2010

2010

“மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்தபின் வட மாகாணசபைத் தேர்தல்”

maithripala-sirisena.jpgதேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதுடன் இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியுமென்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததன் பின்னரே வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமென்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. தேர்தல் வெற்றியை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன இங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பேசுகையில்

எமக்கு வாக்களித்த மக்களுக்கும் இந்தத் தேர்தலை நடத்தி முடிக்க உதவிய தேர்தல்கள் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் என அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

பொதுவாக எதிர்க்கட்சி என்று வரும்போது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை எந்நேரமும் நோக்காகக் கொண்டு செயற்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. எனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை அந்த யுத்தம் நிறைவு பெற்றுவிட்ட இச் சந்தர்ப்பத்தில் உலகின் முன்னேற்றம் கண்ட ஒரு நாடாக அபிவிருத்தி செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இன்று இந்த யுகத்துக்குப் பொருத்தமானதொரு ஜனாதிபதி இருக்கிறார். பேதங்களின்றி ஒன்றிணைந்து செயற்பட்டால் முன்னேற்றம் காண முடியும். எனவே, குறுகிய அரசியல் நோக்கங்களின்றி,பேதங்களின்றி நாட்டை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

இதேநேரம், இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேசத் தயாராகவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியினருடன் பேசுவதற்கு ஆளுந்தரப்பு தயாராகவிருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன; நாம் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று கூறினார்.

பாராளுமன்ற புதிய உறுப்பினர்கள் நன்மை கருதி தகவல் கருமபீடம்

parliament.jpgஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கரும பீடமொன்று 2010 ஏப்பிரல் மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை, 17ந் திகதி சனிக்கிழமை மற்றும் 18ந் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்கவுள்ளது.
இக்கரும பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான முக்கியமான தகவல்களும் ஆவணங்களும் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமையினால் இதற்கு சமுகமளிக்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நுழைவதற்கு வசதியாக தமது அடையாள அட்டையை கொண்டு வரும்படியும் பாராளுமன்ற கட்டடத்துக்குள் வரும்போது உறுப்பினர் நுழைவாயிலை பாவிக்கும்படியும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சானியா-ஷொய்ப் திருமணம்

sania_shoaib.jpgஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொய்ப் மாலிக்கை ஹைதராபாத்தில் மணம் முடித்துள்ளார். ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமண வைபவத்தை மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் முன்னின்று நடத்தி வைத்ததாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.

ஷொய்ப் மாலிக் வேறொரு பெண்ணை கடந்த வாரம் விவாகரத்து செய்திருந்ததன் பின்னர் இப்போது இத்திருமணம் நடந்துள்ளது. இத்திருமணம் நடந்த விடுதிக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

23 வயது சானியாவும் 28 வயது ஷொய்ப் மாலிக்கும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தனர்.வேறொருவருடன் நிச்சயமாகியிருந்த சானியா இவ்வருட ஆரம்பத்தில் அதனை முறித்துக்கொண்டிருந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் இருவரும் துபாயில் வாழத் திட்டமிட்டுள்ளனர் என்றும், இருவரும் தத்தமது நாட்டையே விளையாட்டில் பிரதிநிதித்துவம் செய்வர் என்றும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் தலைவராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கோரிக்கை

sarath_fonseka-02.jpgமுன்னாள் அரச தலைவர் வேட்பாளர் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் தலைவர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்று பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பெரும் பலத்துடன் நாடாளுமன்றுக்கு வரவுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கு சவாலான அதேவேளை எதிராக செயற்படும் வலுவுள்ள தலைமை இன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மிக மிக அவசியமான ஒன்று. அந்த பதவிக்கு சரியான தெரிவு சரத் பொன்சேகாவாக மட்டுமே இருக்கமுடியும் என்று ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி தேர்தலில் ஐந்து ஆசனங்களை மட்டுமே வென்றிருந்தன. அவர்களில் ஜே.வி.பி. சார்பில் விஜித ஜேரத், சுனில் கெந்துனெற்றி, அஜித் குமார ஆகியோரும் பொன்சேகா கொழும்பிலும் களுத்துறையில் அர்ஜுன ரணதுங்கவும் வெற்றி பெற்றிருந்தனர். மீள்வாக்கெடுப்பு நடைபெறவுள்ள கண்டியில் தமக்கு மேலும் ஒரு ஆசனமும் தேசிய பட்டியல் மூலம் ஒரு ஆசனமும் தமக்கு கிடைக்கும் என்று தேசிய ஜனநாயக முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தோ்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மொத்தம் 8 ஆசனங்கள்?

