2022

2022

இந்தோனேசியாவில் கால்ப்பந்து மைதானத்தில் வன்முறை – 174 பேர் பலி !

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் அரேமா எப்.சி- பெர்செபயா சுரபயா அணிகள் மோதின. இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

அரேமா அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை தாக்கினர். மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். சில வாகனங்களுக்கு தீயும் வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வன்முறை, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறையில் 129 பேர் பலியானார்கள். 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மேலும் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி நிகோ அபின்டா கூறும்போது, “கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். 34 பேர் மைதானத்துக்குள்ளே இறந்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் இறந்தனர். மைதானத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளை தாக்கிய ரசிகர்கள் கார்களையும் சேதப்படுத்தினர். மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேறியபோது வாகனங்களை அடித்து நொறுக்கினர் என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக இந்தோனேசியா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “மைதானத்தில் அரேமா அணியின் ஆதரவாளர்கள் செயல்களுக்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும், அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். போட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க ஒரு குழு மலாங்குக்கு சென்றுள்ளது” என்று தெரிவித்துள்ளது. வன்முறையை அடுத்து கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் அரேமா அணி எஞ்சிய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஹிஜாப் அணியாத உணவகம் சென்ற பெண் கைது !

ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணிய மறுத்த மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவர் திடீரென இறந்தார். போலீசார் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் அவரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது. இந்த போராட்டத்தின் போது 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இந்தநிலையில் ஈரானை சேர்ந்த டோனியோ ராட் என்ற பெண் தனது தோழி பணிபுரியும் கம்பெனியில் உள்ள உணவகத்துக்கு காலை சிற்றுண்டி சாப்பிட சென்றார். அப்போது அவர் தலையில் முக்காடு அணியாமல் சாப்பிட்டார். இந்த படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இது வைரலாக பரவியது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விளக்கம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து டோனி யோராட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாக அவரது சகோதரி டினா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே.? – சிறுவர் தினத்தையொட்டி உறவுகள் போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர் தினமான இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது உறவினர்களான சிறுவர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குடும்பமாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு என்ன நடந்தது உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசம் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், கால நீடிப்பினை வழங்கக் கூடாது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டவர்களுக்கு இலங்கையில் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் !

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைத்தல், கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன என்றும் உதவி பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச்செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணமாகாத பெண்ணுகளும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு – இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

திருமணமான பெண்ணைப் போலவே திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சட்டப்பூர்வமாக ,பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் திருமணமாகாத பெண்களுக்கும் 20 முதல் 24 வார கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என கூறியுள்ளது.

கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதியின்றி, கணவன்மார்களால் ஏற்படும் பாலியல் வன்கொடுமையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் கருக்கலைப்புக்கான விதிகளின் கீழ் ( marital rape) என எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

எம்.டி.பி சட்டத்தின் விளக்கம் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என கூறியள்ள நீதிபதி  சமூகம் மாறும்போது சமூக இயல்புகள் மாறுகின்றன ,உருவாகின்றன மற்றும் சட்டங்கள் நிலையானதாக இருக்கக்கூடாது மற்றும் காரணத்தை முன்னெடுக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள உக்ரைனின் முக்கிய நகர மக்கள் !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தலைநகர் கிவ், கார் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. துறைமுக நகரமான மரியு போலை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. அதேபோல் சில நகரங்களையும் ரஷ்யா தன்வசப்படுத்தியது.

தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே போரில் உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷ்யா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது. நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. இந்தநிலையில் உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவிடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புடின் நாளை மறுநாள் (30-ந்திகதி) அறிவித்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ரஷ்ய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் புடின் 30-ந்திகதி உரையாற்றுகிறார். அப்போது உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புடின் வெளியிட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்ரைன் பாதுகாக்கும். இந்த வாக்கெடுப்புகள் ஒரு கேலிக்கூத்தாக உள்ளது. வாக்கெடுப்புக்கு பிறகு ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதும் இல்லை” என்றார்.

கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கொழும்பில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையையும் 84 பேர் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டித்திருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இதன்மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரித்திருக்கின்றன.

அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சோசலிஸ இளைஞர் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியைக் கலைப்பதற்கு பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் தடியடிப்பிரயோகமும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப்பணிப்பாளர் ரிறானா ஹஸன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக இடைவெளியை ஒடுக்குவதற்கும், போராட்டக்காரர்களை அடக்குவதற்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அமைதிப்படுத்துவதற்கும் அரசாங்கங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பயன்படுத்துவதை அவதானிக்கமுடிகின்றது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் (கடந்தவார இறுதி) அதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அதன்மூலம் இன்னமும் மக்களை நிறுத்தமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்றைய தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 84 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் இந்த அமைதிப்போராட்டக்காரர்கள் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே போராடுகின்றார்கள். எனவே கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் தடையேற்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ‘அதியுயர் பாதுகாப்பு வலய’ உத்தரவு தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதென்பது ஓர் மனித உரிமையாகும் என்று அப்பதிவில் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் ஒரு கல்விச் சுனாமி! பல்கலைக்கழகம் செல்வோர் 200 பேர்வரையால் அதிகரிப்பு! நாடு முழவதும் பல்கலைக்கழகம் புகும் மாணர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் வீழ்ச்சி!!

அண்மையில் அரசு வெளியிட்ட சட் ஸ்கோர் அடிப்படையிலான பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களின் படி 2021 பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் மிகச் சரியாகச் சொல்வதானால் 15765 மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் 192 மாணவர்களை 2020 கல்வியாண்டைக் காட்டிலிலும் 2021 கல்வியாண்டில் கூடுதலாக அனுப்பி வைத்து தீவில் ஒரு கல்விச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

எண்பதுக்களில் கல்வியில் கோலோச்சிய யாழ் மாவட்டம் 2021 ஒன்று கல்வியாண்டில் 477 மாணவர்களைக் குறைவாக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. 2020 கல்வியாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.5வீதம் குறைவாகும். மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களும் சராசரியாக 9.5 வீதமான மாணவர்களை குறைவாகவே பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. விகிதாசார அடிப்படையில் அனுராதபுரம், காலி, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே கூடுதலான 14 முதல் 15 வீதத்திற்கு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் கொழும்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2377 மாணவர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காணப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சியும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் வீழ்ச்சியும் அண்ணளவாக ஒரே அளவில் அதாவது 16,000 ஆகக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு:
மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களைப் போன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் பல்ககை;கழககங்களுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 5.3 வீதத்தால் அதாவது 192 மாணவர்களால் அதிகரித்து இருக்கின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவில் கென்ற்இல் வதியும் கணித ஆசிரியர் டேவிட் நோபல் தேசம்நெற்க்குக் கருத்துத் தெரிவிக்கையில் சூம் வழியான கல்விச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மற்றும் கல்வியில் பின் தங்கியிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். மாணவர்கள் எந்த மூலையில் கிராமத்தில் இருந்தாலும் மறுமூலையில் உள்ள நல்லாசிரியர்களிடம் இருந்து கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டுப் பணமோகத்தின் தாக்கங்களும் அது ஏற்படுத்தும் போதைவஸ்து, மது அருந்தல் மற்றும் வாள்வெட்டுக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான தமிழ் மாவட்டங்களில் குறைவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புக தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 22வது இடத்திலிருந்து 2021 கல்வியாண்டில் 3வது இடத்திற்கு வந்து தீவில் ஒரு கல்விச் சுனாமியை ஏற்படுத்தியது. மட்டக்களப்பில் 2021 கல்வியாண்டில் 3804 பேர் பல்கலைக்கழகம் செல்லத் தகுதிபெற்றனர். அத்தோடு தமிழ்வாணணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானத்தில் தீவிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் சுனாமி அதிரடியாக இருந்த போதும் மட்டக்களப்பு கல்வியில் இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் செறிந் வாழ்கின்ற வடக்கு கிழக்கில், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு ஆயிரம் பேருக்கு 6 மாணவர்களையே பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. கிழக்கு மாகாணத்தின் நிலையும் இதுவாகவே உள்ளது. ஆனால் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டும் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

திருகோணமலை:
மூவின மக்களும் சரிக்குச் சமனாக வாழும் திருகோணமலை மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 14வது இடத்தில் இருந்து 2ம் இடத்திற்குத் தாவியுள்ளது.

அம்பாறை:
அம்பாறை மாவட்டம் 2020 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியதில் இருந்து 2021 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு ஆறு மாணவர்களை மட்டுமே ஆனுப்பும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 24வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகம் புகும் தகுதியுடைய மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முன்னேறிப் பாய்ந்துள்ளது.

முல்லைத்தீவு:
இலங்கையில் உள்ள மாவட்டங்களில் தங்களுடைய சனத்தொகைக்கு கூடுதலான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற நான்கு மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கின்றது. 2021 கல்வியாண்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. வடக்கு கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமே ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது. ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற ஏனைய மாவட்டங்கள் பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 17வது இடத்திலிருந்த முல்லைத்தீவு மாவட்டம் 2021 கல்வியாண்டில் 8 வது இடத்திற்கு முன்னேறி யாழ் மாவட்டத்திற்கு அடுத்த படியாக உள்ளது. ஆனாலும் ஏழாவது இடத்தில் உள்ள யாழ் மாவட்டத்தைக் காட்டிலும் முல்லைத்தீவு மாவட்டம் தனது சனத்தொகைக்கு அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது.

மன்னார்:
மன்னார் மாவட்டம் தீவில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மாவட்ட அடிப்படையில் மிகக் கூடுதலாக 69 வீதமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து தீவின் முன்னணிக் கல்வி மாவட்டம் என்ற இடத்தைத் தக்க வைத்துள்ளது. யாழ் மாவட்டத்தைப் போன்று மன்னார் மாவட்டமும் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது.

வவுனியா:
பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் வவுனியா மாவட்டமும் முன்னேறிப் பாய்ந்துள்ளது. 2020 கல்வியாண்டில் தீவின் கடைசி மாவட்டமாக இருந்த வவுனியா 2021 கல்வியாண்டில் 15வது இடத்திற்கு தன்னை நகர்த்தியுள்ளது. மாணவர்களைப் பல்கலைக்கழகம் புகச் செய்யும் விகிதாசாரத்தை 59.5 வீதத்தில் இருந்து 63.5 வீதமாக வவுனியா மாவட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி:
வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டம் மட்டுமே கல்வியில் பாய்ச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சறுக்கியுள்ளது. 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகு விகிதாசாரத்தில் 21வது இடத்திலிருந்த கிளிநொச்சி மாவட்டம் 2021இல் 23வது இடத்திற்று சறுக்கியுள்ளது. மேலும் கிளிநொச்சியின் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதம் 2.5 வீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டம் தன்னுடைய விகிதத்தை அதிகரிக்கத் தவறியிருந்தாலும் வீழ்ச்சியடையவில்லை. அண்ணளவாக தன்னுடைய முன்னைய நிலையை தக்க வைத்துக்கொண்டது.

இதன் மூலம் வடக்கு கிழக்கில் கல்வியில் பின்னிலையான மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.
இலங்கையிலேயே பல்கைலக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை ஆகக் கூடிய வீதத்தால் 4.72 வீதத்தால் உயர்த்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முன்னணி வகிக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்கைல்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை உயர்த்திய மாவட்டமாக வவுனியா மாவட்டம் திகழ்கின்றது. வவுனியா பல்கலைகம் புகும் மாணவர்களின் விகிதத்தை 3.95 ஆல் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் பதுளை, யாழ்ப்பாணம் போன்று தன்னுடைய முன்னைய விகிதத்தை தக்க வைத்துக்கொண்டது. மலையகத்தைச் சேர்ந்த நுவரெலியா மாவட்டம் மட்டும் தன்னுடைய பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை 1.78 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனை தெற்கு மாவட்டங்கள் அனைத்துமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆகக் கூடுதல் வீழ்ச்சி 5.42 வீகிதம் காலியிலும் அதனைத் தொடர்ந்து 4.94 விகிதம் வீழ்ச்சி கம்பகாவிலும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கல்வியில் மட்டக்களப்பு பெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க மைல்கலை எட்டியுள்ளது. வவுனியா மாவட்டம் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தை மட்டக்களப்பு மாவட்டத்தைப் போல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் தன் நிலையை முன்னேற்றி தற்போது முதல் இடத்தில் உள்ளது. யாழ் மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க அசைவை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் தன்னிலையை தொடர்ந்தும் தக்க வைத்து வருகின்றது. ஆனால் கிளிநொச்சி தொடர்ந்தும் தன் கல்விநிலையை உயர்த்தத் தவறிவருகின்றது.

மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலி – முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்கிறார் ஜார்ஜியா மெலோனி !

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

கருத்துக் கணிப்புகளின்படி, ஜார்ஜியா மெலோனி தலைமையிலான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றது. இதையடுத்து ஜார்ஜியா மெலோனி பிரதமராக தேர்வு பெற்றார்.

45 வயதான ஜார்ஜியா மெலோனி ‘ தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். 2008 இல், பெர்லுஸ்கோனி பிரதம மந்திரியாக இருந்த போது மந்திரிசபையில் ஜார்ஜியா மெலோனியை விளையாட்டுத் துறை மந்திரியாக நியமித்தார். இந்நிலையில் தற்போது பெரும் செல்வாக்குடன் பிரதமர் வேட்பாளராக அவர் உயர்ந்துள்ளார்.

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி !

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நாஜி குறியீடுடன் கருப்பு கலர் டீ ஷர்ட் அணிந்திருந்ததும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதும் தெரிய வந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி புடின், ரஷிய பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.