2010

2010

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐயாயிரம் குடும்பங்கள் இம்மாதம் மீள்குடியமர்வு

House_Without_Roofஇடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இம்மாதம் (ஜூன் மாதம்) கிளிநொச்சி மாவட்டத்தில் 5,000 குடும்பங்களை மீள்குடியேற்றத் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியுடன், இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முடிவடைந்துள்ள மே மாதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசங்களில் 3,000 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இம்மாதத்தில் 5,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவ தாகத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக அவரிடம் நேற்று வினவியபோதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களின் சில கிராமங்களில் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதுடன் அவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளன. கரச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேசங்களில் ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள குடும்பங்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடியகற்றப்பட்டு வரும் பிரதேசங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றன. கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுறும்போது சகல மக்களும் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேத்ராவில் செய்தி ஒளிபரப்பு நேரம் மாற்றம்

tv.jpg‘நேத்ரா’ தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்த தமிழ்ச் செய்திகள் நாளை 2 ஆம் திகதி முதல் இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகுமென ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி நடப்பு விவகாரப்பிரிவின் பணிப்பாளர் எம். என். ராஜா தெரிவித்தார்.

தனுன திலகரட்னவை 30இல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு – ‘தவறினால் சொத்துக்கள் பறிமுதல்’

danu.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவை எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவ்வாறு ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிவானுமான லங்கா ஜயரட்ன நேற்று உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவு தொடர்பாக நாடு முழுவதும் பொது அறிவிப்பை மேற்கொள்வதுடன், தனுன நாட்டில் மிகவும் தேவைப்படும் மனிதன் என சிங்களத்திலும் தமிழிலும் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நீதிமன்ற வளவிலும் மற்றும் பொது இடங்களிலும் ஒட்டுமாறும் நீதிவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் தனுன திலகரட்ன எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதைக் கூறும் அறிவித்தல்கள் பலவற்றை தயார்படுத்துமாறும், தனுன திலகரட்னவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய முழுமையான அறிக்கையொன்றை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இரகசிய பொலிஸாருக்கு நீதிவான் மேலும் உத்தரவு பிறப்பித்தார். ஹைகோர்ட் நிறுவன மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான தனுன திலகரட்னவை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவின் பேரில் தனுனவை கைது செய்யுமாறு கூறும் சுவரொட்டிகள் நேற்று நீதிமன்ற வளவிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் சந்தேக நபரான தனுன திலகரட்ன நீதிமன்ற உத்தரவுகள் பலவற்றை அசட்டை செய்துள்ளதை அவதானித்திருப்பதாக குறிப்பிட்ட நீதவான், தனுனவின் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை பற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து இரகசிய பொலிஸார் விடுத்த அறிக்கையில் சந்தேக நபரான தனுன திலகரட்ன மாறுவேடத்தில் வசித்து வருவதாகவும் அவரது நடையுடை பாவனையை அவர் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறினர். சந்தேக நபரான தனுன திலகரட்னவை கைதுசெய்ய வேண்டுமென்றும், அவருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாகவும் அரச தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஜனக பண்டார நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ஹைகோர்ட் நிறுவன பணிப்பாளரான வெலிங்டன் டியோட் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சரத் சிரிவர்தன, தனது கட்சிக்காரரை பிணையில் விடுமாறு கேட்டுக்கொண்டார். எனினும் நீதிவான் அவரது பிணை மனுவை நிராகரித்ததுடன் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி வரை வெலிங்டன் டியோட் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டார்.

பலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்களுடன் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பலஸ்தீனத்திற்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துருக்கி கப்பல் தலைமையில் ஆறு கப்பல்கள் சைப்பிரஸிலிருந்து காஸாவுக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த போது சைப்பிரஸ¤க்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலியப் படையினர் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது கப்பல்களில் 600 பேர் இருந்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன. இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக நாடுகளின் கண்டனத்திற்கும் உள்ளாகின. சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய யூனியனும் இஸ்ரேலிடம் கோரியுள்ளன.

கஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பல்களில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தன்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் கூறியுள்ளார். இஸ்ரேலின் இந்த முற்றுகை தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை அவசரமாக கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தை கேள்வியுற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் தெதன்யாஹு கனடா மற்றும் அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த அதிகாரபூர்வ விஜயத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இஸ்ரேலின் நெருங்கிய சகாவான அமெரிக்க சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. இந்த துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றதன் சூழ்நிலை குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் நடுவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வத்திக்கான் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளையிட்டு அதிர்ச்சியும் கவலையும் தெரிவிப்பதாக மத்திய கிழக்கு சமாதானத் தூதுவர் டோனி பிளெயர் கூறியுள்ளார். இடம்பெற்ற முற்றுகை பலவந்தத்தின் முறையற்ற பாவனை என்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த கொடூரச் செயல் ஒரு ‘பயங்கரவாத நடவடிக்கை’ என்று அரபு லீக் கூறியுள்ளது. 22 நாடுகளைச் சேர்ந்த அரபு லீக் அவசர கூட்டம் நடத்தி இது பற்றி கலந்துரையாட வேண்டும் என்று அரபு லீக் தலைவர் அமீர் மூஸா கூறியுள்ளார்.

