2010

2010

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ.7000 மில். செலவில் அபிவிருத்தி திட்டங்கள்

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டே அரசாங்கம், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வட மாகாண சபை, இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி,  மற்றும் ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மன்னாரில் எண்ணெய் வள ஆராய்ச்சியில் இந்தியக் கம்பனி

spj.jpgமன்னார் பிரதேசத்திலுள்ள எண்ணெய் வளம் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் நடவடிக்கையில் இந்தியக் கம்பனி ஒன்று ஈடுபடவுள்ளது  என்று பெற்றோலிய வளத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த  தெரிவித்தார். இதற்கான விலைமனுக் கோரல் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி  மார்ச் மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற இன்று முதல் பாரிய திட்டம்

மேல் மாகாணத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்று (27) முதல் பாரிய வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் பொலிஸார், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தாழ் நிலத்தை மீள நிரப்பும் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து இச் சட்ட விரோத கட்டடங்களை அகற்றி வருகின்றனர்.

பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் அல்லது சூச்சகமான முறையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு நிரப்பப்பட்ட காணியையோ பலாத்காரமாக கைப்பற்றிருப்பின் இன்று (27) முதல் இயங்கும் விசேட கருமபீடத்துக்கு இது பற்றி அறியத்தருமாறு பொலிஸ் மா அதிபர் பொது மக்களை கேட்டுள்ளார். இரகசியப் பொலிஸை சார்ந்ததாக அமைக் கப்பட்டுள்ள இந்த விசேட கருமப்பீடத்தின் தொலைபேசி இலக்கம் 1933 ஆகும். இந்த கருமபீடத்துக்கு கிடைக்கும் முறைப்பாடுக ளை இரகசியப் பொலிஸார் ஆராய்வார்கள்.

தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமானதும் இடிமின்னல் தாக்கம் குறையும்

lightning.jpgதென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் இடி, மின்னலின் தீவிரத் தன்மை முழுமையாக நீங்கிவிடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி தெரிவித்தார். என்றாலும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக கடந்த இருமாதங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இடைப்பருவப் பெயர்ச்சி மழை காலங்களில் இடி, மின்னல் தாக்கம் தீவிரமானதாகக் காணப்படுவது வழமையாகும். அந்த வகையில் கட்நத மார்ச் மாதம் 14ம் திகதி முதல் நேற்று முன்தினம் 25ம் திகதி வரையும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக 21 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். என்றாலும் தென்மேல் பருவ பெயர்ச்சி மழை கால நிலை ஆரம்பமானதும் இடி, மின்னல் தாக்கம் முழுமையாக நீங்கி விடுமென எதிர்பார்க்கின்றோம்.

பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை – ஜனாதிபதி

president.jpgபுத்த பெருமானின் பிறப்பு, முக்தி பெறுதல், பரிநிர்வான நிலையை அடைதல் ஆகிய மூன்று முக்கியமான சுப நிகழ்வுகளை குறித்து நிற்கும் வெசாக் பெளர்ணமி தினம் உலகெங்கிலும் வாழும் பெளத்தர்களுக்கு மிக உயர்ந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

இன்றைய தினத்தில் நாம் பெளத்த சம்பிரதாயங்களிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு இத்தினத்தை மிகவும் அர்த்தமுள்ள வகையில் கழிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் கூறியுள்ளார். அச்செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.  நாட்டில் பல்லாயிரம் உயிர்களைக் காவுகொண்ட முப்பது வருடகால பயங்கரவாத யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் இவ் வருட வெசாக் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சாதகமானதும் சுதந்திரமானமான சூழல் ஏற்பட்டுள்ளமை பெளத்தர்களுக்குக் கிடைத்துள்ள அதிர்ஷ்டமாகும். இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருப்பதற்கு நாம் ஆன்மீக நல்லொழுக்க வழியைப் பின்பற்ற வேண்டும். மெத்தா, கருணா, முதிதா, உபேக்கா என்பவற்றுடன் கூடிய வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும்.