rauff.jpgநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆறு ஆசனங்களைத் தனதாக்கி யிருக்கின்றது. மேலும் தேசியப் பட்டியலின் ஊடாக இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் என்றும்  அதனுடன் அக்கட்சியின் மொத்த ஆசனங்கள் எட்டாக உயரும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பஷீர் சேகுதாவூத், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எச். எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைஸல் காசிம், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட நூர்தீன் மசூர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவு அறிவிக்கப்படாதபோதிலும், அங்கு சின்ன தௌபீக் வெற்றி பெற்றுள்ளமை ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் 21 வேட்பாளர்களை நாடளாவிய ரீதியில் நிறுத்தியிருந்தது.

இன்று விகிர்தி புதுவருட பிறப்பு

new.jpgபுதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில் புதுவருடம் பிறக்கிறது என சுட்டிக்காட்டப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் இன்று புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாக திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் இன்று புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இப்புண்ணிய காலத்தில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்து சித்திரைப் புத்தாண்டை கொண்டாடலாம்.

மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பதில் இரு வேறு நிலைப்பாடு இருக்கக்கூடாது

கிழக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஆணையையும் அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுபற்றி கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுரேஷ் பிரமேச்சந்திரன்;

வடக்கு, கிழக்கில் தமிழ்மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தலைமைக் கட்சியாகவும் பிரதிநிதியாகவும் ஏற்று தெரிவு செய்துள்ளனர். வடக்கு, கிழக்கில் ஜனநாயக முறையில் தமிழ் மக்கள் வழங்கிய இந்தத் தீர்ப்பை அரசாங்கமும் ஏனையவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமொன்றைத் தெரிவு செய்துள்ளனர். இந்த மக்கள் ஆணையை சர்வதேச சமூகம் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதே அடிப்படையில் வடக்கு, கிழக்கு மக்கள் வழங்கிய ஆணையை இந்த அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம். அதுவே ஜனநாயக கோட்பாடாக அமையும். அதைவிடுத்து சிங்கள மக்களுக்கு என்று ஒன்றும் தமிழ் மக்களுக்கு பிரிதொன்றுமாக ஜனநாயகக் கோட்பாடுகள் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இதேநேரம் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் ஆளும் கட்சி அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தமிழ் மக்களின் இன நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமா என்று வினவிய போது அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேச முன்வருமென்றால் நாம் அதற்குத் தயாராகவே இருக்கிறோம். எனினும், அழைப்பு என்பது ஊடகவியலாளர் சந்திப்புகள் மூலம் விடுக்கப்படுவதாகவன்றி உத்தியோகபூர்வமான அழைப்புகளாக இருக்கவேண்டும்.

நாம் மிகப் பெரிய விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளோம். தனி நாட்டுக் கோரிக்கையை விட்டுக்கொடுத்து ஒன்றுபட்ட நாட்டுக்குள் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் சமஷ்டி அரசியலமைப்பு முறையின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே குறிப்பிட்டிருக்கிறோம்.

தனி நாட்டுக் கோரிக்கையைக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் விமர்சித்து வந்தது. இப்போது அது விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை அரசாங்கமும் இனிமேலும் ஒற்றையாட்சி என்று பிடிவாதமும் பிடித்துக் கடுமையான நிலைப்பாட்டில் இருக்காமல் விட்டுக்கொடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.
நாம் உலகத்தில் இல்லாத புதுமையானதொன்றைக் கேட்டுவிடவில்லை. உலகத்தில் நடைமுறையில் இருப்பதையே நாம் கேட்கிறோம்%27 என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலளித்தார். 

பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதிக்க வேண்டுமென சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியிருக்கும் அரசாங்கம் அதேபோல் வடக்கு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஆணையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டுமென்றும் ஆட்சி நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடாதெனவும் தேர்தல் வெற்றியின் பின்னர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளும் கட்சி தெரிவித்திருந்தது. வட, கிழக்கின் தீர்ப்பை அங்கீகரிப்பது அவசியம் ஆளும் கட்சிக்கு கூறுகிறது தமிழ்க் கூட்டமைப்பு

