பல்கலைக்கழகத்துக்கு 22,800 பேர் தெரிவு; வெட்டுப்புள்ளி வார இறுதியில்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதோடு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி இந்த வார இறுதியில் வெளியிடப் படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.

கடந்த வருடத்தை விட இம்முறை ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தெரிவு செய்யப்பட உள்ளதாகக் கூறிய அவர் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பல வருடங்களின் பின் முதற் தடவையாக யாழ். பல்கலைக்கழகத்திற்கு தென் பகுதியில் இருந்து மாணவர்கள் சென்று கல்வி பயில உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக் காரணங்களினாலும் வடக்குக்கான போக்குவரத்து தடைப் பட்டிருந்ததாலும் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு தெரிவான வேறு பகுதி மாணவர்களுக்கு அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவ பீடத்துக்கு நூறு மாணவர்களும் சட்ட பீடத்துக்கு 50 மாணவர்களும் தெரிவு செய்யப்படுகின் றனர். எதிர்வரும் காலங்களில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படும்.

சகல பல்கலைக்கழகங்களும் தேசிய பல்கலைக்கழகங்களாகும். இன ரீதியான பல்கலைக்கழகங்களாக எந்த பல்கலைக்கழகமும் இருக்க முடியாது. கடந்த வருடம் 21 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகினர். இம் முறை 22 ஆயிரத்து 800 பேர் தெரிவு செய்யப்பட உள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *