ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து உரையாட தமிழ்தேசியக்கூட்டமைப்பு தயராகவுள்ளதாகவும் ஆனால், ஜனாதிபதி தரப்பிலிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் ஆராய இருதரப்பும் இரு குழுக்களை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி தொடர்பாக கூட்டமைப்பு தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர், விபரங்கள் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசதரப்பு குழு அமைக்கப்படவில்லை. இதேபோல, இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய அரசாங்கத்தின் தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை இன்னமும் நியமிக்கவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதியுடனான மீண்டும் ஒரு சந்திப்பை கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.
ஜனாதிபதி விரைவில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு முன்பதாக கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.