வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது தமது உடமைகளை கைவிட்ட மக்கள் அவற்றை மீட்கும் விடயத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி உட்பட வன்னியின் மேற்குப் பகுதிகளிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் போது தங்களது உடமைகளையும் முடிந்தவரை எடுத்துச் சென்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவர்களின் உடமைகள் விசுவமடுவிலிருந்து உடையார்கட்டு, சுதந்திரபுரம், இரணைப்பாலை என பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போர் நடைபெற்ற மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பகுதிகளில் பொதுமக்களின் வாகனங்கள் உட்பட குறைந்தளவு பொருட்களே கொண்டு செல்லப்பட்டன . வன்னியில் மீள்குடியேற்றம் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களால் கைவிடப்பட்ட பொருட்களை மீட்டுவர முயன்று வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் படையினரின் பாதுகாப்பு அனுமதி தேவை. இதனை அரசாங்க அதிபர்களுக்கூடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட போதும் பொதுமக்கள் தங்களது உடமைகள் வைக்கபட்டுள்ள பகுதிகளில் சென்று பார்வையிட்ட போது வீட்டுக்கூரைகள் உட்பட பல பொருட்கள் காணாமல் போன நிலையில் வெறும் கையுடன் திரும்பி வந்தனர். ஒருசில பொருட்கள் மட்டும் அவர்களால் மீட்டு வரப்பட்டன. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் உடமைகளை மீட்டுவர அப்பகுதிகளுக்குச் செல்கின்ற போது அவர்களின் உடமைகளை எடுத்து வருவதற்கு அங்குள்ள படையினர் தடைவிதிப்பததாக மக்கள் கூறுகின்றனர்.
முல்லை மாவட்டத்தில் சில பகுதிகளில் விவசாயிகளின் நீர்இறைக்கும் இயந்திரங்கள், மண்வெட்டி போன்ற தங்களால் கைவிடப்பட்ட விவசாய உபகரணங்களை எடுத்துச்செல்ல அங்கிருக்கும் படையினர் அனுமதி மறுப்பதாகவும், இரும்புப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களின் விவசாய உபகரணங்களை எடுத்து வரவே மிகச் சிரமப்பட்டு MoD எனப்படும் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெறப்பட்டு, குறித்த இடங்களுக்கு தமது பொருட்களைக் கொண்டு வர வாகனங்களையும் வாடகைக்கு அமர்த்தி செல்கின்ற போதும் அங்குள்ள படையினர் தங்களின் பொருட்களை எடுத்துச் செல்ல இடம்கொடுப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.