புத்தபெருமானின் போதனைகளுக்கேற்ப சகிப்புத்தன்மையூடாக ஆறுதலைப்பெறும் குறுகியபார்வை இல்லாது தூரநோக்கையும் அர்ப்பணத்தையும் கொண்ட தேசமாக நாம் இருக்க வேண்டும். ‘நிப்பான’ நிலையை அடைவதற்கான எமது பாதையில் கடந்த காலங்களில் தாமதம் தடையாக இருந்திருக்குமானால் அத்தா மதத்தைத் தவிர்க்கும் வழிகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோ ச புப்பே பமஜ்ஜித்வா – பச்சா சோ நப்பமஜ்ஜதி
சோ இமங் லோகங் பபாசெதி – அபா முத்தோவ சன்திமா

‘துவக்கத்தில் ஒருவன் தாமதித்தாலும் அதன் பின்னர் அவன் தாமதிக்காவிடின் அவன் மேகத்தினூடே மேலெழுந்துவரும் சந்திரனைப் போல் இவ்வுலகை ஒளிரச் செய்வான்’ -தம்மபதம்

நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள் கடந்தகால தவறுகளுக்காக நிகழ்காலத்தில் வருந்தமாட்டார்கள் ஒரு நல்லொழுக்கமுள்ள தேசத்தை கட்டியெழுப்புவதற்காக இந்த வெசாக் பண்டிகை தினத்தில் புத்த பெருமானின் வழியை முழுமையாகப் பின்பற்றுவதற்கு உறுதி பூணுவோம்.உங்கள் எல்லோருக்கும் மும்மணிகளின் ஆசி கிட்டுவதாக!

வட, கிழக்கு விகாரைகளிலும் இம்முறை வெசாக்கை விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடு கொள்கையை மதிக்கும் பௌத்தர்களாக மாறுவோம்; பிரதமர்

புத்தர் பெருமானின் பிறப்பு, பரிநிர்வாணமடைதல் போன்றன இடம்பெற்ற வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உலக வாழ் பௌத்த மக்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றினை வழங்கக் கிடைத்தமையானது பிரதம அமைச்சர், புத்தசாசன சமய விவகார அமைச்சர் என்ற வகையில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

2600 ஆவது சம்புத்தஜயந்தி விழாவினை முன்னிட்டு சமய அனுஷ்டானங்களுக்காக ஆயத்தமாகும் இச்சந்தர்ப்பத்திலே இம்முறை வெசாக் உற்சவத்தினை கொள்கையை மதிக்கக் கூடிய பௌத்தர்களை உருவாக்குவதற்கான உன்னத நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு நினைவுகூர வேண்டுமென்பதே எனது உணர்வாகும் என்று வெசாக்கை முன்னிட்டு விடுத்த செய்தியில் பிரதமர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

சொல்லால் மட்டுமன்றி செயலாலும் உண்மையான பௌத்தர் என்பதனை பிரதிபலிக்கக் கூடிய வகையில் இன,மத,குல,வகுப்பு பேதங்கள் அனைத்தினையும் துறந்து கருணைமிக்க சமூகமொன்றினை உருவாக்குவதற்கான உத்தம பணியே தற்போது எம்முன்னால் உள்ள முதல் சவாலாகும்.மற்றையவரின் துயரை துயராகவும், சந்தோஷத்தினை சந்தோஷமாகவும் தாமும் அனுபவிக்கும் ஒருவரையே உண்மையான பௌத்தர் ஒருவராக குறிப்பிட முடியும். அவர் ஒருபோதும் இன, மத, குல, சமய அல்லது உயர்ந்த, தாழ்ந்த போன்ற பேதங்களின் மூலம் மனதை கெட்ட வழியில் செல்ல அனுமதிக்காத ஒருவராக காணப்படுவார். சரி பிழையினை சரியாக இனங்காணக் கூடிய உள்ளம் உண்மையான பௌத்தரிடம் காணப்படுகின்றது. எமது சமூகத்தினுள் அவ்வாறான பௌத்த உள்ளங்களை உருவாக்குதல் வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உன்னத தலைமைத்துவத்தின் கீழ் பயங்கரவாத பிடியிலிருந்து இலங்கை தாய் நாட்டை மீட்டெடுத்து ஒரு வருட பூர்த்தியுடனான சமகாலத்தில் கொண்டாடப்படும் இம்முறை வெசாக் உற்சவத்தினை வடக்கு, கிழக்கு விகாரைகளிலும் மிக விமர்சையாக கொண்டாடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கிலும் தெற்கிலும் சகோதரத்துவ உணர்வுடன் சாது நாதம் ஒலிக்கும் இந்த உத்தம தினத்திலே உண்மையான பௌத்தர்களாக அறவழியினை சரியாக இனங்கண்டு கொள்வதற்கும் அந்தப் பாதையிலேயே பயணிப்பதற்கும் உங்களுக்கு மும்மணிகளினதும் ஆசீர்வாதம் கிடைக்கப்பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

