மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் ஆயுத முனையில் கொள்ளையிட்டு வந்த கிரானைச் சேர்ந்த ஐவர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கையடக்கத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக கிரான் கும்புறுமூலை கிண்ணையடி பகுதிகளில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளையிட்டு வந்த இந்தக்கோஷ்டி தாங்கள் கொள்ளையடித்த கையடக்கத்தொலைபேசிகளை விற்பனை செய்யும் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் கடந்த 10 ஆம் திகதி இவர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் முன்னாள் ஆயுதக் குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 18 தொடக்கம் 25 வயதுடையவர்கள். திருமணமானவர்கள். கிரான் பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் உறவினர்கள். மேற்படி பகுதிகளில் இவர்கள் கொள்ளைகளை மேற்கொண்டு வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து ரி.56 ரகதுப்பாக்கி ஒன்றும் 25 ரவைகளும் கையடக்கத்தொலைபேசிகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.