யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. இக்கொள்ளை தொடர்பாக இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.சுதுமலை வடக்கில் வசித்துவரும் மருத்துவர் ஒருவர் மானிப்பாய் மத்திய சந்தைப் பகுதியில் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவரது வீட்டிலிருந்து ஆறு இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகை மற்றும், 20 ஆயிரம் ருபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தது.
இவர் தமது மருத்துவ நிலையத்திற்கு வந்துவிட்டு மாலையில் வீடு சென்றபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்த நிலையில் இப்பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமையை அவதானித்துள்ளார். பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த மானிப்பாய் பொலிஸார் மருத்துவரின் வீட்டின் ஒரு பகுதியில் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்திவரும் 25 வயதான இளம் பெண் மீது சந்தேகம் கொண்டனர்.
அவரை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பெண்ணைக் கைது செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.