2010

2010

25 கிலோ கஞ்சா கலந்த பாபுல் ஆட்டுப்பட்டித் தெருவில் கண்டுபிடிப்பு

babul.jpg25 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா கலந்த பாபுல் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் கஞ்சா கலந்த புகையிலை என்பன கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார். இது அண்மைக் காலத்தில் பிடிபட்ட அதிகூடுதலான பாபுல் தொகையாகும்.

ஆட்டுப்பட்டித் தெருவில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது கஞ்சா கலந்த பாபுல் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களி டமிருந்து கிடைத்த தகவலின்படி ஆட்டிப்பட்டித் தெருவில் உள்ள இரு களஞ்சியங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த பாபுல், பாபுல் தயாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து தருவிக் கப்பட்ட 20 இலட்சம் பெறுமதி யான கஞ்சா கலந்து புகையிலை, பல்வேறு போதை ஏற்படுத்தும் பொருட்கள் என்பனவும் மீட்கப் பட்டதாக பொலிஸார் கூறினர்

சந்தேக நபர்கள் நேற்று மாளி காகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

சர்வதேச தேயிலை தினத்தை மடுல்சீமையில் நடத்த ஏற்பாடு

கடந்த 23 ஆம் திகதி பசறையில் இயங்கி வரும் அகில இலங்கை இந்திய வம்சாவளி மேம்பாட்டு மையத்தின் விஷேட ஒன்றுகூடலும் புனரமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவும் பசறை கோவில் கடை “வீ என் ஆர் பீபல்ஸ் பவுண்டேஷன்” காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது மலையக மக்களின் கல்வி கலாசாரம், சுகாதாரம், மேம்பாட்டு தொடர்பான கலந்துரையாடப்பட் டதோடு, எதிர்வரும் சர்வதேச தேயிலை தினம் தொடர்பாகவும் ஆலோசிக்கப் பட்டது.

அமைப்பின் உப தலைவர் பீ.டி.ஜே. சந்திரசேகரம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டதோடு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டு மலையக மேம்பாடு சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.

எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி கொண்டாடப்பட விருக்கும் மடுல்சீமை நகரத்தில் இடம்பெறவுள்ள “சர்வதேச தேயிலை தின வைபவத்தில் பல கலை, கலாசார நிகழ்வுகளும், விருது வழங்கல் நிகழ்வும் 2010 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பசறை வலய கோட்டத்தின் கீழ் வரும் சுமார் 30 பாடசாலை மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அன்றைய கூட்டத்தில் நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீண்டும் தலைவராக எல். வரதராஜன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக வீ. நிரோஷன் (அதிபர்), பொருளாளராக தியாகு ஜே.பி., உப தலைவராக பீ.டி.ஜே. சந்திரசேகரம் (ஜே.பி), உப செயலாளராக எம். ஞானப்பிரகாசம் (ஜே.பி.) நிர்வாக செயலாளராக எஸ். சதாசிவம் (ஜே.பி), நிர்வாக இயக்குநராக எஸ். அந்தோனிசாமி மற்றும் சர்வதேச தொடர்பாடல் இயக்குநராக பிரபல ஊடக நிகழ்ச்சி ஒங்கிணைப்பாளர் ஆர். கேதீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் சுனாமி, எரிமலை வெடிப்பு – 180 பலி: 500க்கு மேல் மாயம்

tsunami.jpgஇந்தோ னேசியாவின் ஜாவாத் தீவுகளில் ஏற்பட்ட சுனாமித் தாக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களால் 180 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் 500 ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதித் தீவான மெத்தாவியில் திங்கட்கிழமை 7.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தில் 10 கிராமங்கள் முற் றாகச் சேதமடைந்துள்ளதுடன் 154 பேர் கொல்லப்பட்டனர். 10 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அதே நேரம் ஜாவாத் தீவுகளிலுள்ள மெராப்பி எரி மலை தீக் குழம்பை கக்கியதில் அதில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமித் தாக்கத்துக்குள்ளான பகுதிக் கடல் கொந் தளிப்புடன் காணப்படுவதால் நேற்றைய தினமே மீட்புப் பணியாளர்கள் விமானங்கள் மூலமும் ஹெலிகொப்டர்கள் மூலம் அப் பகுதியைச் சென்றடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களும், மருந்துப் பொருள்களும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடு கள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மலகோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்துவிட்டன. உணவுத் தட் டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அரு கில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 ஆஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

நமக்காக நாம் திட்டம் அறிமுகம்: திருக்கோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம்