18 வயதுக்குட்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ltte_child_soldiers.jpgபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களான 18 வயதுக்குட்பட்ட 198 பேர் நேற்று வவுனியாவில் அவர்களது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர்.

இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்களே இவ்வாறு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். 18 வயதுக்குட்பட்ட 294 பேர் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்றனர். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டும் வந்தது. இவர்களில் பலர் அவ்வப்போது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், நேற்றுடன் 294 பேரும் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களது சொந்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் இவர்களுக்கு கல்வி கற்பிக்க பெற்றோர் விரும்பியதால் அவர்களிடம் இச்சிறுவர்களை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் கல்வியை தொடர்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொடுக்கும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வசதிகள் இவர்களுக்கும் பெற்றுக் கொடு க்கப்படும். இவர்கள் இரத்மலானையில் தங்கியிருந்த காலகட்டத்தில் இவர்களுக்குத் தேவையான விடுதி, உணவு உட்பட சகல அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்திருந்தது. இதேவேளை நேற்று பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்ட 198 பேருக்கான பிரியாவிடை வைபவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

அரசின் வேண்டுகோளுக்கிணங்க புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் விடயத்திலும், கல்வி கற்பித்தல் நடவடிக்கைக்கும் அகில இலங்கை இந்து மாமன்றமும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் உட்பட முக்கியஸ் தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வடக்கில் சேதமுற்ற வீடுகளை மட்டுமன்றி மக்களின் உடைந்த உள்ளங்களையும் மீள கட்டியெழுப்புவோம் -அமைச்சர் விமல்

vimal1.jpgவடக்கில் சேதமடைந்த வீடுகள், கட்டடங்கள் மட்டுமன்றி அந்தப் பிரதேச மக்களின் உடைந்த உள்ளங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குறிக்கோளாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவங்ச கிளிநொச்சியில் தெரிவித்தார். ஜனாதிபதியின் இக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட புதிய மக்கள் பிரதிநிதிகள் முன்வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி வை. கேதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- இன்று நாம் இப்பிரதேசத்தின் கல்வி, வீடமைப்பு, சுகாதார, பெருந்தெருக்கள், இளைஞர் நடவடிக்கைகள் மற்றும் பொது வசதிகள் போன்ற துறைகள் தொடர்பாக மீளாய்வு செய்தோம். இங்கு மேலும் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. எமது புதிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஒவ்வொரு துறைகளை பொறுப்பெடுத்து அந்தந்த துறை தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்பட தயாராக இருக்கின்றனர். இதற்காக பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது அவர்களுக்கான வீடுகளை அமைப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான வேலைத் திட்டம் ஒன்றை வடிவமைப்பதாகவும் அரச ஊழியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கிளிநொச்சி பிரதேசத்தில் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு வீடமைப்பு செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களையும் அரசாங்கமே பெற்றுக்கொடுக்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் சில உதவிகள் நிவாரணமாக நன்கொடைகளாகவும் சில உதவிகள் அரசாங்கத்திடமிருந்தும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான இந்த மீளாய்வு கூட்டத்தின்போது பின்வரும் விடயங்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கல்வி – உதித லொக்குபண்டார (எம்.பி),
சுகாதாரம் – டாக்டர் ரோஹன புஷ்பகுமார (எம்.பி), டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே (எம்.பி)
வீடமைப்பு – அமைச்சர் விமல் வீரவங்ச, தேனுக விதானகம (எம்.பி.),
மீன்பிடி – அருந்திக பெர்னாண்டோ (எம்.பி),ஷெஹான் சேனசிங்க (எம்.பி),
பெருந்தெருக்கள் – பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, லொஹான் ரத்வத்தை (எம்.பி),
போக்குவரத்து – திலும் அமுனுகம (எம்.பி),
அத்தியாவசிய பொருட்கள் – ரொஷான் ரணசிங்க (எம்.பி),
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் – கனக ஹேரத் (எம்.பி),
இளைஞர் விவகாரம், தொழிற் பயிற்சி – ஷாந்த பண்டார (எம்.பி)

