கொழும்புத்துறை வசந்தபுரம் என்ற இடத்திலிருந்து முன்னர் வெளியேறிய மக்கள் நேற்று முன்தினம் அப்பகுதியில் அனுமதியின்றி மீள் குடியமர்ந்துள்ளதால் அவர்களை வெளியேறுமாறு படைனயினர் அவர்களிடம் கோரியுள்ளனர்.
1995 ஆம் ஆண்டு வெளியேறிய அப்பகுதி மக்களில் 88 குடும்பங்கள் நேற்று முன்தினம் திங்கள் கிழமை தறப்பாள் கூடாரங்களை அமைத்துக்கொண்டு அப்பகுதிகளில் குடியமர்ந்துள்ளனர்.
இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு படையினர் தெரிவித்து வருவதாகவும் ஆனால், அம்மக்கள் வெளியேற மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படவில்லை எனவும், இதேவேளை, அவர்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கான மேலிட அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் படையினர் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் இவ்வளவு காலமும் வாடகை வீடுகளிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்ததாகவும், தொடர்ச்சியாக அவ்வாறு தங்கியிருக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டதால் தங்களின் சொந்த இடங்களில் குடியேறியுள்ளதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக படையினர் கோரி வருகின்றனர்.