அறிமுகம்:
திட்டத்தின் பெயர்:  நமக்காக  நாம் திட்டம்.
திட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைப்புகள்: அகம், லிற்றில் எய்ட்
நிதி வழங்கும் நிறுவனகள்: லண்டன் கற்பக விநாயகர் ஆலயம், அகிலன் பவுண்டேசன்,

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலக்குக் குழு:
மூதூர்  பிரதேச  செயலாளர் பிரிவிலுள்ள  மூதூர்  கிழக்குப் பிரதேசத்திலுள்ள 15  கிராமங்களைச்  சேர்ந்த
• யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட  மக்கள்
• உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள்
• இடம் பெயர்ந்து மீழக் குடியேறியவர்கள்.
• உள்ளூர் CBOக்கள்                            

திட்டக் களம்:
பொருளாதார அபிவிருத்தி மையம், பாட்டாளிபுரம், மூதூர், திருக்கோணமலை, இலங்கை.

திட்டப் பிரதேச  கிராம மக்கள்  பின்னனி:
இப்பிரதேசமானது  திருக்கோணமலை  மாவட்டத்தின்  மூதூர்  பிரதேச செயலாளர்  பிரிவிற்குட்பட்ட முற்று முழுதான  தமிழ் மக்கள்  வாழும்  கிராமங்களாகும். கடந்த 2006ம் ஆண்டிற்கு  முற்பட்ட  காலத்தில்  இப்பிரதேசம் LTTE  இனரின் முழுமையான  கட்டுப்பாட்டில்  இருந்த  பிரதேசமாகும்.

இப்பிரதேசமானது  அனேகமாக   LTTE இனரின் கட்டுப்பாட்டில்  இருந்த காரணத்தினால்  அரச  வளங்கள்  முற்று முழுதாக  கிடைக்கப் பெறாத நிலையிலும், கடந்த   கால யுத்த  அனர்த்தமும்   கூடுதலாக  இம்மக்களின் குறிப்பாக  பொருளாதாரம் மற்றும்  கல்வி  போன்ற   முக்கியமான   துறைகளில் பாதிப்புக்களை   ஏற்படுத்தியிருந்தது.

இக்கால  கட்டத்தில் எமது  நிறுவனமானது  தனது  தூர நோக்கிற்கு அமைவாக  வறுமையிலும் வறுமையான மக்களை இனம் கண்டு அவர்களுக்கான  நிவாரண மற்றும் அவர்கள் சுயமாக தங்கி  வாழ்தல்  நிலையிலிருந்து விடுபட வைத்து  சுயமாக  வாழக் கூடியவர்களாக்குவதற்கான செயற்பாடுகளை 1997  ஆம் ஆண்டில்  மேற்கொள்ள எண்ணியது.

அந்த வகையில்  1997ம் ஆண்டு நாம் பணிகளை  மேற்கொள்ளுகின்ற   கால  கட்டத்தில் குறிப்பாக  மூதூர்  கிழக்குப் பிரதேச  கிராமங்களை  சேர்ந்த   சுமார்  15000  மேற்பட்ட  மக்கள் தங்களது  பெரும்பாலான தேவைகளை   முஸ்லிம் மக்கள்  செறிந்து  வாழுகின்ற சுமார்  6 km தொடக்கம் 18 km   தூரம் கொண்ட  மூதூர் மற்றும் தோப்பூர்  போன்ற  நகரங்களுக்குச் சென்றே நிறைவேற்றிக் கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அந்த வகையில் இம்மக்களின் நாளாந்த செயற்பாடுகளை அவதானிக்கையில் அரச  போக்குவரத்து   வசதிகள்  கிடைக்கப் பெறாத இம்மக்கள் கால் நடையாகவும், சிலர் துவிச்சக்கர வண்டி மூலமாகவும் சென்று வருவதனால்  நேரம்  வீண் விரையம் ஆகுதல், தொழில்  வாய்ப்புக்களை  மேற்கொள்வதற்கான  முதலீடு இல்லாத காரணத்தினால்  நகரங்களிலுள்ள  முதலாளிகளிடம் அதிக  வட்டியுடனான  கடன் அடிப்படையில்  பொருட்களைப் பெற்றுக் கொள்ளல், தொழில்  அறவீடுகள்  ஏற்படும் போது ஏலவே  கடன் பெற்ற  முதலாளிகள்  குறைந்த விலைகளில்  விளை பொருட்களை பெற்றுக் கொள்ளல், இதனால்  உரிய  மக்கள்  தொழில் இலாபங்கள் இல்லாத  நிலையில் மீண்டும் முதலாளிகளின்   வலைக்குள் சிக்கிக் கொள்ளலும் தொடர்ச்சியான வறுமை நிலைக்குள்  தள்ளப்படுவதும், அதனூடாக பிள்ளைகளின்  கல்வியில்  அக்கரை இன்மை மற்றும் தொடர்கல்வி  செயற்பாடுகளிலிருந்து  பிள்ளைகளை   பாடசாலை இடை  நிறுத்தம் செய்தல், பெற்றார் தங்களுடன்  கூலி வேலைக்கு அழைத்துச் செல்லல், என்பன  பாரியதொரு  பிரச்சினையாக  இப்பிரதேசத்தில்  இருந்து வந்தது. 