டெங்கு ஒழிப்பில் அனைவரும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

mahinda-raja_1.jpgடெங்கு ஒழிப்பு விடயத்தில் ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை அர்ப்பணிப்புடனும், உறுதிப்பாட்டுடனும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து உரையாற்றிய ஜனாதிபதி நாடு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்த வேளையில் வழங்கிய ஒத்துழைப்பினைப் போன்று, டெங்கு ஒழிப்பிலும் சகலரதும் அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலணியின் கீழ் சகல அமைச்சுக்கள், உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து கட்சி, இன, மத, பிரதேச பேதமின்றி சகலரும் செயற்பட்டால் டெங்கு ஒழிப்பை வெற்றிகொள்வது நிச்சயமெனவும் அவர் தெரிவித்தார். டெங்கு ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

நாடு என்ற வகையில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு காலத்துக்குக் காலம் முகங்கொடுத்து அதில் வெற்றிகாணவும் எம்மால் முடிந்துள்ளது. டெங்கு நோயை இல்லாதொழிக்கும் பலம் எம் அனைவருக்கும் உள்ளது. அர்ப்பணிப்புடனும் உறுதிப்பாட்டுடனும் செயற்பாட்டால் இதில் வெற்றிகாண்பது உறுதி.

சுகாதாரத்துறைக்கு நிதி வழங்குவதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கவில்லை. யுத்தத்தைப் போன்றே சுகாதாரத் தேவைகள் அத்தனைக்கும் போதியளவு நிதியை சகல சந்தர்ப்பங்களிலும் நாம் ஒதுக்கியுள்ளோம்.

எவ்வாறெனினும் டெங்கு விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து சகல அமைச்சுக்களும் இத்தேசிய செயற்றிட்டத்தில் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். டெங்கு ஒழிப்பில் தமது கடமைகளுக்கு மேலதிகமான அக்கறையை சகலரும் வழங்குவது அவசியம். ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் சகலரினதும் பங்களிப்பு அவசியமாகும்.

டெங்கு பாரதூரம் சம்பந்தமாக சகலருக்கும் விழிப்புணர்வூட்டுவதில் ஜனாதிபதி செயலணி முன்னிற்பதுடன், பாடசாலை மாணவர்கள் பெற்றோர்களுக்கும் இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். படித்தோர், படிக்காதோர் மேல் நிலையிலுள்ளோர், வறுமை நிலையிலுள்ளோர் என நுளம்பு பார்ப்பதில்லை. டாக்டர்கள், கல்விமான்கள், சாதாரண மக்கள் என கடந்த ஒருவருட காலத்தில் 340 பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளனர். மேற்படி செயலணியின் நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டு விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த செயலணியில் சுகாதார அமைச்சு கல்வி, இடர் முகாமைத்துவம், மாகாண சபைகள் உள்ளூராட்சி, தகவல் ஊடகத்துறை, பொது நிர்வாக உள்நாட்டலுவ ல்கள், சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயல கங்கள், நகர சபைகள், கிராமசேவகர் பிரிவுகள் ஆகியன இடம்பெறுகின்றன. இவற்றுடன் இணைந்த செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

ஞாயிறு, போயா தினங்களில் தனியார் வகுப்புக்கு தடை

ஞாயிறு தினங்களிலும் போயா விடுமுறை தினங்களிலும் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்க ஊவா மாகாண சபை தீர்மானித்துள்ளது. இதன்படி இந்த தடை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருவதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்யூ தெரிவித்தார்.

ஞாயிறு தினங்களிலும் போயா தினங்களிலும் தனியார் வகுப்புகள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர் செல்வது பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப் படுவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக ஊவா முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ பல மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆராய்ந்தார். இதன்படி நேற்று முன்தினம் மாகாண மாதாந்தக் கூட்டத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.