மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான எஸ்.விஜயகுமாரன் (வயது 55) நேற்று சனிக்கிழமை முற்பகல் மாரடைப்பினால் காலமானார். இவரது பூதவுடல் அட்டன் நகரிலுள்ள மல்லியப்பூ வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் திங்கட்கிழமை கொட்டகலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.விஜயச்சந்திரன் தெரிவித்தார். நெஞ்சுவலி காரணமாக அவர் நேற்று காலை உறவினர்களால் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முற்பல் 10 மணியளவில் காலமானார்.
லிந்துலை நாகசேனைதோட்டத்தில் பிறந்த இவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கல்விகற்ற பின் பட்டதாரியானார். இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரியாக பணியாற்றினார்.1993 ஆம் ஆண்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்காக தோள்கொடுத்தவர். கடந்த நான்கு வருடமாக செயலாளர் நாயகமாக பணியாற்றிய இவர் இதற்கு முன் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் உயர் பீட உறுப்பினராகவும் இருந்தார். இவரது திடீர் மறைவு கட்சிக்கும் மலையக மக்களுக்கும் பெரும் இழப்பாகுமென மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.