இவ்வாறு  பாதிக்கப்பட்டிருந்த  மக்களின்  கல்வி மற்றும்  பொருளாதாரத்தினை   மேம்படுத்தும்  வகையில்  அவர்களால்  உற்பத்தி  செய்யப்படுகின்ற   விளைபொருட்களை  நியாயமான  விலைக்கு  பெற்றுக் கொள்ளல்,  அவர்களை முதலாளித்துவத்திடம்  இருந்து காப்பாற்றுவதற்காக   அவர்களுக்கு  தேவையான   பொருட்களை  கடன்  அடிப்படையிலும்,  மானிய   அடிப்படையிலும்    பெற்றுக் கொடுத்தல்,  மற்றும்  பாதிக்கப்பட்டிருந்த குறிப்பாக  பெண்களை   இணைத்து  கூட்டுத் தொழில் (அரிசி ஆலை)  நடவடிக்கைகளில்   ஈடுபடுத்தல்  போன்ற செயற்  திட்டங்களை   1999  தொடக்கம் 2006ம் காலப்பகுதி  வரை கீழ்  குறிப்பிடப்படும் மூலோபாயங்கள் ஊடாக எமது மேற்கொண்டிருந்தது.

மக்கள் குழுக்களை கிராம ரீதியாக  நிறுவுதல்.
தொழில்  வாய்ப்புக்களுக்கு  மானிய அடிப்படையிலும், குறைந்த வட்டியுடனான   கடன்  வழங்கல்.
தேவையான  தொழில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்கல்  ( உதாரணமாக :- பசளை, கிருமி நாசினி, விதை நெல் )
விளை பொருட்களை   நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளல்
பெண்கள் இணைந்த கூட்டுமுறையிலான  தொழில்களை செய்தல் ( மிக்சர் தயாரிப்பு, நெல் அவித்து அரிசாக்குதல், சிறியளவிலான  மீன் கொள்வனவு செய்தலும், சந்தைகளுக்கு அனுப்புதலும்.
முந்திரிகை  பருப்பு பதனிடல்

போன்ற  செயற்பாடுகளை  செய்து மக்களிடத்தே  பொருளாதார  அபிவிருத்திக்கான  அடிப்படை  வேலைகளை செய்து  கொண்டு  வருகின்ற வேளைகளில்  2006ம் ஆண்டு  முதல்  முதலில்  மீண்டும் தொடங்கிய  யுத்த அனர்த்தமானது  எமது திட்டக் களக்கிராமங்களிலுள்ள  மக்களை தங்களது சொந்த  பிரதேசத்திலிருந்து  இடம் பெயர வைத்ததுடன், அவர்களின் வீடு,   பொருளாதாரம், கல்விக்  கட்டமைப்பு, சமூக கட்டமைப்பு என்பனவற்றினை முழுமையாக  அழிவிற்குட்படுத்தியருந்ததுடன், எமது  நிறுவனத்திற்குச் சொந்தமான 90  லட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்ட  உள்ளீடுகளையும், வளங்களையும் சேதத்திற்குட்படுத்தியது.

இதனால்  இப்பிரதேச மக்கள்  தங்கள் சொந்த நிலத்திலிருந்து   வேறு மாவட்டமான மட்டக்களப்பு, வன்னி மற்றும் இந்தியா போன்ற   இடங்களில்  கிட்டத்தட்ட 4, 5 வருடங்களில்  அகதி வாழ்க்கை   வாழ்ந்தனர்.