வன்முறைகளை தடுக்க நாடளாவிய ஏற்பாடு

தேர்தலுக்குப் பின்னரான வன் முறைகளை தடுப்பதற்கு நாடளா விய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகள் தொடர்ந்தும் ஏழு தினங்களுக்கு அமுலில் உள்ளதாகத் தெரிவித்த அவர் எவரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் அவர் கள் உடனடியாக கைது செய்யப் படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

குழப்பம் ஏற்படுத்த முயற்சிப் பவர்களுக்கு எதிராக எந்தவித பாகுபாடுகளும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தேர்தல் முடிவுற்று ஏழு நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு பின்னர் இடம் பெற்ற சம்பவங்களில் அநேகமான வைகள் ஒரே கட்சியை சேர்ந்தவர் களுக்கு இடையிலான மோதல்க ளாகும் என்றும் அவர் குறிப்பிட் டார்.

தேர்தலுக்கு பின்னர் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இதுவரை சுமார் ஐந்து முறைப்பாடுகளே கிடைத்துள்ளன என்று தெரிவித்த அவர் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் மாவட்ட ஐ. தே. க. சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற பாலித ரங்க பண்டார அதே கட்சியில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ள சாந்த அபேசேகர உட்பட அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்பு டைய ஐ. தே. க. வேட்பாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நகர்ப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக் கள் அதிகமாக கூடியுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுவருட காலத்தில் அசம்பாவி தங்கள் மற்றும் கொள்ளைச் சம் பவங்கள் இடம்பெறுவதை தவிர் க்கும் வகையில் விசேட பொலிஸ் நடமாடும் சேவைகள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதுடன் சிவிலிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடு த்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜய கொடி தெரிவித்தார்.

கண்டி, திருமலைகளுக்கான மீள் வாக்குப்பதிவு. கொழும்பிலிருந்து விசேட கண்காணிப்பு குழுவை அனுப்ப ஏற்பாடு

n2.jpgகண்டி, திருகோணமலை மாவட்டங்களி லுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றதனால் அப்பகுதிகளு க்கான மீள் வாக்களிப்பு எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. மீள் வாக்குப் பதிவை கண்காணிப்பதற்காக கொழும்பிலிருந்து விசேட குழுவொன்றை அனுப்புவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை மீள்வாக்குப் பதிவுக்கென வாக்காளர்களுக்கு புதிதாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விடும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 37 வாக்க ளிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவ ட்டத்தின் கும்புறுபிட்டியிலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குமே எதிர்வரும் 20 ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படவுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்படி வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவை நடத்த தேர்தல்கள் திணைக்களம், திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்காக 380 உத்தியோகத்தர்களை நியமித்திருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

தூய பௌத்த சிங்களவன் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவன். தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவான சிங்கள பிரதிநிதி பியசேன: – புன்னியாமீன்

jj.jpgநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளரான பி.எச்.பி. பியசேன 11,130 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக சிங்களவர் ஒருவர் தெரிவாகியிருப்பதும் இதுவே முதற்தடவையாகும்.

தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தெவிநுவர எனுமிடத்தை பிறப்பிடமாகக் கொண்ட பியசேன 1948ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் அக்கறைப் பற்று பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து அக்கறைப்பற்று பிரதேசத்தின் சின்னம்மாள் எனும் யுவதியை திருமணம் செய்துகொண்டு இப்பிரதேசத்திலே வாழ்ந்து வந்தார். இவர் 7 பிள்ளைகளின் தந்தையாவார். ஸ்ரீலங்கா பொலிஸில் சமயல் செய்பவராக தனது தொழிலை ஆரம்பித்தார். அக்கறைப்பற்று சிங்கள வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பின்பு அக்கறைப்பற்று ஆர்.கே. மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழியில் தனது தாயின் விருப்பத்திற்கிணங்க கல்வி பயின்றார். தமிழரின் கலாசாரத்திற்கிணங்க வாழ வேண்டும் என்றால் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று பியசேனவின் பெற்றோர் விரும்பியதனாலேயே இவர் தமிழ்மொழியில் கல்வி பயின்றார்.

jjj.jpg1984ஆம் ஆண்டில் அக்கறைப்பற்று நகரில் பியசேனவின் சகோதரரான சோமசிரி ஈரோஸ் அமைப்பினால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இராணுவத்திற்கு தகவல் கொடுத்தார் என்ற அடிப்படையிலேயே இவர் கொலை செய்யப்பட்டார். இப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதல் கொலையும் இதுவேயாகும். இது தொடர்பில் பியசேன தற்போது வேதனைப்படுபவராகவே காணப்படுகின்றார்.