காஸாவில் ஆட்சி நடத்தும் ஹமாஸ், சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்களில் இறங்குமாறு முஸ்லிம்களை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேலிய உதவி தூதரக அலுவலகத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் அதிக பலாத்கரத்தை பிரயோகித்துள்ளதாக சம்பவம் பற்றி சர்வதேச மன்னிப்பு சபையின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான பணிப்பாளர் மெல்கம் ஸ்மார்ஸ் கூறியுள்ளார்.முற்றுகை தொடர்பாக ‘உடனடியான நியாயமான சுதந்திர விசாரணை நடத்த வேண்டுமென்றும், காஸா மீதான தடைகள் நீக்கப்பட வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

இந்நிலையில் தனது படையினர் தற்பாதுகாப்புக்காகவே இவ்விதம் நடந்து கொண்டதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களே முதலில் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரன் ரட்ணம் விடுதலை

chandran.jpgதிரைப் படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான சந்திரன் ரட்ணம் நேற்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

நுகேகொடையிலுள்ள அவரது வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். மீட்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் அனுமதியுடன் கொண்டு வரப்பட்டவை என உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அவரை கங்கொடவில மஜிஸ்திரேட் நீதவான் அநுரகுமார ஹேரத் விடுதலை செய்தார்.

4 கிலோ 955 கிராம் எடையுள்ள வெடிபொருட்களும் 7 டெடனேட்டர்களும் இவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. திரைப்படத் தயாரிப்பாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி களான காலிங்க இந்த திஸ்ஸ, ஹேமந்த கமகே ஆகியோர் நேற்று நீதிமன்றில் ஆஜரானார்கள். சந்திரன் ரட்ணம் வெடி பொருட்கள் சட்டத்தின் கீழ் எந்த ஒரு குற்றத்தையும் செய்யவில்லை என்றும் அவர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

பூநகரி – யாழ். குருநகர்; படகு சேவை நாளை ஆரம்பம்

பூநகரிக்கும், யாழ். குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை நாளை 2ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு படகுச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த படகுச் சேவை நடத்தப்படவுள்ளதுடன் முதற் கட்டமாக நான்கு படகுகள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங் களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி – சங்குப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச இந்திய திரைப்பட விழா 3ம் திகதி ஆரம்பம்: 97 வீத இந்திய கலைஞர்களின் வருகை உறுதி

iifa-awards-logo.jpgஎத்தகைய எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும், அந்திய திரையுலகைச் சேர்ந்த 97 சதவீதத்தினர் தமது வருகையை உறுதி செய்துள்ளனர் என்று பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் இம் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழா தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு, நேற்று கொழும்பில் உள்ள உல்லாசப் பயணத்துறை சபையில் இடம் பெற்றது.  இதன் போதே அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வுக்காக, சுகததாஸ உள்ளக அரங்கை 400 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்கின்றோம்.

அதே போல இத்திரைப் பட விழாவுக்காக இலங்கையைத் தயார்ப்படுத்த 4650 மில்லியன் ரூபாவை நாங்கள் செலவிடுகின்றோம். ஆனால் இத்திரைப்படவிழாவை ஸ்டார் தொலைக் காட்சியில் ஜுலை மாதம் 11 ஆம் திகதி 110 நாடுகளைச் சேர்ந்த 600 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

இதன் போது எமது நாட்டுக்கு உலகம் பூராவும் கிடைக்கவுள்ள அங்கீகாரமும் பிரபலமும் பல நூறு மடங்கு நன்மையை எமது நாட்டுக்கு தரவுள்ளது என்றார். இந் நிகழ்வில் உரையாற்றிய விஸ்கிராப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபாஷ் ஜோசப், கடந்த முறை நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் மூலம் கிடைத்த 56 மில்லியன் அமெரிக்க டொலரிலும் பார்க்கக் கூடுதலான வருமானம். இம்முறை இலங்கையில் நடைபெறும் விழாவின் மூலம் கிடைக்கும் எனத் தான் நம்புவதாகக் கூறினார். 11 ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடாத்தும் 9 ஆவது நாடு என்ற பெருமையை இலங்கை, கொரியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுப் பெற்றிருக்கின்றது என்று கூறினார்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் முதல் நாளான 3 ஆம் திகதியன்று இது தொடர்பான சர்வதேச பத்திரிகையாளர் மாநாடு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இரவு இந்திய திரையுலக நட்சத்திரங்களான தியா மிர்ஸா, விவேக் ஒபரோய் ஆகியோர் தொகுத்து வழங்கும் ஃபாஷன்ஷோ இடம்பெறவிருக்கின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். இரண்டாம் நாளான ஜுன் 4 ஆம் திகதி, சர்வதேச வர்த்தக சங்க மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மதியம் இந்திய நட்சத்திரங்களும், இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பங்கு கொள்ளும் அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

சுனில் செட்டி மற்றும் ஹிர்திக் ரோஷன் தலைமையிலான இந்திய நட்சத்திர அணிகள் ஒன்றுடன் போட்டியிடவுள்ளன. வெற்றி பெறும் அணி சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியுடன் மோதும் திரைப்படக் காட்சிகளும் இத் திரைப்பட விழாக் காலத்தில் இடம்பெறவுள்ளன.