இந்நிலையிலுள்ள  மக்களில் 80%  மக்கள் 2009 தொடக்கம் 2010 ஆண்டு  காலங்களில் தங்களது  சொந்த  நிலங்களில்  மீளக் குடியேற்றப்பட்டனர். 20% மக்கள்  இற்றைவரை   உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் (இந்தியா) அகதி  வாழ்க்கையே வாழ்கின்றனர்.

இவ்வாறு  மீளக்குடியேறிய மக்களிடத்தேயும், அகதி முகாம்களிலுமுள்ள  மக்களிடையேயும் தற்போது  முன்னைய  மாதிரியான  முதலாளித்துவச் சுரண்டல்  தலைதூக்கியுள்ள   காரணத்தினால் இம்மக்கள்  மீண்டும் வறுமைக்குட்படுகின்ற  நிலை தொடருக்கின்றது.

இதனை  ஓரளவேனும் தடுத்து  நிறுத்துவதற்கான  நிலையான  பொருளாதார மேம்பாட்டுத் திட்டச் செயற்பாடுகளை  மாவட்ட  ரீதியாக எமது  நிறுவனத்தின் சொந்த  நிதியினைக் கொண்டும், இலங்கையின்  தேசிய அபிவிருத்தி  நம்பிக்கை  நிதியம் (NDTF) எனும் நிறுவனத்தின் கடன் நிதியினை வைத்தும்  சுழற்சி முறையிலான கடன் திட்டங்களை  மேற்கொண்டு வருவதுடன், மக்களை சேமிக்கவும்  ஊக்குவித்து  வருகின்றது.

இருந்தும் இலங்கையின்  தேசிய அபிவிருத்தி  நம்பிக்கை  நிதியம் ஊடாக  மேற்கொள்ளுகின்ற கடன்  திட்டத்திற்கான வருடாந்த  வட்டி 15% ஆக  நிர்ணயிக்கப்படுவதனால்  தொழில்களுக்கு  கடன் பெறும் பயனாளிகள்  பாதிப்படையக் கூடிய  வாய்ப்புக்களும் இருக்கின்றது.

எனவே மக்கள் சேவை கொண்ட  அமைப்புக்களிலிருந்து  மக்கள்  தொழில்  நடவடிக்கைகளுக்கான   நன்கொடை  நிதிகள் வரும்  பட்சத்தில்  எம்மால்  அதிக வட்டி பெற்று  பெறப்படுகின்ற   இலங்கையின்  தேசிய அபிவிருத்தி  நம்பிக்கை  நிதியம் நிறுவனத்தின்  நிதியின் அளவினைக் குறைத்து,  மக்களுக்கும் குறைந்த  வட்டியில்  கடன்  தொகையினை  வழங்கவும்  வாய்ப்பாக இருக்கும்.

அதுமட்டுமன்றி  இலங்கையில்   தற்போது  அரச தரப்பில் காணப்படும்   அரசியல் மாற்றம்   காரணமாக  நிதி  நிறுவனங்களின்   உதவிகள்  மக்களுக்கு குறந்து வருகின்றது. இதனால்  எமது   நிறுவனத்தின்  மக்கள்  அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான  பணிகளும் குறைந்து  செல்ல வாயப்பு இருக்கின்றது.

இந்த நிலையில்  ஒரு  தன் நம்பிக்கையில் சுய  வருமானம் ஈட்டக் கூடிய  தொழில்களை  ஏற்படுத்தி  அதனூடாக மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்குரிய திட்டங்கள் தொடர்ந்தும்  எமது  அமைப்பு  அமுல்படுத்தி வருகின்றது.

இனங்காணப்பட்டுள்ள  பிரச்சினைகள்:
உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான நியாயமான  விலை தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.
தரமான தொழில் உள்ளீடுகள்   கிடைக்காமை
அதிக செலவு ஏற்படல்
தங்களுக்கு தேவையான  சோற்றுக்கான அரிரியினை மீண்டும் முதலாளிகளிடம்  கூடிய விலை கொடுத்து  வாங்குதல்.
போக்குவரத்து  வசதி  மிகக் குறைவு
இழம் பெண்கள் கைம்பெண்களாக  இருத்தல்
மாணவர்கள்  பாடசாலைக்கு செல்வது குறைவு
கூடிய  விலை கொடுத்து பொருட்களை  கொள்வனவு செய்தல்
முதலாளிகளின்  சுரண்டல்
குறைந்த விலைக்கு விளை பொருட்களை விற்றல்.