அக்கறைப்பற்று சிரிதம்மரத்ன சிங்கள வித்தியாலய அதிபர் பி.எச்.பி. பியதாஸ பியசேனவின் சகோதரர்களுள் ஒருவராவார். “எனது சகோதர,  சகோதரிகள் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைத்திருப்பது சிங்களப் பெயர்களாகும். இருப்பினும்,  எனது பிள்ளைகளுக்கு நான் தமிழ் பெயர்களையே வைத்துள்ளேன். “நான் சிறு வயதில் தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும்போது சிங்களவன்,  சிங்களவன் என்றே என் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வார்கள். அதனால் எனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை நான் வைத்தேன்.  நாங்கள் சிங்களவர்களாக இருந்ததினால் அக்காலகட்டத்தில் அக்கறைப்பற்று பிரதேசத்தில் எமக்கு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. எனது சகோதரன் கொல்லப்பட்ட காலத்தில் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட வேண்டியேற்பட்டது.  இந்நிலையில் எனது சொந்தக் கிராமத்திற்கு மீள முடியவில்லை.  ஏனெனில், அக்காலகட்டங்களில் எனது சொந்தக் கிராமத்திலும் ஜே.வி.பி. அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. மிகவும் சிரமத்துடனும் பிரச்சினைகளுக்கு மத்தியிலுமே அக்காலத்தில் வாழ வேண்டிய நிலை காணப்பட்டது” என பியசேன குறிப்பிடுகின்றார்.

சிறு வயது முதலே பொலிஸில் ஏ.எஸ்.பி. ஆக வேண்டுமென்று தனக்கு கனவு இருந்ததாகவும் பிரச்சினைக் காலங்களில் பொலிஸாரின் கண் எதிரிலே கொலைகள் இடம்பெற்ற போது தனக்கு பொலிஸ் பதவி பற்றிய ஆசை விட்டுப் போய்விட்டதாகவும் கூறும் இவர் தனது சகோதர சகோதரிகளுடன் இணைந்து வியாபாரமொன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

தனது தந்தை இறக்கும்வரை தனது பிறப்பிடத்தில் வாழ்ந்த எந்த உறவுகள் பற்றியும் இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் தந்தையாரின் சகோதரர் பீரிஸ்அப்பு என்றொருவர் இருந்துள்ளார். தந்தையார் இறந்த பின்பு இவரையும் இவரது உறவுகளையும் சந்திக்க வேண்டுமென பியசேன தெவிநுவரைக்கு சென்றுள்ளார். இருப்பினும்,  பியசேனவால் தனது தந்தையின் எந்தவொரு உறவினரையும் தேடிக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஒருநாள் மாத்தறையிலிருந்து சிமெந்து ஏற்றிவந்த ஒரு லொறியில் பி.எச்.பி. பீரிஸ்அப்பு மற்றும் பொடியப்பு சகோதரர்கள் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஒரு நப்பாசையில் அந்த லொறி சாரதியுடன் உரையாடியதன் ஊடாக தனது தந்தையின் சகோதரரின் இருப்பை இவர் தேடிக் கண்டறிந்துள்ளார். அதன் பின்பு தனது தாயின் மரணத்தின்போதே தனது தந்தையின் உறவினர்கள் வந்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மாத்தறையிலுள்ள தனது தந்தையின் உறவினர்களுடன் தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இவர், 1995ஆம் ஆண்டு ஆழியடிவேம்பு பிரதேச சபை உறுப்பினராக தெரிவாவதற்காக ஈ.பி.டி.பி. அமைப்பின் ஊடாக போட்டியிட முற்பட்டார். அம்முயற்சி வெற்றிகூடாமையால் சுயேட்சையாகப் போட்டியிட்ட இவர், 5800 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவானார். இருப்பினும் பிரதேச சபையின் தலைவர் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக உப தலைவர் பதவியே கிடைத்தது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர், தொடர்ந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து கேட்டு விலகிக் கொண்டார்.

2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரதேசசபை தேர்தலில் அவருக்கு கட்சி பிரதிநிதித்துவமொன்று கிடைக்கவில்லை. 2006 பிரதேசசபை தேர்தலின்போது சிக்கல்மிகு சூழ்நிலையொன்று பிரதேசத்தில் உருவாகியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பாக இவருக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிட்டியது. இத்தேர்தலில் 6800 வாக்குகளைப் பெற்ற பியசேன ஆழியடிவேம்பு பிரதேசசபைத் தலைவராக தெரிவாக்கப்பட்டார். இருப்பினும், அந்தப் பதவி ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. சிங்களவர் ஒருவரான பியசேனவுக்கு தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டாமென்ற பல அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பியசேனவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு விடுதலைப் புலிகளின் நெருக்கடிகள் பிரதான காரணமாயிற்று.