இறுதி நாளான ஜுன் 5 ஆம் திகதி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. விருது வழங்கும் நிகழ்வு இடம் பெறும் சுகததாஸ உள்ளக அரங்கு, மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம் பெறும் இடங்களில் ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால், விருது வழங்கும் விழா கிரிக்கெட் போட்டி, திரைப்படக் காட்சிகள் எல்லாவற்றுக்கும் உல்லாசப் பயண சபை, இலங்கை கிரிக்கெட் சபை என்பனவற்றில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

பல்கலைக்கழகத்துக்கு 22,800 பேர் தெரிவு; வெட்டுப்புள்ளி வார இறுதியில்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதோடு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி இந்த வார இறுதியில் வெளியிடப் படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.

கடந்த வருடத்தை விட இம்முறை ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தெரிவு செய்யப்பட உள்ளதாகக் கூறிய அவர் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பல வருடங்களின் பின் முதற் தடவையாக யாழ். பல்கலைக்கழகத்திற்கு தென் பகுதியில் இருந்து மாணவர்கள் சென்று கல்வி பயில உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக் காரணங்களினாலும் வடக்குக்கான போக்குவரத்து தடைப் பட்டிருந்ததாலும் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு தெரிவான வேறு பகுதி மாணவர்களுக்கு அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவ பீடத்துக்கு நூறு மாணவர்களும் சட்ட பீடத்துக்கு 50 மாணவர்களும் தெரிவு செய்யப்படுகின் றனர். எதிர்வரும் காலங்களில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படும்.

சகல பல்கலைக்கழகங்களும் தேசிய பல்கலைக்கழகங்களாகும். இன ரீதியான பல்கலைக்கழகங்களாக எந்த பல்கலைக்கழகமும் இருக்க முடியாது. கடந்த வருடம் 21 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகினர். இம் முறை 22 ஆயிரத்து 800 பேர் தெரிவு செய்யப்பட உள்ளன.

பெளத்தத்தை பாதுகாக்கவும் மதமாற்றத்தை தடுக்கவும் சட்டம்

dm.jpgஎதிர்கால சந்ததியினருக்காக பெளத்த மதத்தையும் மகா சங்கத்தையும் பாதுகாப்பதற்காக ஐந்து சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் கடந்த முறை கூட்டத்தில் இது பற்றி பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெளத்தம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முன்னணி பெளத்த பிக்குகள் அடங்கிய சங்க சபையொன்றை அமைப்பது தொடர்பாகவும் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலவந்த மத மாற்றத்தை தடுத்தல் மற்றும் பெளத்தம் தொடர்பான புதிய நடைமுறைகள் பற்றி மத வட்டாரங்களிடையிலான கலந்துரையாடல் நடத்துவது பற்றியும் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

மேற்படி சட்டப் பிரேரணைகளுடன் கிராமப்புற விகாரைகளின் உட்கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கு நிதி வழங்குதல், விகாரைகளுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் ஆகியவையும் இடம்பெறுவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாடு ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் – கப்பல்கள், விமானம் மூலம் மருந்துகள் வருகை

drage.jpgஅரசாங்க ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு அடுத்துவரும் ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இனிமேலும் மருந்துப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக வாராவாரம் கூடி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர், மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமித்த குழுவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் நிறுவனங்களுக்கிடையில் ஒழுங்கு முறையான தொடர்பாடலும், இணைப்பும் இல்லாததே மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு முக்கியமாகப் பங்களித்ததாக மருந்து பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு சுட்டிக்காட்டி இருந்தது.

இதனடிப்படையில், அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும், அரச மருந்துப் பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனமும், ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அமைச்சர் மேற்கொண்டிருந்தார். இதேவேளை, அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை துரிதமாக நீக்குவதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தடிப்படையில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மருந்துப் பொருள் விநியோகப்பிரிவு பணிப்பாளர் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர் தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், திறைசேரியின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய விசேட குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்து இலங்கைக்குக் கொண்டு வரவும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் கட்டம், கட்டமாக கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் இந்திய விநியோகஸ்தர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பொருட்களுக்கு இனிமேல் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதற்கு தேவையான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் தற்போதைய மருந்துப் பொருள் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.