திட்டச்சுருக்கம்:
திருக்கோணமலை  மாவட்டத்தின்   மூதூர்  பிரதேச  செயலாளர்  பிரிவிலுள்ள   மூதூர்  கிழக்கு  பிரதேசத்தைச் சார்ந்த 15  கிராம  மக்களும் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து விடுபட்டு  தாங்கள் மேற்கொள்ளுகின்ற தொழில்கள் ஊடாக அதிகமான வருமானங்களைப் பெற்றுக் கொண்டு  தங்களது  குடும்பத்தினை  சுபட்சகரமாக மாற்றிக் கொள்வதற்கும்  தற்போதைய  பொருள் விலையேற்றத்திற்கு ஈடுகொடுத்து  வாழ்க்கையினை  மேம்படுத்திக் கொள்வதற்காக  நமக்காக  நாம் எனும்  திட்டத்தினை   திருக்கோணமலை  மாவட்டத்தில்  ஆங்காங்கே ஆரம்பித்து அதன் ஊடாக   பாதிக்கப்பட்ட  மக்களை மேம்படுத்தும் நோக்குடன்   இத்திட்டம் நகரும்.

இத்திட்டத்தில்  தொழில் (மக்கள் ) குழுக்களை  உருவாக்கல்,  சேமிப்புக்களை சேமிக்க தூண்டுதல், உள்ளூர் உற்பத்தியை  ஊக்கப்படுத்தல், தேவையான  தொழில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தல், தொழில்களுக்கான  ஊக்குவிப்புக்களை   வழங்கல்,  பல்வகை  ஆலை  அமைத்தல் விளைபொருட்களை பெறலும், சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தலும். தொழில் இணைப்புக்களை  ஏற்படுத்தல் போன்றன   இச்செயற் திட்டத்தில்  முக்கியமாக இருக்கும்.

மேற்படி தொழில்  திட்டங்களை விரைவாகவும், திறமையாகவும், உண்மைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவதற்காக  எமது நிறுவனத்தில்  தற்போது செயற்பட்டு  வருகின்ற, கட்டமைப்பு  ரீதியாக  பலமாக இருக்கின்ற  பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தோடு  இணைத்து இச்செயற்பாடு  மேற்கொள்ளப்படும்.

இத்திட்ட  அமுலாக்கத்தில் எமது  பொருளாதார அபிவிருத்திக் குழுவின்  முழுமையான  செயற்பாடுகள் இதில் அமைவதுடன், கிராமம் தோறும் எம்மால் அமைக்கப்படும்  மக்கள் தொழில்  குழுக்களின்  செயற்பாடுகளும்  அதில் அமையும். அதுமட்டுமன்றி அகத்தின் முகாமைத்துவக் குழு மற்றும்   நிறுவனத்தின் பொதுச்சபை  தொடர்ச்சியாக  ஆலோசனை  வழங்குவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடும்.

இலக்கு:
திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர்  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூதூர்  கிழக்கு கிராம மக்கள் சுயமாக   வாழ வழிசமைத்துக் கொடுத்தல்.

நோக்கம்:
முதலாளித்துவத்தின் சுரண்டலிலிருந்து  உரிய  திட்டக் கிராம மக்களை  விடுபட வைத்து வருமானத்தைக்  கூட்ட  முயற்சித்தல்.

தெரிவு செய்யப்பட்டுள்ள  திட்டக் களக் கிராம பயனாளிகளின் வருமானத்தினை   30% இருந்து 60% மாக  உயர்த்த முயற்சித்தல்.

தெரிவு செய்யப்பட்டுள்ள திட்ட கிராமங்களிலுள்ள 40% பெண்களும், 50% சிறுவர்களும் ஆரோக்கியமாக வாழும் நிலையினை 2012 ஆண்டின் இறுதிக்குள் ஏற்படுத்த முயற்சித்தல்.

செயற்பாடுகள்:
மக்கள் தொழில்  குழுக்களை  உருவாக்கமும் பலப்படுத்தலும்.

மூதூர் கிழக்கிலுள்ள  15  கிராமங்களிலும்  உள்ள  தொழிலில்  ஆர்வமுள்ள ஈடுபடுகின்றவர்களை   கிராம ரீதியாக   ஒன்றிணைத்து  தொழில் குழக்களை உருவாக்கல்  செயற்பாடாகவும், உருவாக்கப்பட்ட  குழக்களுக்கான  தொழில்முறை விழிப்புணர்வுகள்  வழங்கல் முறமையாகவே  இச்செயற்பாடு அமையும். இதன் மூலம் 15 தொழில் குழுக்கள் உருவாக்கம் நடைபெற்று இருக்கும்.

ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து உரையாட தமிழ்தேசியக்கூட்டமைப்பு தயராகவுள்ளதாகவும் ஆனால், ஜனாதிபதி தரப்பிலிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் ஆராய இருதரப்பும் இரு குழுக்களை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி தொடர்பாக கூட்டமைப்பு தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர், விபரங்கள் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசதரப்பு குழு அமைக்கப்படவில்லை. இதேபோல, இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய அரசாங்கத்தின் தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை இன்னமும் நியமிக்கவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதியுடனான மீண்டும் ஒரு சந்திப்பை கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி விரைவில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு முன்பதாக கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனர்வாழ்வு முகாம்களில் இன்னமும் 5100 முன்னாள் விடுதலைப்புலிகள் மட்டுமே உள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 5100 பேர் மட்டும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும், அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்புனர்வாழ்வு நிலையங்களில் 93 பெண் போராளிகளே மீதமுள்ளதாகவும் அவர்களில் 43 பேர் க.பொ.த. சாதாரண பரீடசைக்குத் தோற்றிய பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள பெண்களும் கட்டம் கட்டமாக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையம் நூல்கள் அன்பளிப்பு.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையத்தினால் 2000 யூரோ பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜேர்மன் கலாசார அமையத்தின் பணிப்பாளர் பிஜோன் கொரில்ஸ், யாழ்.பொது நூலகர் எஸ்.தனபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் கலாசார அமையம் வருடந்தோறும் இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு 2000 யூரோ பெறுமதியான நூல்களை வழங்கி வருகின்றது. அவ்வகையில் இம்முறை யாழ்.நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொது நூலகத்தை தமிழ்மக்களே பயன்படுத்துகின்றனர் ஆகவே தமிழ் மொழியிலான நூல்களை அதிகம் வழங்குவது பொருத்தமானது என தெரிவித்தார்.

அனுமதியின்றி மீள்குடியமர்ந்துள்ள வசந்தபுரம் மக்களை வெளியேறுமாறு படையினர் கோரிக்கை.

கொழும்புத்துறை வசந்தபுரம் என்ற இடத்திலிருந்து முன்னர் வெளியேறிய மக்கள் நேற்று முன்தினம் அப்பகுதியில் அனுமதியின்றி மீள் குடியமர்ந்துள்ளதால் அவர்களை வெளியேறுமாறு படைனயினர் அவர்களிடம் கோரியுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு வெளியேறிய அப்பகுதி மக்களில் 88 குடும்பங்கள் நேற்று முன்தினம் திங்கள் கிழமை தறப்பாள் கூடாரங்களை அமைத்துக்கொண்டு அப்பகுதிகளில் குடியமர்ந்துள்ளனர்.

இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு படையினர் தெரிவித்து வருவதாகவும் ஆனால், அம்மக்கள் வெளியேற மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படவில்லை எனவும், இதேவேளை, அவர்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கான மேலிட அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் இவ்வளவு காலமும் வாடகை வீடுகளிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்ததாகவும், தொடர்ச்சியாக அவ்வாறு தங்கியிருக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டதால் தங்களின் சொந்த இடங்களில் குடியேறியுள்ளதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக படையினர் கோரி வருகின்றனர்.

தெல்லிப்பழையில் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்த வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதம்.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த தெல்லிப்பழை கிராமசேவகர் பிரிவுகளில் மக்களை மீன்குடியேற்றுவதற்கு வசதியாக வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேசச் செயலர் பிரிவில் காங்கேசன் வீதியின் மேற்குப் புறமாகவுள்ள மாவிட்டபுரம் வரையிலான பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்தும் வகையில் துரிதமாக வெடிபொருட்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.

கண்ணிவெடி அகற்றும் பணி யாழ். குடாவில் துரிதம்

யாழ். குடாநாட்டிற்குள் தற்போது பொதுமக்களது பாவனைக்காக விடப்பட்டி ருக்கும் பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றுக் காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரது யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது மிதிவெடிகளை அகற்றுவதில் நிலவுகின்ற தடைகள், பிரச்சினைகள் குறித்தும் ஏனைய பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் யாழ். வசந்தபுரம், கடற்கரை வீதி, துண்டி போன்ற பகுதிகளில் மிதி வெடிகளை அகற்றும் நடவடிககைகளை உடன் ஆரம்பிப்பது எனத் திர்மானிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். பிரதேச செயலாளர், மிதிவெடிகளை அகற் றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.