தலைவர் பதவியைத் துறந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்து இவர் மக்களுக்கு சேவையாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் இடைக்கிடையே பிரதேச சபையில் தலைவர் பதவியை இவர் கோரி வேண்டுகோள் விடுத்தபோதும்கூட ஜனாதிபதித் தேர்தலையடுத்து அது பற்றி சிந்திக்கலாம் என கூட்டணித் தலைமைத்துவம் இவரிடம் கூறியுள்ளது.  இந்நிலையில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததினால் இவரின் வர்த்தக நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நியமனப் பத்திரம் கோரப்பட்ட நேரத்தில் பியசேனவின் பெயர் திகாமடுலை தேர்தல் மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும்,  அச்சந்தர்ப்பத்தில் அவருக்குத் தேவைப்பட்டது பாராளுமன்றத்துக்குச் செல்வதற்காகவல்ல. மீண்டும் பிரதேசசபை தலைவராகுவதே.  மார்ச் 1ம் திகதி பிரதேச சபைத் தலைமைப் பதவியைப் பெற்றுத் தருவதாக தமிழ் கூட்டணியின் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோதிலும்கூட அது அவருக்குக் கிடைக்கவில்லை. தேர்தலின்போது சுவரொட்டிகள், பெனர்கள், நோட்டிஸ்கள் போன்றவற்றை தனது சொந்த செலவில் அச்சிட்டுத் தருவதாகவும்,  தனக்கு பிரதேசசபை தலைமைப்பதவியை தரும்படியும் மீண்டும் மீண்டும் இவர் கோரியுள்ளார். அதற்கு கூட்டணியினர் எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. இந்நிலையில்தான் தனது கட்சிக்கு மாத்திரமல்ல, தனது விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக இவர் தீவிரமாக செயற்பட்டார்.

அச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பில் ரோமியோகுமாரி, கிருஸ்ணமூர்த்தி ஆகிய வேட்பாளர்கள் இருவரும் பியசேனவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறைக் காட்டியுள்ளனர். அதேநேரம், சிங்களவரான பியசேனவுக்கு வாக்குகளை வழங்க வேண்டாமெனவும் அவர் வெற்றிகண்டால் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வாரெனவும் கடுமையான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட பின்னணியிலேயே பியசேனவின் பாராளுமன்ற தேர்தலுக்கான போட்டி அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு பியசேனவின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் ஆளும் ஐ.ம.சு. முன்னணிக்கு 4 ஆசனங்களும், ஐ.தே.முன்னணிக்கு 2 ஆசனங்களும், தமிழரசுக் கட்சிக்கு 1 ஆசனமும் மாத்திரமே கிடைத்தது. தமிழ் கட்சியொன்றில் தமிழ் பிரதேசத்தில் போட்டியிட்டு 11,130 வாக்குகளைப் பெற்று இந்த சிங்கள பிரதிநிதியால் வெற்றியடையக்கூடிய வாய்ப்பு கிட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

“எனது தந்தை இன்று இருந்திருந்தால் அவர் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார். எனது தந்தை இறக்கும்போது என் தந்தையின் உறவுகளைப் பற்றி எவ்விதத்திலும் நான் அறிந்திருக்கவில்லை. தந்தையின் இறப்பின் பின்பே நான் என் உறவுகளை இனங்கண்டு கொண்டேன். இன்று நான் பாராளுமன்றத்துக்குச் செல்லப் போகின்றேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார் பியசேன.

“ஏழை மக்கள் துயரமடைகின்றனர். மந்திரிகள் அரசர்கள் போல் நடமாடுகின்றனர். நல்ல அரசு இருக்கின்றது. நல்ல அரசாங்கம் இருக்கின்றது. இருப்பினும், மக்கள் துயரமடைகின்றனர். தூய பௌத்த சிங்களவன் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவன். தமிழரசுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கபட்ட நான் இனவாதத்துக்கப்பால் நின்று மக்களுக்கு சேவை செய்வேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

(இக்கட்டுரை ‘ரீவிர’ பத்திரிகையைத் தழுவி பியசேனவின் உதவியாளர்களுடன் பெறப்பட்ட தகவல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.)