியாக பின் தளம் போக முடியவில்லை.

தேசம்: எண்பத்தி ஆறு ஏப்ரலில் ரெலோவுக்கு எதிரான தாக்குதல்கள்…

அசோக்: நாங்கள் பின் தளம் போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது புலிகளின் ரெலோ மீதான தாக்குதல் பயங்கரமாக தொடங்கிவிட்டது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் போகல.

அசோக்: அதுக்குள்ள மாட்டுப்பட்டு விட்டோம் நாங்கள். அது முடிந்ததற்கு பிற்பாடுதான் நாங்கள் பின் தளம் போறம்.

தேசம்: மூன்று நான்கு மாதங்கள் அதற்குள்ளேயே இருந்திருக்கிறீர்கள்.

அசோக்: அதுக்கு பிற்பாடுதான் மன்னாருக்கு எல்லாரும் போறம். அங்கிருந்துதான் பின்தளம் சென்றது.

தேசம்: ஒரேயடியா போகிறீர்கள்…

அசோக்: இதுல ஒன்று சொல்லவேண்டும். அந்த மாநாட்டில் கண்ணனும் கலந்து கொள்கிறார். அவர் பார்வையாளராக கலந்து கொள்கினறார்.

தேசம்: படைத்துறைச் செயலாளர் கண்ணன்…

அசோக்: ஓம்.

தேசம்: அவர் மீதும் குற்றச்சாட்டு வந்திருக்கும் தானே…

அசோக்: அவர் மீது தனிப்பட்ட வகையில் குற்றச்சாட்டு இல்லை.

தேசம்: இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 4 மாதத்திற்கு பிறகு தான் பின் தளம் போகிறீர்கள்…

அசோக்: சரியாக ஞாபகம் இல்லை. நான்கு மாதங்கள் இல்லை. குறைவு என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் உமாமகேஸ்வரன்…

அசோக்: உமாமகேஸ்வரன் அவர் சார்ந்த உளவுத்துறை. முழுக்க முழுக்க தலைமை மீதும், மத்திய குழு மீதும் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. புளொட்டின் அமைப்பு வடிவம், மேலிருந்து அதிகார உருவாக்கம், சமத்துவம், ஜனநாயகம்,தோழமை அற்ற தன்மை பற்றியெல்லாம் . அரசியல் கோட்பாடு சார்ந்து ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உண்மையிலேயே இப்ப நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேசம்: அப்போ நீங்கள் இவர்கள் செய்த சிபாரிசு அல்லது தீர்மானங்களில் இப்ப இருக்கிற மத்திய குழு உறுப்பினர்கள் திருப்பியும் மத்திய குழுவில் இருப்பதற்கு சம்மதம் வழங்கப்பட்டதா? அல்லது பின் தளத்தில் மத்திய குழுவை முழுமையாக கலைத்துவிட்டு முற்றிலும் புதிய மத்திய குழுவை உருவாக்குவதுதான் நோக்கமா?

அசோக்: மத்திய குழுவை முழுமையாக கலைப்பதுதான் நோக்கம். அதில் நாங்களும் சம்பந்தப்பட்ட ஆட்கள் தானே. நாங்கள் நல்லவர்கள் அவர்கள் பிழையான ஆட்கள் என்று இல்லை. ஒட்டுமொத்தமாக மத்திய குழு அது எங்களையும் சாரும். புளொட்டின் தலைமை செய்த தவறுகள் என்ற அடிப்படையில் நாங்களும் குற்றவாளிகள்தானே. எனவே மத்திய குழு முழுமையாக கலைக்கப்பட்டு பின்தளத்தில் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்பபடும் தோழர்களும், தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தோழர்களும் தலைமை அரசியல் வழிகாட்டி குழுவாக செயற்பட்டு புதிய மத்திய குழுவை உருவாக்குவார்கள் என்பதுதான் தீர்மானம்.

20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற்ற புதிய திட்டம் !

20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற உதவும் வகையில், புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வெளியேறிய 5,000க்கும் மேற்பட்டோர் முதல் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் கூறினார்.

இருப்பினும், மக்களை அழைத்துச் செல்வதற்கான பிரித்தானியாவின் திறன் வரம்பற்றது என்றும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் எச்சரித்தார்.

திட்டத்தைத் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தொழிலாளர் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.

அந்த காலகட்டத்தில் மேற்கத்திய அரசாங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிந்த ஆப்கானிய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

 

“சுனாமி பேரலையாக கொரோனா மாறும்.” – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமிக்ரோனும் வேகமாக பரவி வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்திருந்தது நேற்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதேபோல், டென்மார்க், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27-ம் திகதி முதல் ஜனவரி 2-ம் திகதி வரையிலான ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, ஒமிக்ரோன் வைரசும், டெல்டா வைரசும் சேர்ந்து சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளது என  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“தடுப்பூசி போடாதவர்களை சிறுநீர் கழிப்பதுபோல் உதாசீனப்படுத்தப் போகிறேன்.” – பிரான்ஸ் அதிபர் சர்ச்சைக்கருத்து !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த சொல்லி ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தடுப்பூசி செலுத்தாத மக்கள் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பேசியதாவது:-
தடுப்பூசி செலுத்தாதவர்களை நான் சிறைக்கு அனுப்பப்போவதில்லை. அவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தவைக்கப்போவதில்லை. என்னுடைய திட்டம் எளிமையானது. மக்களை எரிச்சலூட்டபோகிறேன்.
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உணவகம் செல்ல முடியாது,.காபி குடிக்க முடியாது. படம் பார்க்க முடியாது. ஒன்றுமே செய்ய முடியாது என மக்களை எரிச்சலூட்டபோகிறேன். தடுப்பூசி போடாதவர்களை சிறுநீர் கழிப்பதுபோல் உதாசீனப்படுத்தப் போகிறேன். அதுதான் இனி அரசின் கொள்கை.
இவ்வாறு இம்மானுவேல் தரக்குறைவாக பேசினார்.
பிரான்சில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.